Share

May 12, 2013

எஸ்.எஸ்.ராஜேந்திரன்

  
பெரியகுளம் தலைமை தபால் நிலையத்தில் நான் வேலை பார்த்துகொண்டிருந்த போது ஒரு நாள் இலட்சிய நடிகர் S.S. ராஜேந்திரனின் உடன் பிறந்த தம்பி பாஸ்கர் தபால் ஆபீஸ் வந்து என்னிடம் "தம்பி , இன்று மதியம் 12 மணிக்கு வீட்டிற்கு வந்து விடுங்கள். அண்ணன் மதுரையிலிருந்து கிளம்பி இங்கே வருகிறார் .போன் இப்ப வந்தது ." என்றார். எனக்கு சந்தோசம். சென்னையிலிருந்து மதுரைக்கு ஏதோ நிகழ்ச்சிக்காக வந்தவர் பெரியகுளத்தில் இருக்கும் அப்பாவையும் தம்பியையும் பார்க்க S.S.R வருகிறார். அவரை சந்திக்க எனக்கு ஒரு வாய்ப்பு.
மதியம் 12 மணிக்கு ஆபீஸ் PERMISSIONபோட்டு விட்டு பாஸ்கர் வீட்டுக்கு போய் விட்டேன்.  எஸ்.எஸ்.ஆருடைய தகப்பனார் சேடபட்டி சூரிய நாராயண தேவருக்கு அப்போது வயது ஒரு 75 இருக்கும். என்னிடம் நன்றாக பேசுவார்.

ஓவியர் ட்ராட்ஸ்கி மருதுவின் தம்பி திலகர் மருது என் பால்ய நண்பன். ஓவியர் மருது ஒரு முறை பெரியகுளம் வந்திருந்த போது எஸ்.எஸ்.ஆருடைய இன்னொரு தம்பி கதிர் வேல் (போலீஸ் அதிகாரியாக இருந்தவர்) மகன் பாண்டியனுடன் என் அறைக்கு வந்து என்னிடம் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்.
உண்மையில் ஓவியர் மருது வின் அப்பா மருதப்பனும் ( இவர் ஒரு ஞானி ) நானும் மதுரையில் தல்லாகுளத்தில் ரோட்டில் சந்தித்தால் கூட இரண்டு மணி நேரம் பேசி கொண்டிருப்போம். அவர் தான் எனக்கு என் பதினெட்டு வயதில், ரஸ்ஸல் எழுதிய “WHY I AM NOT A CHRISTIAN” நூலை படிக்க கொடுத்தவர். மருது வீட்டில் ஒரு நூலகம் உண்டு. "இயேசுவின் மரணம் காஷ்மீரத்திலே " என்ற ஒரு விசித்திரமான நூல் கூட அவரிடம் இருந்து வாங்கி நான் படித்திருக்கிறேன். S.S.R க்கு இவர் சித்தப்பா. அதனால் தான் பெரியகுளத்தில் பாஸ்கர் எனக்கு அறிமுகம். ஓவியர் மருதுக்கு S.S.R அண்ணன் முறை.

விஷயத்திற்கு வருகிறேன். பாஸ்கர், அண்ணன் S.S.R வரப்போகிறார் என்ற பதற்றத்தில் இருந்தார்.  நான் பாஸ்கர் கேட்பதற்காக HITS OF S.S.RAJENDRAN ஆடியோ கேசெட் கொடுத்திருந்தேன். கேசெட்டை போட்டு கேட்பதற்காக என் டேப் ரெக்கார்டரையும் கொடுத்திருந்தேன். எஸ்.எஸ்.ஆருக்காக டி.எம்.எஸ் பாடிய பாடல்கள் தனி சிறப்புடையவை. அந்த பாட்டு எல்லாம் கேட்கும் போதே எஸ்.எஸ்.ஆர் அதற்கு பாவத்துடன் வாயசைப்பதை உணர முடியும். "ரொம்ப நல்லா இருந்தது. இது மாதிரி ஒரு டேப் ரெக்கார்டர் ஒண்ணு வேணும் " என்று சூரிய நாராயண தேவர் சொல்லிகொண்டிருந்தார். சூரிய நாராயண தேவர் குழந்தை போல.
ஒரு போன் வந்தது அப்போது . பாஸ்கர் ஏமாற்றத்தோடு என்னிடம்
" அண்ணன் அவசரமாக சென்னை திரும்பி போகிறாராம். அடுத்த முறை பெரியகுளம் வருகிறேன் என்று சொல்லி விட்டார் தம்பி " என்றார்.
அன்று தவறிபோனவாய்ப்பு ! காலம் ஓடி விட்டது.
அதன் பிறகு இன்று வரை இலட்சிய நடிகரை நான் பார்த்ததில்லை! பார்க்க வாய்ப்பு கிடைத்ததே இல்லை.


இந்த விஷயங்களை ஓவியர் மருது இங்கே திருப்பூரில் ஒரு நிகழ்ச்சிக்கு இரண்டு வருடம் முன் வந்திருந்த போது நான் மத்திய அரிமா சங்க மேடையிலேயே பேசினேன். எம்.எல்.ஏ. கோவிந்தசாமி அவர்கள் மருது பற்றி நான் பேசிய விஷயங்கள் பிரமிப்பாய் இருப்பதாக குறிப்பிட்டார்.


எஸ் எஸ் ஆர் திமுக உடைந்த போது திமுக வில் தான் இருந்தார். அவர் மகன் ராஜேந்திர குமார் அதிமுக வில் உடனே சேர்ந்து விட்டார்.
அப்போது எம்ஜியாரை தாக்கி எஸ் எஸ் ஆர் ஒரு அறிக்கை விட்டார்.
 http://i1.ytimg.com/vi/T8zinD5mwmc/hqdefault.jpg

" அன்றைய தினம் 'ராஜா தேசிங்கு' படத்தில் என்னுடன் திருமதி பத்மினி அவர்கள் நெருங்கி நடிக்கக்கூடாது என்பதற்காக எம்ஜியார் செய்த சூழ்ச்சிகளை நாடு மறக்குமா?"

துக்ளக் சோ வுக்கு இந்த மாதிரி விஷயம் கிடைத்தால் நையாண்டிக்கு கேட்க வேண்டுமா ?
" எஸ் எஸ் ஆர் சார் ! கேட்கவே பதறுகிறதே.நெஞ்சு கொதிக்கிறது . இப்படியெல்லாம் அநியாயமா ? எப்பேர்ப்பட்ட அநீதி இது? இதையெல்லாம் இந்த நாடு மறந்தால் இந்த நாட்டிற்கு விமோசனம் ஏது? இந்த நாடு நன்றி கொன்ற நாடு ஆகிவிடாதா ?" என்று செமையாக கலாய்த்திருந்தார்.

எஸ் எஸ் ஆர் அவர்களுக்கும் எம்ஜியார் அவர்களுக்கும் பெரிய பனிப்போர் நடந்திருக்கிறது.

எம் ஆர் ராதா - எம்ஜியார் துப்பாக்கி சூடு நடந்த அந்த நேரத்தில் விஜய குமாரியின் தங்கை திருமணம் நடந்ததாம். அந்த திருமண நிகழ்வில் உரையாடலின் போது எஸ் எஸ் ஆர் சொன்னாராம் ' இப்போ கூட எம்ஜியாரிடம் துப்பாக்கி கொடுத்து யாரை யாவது சுட சொன்னா அவர் எம் ஆர் ராதாவை சுட மாட்டார் . எஸ் எஸ் ஆரை தான் சுடுவார் '

 

ஐம்பதுகளில் இருந்து திரை ,திமுகஅரசியல் இரண்டிலும் எஸ் எஸ் ஆர் முக்கிய பங்கு வகித்தவர்.

திண்டுக்கல் பாராளு மன்ற உறுப்பினர்  ராஜாங்கம் இறப்பதற்கு முந்திய தினம் மதுரை திலகர் திடலில் நடந்த கூட்டத்தில் பேசும்போது சொன்னார்.  
' எனதருமை நண்பன் எஸ் எஸ் ராஜேந்திரனை திரையுலகில் இருந்து விரட்டியதே இந்த எம்ஜியார் தான் .'
இரவுகூட்டம் முடிந்த அன்று சில மணி நேரங்களிலேயே ராஜாங்கம் மாரடைப்பால் இறந்து விட்டார்.

சில நாளில் பத்திரிகை செய்தி ” ராஜாங்கம் சமாதியில் ராஜேந்திரன் கண்ணீர் "


திண்டுக்கல் இடைதேர்தலில் அண்ணா திமுக வுக்கு முதல் வெற்றி .

தொடர்ந்து அடுத்து மூன்று வருடங்களில் திமுக அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டு மிசா கொடுமைகளில் சிக்கிய போது எஸ் எஸ் ஆர் திமுக தலைவர் பதவியில் இருந்து கருணாநிதி விலக வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினார். செயற்குழுவில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டார். பின்னால் ம.தி.மு. க விற்குப் போய்விட்டு மீண்டும் தி.மு.கவிற்குத் திரும்பிய  மு கண்ணப்பன் தான் எஸ் எஸ் ஆரை விரட்டி விரட்டி தாக்கினார். அவருடைய கார், மூக்கு கண்ணாடி நொறுக்கப்பட்டது .இந்த இடத்தில் கொஞ்சம் திரும்பிப்பார்க்க வேண்டும் .எம்ஜியார் கட்சியை விட்டு விலக்கப்பட்டதற்கு திமுக கூறிய காரணம் ' பொதுக்குழுவில் பேசவேண்டிய விஷயங்களை பொதுக்கூட்டத்தில் பேசினார்'
- பொதுக்குழுவில் எம்ஜியார் பேசியிருந்தால் உயிர் பிழைத்திருப்பாரா?

கோர்ட்டில் வக்கீல் எஸ் எஸ் ஆரிடம் ' அன்பகத்தில் அன்று நடந்த சம்பவம் நினைவிருக்கிறதா ?' என கேட்ட போது எஸ் எஸ் ஆர் ' மறக்க முடியுமா'
என்கிறார் . கோர்ட்டில் அமர்ந்திருந்த கருணாநிதி கண்ணாடியை கழட்டி கண்களை துடைத்து கொள்கிறார்.

திமுக விலிருந்து எஸ்.எஸ்.ஆர் விலக்கப்பட்ட போது வந்த பதிவு தபாலில் கூட அவர் ' எஸ்.எஸ் ராஜேந்திரன், தி.மு.க’ என்று தான் ஒப்பமிடுகிறார்.

வேறு வழியில்லாமல் அண்ணா திமுக வில் இணைந்து விட்டார்!

பின்னர் ஆண்டிப்பட்டி யில் பொதுத்தேர்தலில் எம் எல்ஏ வாக அதிக வாக்கு வித்தியாசத்தில் ( அகில இந்திய அளவில் ) எம்ஜியார் செல்வாக்கில் வெற்றி பெறுகிறார்.
எம்ஜியார் அடுத்த தேர்தலில் அமெரிக்கா வில் நோயாளியாய் இருந்த போது இவருக்கு சீட்டு மறுக்கப்பட்ட போது சேடப்பட்டி தொகுதியில் அதிகாரப்பூர்வ வேட்பாளரை ( சேடபட்டி முத்தையா)எதிர்த்து படு தோல்வியடைந்து டெபாசிட் இழக்கிறார்.இந்த அளவில் எஸ் எஸ் ஆரின் அரசியல் வாழ்வு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது.

ஆனால்அதன் பிறகு திருநாவுக்கரசு கட்சி, அதன் பின் அந்த கட்சி அண்ணா திமுக வில் இணைந்த போது போய் கூட்ட நெருக்கடியில் தள்ளாடி கீழே விழுந்து வேதனையுடன் ' நேரம் , நேரம் ' என்று வாய் விட்டு சொன்னது,
2006 சட்ட மன்றத் தேர்தலில் மீண்டும் ஜெயலலிதாவை சந்தித்து அண்ணா திமுகவில் இணைந்தது எல்லாம் பேச வேண்டிய விஷயங்கள் அல்ல.

ஆனால் உண்மையிலேயே
' நாடு மறக்குமா ' என்று சுட்ட வேண்டிய நிகழ்வு ஒன்று.
ராஜ மான்ய ஒழிப்பு தீர்மானம் பாராளுமன்றத்தில் எஸ் எஸ் ஆர் வயிற்று வலி (!)காரணமாக ஒட்டு போடாததால் ராஜ்ய சபாவில் தோல்வியடைந்த நிலையில் 1971ல் இந்திரா காந்தி இந்திய பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு இடைதேர்தலை அறிவித்த நிகழ்வைத்தான்!

................



 

4 comments:

  1. sir, how are you, hope everything is alright.

    ReplyDelete
  2. வணக்கம்...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_4.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  3. பல அரிய தகவல்களுக்கு நன்றி .தொடர்ந்து இதுபோல பழைய பொற்கால நிகழ்வுகளை எழுதுங்கள் அய்யா :)

    ReplyDelete
  4. Why RPR does not post any new post after this?

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.