Share

Oct 15, 2019

’தண்ணிலவு தேனிறைக்க’ மாயவநாதன்


'காகித ஓடம் கடலலை மேலே ' பாடல் எழுதப்பட்ட சுவாரசியம் பற்றி வைரமுத்து துவங்கி முதல்வர்
மு.கருணாநிதி வரை தமிழக மக்களுக்கு சொல்லிவிட்டார்கள்.
அந்த கவிஞர் மாயவநாதன்.
பூலாங்குளம் மாயவநாதன்.

'காகித ஓடம் ' பாடலை மாயவநாதன் எழுதுவதற்கு பதிலாக 'மறக்க முடியுமா ' தயாரிப்பாளர் மு.கருணாநிதி எழுதினார்.
டி கே ராமமூர்த்தியிடம் பாடலுக்கு மெட்டு கேட்டார் மாயவநாதன். ராம மூர்த்தி " என்னையா மெட்டு .' மாயவநாதன், மாயவநாதன், மாயவநாதன்' இது தான் மெட்டு ." என்றவுடன் மாயவநாதன் கோவித்துக்கொண்டு போய்விட்டார்.
இந்த கோபம் தான் அவரை வறுமைக்கு விரட்டியது. மான ரோஷம் பார்த்தால் குடும்பம் தெருவுக்கு வந்து விடும் என்று அறியாதவராய் இருந்திருக்கிறார்.
( பல வருடங்களுக்கு முன் ,'தேவி 'பத்திரிகையில் மாயவநாதனின் குடும்பம் அவர் மறைவிற்குப்பின் ஒரு ஓலை குடிசையில் வசிப்பதை படம் பிடித்து காட்டியிருந்தார்கள் )
காகித ஓடம் பாடலில் பல்லவி மட்டுமல்ல சரணம் கூட ' மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் ' தானே.
"தண்ணிலவு தேனிறைக்க , தாழைமரம் நீர் தெளிக்க " என்று குளுகுளு பாட்டு எழதியவர் மாயவநாதன்.
பி.சுசிலா பாடியது. "படித்தால் மட்டும் போதுமா"? படத்தில் சாவித்திரி நளினமாக நடந்து பாடி நடிப்பதற்காக.
'நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ? நெஞ்சில்
நினைத்ததிலே நடந்தது தான் எத்தனையோ?
கோடுபோட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ?
கொண்ட குறியும் தவறி போனவர்கள் எத்தனையோ?'
என்ற,சீர்காழி கோவிந்தராஜன் பாடிய 'பந்த பாசம் ' படப்பாடலை எழுதியவரும் மாயவநாதன் தான்.
”இதழ் மொட்டு விரிந்திட, முத்து விளைந்திடும் சித்திரப்பெண் பாவை,
கண் பட்டு மறைந்தெனை விட்டுப் பறந்திடும் காரணம் தான் யாதோ?”
சந்தங்கள் கொண்ட சொக்க வைக்கும் இந்த பாடல் பந்த பாசத்தில் ஜெமினி - சாவித்திரிக்கு.
பி.பி.எஸ், சுசிலா.
இதயத்தில் நீ “ சித்திரப்பூவிழி வாசலிலே வந்து யார் நின்றவரோ, இந்த கட்டுக் கரும்பினைத் தொட்டு குழைந்திட யார் வந்தவரோ”
'தண்ணிலவு தேனிறைக்க , தாழை மரம் நீர் தெளிக்க ' பாடலை குளிர்ச்சியாக எழுதிய மாயவநாதன் கடைசியில் நல்ல உச்சிவெயிலில்,கடும் பசிமயக்கத்தில்,நடுரோட்டில் சுருண்டு விழுந்து இறந்து போனார்.
'என்றும் மேடு பள்ளம்
நிறைந்தது தான் வாழ்க்கையென்பது ' என்று 'நித்தம் நித்தம் மாறுவது எத்தனையோ ' பாடலில் ஒரு சரணத்தில் எழுதிய மாயவநாதன் அதே பாடலில் இன்னொரு சரணத்தின் கடைசி வரி
" வழி இங்கு வந்து முடியுமென்றால் யார் தடுப்பது?" என கேட்டு எழுதியிருந்தார்.
’விதி’ இங்கு வந்து முடியுமென்றால் யார் தடுப்பது? என்று தான் நான் எப்போதும் இந்த பாடலை பாடும்போதெல்லாம் முடிப்பேன்.
...
(01.12.2008 அன்று எழுதப்பட்ட பதிவு)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.