Share

May 3, 2026

கே.கே. சௌந்தர்

கே.கே. சௌந்தர் 
- R.P. ராஜநாயஹம் 

கொள்ளைக்கூட்டக்காரனாக நடிப்பார்.
'நான் யார் தெரியுமா' 
ஒன் தங்கச்சி எனக்கு வேணும் என்பதை 
"ஒன் தங்கச்சி..ஒன் தங்கச்சி" 
பழைய நடிகை ராதாவிடம் வழிவது.

 போலீஸ் உயர் அதிகாரியாகவும் வருவார். 'நான்' நாகேஷூக்கு சுப்பீரியர்.

'எங்க வீட்டு பிள்ளை' சினிமா டைரக்டர்.

சௌந்தர் சொல்வார் "ஏதேனும் அவசர பொருளாதார உதவி தேவைப்பட்டால் ஊரில் எம்ஜிஆர் இல்லாமல் போனால் துணை நடிகர்கள் நாங்கள் 
ஜெய்சங்கரிடம் தான் போவோம்" 

ரொம்ப பின்னாளில் பாரதிராஜா கிழக்கே போகும் ரயில் போஸ்டரில் இடம் கிடைத்தது.

என்னத்த கன்னையா இதை நினைவு கூர்ந்து " அண்ணா ( இயக்குநர் ராமண்ணா) இப்படியெல்லாம் எனக்கு செய்யவில்லை. போஸ்டரில் போடவில்லை" என்றார். 'நான்', 'மூன்றெழுத்து' படங்களில் செய்திருக்கலாம் என்பது கன்னையா ஆதங்கம்.

இயக்குநர் பாக்யராஜ் 'ஒரு கை ஓசை'
'முந்தானை முடிச்சு' 'சின்ன வீடு' லல்லாம் சௌந்தருக்கு கவனிக்கும் படியாக ரோல் கொடுத்தார். 
ராசுக்குட்டி படத்தில் ஏதேனும் வாய்ப்பு கிடைக்குமா என பாக்யா ஆஃபிஸில் வந்து காத்திருந்தார். கிடைக்கவில்லை.
அவருகேற்ற ரோல் அதில் இல்லை.

'நான் யார் தெரியுமா' படத்து 
" ஒன் தங்கச்சி.. ஒன் தங்கச்சி" டயலாக் பேசிக்காட்டி ஞாபகப்படுத்தினேன்.
'நடிகை ராதாவிடம் பேசிய டயலாக்' என்று பக்கத்தில் இருந்த பி.வி. பாலகுருவிடம் நினைவு கூர்ந்தார்.

ஜமுனா கழுத்துல வெண்ணிற ஆடை நிர்மலா கண்ணில

ஜமுனாவுக்கு முதுமையில் கழுத்து ரொம்பவே நடுங்கும். 
"அன்புள்ள மான் விழியே" பாடலில் வைக்கோல் போரில் நடிக்கும் போது கழுத்தில் பலமாக அடி பட்டிருக்கிறது.
 டைரக்டர் (கிருஷ்ணன்) பஞ்சு பயங்கர கோபக்காரர். கழுத்தில் அடி பட்ட விஷயத்தை  பஞ்சு சாரிடம் சொல்ல பயந்து கடுமையான வலியுடன் நடித்திருக்கிறார். 
கழுத்து வலியை சரி செய்ய எவ்வளோ வைத்தியம் பார்த்தும் குணமாகவில்லை.

பாலச்சந்தரின் 'பூவா தலையா' படத்தில் 
"அடி சரி தான் போடி வாயாடி சண்டைக்கு நீயா சரி ஜோடி" பாடலில் வெண்ணிற ஆடை நிர்மலா கண்ணில் அடி பட்டு பார்வையில் நிரந்தரமாக பாதிப்பு ஏற்பட்டு விட்டது.