நான் மேட்டூரில் கிருஷ்ணா லாட்ஜில் நடிகர் கல்யாண்குமார்
அவர்களிடம் ஆன்மிகம் பற்றி பேசிய விஷயங்கள் பிரமிக்க வைத்ததாக அந்த படத்தில் நடித்த
நடிகை ஒருவர்(இவர் சாதாரணமாக என் பேச்சு, பாட்டு,உடை எல்லாவற்றிற்குமே ரொம்ப லயித்து போவார் )மற்றொரு
நடிகையிடம் சொல்லிவிட்டார்.
அவர் எனக்கு அடுத்த அறையில் தான் தன் தாயாருடன்
இருந்தார்.
நான் என் அறைக்குள் நுழைய போன போது என்னை அவர் அறையிலிருந்து 'சார்
சார் ' - கூப்பிட்டார் . இந்த நடிகை எப்போதுமே சாதாரணமாக என்னிடம்
இலக்கியம் தான் பேசுவார். என்னைப்பற்றி யாரோ சொல்லியிருக்கிறார்கள் என்று
தெரிந்தது.
தி. ஜா வின் கமலம் குறுநாவலை பற்றி என்னிடம் ' என்னமா எழுதுறார்
சார் உங்க ஜானகி ராமன் '
'இது என்ன புஸ்தகம் சார் ஒங்க கையிலே.
’நான் 'அந்த்ராய்
தார்கோவ்ஸ்கி பற்றிய புத்தகம் '
'நீங்க ஒருத்தர் தான் சார் இங்க வித்தியாசமான
ஆள். '
'சார் உங்களை பத்தி ஒன்னு கேள்விப்பட்டேன். ஆன்மிகம் பற்றி பின்னி
எடுத்துட்டீங்கலாம். எனக்கு ஒரு குருநாதர் இங்கே ஈரோடு பக்கம் உண்டு சார். அந்த
ஆஸ்ரமத்துடைய பத்திரிகை இது. படிச்சி பாருங்களேன்.'
அடடா நம்மை பண்டார
சன்னதிகளோடு சேர்த்து நினைக்கிறாரே. சாதாரண உரையாடல் சிலருக்கு எப்படியெல்லாம்
அர்த்தமாகிவிடுகிறது ...இருந்தாலும் அவர் கொடுத்த அந்த பத்திரிகை யை கையில்
வாங்கிக்கொண்டு அறைக்குள் நுழைந்து படுக்கையில் அமர்ந்து புரட்ட ஆரம்பித்தேன்.
அதிலிருந்து ஒரு காகிதம் கீழே விழுந்தது.
அது ஒரு கடிதம். இந்த நடிகை
எழுதியிருக்கிறார். இவர் அறிமுகமான படத்து இயக்குனருக்கு. அவர் மிக பெரிய
இயக்குனர்.
ஏற்கனவே திருமணமாகி குடும்பம் இருந்த நிலையில் பல வருடம் முன் ஒரு சிறந்த
நடிகையை திருமணம் செய்து அவர் தற்கொலை செய்து கொண்டு அதனால் பல சிரமங்களுக்கு
உள்ளானவர்.
அவரை இவர் பெயர் சொல்லி ஒருமையில் எழுதியிருந்தார். காதல் கடிதம்
தான். "அன்று ஷூட்டிங் முடிந்து சேலம் ரயில் நிலையத்தில் கிளம்ப காத்திருந்த
போது, உனக்கு நினைவிருக்கிறதா. நான் ரயில் நிலையத்தில் தலைக்கு பூ வாங்கி வைத்து
கொண்ட போது நீ என்னருகில் வந்து பூவை முகர்ந்து பார்த்தாயே."
எனக்கு
அப்போது மறைந்த அந்த நடிகை பற்றியும், இப்போது இந்த நடிகை அதே இயக்குனரிடம் காதல்
கொண்டிருப்பது பற்றியும் எண்ணம் எந்த வகையில் என சொல்ல முடியாமல் பல சிந்தனை.
கடிதத்தை எடுத்துக் கொண்டு அவர் அறைக்குள் நுழைந்து ' நீங்க கொடுத்த
பத்திரிக்கையில் இருந்தது ' என்று கொடுத்தேன்.
அவர் அம்மா மகளை ஒரு பார்வை
பார்த்தார். பொதுவாக சினிமாஉலகில் அம்மாவுக்கும் பெண்ணுக்கும் பெரிய
ரகசியமெல்லாம் கிடையாது. ஒருவேளை அந்த அம்மாவே கூட அந்த இயக்குனருக்கு எழுதப்பட்ட
கடிதத்தை மகளுக்கு Dictate செய்திருக்கலாம் . அதனால் என்ன இப்படி கவனக்குறைவாய்
இருக்கிறாய் என்ற பார்வை தான் பார்த்தார்.
அந்த நடிகை நன்றியோடு என்னை
பார்த்தார்.'தாங்க்ஸ் சார் ...ரொம்ப தாங்க்ஸ் சார் ...' அவருக்கு தெரியும்.
என்னை தவிர வேறு யார் கைக்காவது போயிருந்தால் ரகசியம் அம்பலமாகியிருக்கும்.
கிசுகிசு பத்திரிகை செய்தியாக கூட வந்திருக்கும். அந்த நடிகை சின்னத்திரை ரேவதி
என பின்னால் பிரபலமானார்! இப்போது இரண்டு மூன்று வருடம் முன் பாலு மகேந்திரா என்
கணவர் தான் என்று பேட்டி கொடுத்த மௌனிகா தான்.பாலு மகேந்திராவும் அவரை தன்
இரண்டாவது மனைவி என்றே சொல்லிவிட்டார். இப்போது இந்த விஷயத்தை நான் எழுதுவதில்
தவறில்லை தானே.