Share

Mar 31, 2020

Writer's block

’நெஞ்சம் துவளாதிருத்தல் சுகம்’ என்றான்                    எட்டயபுரம் தலப்பா கட்டி.

ஆனால் கவிஞர் சமயவேல் சொல்வது போல
“ஏதேனும் ஒரு காரணத்தின் நிமித்தம் திடுமென மனது உறையத்தொடங்குகிறது.”

அந்தக் கவிதை முடிவது இப்படி-”எதிரெதிர் வண்ணங்களின் இழுப்பில் என் தூரிகை நகர்கிறது.”

Writer 's block.

எழுத்தாளனுக்கு எப்படியும் தொற்றும் வியாதி.

ஹெமிங்வே எழுத்து தடைப்படுவதை சகிக்க முடியாமல், எழுத எதுவும் இல்லையோ, ஊற்று வற்றி விட்டதோ என்ற தவிப்பில் தான் துப்பாக்கியால் தன்னை சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டிருப்பான்.

எலக்ட்ரிக் ஷாக் ட்ரீட்மெண்ட்டெல்லாம் ஏர்னெஸ்ட் ஹெமிங்வேக்கு கொடுக்கப்பட்டது. அப்புறமும் அவனுடைய தேர்வு, தீர்வு தற்கொலை தானே.

கி. ராஜநாராயணன் ஒரு தீராத ஊற்று.

அவருடைய 'இந்த இவள்' நாவலில் எழுதியுள்ள விஷயம் கீழே :

"மழையைப் போலத் தான் எழுத்தும்.
மழைப்பேறும் பிள்ளைப் பேறும் எப்போ என்று மகா தேவனுக்கே தெரியாதாம்.

வில்லைக் கையில் எடுத்தாச்சி, அம்பையும் வைத்துக் குறியைப் பார்த்து இழுத்தாச்சி.
இடையில் எந்த ஒலிக் குறிக்கீடும் இருக்கக்கூடாது.

தாளின் மேல்  பேனா ஊன்றி நாட்டியம் தொடங்கி விட்டால், அல்லது யோசித்து நின்று கொண்டிருக்கும் போது, மேலேயிருந்து ஒரு பல்லி விழுந்தால் கூட அனைத்தும்
அணைந்து போய் விடும்.

இவை எல்லோருக்கும் அல்ல.

" வாகையடி முக்கில் வந்து தேர் விழுந்து விட்டது " என்பாராம் புதுமைப்பித்தன்.

நடு வழியில் வந்து படுத்துக் கொள்ளும்
நாவல் - மாடு - ரொம்பவே உண்டு என்று
 சுந்தர ராமசாமியும் சொல்லியிருக்கிறார்."

I'm not running out of Writer's Ink.

.. 

Mar 28, 2020

இத்தாலி



இத்தாலியை நினைக்கும்போது    முஸோலினியைத்தான் யாருக்கும்
பிடிக்காது.

இத்தாலியை நினைக்கும்போது
 ஓவியன் மைக்கல் ஆஞ்சலோ,
திரை இயக்குனர்கள்
ரோஸ்ஸலினி,
ஃபெல்லினி,
பஸோலினி
என்று சுவாரசியங்கள்,

ஹாலிவுட் நடிகர்கள்
ராபர்ட் டி நீரோ,
 லியோனார்டோ டி காப்ரியோ.

அந்தக்காலத்தில் மதுரை ரீகல் தியேட்டரில், பரமேஸ்வரி தியேட்டரில்  படம் பார்க்கும் தரை டிக்கட் ரசிகர்களுக்கு சோபியா லாரனைப் பிடிக்கும்.
ஆனால் சுத்தமாக ஜீனா லோலா பிரிகிடாவைப் பிடிக்காது.

ரொம்ப பந்தா, ஸ்டைல், மேக் அப் பண்ணுகிற, பார்க்க அசிங்கமான,
 அவலட்சண முகம் கொண்ட  below average பெண்களைக் குறிக்க ‘ ஜீனா லோலா பிரிகிடா’ என்று விவரிப்பார்கள்.
“டப்பா தாட்டி டா, ஜீனா லோலா பிரிகிடா ”


  The Name of the Rose  நாவல் எழுதிய உம்பர்ட்டோ ஈக்கோ, 

 
Italian food! – The food stinks, Except in Italy!
பீட்ஸா, ஐஸ்கிரீம்

Italy – Musical country! 

தென்றல்,
முதல் காதல்,
இத்தாலி
 இந்த மூன்றும் ஒன்றாக சேர்ந்தால்
விரக்தியான மனிதன் கூட
 குதூகலமாகிவிடுவான் என்று
 பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் தத்துவம் பேசினார்.

ஆனால் இந்தியர்களுக்கு போஃபர்ஸ் துவங்கி ஆடம்பர ஹெலிகாப்டர் பிரச்னை போன்றவைகளால் இத்தாலி என்பது குறித்து
 ஒரு ஒவ்வாமையுணர்வு.

இந்திய அரசியல் அரங்கில் சில கட்சிகளுக்கு இத்தாலி மீதுள்ள வெறுப்புக்கு
சோனியா காந்தி ஒரு காரணம்.

ராஜீவ் காந்தி பிரதமராயிருக்கும்போது கம்யூனிஸ்ட் எம்.பி. சதுரனன் மிஸ்ரா சொன்னது :                                      "It is so hard to approach the Prime Minister,
in the front there are battalions,
at the rear there are Italians."

சில வருடங்களுக்கு முன்
இத்தாலிய கப்பல்
 கேரளக்கடற்கரை மீனவர்களை
சுட்டுக்கொன்றது.

அந்த இத்தாலிய கைதிகள் இருவருக்கு கிறிஸ்துமஸ் கொண்டாட பரோலில் அனுப்பப்பட்டார்கள்.
அவர்கள் திரும்பி மீண்டும் சிறை புகுந்தார்கள். நேர்மை, கண்ணியம் என்று நினைக்கவேண்டியிருந்தது.

மீண்டும் இத்தாலி பொதுத்தேர்தலில் வாக்களிக்க வேண்டி இத்தாலிய கைதிகள்
இன்னொரு முறை தாய் நாடு சென்றார்கள். இந்திய சிறை திரும்பவில்லை.
இத்தாலிய அரசே உடந்தை. இந்தியாவில் இத்தாலியத் தூதர் இந்தியாவை விட்டு வெளியேறக்கூடாது என்று நியாயஸ்தலம்
தடை விதித்து விட்டது.

கேஸ் வாபஸ் வாங்குவதற்கு பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பங்களுக்கு கோடி ரூபாய் வரை தருவதாக இத்தாலி சொன்னதை ஏற்றிருக்கவேண்டும் என்று தினமணி தலையங்கம்.

ஃபாரின் டிப்ளமஸி பற்றி நன்கறிந்த நட்வர்சிங் ( முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ) சொல்வது : Italian Ambassador can’t be prevented from leaving.

 There’s sanctity about the rules of old diplomacy. Infact modern diplomacy started in Italy.

’இத்தாலி செய்திருப்பது நம்பிக்கைத் துரோகம் தான். இது இரண்டாம் உலகப்போரின்போது  பேர்ல் ஹார்பரில் குண்டு போடப்பட்ட சம்பவத்திற்கு சமம் 'என்றார் நட்வர்சிங்.
அந்த சமயத்தில் கூட ரஷ்யா மீது ஜெர்மனி தாக்குதல் நடத்தியபோது ரஷ்யாவிலிருந்த ஜெர்மனி தூதர் கைது செய்யப்படவில்லை. அடாவடியான ஜெர்மனியிலும் கூட அப்போது எதிரி நாட்டுத்தூதர்கள்  வெளியேறக்கூடாது
 என்று தடை விதிக்கப்படவில்லை.
 எனவே இத்தாலிய தூதர் மன்ஸினி இந்தியாவை விட்டு வெளியேறத் தடை செய்வதெல்லாம் சாத்தியமானதில்லை என்றும் சொன்னார்.

ஹெலி காப்டர் ஊழல் பிரச்னை, கேரள மீனவர் பிரச்னை, இத்தாலிய கைதிகள் போன்ற இடியாப்பச்சிக்கல்கள் இருக்கும் நேரத்தில் அன்று டிசம்பரில் இருந்து இத்தாலியில் இந்தியத்தூதருக்கான இடம் காலியாக
இருந்தது  Irony.
இத்தாலியின் இந்தியத்தூதராக செல்ல வேண்டிய B.K.குப்தா ‘ நான் மார்ச் ரெண்டாவது வாரம் போகிறேனே..’என்று சொல்லிக்கொண்டிருந்தார் என்று ஒரு தகவல்.
 அதே நேரம் நட்வர் சிங் சொன்னது
வேறு மாதிரியிருந்தது
“ Right now, we don’t have an ambassador in Italy. We told him not to go.”
நட்வர்சிங் இந்த இடியாப்பசிக்கல்களை எதிர்கொள்ளத் தேவையானதாக சொன்னது
 – The temperature needs to cool first,
 especially in Parliament and in the MEDIA.

இத்தாலியின் நெஞ்சில் சொருகப்பட்டுள்ள வாளாகிய வாட்டிகனில் அப்போது புதிய போப்.

"Every country gets the circus it deserves.
 Spain gets the bull fights.
Italy the church.
America Hollywood." – Erica Jong

 ஆனால் கடந்த சில காலமாக போப்கள் இத்தாலிக்கு வெளியில் இருந்து
போலந்து, ஜெர்மனியிலிருந்தும்,  அர்ஜெண்டைனாவிலிருந்து வருகிறார்கள்.

.....

Mar 25, 2020

அரியது



கொக்கு குஞ்சை கண்டாருமில்ல
வாகை மரத்துப் பிஞ்சை பார்த்தாருமில்ல
குறவன் சுடுகாடு கண்டாருமில்ல

கொக்கு பார்த்திருக்கிறோம்.
ஆனால் யாராவது கொக்கு குஞ்சை
 பார்க்க முடியுமா?
 எப்படி எங்கே அவ்வளவு ரகசியமாக
 பேணி வளர்க்கிறது?

வாகை மரத்தில் காய் இருக்கும்.
பிஞ்சை பார்க்கவே முடியாது.

வாகை மரம் பற்றி ஒரு நம்பிக்கை உண்டு.
’வாழுற வீட்டுக்கு வாகை மரம் சக்களத்தி’.

வீட்டு காம்பவுண்ட், அல்லது வீட்டு முன் வாகை மரம் இருக்கக்கூடாது.
வாகை மரத்தால் செய்யப்பட்ட கட்டில், மேஜை,நாற்காலி,ஸ்டூல்,பெஞ்ச் எதுவும் ஒரு குடும்பம் உள்ள வீட்டிற்குள் இருக்கவே கூடாதாம்.

அத்தி பூத்தாற் போல - அடிக்கடி இந்த வார்த்தை பலராலும்  சொல்லப்படும் cliche.

அத்தி பூத்தவுடன் உடனே,உடனே பிஞ்சாகி பின் காயாகிவிடு்மாம்.

இந்தக்காலத்தில் இப்படி இருக்க முடியாது.
ஆனால் அந்தக் காலத்தில் நரிக்குறவர் இறந்து யாரும் பார்த்ததே கிடையாது.
குறவனகுறத்திக்கு சாவு கிடையாது என நம்பியவர் பலர்.

குறவர்கள் ஊர் ஊராகப் போய்
கூடாரம் அமைத்து தங்குவார்கள்.

குறவர் கூட்டத்தில் யாராவது இறந்து விட்டால் அவர்கள் அழ மாட்டார்கள்.
சிரமப்பட்டு அழுகையை
கட்டுப் படுத்திக்கொள்வார்கள்.
ஊராருக்கு தெரிந்து விடக்கூடாதே!எடுத்ததெற்கெல்லாம் ஒப்பாரி வைக்கும் தன்மை கொண்டவர்கள்
குடும்ப சாவின்போது அழுகையை அடக்கிக்கொள்வார்கள் என்பது irony!கூடாரத்திற்கடியில் குழி தோண்டுவார்கள். பிணத்தை ரகசியமாக புதைப்பார்கள்.
கூடாரத்தைப் பிரித்து காலி செய்து விட்டு
வேறு ஊருக்கு சென்று விடுவார்கள்.

.......

எல்லோரும் யோனித்துவாரத்தின் வழி தான் பிறந்தாக வேண்டும்.
ஆனால் இந்திரன் மட்டும் யோனியிலிருந்து பிறக்க மறுத்து விட்டானாம்.
அது அசிங்கமான வழியென்று சொன்னான். அரிதாக அவன் தன் தாயின் பக்கவாட்டிலிருந்து,விலாவிலிருந்து சமாளித்துப் பிறந்து விட்டானாம்.

இதை ராபர்ட்டோ கலாஸ்ஸோவின்
க நாவலில் (காலச்சுவடுமொழி பெயர்ப்பு வெளியீடு)படித்தேன்.

 ஒபாமாவுக்கு ஹில்லாரி க்ளிண்டன் போல நிக்சனுக்கு ஹென்றி கிஸ்ஸிஞ்சர்.
வயிற்று வலின்னு லீவு போட்டுவிட்டு அமெரிக்கபாணியில் ரகசியமாக சீனாவுக்கு official visit செய்தவர்.

‘கிஸ்ஸிஞ்சருக்கு நிஜமாக வயிற்றுவலி வந்தால் அடுத்த தடவை என்ன நடந்திருக்கும்’ என்று
 ஆர்ட் புச்வால்ட் எழுதிய நகைச்சுவைக் கட்டுரை
 படித்துப் பார்த்தால் சிரித்து வயிறு புண்ணாகி விடும்!

கிஸ்ஸிஞ்சர் சொன்னது: Power is the ultimate aphrodisiac.

அரிதான பிறவி என்றால் அது தேவ விரதன்  எனப்பட்ட பீஷ்மர் தான்.
அதிகாரம், பெண்கள் இவற்றை ஒதுக்கி்ய
 புராண நாயகன்.

.....

குதிரைக் கொம்பு,
புலிப்பால்,
கருவாட்டு ரத்தம்,
கருங்கல் வேர்,
கொசுமுட்டை இவையெல்லாம் கிடைக்குமா?

புரோக்கர்கள் என்று ஒரு கூட்டம் இருக்கிறது. இவற்றில் எது கேட்டாலும் கிடைக்கும்
 என்று தான் சொல்வார்கள்.

புரோக்கர் பாணி :’ புலிப்பால் வேண்டுமா?
நோ ப்ராப்ளம். இங்கே பக்கத்தில் சத்தியமங்கலம் காட்டுக்குள்ள போன வாரம் புலி ஒன்னு
குட்டி போட்டிருக்கு.
எங்க தெருவிலே வீரமான
 ஒரு கோனார் இருக்கார்.
அவரை  கார்லே கூட்டிட்டுப் போய்
 அந்த புலியோட பாலை
கறந்து கொண்டு வந்து நான் தர்றேன்.
ரெண்டு நாள் பொறுத்துக்குங்க
......


Mar 24, 2020

R.P.ராஜநாயஹத்திற்கு கி.ராஜநாராயணன் கடிதம்


புதுவையில் நான் இருந்த போது லாஸ் பேட்டில் இருந்து
கி. ராஜநாராயணன் எழுதிய சுவாரசிய கடிதம்.
லாஸ் பேட் 24.12.89
பிரியமுள்ள ராஜநாயஹம்,
நலமாகுக.
அருமையாய் வடிவமைக்கப்பட்ட
உங்கள் லெட்டர் ஹெட் கடிதம் வந்தது. மகிழ்ச்சி.
எனக்கும் ஒரு வேலை போட்டுக் கொடுங்கள்; நானும் வந்துருதேன்!
யுனிவர்சிட்டிக்காரன் கொடுக்கிற 4000/த்தை விட உங்கள் 400 / எனக்குப் பெரிசு.
உவர்மண் சுமக்கிற கழுதையாய் இருப்பதை விட
பூவைச்சுமக்கிற கழுதையாய் இருப்பது மேலல்லவா!
கோணங்கி என்கிற பொன் வண்டு
உங்கள் தீப்பெட்டிக்குள் அடங்கி
நீங்கள் போடுகிற
கருவை இலையைத் தின்று கொண்டு
முட்டையிடுமா என்று தெரியவில்லை.
செய்து பாருங்கள்;
எல்லாக் குழந்தைகளும் பிரியப்படுகிற விளையாட்டு தான் இதுவும்.
உங்கள் குட்டி ராஜநாயஹம் எப்படி இருக்கிறான்?
உள் வாங்கிய சிரித்த நாணத்துடன், எனது நீட்டிய கையைப் பற்றிக் குலுக்கினான் பயல்.
எமப்பயல்!
அப்பாவுக்கு எனது அன்பைத் தெரிவியுங்கள்.
உங்கள் வீட்டம்மாவுக்கு எங்கள் பிரீதியையும் வரத்தையும் தெரியப்படுத்துங்கள்.
இன்னொரு தடவையும் வவ்வா மீன் சாப்பிடனும்.
புத்தாண்டு வாழ்த்துக்களுடன்
இராஜநாராயணன்

Mar 23, 2020

Natesh on R. P. Rajanayahem

Koothuppattarai Boss M. Natesh
on Actor R. P. Rajanayahem

"By 1990 I was 11 years old in theatre.
Kind of knew all techniques to train
 an actor’s body-voice;
but not the mind.

I thought that a person with trained skills
in all that I know can go on stage,
pick up his/her life’s problems and deliver a solo show of good theatre.
 No text by-hearting, no rehearsals. IT NEVER HAPPENED.

 IN 2018  Rajanayahem comes on stage and does exactly that 28years later!!!!!!!!!!!!!...
I acknowledged the same day after the show
 in front of the audience.
An intelligent, evocative, transformative actor changing roles like a chameleon. "

https://rprajanayahem.blogspot.com/2018/05/rajanayahem-is-transformative-actor.html

.
..................................

.........

..

Mar 22, 2020

" என்னடா இங்க வந்துட்ட"

There are more things in heaven and earth
 than are dreamt of in your philosophy

- Shakespeare in Hamlet

வண்ண நிலவன் 'கடல் புரத்தில்' நாவலை படமாக்க வேண்டும் என
முகேஷ் சுப்ரமணியம் என்று ஒரு இளைஞன் ஆசைப்பட்டு கோணங்கியிடம் சொல்லியிருக்கிறான்.

முகேஷை அழைத்துக் கொண்டு போய்
வண்ண நிலவனிடம் கோணங்கி அறிமுகப்படுத்தி விஷயத்தை சொன்ன போது,
அவர் கோணங்கிக்காக பணம் எதுவும் வாங்க மறுத்து கடல் புரத்தில் நாவலை படமெடுக்க அனுமதி கொடுத்திருக்கிறார்.

வண்ண நிலவன் நாவலை மிகுந்த ஈடுபாட்டுடன் முகேஷ் சுப்ரமணியம் படமாக வளர்த்தெடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறான்.

சர்ச் காட்சிகளில் போர்ச்சுகீஸிய இசை ரீரிக்கார்டிங் ஆக இணைத்து பிரமாதமான அர்ப்பணிப்பு.
படம் முடிக்க முடியவில்லை.

கோணங்கியின் அபிப்ராயத்தில் இந்த படம் முழுமையாக முடிக்கப்பட்டு வெளி வந்திருந்தால் அற்புதமான செல்லுலாயிட் ஓவியம்.

பொருளாதார விஷயம் எப்படியெல்லாம் நல்ல பெரு முயற்சியை காவு வாங்கி விடுகிறது?

ஆனால் எந்த நோக்கத்திலும் வேறு  விதமான சிறப்பான விளைவு இருக்கவே செய்கிறது.

முடியாத கடல்புரத்தில் கதாநாயகி பிலோமியாக நடித்த பெண்ணுக்கும், இயக்குநர் முகேஷுக்கும் காதல் முகில் கூடியது.

அந்த பிலோமியாக வேடந்தரித்த பெண்ணின்
ஊர் சிங்கம்புணரி.

சிங்கம்புணரியில் திருமணம் செய்து கொள்ள
 ஒரு வீடு பத்து நாளுக்கு வாடகைக்கு இந்த இளம் ஜோடி எடுத்திருக்கிறார்கள்.

அந்த திருமண நிகழ்வில் கலந்து கொள்ள கோணங்கி சிங்கம்புணரிக்கு போயிருக்கிறான்.
ப. சிங்காரத்தின் சொந்த ஊர்.

சிங்காரம் தாத்தாவின் ஈமக்ரியை சொந்த ஊரில் தான் இறந்த பின் நடந்திருக்கிறது.

அங்கே இந்த திருமணம் இப்போது.

கோணங்கி அங்கே தெருவில் சிங்காரம் தாத்தா நடந்து வருவதை கண்ணால் பார்த்திருக்கிறான்.

"டேய், என்னடா இங்க வந்துட்ட " - சிரித்த முகத்துடன்
ப. சிங்காரம் கேட்டுக்கொண்டே நடந்து போனாராம்.

One need not be a chamber to be haunted

- Emily Dickinson

கோணங்கி அந்த ஊரிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி விட வேண்டும் என்று முடிவே செய்து விட்டான்.

வேலை பார்ப்பவர்க்கு தான் வீடு கொடுக்க முடியும் என்று சொல்லி விட்டார்கள்.

கோணங்கியின் திட்டம் இதனால்
தகர்ந்து போனது.

https://m.facebook.com/story.php?story_fbid=2680551848824931&id=100006104256328

..............................................................................................

.

Mar 21, 2020

'சினிமா எனும் பூதம்' பற்றி சரவணன் மாணிக்கவாசகம்

சினிமா எனும் பூதம் - R P ராஜநாயஹம்:

ஆசிரியர் குறிப்பு:

R.P. ராஜநாயஹம் ஒரு எழுத்தாளர், பேச்சாளர், நடிகர், பாடகர், சங்கீதரசிகர், இயக்குனர், கூத்துப்பட்டறை ஆசிரியர், பெரும் வாசகர், அரசியல் உட்பட பலவிசயங்களை எழுதும் பத்தி எழுத்தாளர்,  சினிமா தகவல்களை (ஹாலிவுட், உலகப்படங்கள் உட்பட) மூளையில் சுரங்கம் போல் வைத்திருப்பவர், இத்தனைக்கும் மேல் சிறந்த மனிதர். தற்போது ஆதன் டிவியில் Old Wine என்ற தொடரில் பல விசயங்களைப் பகிர்ந்து வரும் இவரது முதல் முழுநூல் இது.

நான் பள்ளி இறுதி படிக்கையில் இவர் அறிமுகம். பிரித்தோ உயர்நிலைப்பள்ளி எதிரே, ஞானஒளிவுபுரத்தில், நண்பர்கள் கூடும் இடத்தில் மணிக்கணக்கில் நாற்பது பேர் உட்கார்ந்து கேட்க தொடர்ந்து பேசுவார். அவ்வளவு பேருக்கும், தேநீர் இவர் செலவில் அடிக்கடி வந்து கொண்டிருக்கும். எதிரிருக்கும் நபரின் சிந்தனாசக்திக்கு ஏற்றவாறு, பேசும் விசயங்களின் கனபரிமாணம் மாறும். அதிகம் பேசாத எனக்கு இவரிடமும், சீருடை அணிந்து பள்ளிக்கு எதிரே நின்று புகைபிடிக்கும் மாணவன் மேல் இவருக்கும் பெரிதாக முதல் அபிப்ராயம் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால் காலப்போக்கில் தமிழ் நவீன இலக்கியம் ஒரு அசைக்க முடியாத பிணைப்பை, எந்த அந்தரங்களையும் பகிரும் நட்பை ஏற்படுத்தக் காரணமாயிருந்தது.

முழுக்க முழுக்க சினிமா பற்றிய, கூகுளில் தேடி கண்டடைய முடியாத தகவல்கள் கொண்ட நூலிது. எதிரிருந்து பேசுவது போன்ற மொழிநடை இதன் சுவாரசியத்தைக் கூட்டும். பல பிம்பங்கள் உடைகின்றன. சில உண்மைகள் வெளி வருகின்றன. சினிமா எனும் பூதம் அடுத்து என்ன என்ன என்று கேட்கிறது.

முதல்பதிவே எம்.ஜி.ஆர். அலட்சிய சிரிப்புடன் கிராபிக் இல்லாத காலத்தில் இருகைகளிலும் வாளை அதிவேகமாக சுற்றிய எம்.ஜி.ஆர். எத்தனை தகவல்கள் இந்தக் கட்டுரையில்!  "எம்.ஜி. ஆர் சிரிப்பு பின்னால் சத்யராஜ் சிரித்துக் காட்டினார்" என்பது போன்ற தகவல்கள் இவரால் மட்டுமே சொல்ல முடியும்.

சிவாஜியை எவ்வளவு இரசித்திருக்க வேண்டும் என்பதைக் கூறும் கட்டுரை. தேசத்துரோகியாக அந்தநாளில்,  total negativeஆக திரும்பிப்பாரில் எவ்வளவு Negative characters? மகாநடிகன்.

"An angel's graceful performance" " the greatest actress ever born and ever to be born" என்பதை விட சாவித்திரியின் நடிப்பை எப்படி சொல்வது?

தமிழ் திரை கண்ட கதாநாயகிகள் மின்னிய தாரகைகள் குறித்த நல்லதொரு கட்டுரை.

ரஞ்சன், வாள்வீச்சு கவர்ச்சிகரம். நீலமலைத் திருடன் பார்த்திருக்கிறீர்களா?

என் ஆசையும் உன்நேசமும், பாட்டொன்று கேட்டேன் போன்ற சாகாவரம் பெற்ற பாடல்களைப் பாடிய ஜமுனாராணி பற்றிய கட்டுரை.

கழிவறையாய் நான் பார்த்த சமாதி தான் ஆதன் டிவி Old wineன் முதல் Episode.

அகிலஇந்திய கனவுக்கன்னியான ஹேமமாலினி, வெண்ணிற ஆடை படத்தில் புதுமுகமாக நிர்மலா பாத்திரத்துக்கு தேர்வு செய்யப்பட்டு பின் ஸ்ரீதரால் ரிஜெக்ட் செய்யப்பட்டார்.  இது சத்தியம் படத்தில் ஹேமமாலினி ஆடுவதை சந்திரகாந்தா ஆடுவதாக அசோகன் கற்பனை செய்வார். உச்சத்தைத் தொடுமுன் அவமானங்கள் தவிர்க்க இயலாதவை.

நாட்டியப்பேரொளி பற்றிய அழகான கட்டுரை.

நீரும் மாறும் நிலமும் மாறும் அறிவோம் கண்ணா, மாறும் உலகில் மாறா இளமை அடைவோம் கண்ணா- தேவிகா என்றொரு தேவதை.

நகுலன் கவிதை, அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள், தி.ஜா எழுத்து, Baudelaire போன்றவர்களின் Quotes, லா ச ராவின் பாற்கடல் என்று இலக்கியமும் நடுநடுவே இவரை விட்டு விலகாமல் வருகின்றது. ஷேக்ஸ்பியர் நாடகத்தில் கிளியோபாட்ரா சீசரை நினைத்து சொல்கிறாள் "When I was green in judgment, cold in blood.." அதை ஸ்ரீதேவியின் மரணத்துடன் கொண்டு வந்து பொருத்துவது இவரால் மட்டுமே முடியும். இதைப்போல் சூழ்நிலைக்கேற்ற Shakespeare quotes எத்தனையோ இவரிடம் கேட்டிருக்கிறேன். இவரது திறமையில் கால்வாசி கூட இல்லாதவர்கள் கண்முன்னே உச்சத்தை எட்டியிருக்கிறார்கள்.

"Such as we are made of, such we be."

பிரதிக்கு:

Zero degree publication 98400 65000& amazon. In
முதல் பதிப்பு ஜனவரி 2020
விலை ரூ 375
#தமிழ்கட்டுரைநூல்கள்

Mar 20, 2020

திருடனுக்கு தேள் கொட்டி விட்டது


என்னுடைய Inspiration பதிவு நான் என் ப்ளாக்கில் 2008, 2009 இரு ஆண்டுகளில் எழுதிய வெவ்வேறு பதிவுகளை இணைத்து நேற்று  ஸ்டேட்டஸாக வெளியிட்டிருக்கிறேன். இவற்றை 2012ல் ஃபேஸ்புக்கில் நுழைந்த பின்னர் இங்கேயும் பதிந்துள்ளேன்.
2014ம் ஆண்டு கலைஞன் பதிப்பகம் வெளியிட்ட என் 'இலக்கியம், இசை, ஹாலிவுட் பதிவுகள்' நூலிலும் இவை இடம் பெற்றிருக்கின்றன.

https://rprajanayahem.blogspot.com/2009/08/blog-post_22.html?m=0

 யவனிகா ஸ்ரீராம் பதிவை share செய்து விட்டு இதையும் வெளியிட்டுள்ளேன்.
நகுலன் பற்றிய அவர் பதிவு எனக்கு பிடித்திருந்ததால் தான் என் பழைய பதிவுகளை நேற்று புது ஸ்டேட்டஸாக இங்கு போட்டேன்.
நகுலன் - பெக்கெட் பதிவு, ஆத்மாநாம் - ரைம்போ பதிவுகளில் உள்ள ஒத்த தன்மையை சுட்டிக்காட்டி இதை வாசகர்கள் பார்வைக்கு இங்கே புதிதாக பதிந்தேன். இதெல்லாம் தான் ராஜநாயஹம் பாணி.

தினமும் புதிய வாசகர்கள் என்னை படிக்க வருகிறார்கள். அவர்களுக்காக என் பழைய பதிவுகள் இங்கே அவ்வப்போது பதிவேற்றம் செய்கிறேன்.

என்னுடைய 2009 'நகுலன் கவிதையில் பெக்கெட் ' பதிவை S. Mohan Shanmugam என்கிற நபர் வரிக்கு வரி காப்பியடித்து 2019 ல் தன் பதிவில் இடையில் செருகியிருக்கிறார் என்பது தெரிய வந்திருக்கிறது. வேதனை.

என்னுடைய பல சினிமா பதிவுகள் மட்டுமல்லாமல் அரசியல் பதிவுகளும், இலக்கிய பதிவுகளும் கூட இப்படி அப்பட்டமாக திருடப்படுவது
வேதனை தான்.

அபத்தம் என்னவென்றால் 2018ல தான் எழுதிய பதிவின் லிங்க்கை என்னுடைய நேற்றைய Inspiration பதிவில் கமெண்டாகவே போட்டு அந்த மோகன் சண்முகம் கேள்வி 'ஒத்த சிந்தனை என்பது இது தானா?'
S. Mohan Shanmugam காப்பியடித்து எழுதியுள்ள பதிவின் லிங்க்
https://m.facebook.com/story.php?story_fbid=579512679649232&id=100027715163407

திருடன் தலையாரி வீட்டில் ஒளிந்த கதை.
இப்போது தேள் கொட்டி விட்டது.
தவளை தன் வாயால் கெட்ட கதை.

காப்பி பேஸ்ட் செய்ததையே மறந்துட்டான். Strange.

An incorrigible moron.

நல்ல வேளை. என் 2009 பதிவின் லிங்க்கை நான் Inspiration பதிவில் நேற்று கொடுக்கவில்லை.
கொடுத்திருந்தால் இந்த plagiarism இன்று தெரிய வந்திருக்காது.

சிலர் என் பதிவை திருடி போட்ட பின் வேறொருவர் அங்கிருந்து காப்பி பேஸ்ட் செய்யும் போது அது ராஜநாயஹம் எழுதியது என்பதே தெரியாது போய் விடுவது இன்னொரு மகத்தான சோகம்.

மனம் உடைந்து போய் விட்டேன்.

இந்த அநியாயத்தை தார்மீக கோபம் கொண்ட எல்லோரும் தயவுசெய்து தட்டிக் கேட்க வேண்டும்.

https://m.facebook.com/story.php?story_fbid=2681137458766370&id=100006104256328

........................
..........................................................................


Mar 19, 2020

Inspiration



நகுலன் கவிதையில் பெக்கெட்

No, I regret nothing,
all I regret is having been born,
dying is such a long tiresome business
I always found.
-Samuel Beckett.

இருத்தலின் குறிக்கோள் அற்ற தன்மை பற்றி பெக்கெட் கவலைப்பட்டவர்.
The futility of man's aspirations.

அவருடைய நாடகம்
“Waiting for Godot” என்ற பெக்கெட்டின்
Absurd Drama காத்திருத்தல் பற்றிய துயரத்தின் உச்சம்.

We're all born mad. Some remain so.
“Waiting for Godot”

Mr. Godot told me to tell you he won't come this evening but surely tomorrow.

இங்கே குறிப்பிட வருவது நகுலனின் ஆங்கில கவிதை :

Death
Also waits
It has
infinite Patience.

இந்த கவிதைக்கு
inspiration பெக்கெட்டின் வரிகள்
 Dying is such a long tiresome business
 I always found.

பெக்கெட் பற்றி நகுலன் தன்னுடைய நாவல்களில் எப்போதும் பேசுவார்.

.....

ஆர்தர் ரைம்போவும் ஆத்மாநாமும்

'One evening, I took “Beauty” in my arms.
I found her bitter and I insulted her'
- French poet Arthur Rimbaud in “ A season in Hell”

நாகார்ஜுனன் Blog ல் ஒரு சின்ன சுவாரசியமான விவாதம்

"நரகத்தில் ஒரு பருவம் - ஆர்தர் ரைம்போ - 1"
2 Comments -

R. P. ராஜநாயஹம் said :

"ஒரு மாலை "அழகு" என் கையில் அமர்ந்தாள். அவள் கசப்பாய் இருக்கக் கண்டேன். அவளை அவமானப் படுத்தினேன்"
என்ற ரைம்போவின் வரிகள் ஒருவேளை ஆத்மாநாமுக்கு inspiration-ஆக இருந்திருக்கலாம் என்று நான் எப்போதும் நினைப்பதுண்டு.

 கவனிக்க: நான் ஆத்மாநாம் காப்பியடித்ததாகச் சொல்லவில்லை.
வரிகள் ஏறக்குறைய இவைதாம்:
"கடவுளைப் பார்த்தேன்.
 எதுவும் கேட்கத் தோன்றவில்லை. புன்னகைத்தார். போய்விட்டார்."

26-Aug-2008 12:59:00

நாகார்ஜுனன் said...

சுட்டிக்காட்டியதுக்கு நன்றி. ஆத்மாநாம் வரிகள் நான் வாசித்தவைதாம். ஆனால் ரைம்போவைத் தமிழாக்கும்போது உறைக்கவில்லை. அந்த அளவு போதலேரும் ரைம்போவும் புதுக்கவிதைக்குள் நுழைந்துவிட்டார்கள் எனத் தோன்றுகிறது...

26-Aug-2008 13:04:00

Mar 18, 2020

மதுர கவர்னரும் மதுர காவல் தெய்வமும்

மதுரை டவுன் ஹால் ரோட்டில் ஒப்பனைகள் கலைந்தெறிந்த ஜி.நாகராஜன்,
நிரந்தர தற்கொலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆத்மாநாம்,
மவுண்ட் ரோட்டில் பட்டினியும் வறுமையும் பின் துரத்த சிற்பியின் நரகத்தை எழுதிக்கொண்டிருக்கும் புதுமைப்பித்தன்

- கோணங்கி

கோணங்கியை மிகவும் பாதித்த இரண்டு மதுரை கண்ட எழுத்தாளர்கள்
ப. சிங்காரம், ஜி. நாகராஜன்.

'மதுரைக்கு வந்த ஒப்பணைக்காரன்' கதையிலும் 'சபிக்கப்பட்ட அணில்' சிறுகதையிலும்
ஜி. நாகராஜன் காணக்கிடைப்பார்.

'த ' நாவலில் உள்ளிருக்கும் "மங்கம்மாள் சத்திரம் வால் க்ளாக்"
டிக்டாக் - 1, டிக் டாக் - 2, டிக் டாக்- 3, டிக் டாக்- 4

திண்டுக்கல் ரோட்டில் Y. M. C. A க்கு வந்த பர்மா அகதி ஒருவன் கேட்கிறான் "சிங்காரம் தாத்தா இருக்கிறாரா?"

கண் தெரியாத டெலிபோன் பூத் இளைஞன் சொல்கிறான் "சிங்கம்புணரிக்கு போயிருக்கிறார்"

இந்த குருடன் தீவிர வாசகன். டெலிபோனில் பிறரை வாசிக்க சொல்லியே நிறைய நூல்களை படிக்கிறவன்.

திருமங்கலத்திற்கு போன் போட்டு ஜி. நாகராஜன் எழுத்திற்காக தேடுகிறான்.

ஒரு பெண் குரல் வாசித்து காட்டுகிறது.

கோணங்கியிடம் பேசுவது விசேஷமானது.

மதுரை கவர்னர் ப. சிங்காரம்.
மதுரை நகரின் காவல் தெய்வம் ஜி. நாகராஜன் என்ற கோணங்கியின் உருக்கம் உறுதியானது.

மதுரை இலக்கியம்னு போறவன அதிசய புகைக்காரனா மாத்திடும்.

எல்லா குதிரை வண்டிக்காரனும், ரிக் ஷா வண்டிக்காரனும் ஜி. நாகராஜன் தான்.

மதுர குதிரை வண்டிக்காரனெல்லாம் பதினென் கீழ் சித்தர்கள்.

இலக்கியவாதிகள நீட்ஷே ஆக்கி விடும் மதுர.

ப. சிங்காரம் டால்ஸ்டாய்னா ஜி. நாகராஜன் செக்காவ் தான்னு கோணங்கியின் திண்ணம்.

'மங்கம்மாள் சத்திரம் வால்க்ளாக்'ல ப. சிங்காரமும் ஜி. நாகராஜனும்.

மதுரை VTC பிரின்சிபால் ஜெகதீசன், STC பிரின்சிபால் சங்கர நாராயணன் ஆகிய இரண்டு டுட்டோரியல் காலேஜ்காரர்களோடு ஜி. நாகராஜன் சேர்ந்து போய்
ப. சிங்காரத்தை சந்திப்பதுண்டு.
Y.M.C.A யை ஒட்டியிருந்த மாடர்ன் ரெஸ்ட்ரெண்ட்டில் காபி சாப்பிட்டுக்கொண்டே பேசுவார்கள்.

பின்னாளில் கோணங்கியிடம் ப. சிங்காரம்
தான் 'தெற்கில் ஒரு இடம்' என்று ஒரு நாவல் எழுத இருப்பதாக கூட அடிக்கடி சொல்லியிருக்கிறார்.

கோணங்கி அந்த திண்டுக்கல் ரோட்டில் அவரை பார்க்க போனாலே Y. M. C. As இருந்து கிளம்பி மாடர்ன் ரெஸ்ட்ரெண்ட் தான்.

கோணங்கிக்கு டி. ஹெச். லாரன்ஸின் ரெயின் போ
ப. சிங்காரம் கொடுத்திருக்கிறார். இது போல முருகேச பாண்டியனுக்கும் ஒரு புத்தகம் கொடுத்தாராம்.

ப. சிங்காரத்தின் மரணத்திற்கு  பிறகு அவருடைய சொந்த ஊரான சிங்கம்புணரிக்கு
ஒரு கல்யாணத்திற்கு கோணங்கி போயிருந்த போது
ப. சிங்காரம் ''டேய் என்னடா, இங்க வந்துட்ட " என்று கேட்டுக் கொண்டே  தெருவில் நடந்து போனாராம்.

(தொடரும்)

Mar 17, 2020

Aadhan Cinema OLD WINE R. P. ராஜநாயஹம்

Aadhan Cinema

 OLD WINE

YouTube. Com
ஆதன் சினிமாவில் " Old Wine" நிகழ்ச்சி

R. P. ராஜநாயஹம்
முதல் எபிசோட் இன்று
 (17.03. 2020) வெளியாகியுள்ளது.

வாசிப்பவர்கள் தாண்டி பார்த்து ரசிப்பவர்களை நோக்கிய பயணத்தில் ராஜநாயஹம்.

 அ. ப. இராசா ஒருங்கிணைப்பாளர்.

அவரோடு

சக்தி சரவணனுக்கும்,

கருணாகரன் கார்த்திகேயனுக்கும் (OLD WINE என்ற பெயரை இந்த ஆதன் சினிமா நிகழ்ச்சிக்கு சூட்டியவர்)

நெஞ்சம் நிறைந்த நன்றி.

ஜீ. நாகராஜன்



நாங்கள் பார்க்க முடியாமல் போன,
இறந்து போன மனிதரை பற்றிய
 எங்கள் தேடல் அன்று ...

G .நாகராஜன் மதுரை திண்டுக்கல் ரோட்டில் மேலமாசி வீதியை ஒட்டி குடியிருந்த பல வீடுகள் கொண்ட ஒட்டுகுடித்தன வீட்டுக்கு
 நானும் சரவணன் மாணிக்கவாசகமும் போயிருந்தோம்.

அப்போது G .நாகராஜன் மறைந்து ஒரு வருடம் இருக்கும்.

கொஞ்சம் தெரியாத மாதிரி ' இங்கே G.நாகராஜன்னு ஒரு புரபஸர் இருக்கிறாரல்லவா.’
அங்கிருந்த பெண்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

ஒரு வயதான பிராமண பாட்டி உடனே சொளவை கீழே வைத்து விட்டு உடனே எங்களை கூர்ந்து பார்த்தார். எழுந்து வந்தார்.

'யார் நீங்க ?'

'அவரோட மாணவர்கள் '.(' சும்மா..Harmless lie )

'பாடமெல்லாம் நன்னா நடத்துவான். இறந்துட்டானே. தெரியாதோ?'

'அப்படியா பாட்டி? '

'வருஷம் ஆறது.. 'ம்ம் .. பாப்பார கள்ளன்.. துஷ்டன்.. '

எனக்கு ' மனுஷன் மகத்தான சல்லிபயல் ' என்று G.நாகராஜன் சொன்னது ஞாபகம் வந்தது.

பாட்டி ' இனி பேசி என்ன ... '

அப்புறம் மீனாக்ஷி நிலையம் செல்லப்பன் ' இந்த கடைக்குள்ள கால் வைக்க கூடாது இனிமே ' என்று கடுமையாக G.நாகராஜனை எச்சரித்ததை பற்றி எங்களிடம் சொன்னார்.

தெற்கு மாசி வீதி 'விழிகள் ' அலுவலகம் சென்றோம். அங்கே இப்போது சினிமாவில் நடிக்கும் நாடக  மு. ராமசாமி இல்லை. அவர் தான் 'விழிகள் ' ஆசிரியர்.

அங்கேயிருந்த கூத்து ராமசாமி அவரை பற்றி சொன்னார். எல்லாம் இப்ப சுந்தர ராமசாமி 'நினைவோடை'யில் எழுதியுள்ள மாதிரி சமாச்சாரங்கள்.

 நெல்லை S.வேலாயுதம் அவர்களை சந்திக்க சொன்னார்.

எழுத்தாளர் டைலர் கர்ணனை பார்க்க சொன்னார். கர்ணனை தேடினோம்.பார்க்க முடியவில்லை.

வேலாயுதம் சோம சுந்தரம் காலனியில் இருந்தார். அப்போது படிக்க கிடைக்காத "நாளை மற்றுமொரு நாளே " நாவல் அவர் தான் படிக்க கொடுத்தார்.

நண்பர்கள், மனைவி, அப்போது ஒரிசாவில் இருந்த சகோதரன் எல்லோரும் அவரை மறுதலித்த துயர கதைகளை சொன்னார்.

நெல்லை வேலாயுதம் மகன் தன் மூலமாக புத்தகங்களை நாகராஜன் இவருக்கு தெரியாமலே புத்திசாலிதனமாக கடத்திய கதை சொன்னார்.

சரவணன் மாணிக்கவாசகம் இறுக்கமானவர்.உணர்வுகளை, அதிர்ச்சியை வெளிக்காட்ட மாட்டார். நான் தான் நிலையிழந்து புலம்பி தீர்த்தேன்.

மதுரை டவுன் ஹால் ரோடு. ஒரு பேராசிரியர்  'விழிகள் ' மு.ராமசாமியுடன் பேசிகொண்டிருக்கிறார். ஒரு அழுக்கான நலிந்த மனிதர் ' ராமசாமி ' என்று இவரை அருகில் வந்து விளிக்கிறார்.
ராமசாமி அவரை உடனே கண்ட படி திட்ட ஆரம்பிக்கிறார். உடனே அவர் அங்கிருந்து அகன்று நடக்க ஆரம்பிக்கிறார்.
இந்த பேராசிரியர் சிவக்கண்ணன்
 'அவர் யாருங்க?' வினவுகிறார்.
'G.நாகராஜன் '
சிவக்கண்ணன் பதறி விடுகிறார். 'என்ன சொல்றீங்க .... நாகராஜனா ... அவரையா இப்படி திட்டினீர்கள்? அவரா இப்படி பிச்சைக்காரன் மாதிரி இருக்கிறார்? '

இந்த நாடக ராமசாமி, இப்போது சினிமா நடிகர் ராமசாமி ( பல ராமசாமிகள். இவரை விழிகள் ராமசாமி என்ற பெயரால் அப்போது அறிந்திருந்தோம். புதுவையில் எதிர்வு நிகழ்வில் நான் சந்தித்திருக்கிறேன் )

இவர் தான் நாகராஜனின் கடைசி காலத்தில் அவரை கவனித்து போஷித்தவர். அவருடைய கடைசி கிரியைகளுக்கும் செலவு செய்தவர் என்று ’கூத்து’ ராமசாமி சொன்னார். நெல்லை எஸ்.வேலாயுதமும் அப்படித்தான் சொன்னார்.

கி.ரா சொன்ன ஒரு விஷயம் . ' G.நாகராஜன் குளிக்க மாட்டார். ஆனால் அவர் மேல் துர்நாற்றம் வீசி நான் பார்த்ததேயில்லே.'

எல்லோரோரையும் சித்திரவதை செய்த நாகராஜன் ஒருவரிடம் வாலாட்டினதில்லை. ஜெய காந்தன். அவரிடம் காசு கூட கேட்க மாட்டாராம். Trouble Makerஎன்று பிரபலமானவர் எந்த தொந்தரவும் இவரிடம் செய்ததில்லை.

சந்தேக கேசில் பிடிபட்டு தப்பிக்க முயன்று அனுபவித்த வியாகுலத்தை
'ஓடிய கால்கள் ' என்ற சிறுகதையாக நாக ராஜன் எழுதினார்.
மறுதலிப்பு, Rejection.
மனித வாழ்வின் மகத்தான துயரம்.

ஒரு நாவல், ஒரு குறுநாவல்,ஒரு சிறுகதை தொகுப்பு.
இவை மூன்றுமே இலக்கிய அந்தஸ்து பெற்றுவிட்டன எனும் போது நாகராஜனின் சாதனை மலைக்க வைக்கிறது. அவருடைய கட்டுரைகளும் தான்.

காலச்சுவடில் கதையொன்று  சு.ரா எழுதியிருந்தார். தலைப்பு
 ” நண்பர் ஜி.எம்”

மதுரை காலேஜ் ஹவுஸ் லாட்ஜில் இரண்டு குழந்தைகளை அறையில் பூட்டி வைத்து விட்டு பெற்றோர் வெளியே போயிருப்பார்கள். டவுன் ஹால் ரோட்டில் யானை வருகிறது. காலேஜ் ஹவுஸில் இருப்பவர்கள் கூட யானையைப் பார்க்கச்செல்கிறார்கள். குழந்தைகள் யானையைப்பார்க்க வேண்டும் என்று வாய் விட்டு அழுகின்றனர். காலேஜ் ஹவுஸில் தங்கியிருக்கும் கதை சொல்லியை பார்க்க வரும் ’ஒருவர்’ அந்த அறையின் கதவை உடைத்து குழந்தைகளை விடுதலை செய்து யானையைப் பார்க்க அனுப்புகிறார்.

சுந்தர ராமசாமியிடம் நான் சொன்னேன் “ கதவை உடைத்து குழந்தைகளை யானையைப்பார்க்க அனுப்புபவர் ஜி. நாகராஜன் தானே?”
நான் சொன்னது சரி தான் என்றார் சு.ரா.

அசோகமித்திரனின் “விரல்” கதையில் கதவிடுக்கில் சிக்கிய விரல்   நசுங்கிப் போகிற குடிகாரர் கூட
ஜி. நாகராஜன்.

திலீப் குமாரின் “ ஐந்து ரூபாயும் அழுக்குச் சட்டைக்காரரும் “ கதையில் வருகிற அழுக்குச் சட்டைக்காரர் ஜி. நாகராஜன்.

கோணங்கி கூட நாகராஜன் பற்றி ஒரு கதை எழுதினான். அந்த சிறுகதை தலைப்பு 'மதுரைக்கு வந்த ஒப்பணைக்காரன்'.
கோணங்கியின் இன்னொரு கதை
' சபிக்கப்பட்ட அணில் '.
இதிலும் ஜீ. நாகராஜன் காணக்கிடைப்பார்.


"தீவிரமான தேடலில் அந்நியமாகிப்போன வாழ்வுக்கு முன்னுதாரணமாக
காலத்திற்கு முன்னே பிறந்து
காலத்திற்கு முன்னே செத்து போவான்
சிரஞ்சீவி கலைஞன் ஜி.நாகராஜன் "
- விக்கிரமாதித்தன்

...

Mar 16, 2020

ப. சிங்காரம்

ப.சிங்காரம்

ப. சிங்காரத்தை 1989 துவக்கத்தில் சந்தித்தேன்.
மணிக்கொடி சிட்டி தான் அவருடைய எழுத்து பற்றி என்னிடம் கவனப்படுத்தினார்.

 நானும் சரவணன் மாணிக்கவாசகமும் சேர்ந்து
அவரை பார்க்கப் போயிருந்தோம்.

 'புயலிலே ஒரு தோணி ' 'கடலுக்கு அப்பால் 'நாவல்களை படித்து மலைத்து போய்விட்டோம்.

மதுரை Y.M.C.A யில் அப்போது அவர் தங்கியிருந்தார்.
ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை என பழங்கள் வாங்கி அவருக்கு கொண்டு போனேன்.

 அவருடன் அவர் அறையில் வேறு
இரு இளைஞர்கள் தங்கியிருந்தனர்.
ப. சிங்காரம் எங்களை சந்தித்த நிலையில்
மிகவும் நெகிழ்ந்திருந்தார்.
அவர் கண்ணில் தெறித்த அன்பு விஷேசமானது.

அவர் தன் நாவல்கள் பற்றி சாதாரணமாக தான் பேசினார்.

நவீன தமிழ் இலக்கியம், எழுத்தாளர்கள், பத்திரிகைகள் தனக்கு அன்னியம் என்றே சொன்னார். ஆச்சரியமாயிருந்தது.
'நான் தினத்தந்தியில் வேலை பார்த்தவன். எனக்கெப்படி உங்கள் இலக்கிய உலகம் பற்றி தெரியும்.'

அவருடன் Y.M.C.A வால் தங்க வைக்கப்பட்டிருந்த இருவரும் அலட்சியமாக இருந்தனர்.
சிநேக பாவமே அவர்களின் நடவடிக்கைகளில் இல்லை. பொதுவாக ஹாஸ்டல் அறைகளில் உடனிருப்போர் இணக்கமாக அமைவது சிலருக்கு கொடுத்து வைப்பதில்லை. அதிலும் இவர் மகத்தான படைப்பாளி. கேட்க வேண்டுமா? வயதிலும் அந்த ரூம் மேட் களுக்கு மிகவும் மூத்தவர்.

பின்னால் Y.M.C.A நிறுவனம்
 கட்டிடம் புதுப்பிக்க  வேண்டியிருக்கிறது என காரணம் காட்டி நிர்ப்பந்தமாக வெளியேற்றியதையும்,
இவர் விருப்பமின்றி நாடார் மேன்சனில்
 அந்திம காலத்தில் தங்கியிருந்ததையும்
இப்போது எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது .

...

காலச்சுவடு கண்ணன்  ப .சிங்காரத்தின் வாசகர் கடிதம் சி.சு . செல்லப்பாவின் 'எழுத்து ' இதழ் ஒன்றில் வெளியாகியிருந்ததை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த போது ஆச்சரியமாக இருந்தது.

இதை தொட்டு நான் அதற்கு எதிர்வினையாக எழுதியிருந்த கடிதம் காலச்சுவடில் பிரசுரமானது.

பொதுவாக நான் பத்திரிக்கைகளுக்கு வாசகர் கடிதம் எழுதியதே இல்லை. இது கூட விஷய முக்கியத்துவம் கருதி தான்.

புயலிலே ஒரு தோணி நாவல் தமிழுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்.

அவரை சந்திப்பதற்கு முன் அந்த நாவலில் உள்ள விஷயங்கள் பற்றி, (அதோடு வேறு பல குறிப்புக்களுமாக )ஒரு நோட் புத்தகத்தில் நான் எழுதியிருந்த குறிப்புகளை பார்த்து விட்டு கோணங்கி
 ' இதை அப்படியே புத்தகமாக போடலாம் ' என சிலாகித்தான். அந்த நோட் புத்தகம் தொலைந்து விட்டது.

ஒரு விஷயம். இப்போது காணக்கிடைக்கும்
 ப. சிங்காரத்தின் புகைப்படங்கள்
 அய்யனார் ஆனந்த் (பௌத்த அய்யனார்) முயற்சியின் காரணமாக நமக்கு கிடைத்தவை.

Mar 13, 2020

யான படத்து கத

1968ல 'காதல் வாகனம்' எடுத்ததில் மனஸ்தாபமாகி சாண்டோ சின்னப்பா தேவர் மீண்டும்
எம். ஜி.ஆருடன் பிசினஸ் வேண்டாம் என்று விலகி விட்டார்.

1971ல் ராஜேஷ் கன்னாவை வைத்து தேவர் எடுத்த ஹாத்தி மேரா சாத்தி சக்கை போடு போட்டதை பார்த்த எம். ஜி. ஆர் 'அண்ணே தமிழ்ல இத என்னய வச்சு செய்யுங்கண்ணே' ன்னு
ஈகோ பாக்காம தேவரிடம் கேட்டார்.

அதை அப்படியே ரீமேக்கா எம. ஜி. ஆர
 வச்சு  செஞ்சி 1972 ல தேவர் வெளியிட்டார்.

இது தான் உண்மை.

1967 ல மேஜர் சுந்தர்ராஜன வச்சு செஞ்ச 'தெய்வச்செயல்' தான் 'ஹாத்தி மேரா சாத்தி' ன்னு            சலீம் ஜாவேத் மூலம் புத்துயிர் பெற்றது.

ஆனால் இன்று இந்து டாக்கீஸ் கட்டுரை ஒன்றில் அபத்தமாக தகவல் பிழை.

நல்ல நேரம் படம் தான் ஹாத்தி மேரா சாத்தியாக ரீமேக் ஆனது என தப்புந்தவறுமாக எழுதப்பட்டுள்ளது.

அதை கீழே கொடுத்துள்ளேன் அப்படியே.

" தேவர் பிலிம்ஸ் எம். ஜி. ஆரை வைத்து எடுத்த 'நல்ல நேரம் வெற்றி பெற்றது. அந்தப் படத்தின் இந்தி ஆக்கத்துக்காக ராஜேஷ் கன்னாவை அணுகினார் சாண்டோ சின்னப்பா தேவர்  "

யான படத்து கதய இந்து டாக்கீஸில் மாத்திட்டாங்கெ.

Mar 10, 2020

ரஜினியின் பேரனும், மற்றும் இரு சிறாரும்



இரண்டு வருடங்களுக்கு முன்பு
ஒரு ஸ்கூலில் இருந்து ஐந்தாம் வகுப்பு படிக்கும் மூன்று குழந்தைகள் கூத்துப்பட்டறைக்கு வந்திருந்தார்கள். ந.முத்துசாமியின் ‘ பிரஹன்னளை’ நாடக ரிகர்சல் பார்ப்பது, மற்ற தியேட்டர் விஷயங்களை நேரடியாக தெரிந்து கொள்வது இவர்களுக்கு ப்ராஜெக்ட்.

இவர்கள் படிக்கும் அந்த பள்ளியில் முழுக்க
கல்வி முறையே Activities தான்.
Text book என்பதே கிடையாது.

யாத்ரா தனுஷ், சிம்பன் ஆறுமுகம், தருண் ஆகிய மூன்று குழந்தைகள்.

What you would like to become ? என்று நேற்று கேட்டேன். சிம்பன், தருண் இருவருமே “Foot ball player" என்று சொன்னார்கள்.

யாத்ரா பதில்: “ I have passion for football. But I would like to become an actor."

நான் Che sara, sara Whatever will be will be, The future is not ours to see பாடினேன்.
குழந்தைகள் சந்தோஷமாக கை தட்டினார்கள்.

KIt Kat சாக்லேட் கொடுத்தேன்.

Children bring freshness into the world.
Children are new editions of consciousness.
Children are fresh entries of divinity  into life.
- Osho

மறுநாளும் அவர்களுடைய டீச்சர் ரேகா தான்
 அந்த மாணவர்களை அழைத்து வந்திருந்தார்.

Rehearsal Process ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

ரேகா சொன்னார்.
யாத்ராவின் அப்பா தனுஷ்.
ரஜினியின் பேரன்.

யாத்ராவிடம் 'உனக்கு யார் பிடிக்கும்.'

"லதா பாட்டி. she is my favorite."

தாத்தா பாட்டிகளுக்கு எப்போதும் பேரக்குழந்தைகள் நண்பர்கள்.
 அம்மா அப்பா ‘ நீங்கள் ரொம்ப செல்லம் கொடுக்கிறீர்கள்’ என்று குறைப்பட்டுக்கொள்வார்கள் - நான் சொன்னதும் யாத்ரா அதை ஆமோதித்தான்.

அம்மா ஐஸ்வர்யா எப்போதும் பாட்டி லதாவிடம் இப்படி வருத்தப்படுவதுண்டாம்.

இன்னொரு பையன் சிம்பன் ஆறுமுகம்
 மறைந்த முன்னாள் போலீஸ் உயர் அதிகாரி ரவி ஆறுமுகத்தின் பேரன்.
ஆல்பர்ட் தியேட்டர் அதிபர் மது குமரனின் மகன்.

ரவி ஆறுமுகத்தின் சகோதரர் டாக்டர் அருண கீதாயன் எனக்கு  நல்ல அறிமுகம். என் நண்பன் மறைந்த முபாரக் மூலம் அறிமுகம்.

 நாங்கள்  மதுரையில் அழகர் கோவில், புல்லூத்து போன்ற இடங்களுக்கு பிக்னிக் போனதுண்டு.

அருண கீதாயனின் பாடல்கள் இன்னும் என் காதில் ஒலிக்கின்றன.

“ ஆஹா என் ரசிகைகளே,
நான் உங்களை மறந்தது குற்றம் தான்.
அந்த குற்றத்திற்கு அற்புத தண்டனை
 முத்தம் தான்”

“ தனி மரம் நானோர் தனி மரம்.”

“ நீ வரவில்லையெல்லையெனில் ஆறுதல் ஏது?”

கவிஞர் கண்ணதாசன் “ இந்த வாரம் சந்தித்தேன்” என்று ஒரு தொடர் குமுதத்தில் எழுதிய போது கவிஞர் அருணகீதாயன் பற்றி ஒரு பத்தி எழுதியிருந்தார்.

 அருண கீதாயனும் மறைந்து விட்டார்.

தருணுடைய அப்பா ஒரு பிசினஸ் மேன்.
மூன்று குழந்தைகளுக்கும்  கடைசி தினம் என்பது ரசிக்கவில்லை.
பிரிய மனமில்லாமல் தான் விடை பெற்று சென்றார்கள்.

சில நாள் கழித்து குழந்தைகள் பிரியத்துடன்              எனக்கு ஈமெயில் கடிதம் எழுதினார்கள்.
ரஜினி பேரன் யாத்ரா நீளமான கடிதம்.

யாத்ரா, சிம்பன், தருண்

ராஜநாயஹம் மாஸ்டரை
நினைவில் வைத்திருக்கிறீர்களா?
மறந்து விட்டீர்களா?



.............................

Gossip and Rumors



பதினொரு வருடங்களுக்கு முன்
திடீரென்று ஒரு போன்.
’ராஜநாயஹமா? ’

”டேய் நான் தான்.. டா? ஐந்தாவதில ஒங்கூட படிச்சனே”

நினைவு மின்னலில் குறிப்பிட்ட இந்த என் பால்ய நண்பனைத் தேட சிரமமேதும் இல்லை.

பால்ய வயதிற்கு பின்னோக்கி போக எனக்கு எந்த சிக்கலும் ஏற்படவே இல்லை.
என் தகப்பனாரும் அவனுடைய தகப்பனாரும் அப்போது திருச்சியில் சுங்க இலாகா அதிகாரிகள்.

ஐந்தாவது படிக்கும்போது அவன் தான் என் நெருங்கிய நண்பன். இருவரும் இரட்டைக்குழந்தைகள் போல எப்போதும் ஒன்றாகவே இருப்போம்.
சினிமாவுக்கு ஒன்றாகப்  போவோம்.
என்னென்ன படம் என்பது கூட
இன்னும் பசுமையாக ஞாபகமிருக்கிறது.

ஞாயிற்றுக்கிழமைகளில் விளையாட என் வீட்டுக்கு வருவான். நான் அவன் வீட்டுக்குப் போவேன்.

எவ்வளவு வருடங்கள்!
செல்பேசியில் இது போல் இவ்வளவு காலம் கழித்துப் பேச வாய்க்கும்போது உண்டாகும் இயல்பான பரவசம்.

’டேய், எப்படி டா கண்டு பிடிச்சே? 'நான்.

“நான் இப்போது மும்பையில் கஸ்டம்ஸ் சூப்ரிண்ட். திருச்சியில் இருந்து ஒரு சூப்ரண்ட் இங்கே வந்திருந்தார். அவரிடம் உன் அப்பா பற்றி விசாரித்தேன். அவர் மகன் இப்போது திருச்சி கஸ்டம்சில் சூப்ரண்ட் என்றார். உன் தம்பி என்று தெரிந்தது. அவனுக்கு போன் போட்டேன்.
அவன் உன் நம்பர் தந்தான்”

என் பால்ய நண்பன் ரொம்ப உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்தான் என்பது
அவன் குரலிலேயே தெரிந்தது.

அந்த ஒன்பது வயதில் எங்கள் வாழ்வின் நினைவுகளை பரவசமாய் மாறி மாறி இருவருமே பகிர்ந்து கொண்டோம்.
 அவன் சொன்ன சில விஷயங்கள் எனக்கு ஞாபகம் இல்லை.
நான் சொன்ன சில சம்பவங்கள் அவன் நினைவில் இல்லை.

”உன்னப் பத்தி இன்னொரு விஷ்யமும் எனக்கு தெரியும்“ ஒரு பிரபல நடிகை பெயரைச் சொல்லி நிறுத்தினான்.

எனக்கு விஷாதம். ஏன் அந்த நடிகை பெயரைச் சொல்லி நிறுத்தி சிரிக்கிறான்?

ரொம்ப வருடங்களுக்கு முன் ஒரு முறை உன்ன பத்தி விசாரித்தேன்.
 நீ சினிமாவில் இருந்திருக்கிறாய் என்று தெரிந்தது.
அது மட்டுமல்ல. அந்த நடிகையுடன் You were living together என்றும் கேள்விப்பட்டேன்.”

”டேய் கேபி, இந்த விஷயம் ஏதோ ஒருத்தர் சொன்னது கிடையாது. பலபேரு அப்படி சொன்னாங்க”

’அதெப்படி பலர் என்னை ஒரே நடிகையுடன் இனணத்துச் சொல்லமுடியும்’

“ அந்த நடிகையை சினிமாவில், டி.வி.யில் பார்க்கும்போதெல்லாம் ராஜநாயஹம் ஞாபகம் தான் வரும்டா” ஹா..ஹா.. என்று ரசித்து மும்பையில் இருந்து சிரிக்கிறான்.

”ஏதோ ஓர் உக்கிரம் கண்விழித்து வேறோர் ஒழுங்கில் அடுக்கிவிட்டு
மீண்டும் விழிமூடிக்கொண்ட சாகசமோ ”

தேவதேவன் இந்த வரிகளை எந்த சூழலில் எழுதினாரோ தெரியவில்லை.
ஆனால் இந்த நேரம் அந்த வரிகள் தான் இங்கே என் மனதில்.

Gossip is  the devil's Radio.

நான் என் பால்ய நண்பனிடம் இது உண்மையல்ல என்று மறுதலிக்க ஆரம்பித்தேன்.

அவன் “ Easy,  Easy" என்று என்னை தேற்ற ஆரம்பித்தான். ”எல்லாம் ஒவ்வொரு நேரம் இப்படித்தான். எனக்குக் கூட ஒரு affair உண்டு.”

ஒரு பிரபல நடிகரின் மகள் என் பால்ய நண்பனின் காதலியாக இருந்திருக்கிறாள். அவள் திருமணமாகி விவாகரத்து பெற்ற பின்னும் கூட இவனைத் தேடி வந்திருக்கிறாள்.

ராஜநாயஹமும் இப்படி சில காலம் ஒரு நடிகையுடன் வாழ்ந்திருக்கிறேன்.
  We were sailing the same boat.

என்னை ஐந்தாம் வகுப்பில் படித்ததற்கு பின் இவன் பார்த்ததேயில்லை.ஆனால் ரொம்ப வருடங்களாக என்னைப் பற்றி ஒரு அபவாதத்தை நம்பிக்கொண்டே இருந்திருக்கிறான்.

யோசித்துப் பார்க்கையில் என்னைப் பற்றி வதந்திகள் அவ்வப்போது நானே கேள்விப்பட்டிருக்கிறேன்.
வீண் பழி, அபவாதம், அவதூறு.
விதவிதமான வண்ணவண்ண வதந்திகள்.
வதந்திகளை என்ன செய்யமுடியும்.

“Don't waste your time with explanations: people only hear what they want to hear.” 

- Paulo Coelho       
...

Mar 8, 2020

அன்பழகன்

கட்சியில் ஈ. வி. கே சம்பத் போர்க்கொடி தூக்கிய போது 'உனக்காவது சொத்து சுகம் இருக்கு, சம்பத். எங்களுக்கு என்ன இருக்கு? '
- இப்படி கேட்டவர்.

ஸ்தாபக தலைவர் மறைந்த பின் அவருடைய மருகல் 'என்னை விட வயதில் குறைந்த கருணாநிதியை எப்படி தலைவனாக நான் ஏற்பது?'

எம். ஜி. ஆர் கட்சியில் கலகம் விளைவித்த போது அன்பழகன்
'தி. மு. க என்ற பூமாலையில் ரோஜாப்பூ
 எம். ஜி.ஆர் தான் '

ஆனால் அதன் பின்னர் எப்போதுமே கருணாநிதியோடு நீங்காது நிலையாக மாறாமல் நின்றவர் அன்பழகன்.

கருணாநிதியை தலைவராக ஏற்றால்
என் பொண்டாட்டி கூட மதிக்க மாட்டாளே என்று குழம்பியவர், எம். ஜி.ஆர் கணக்கு கேட்டதற்கு காட்டிய ஆவேசம்.
' என்ன கணக்கு? என் பொண்டாட்டி கூட என்னிடம் கணக்கு கேட்டதில்லை. நீ என்ன கேட்பது?
இனி வேட்டிய அவுத்து தான் காட்டணும் '

' இரண்டு கதாநாயகர்கள், ஒரு கதாநாயகி, துப்பாக்கி வெடிக்கவில்லை. இதில் என்ன புரட்சி? '
அப்போது எதிர்க்கட்சி வரிசையில் இருந்த
எம். ஜி. ஆரை கேட்டார். அவர் மீது செருப்பு வீசப்பட்டது.
' சட்ட சபை செத்து விட்டது 'என்று சொல்லி விட்டு          எம். ஜி.ஆர் வெளிறிய முகத்துடன் வெளியேறினார்.

எம். ஜி. ஆரை கடுமையாக சாடிய மற்றவர்கள் தான் கருணாநிதி முதுகில் குத்தி விட்டு
எம். ஜி.ஆர் பின்னால் போய்ச் சேர்ந்தார்கள்.

கட்சியில் முரசொலி மாறன் பெரும் சக்தி படைத்தவராக, தலைவரின் நிழல் என்பது போக, நிழல் தலைவராக நின்ற போதும் அன்பழகன் கௌரவம் கருதி ரோஷப்பட்டதேயில்லை.

ஒருவித VRS மன நிலையில் அன்பழகன் தி. மு. க வில் இருக்கிறார் என்று கூட கிண்டல் செய்யப்பட்டிருக்கிறார். மனிதர் அசைந்து விடவில்லை.

அவருடைய இரண்டாவது திருமணம் பற்றி
 சர்ச்சை எழுந்ததுண்டு.

எம். ஜி. ஆரை மக்கள் 'வாத்தியார்' என்றார்கள்.
போல, அன்பழகனுக்கு தி. மு. க வினர் 'பேராசிரியர்' பட்டம் கொடுத்தார்கள்.

ஜெயலலிதா சென்ற முறை சட்ட சபையில் இவருக்கான
' பேராசிரியர் 'பட்டத்தை இகழ்ந்து
' ட்யூட்டராக இருந்தார்' என ஏளனமாக ஏகடியம் பேசிய போது
அன்பழகன் பதிலடி "அன்று யாரெல்லாம்
 என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று ஆராய்ந்து பார்க்கலாமா? "

ஸ்டாலின் - அழகிரி கலக காட்சிகளிலும்
மிகு‌ந்த ஜாக்கிரதையாக இயங்கியவர்.

அவருடைய மேடைப்பேச்சில் எப்போதும் தனித்தன்மை இருந்தது.

முயலின் பார்வையில்



ரொம்ப வருடம் முன் கணையாழியில்
 படித்த தத்துவ கதை.

ஒரு ஆள் தன் வீட்டில் முயல்கள் வளர்க்கிறார்.

 அதில் துரு துரு முயல் ஒன்றை
ஒரு விதமாக பழக்குகிறார்.
அது மூன்று குட்டிகரணம் போடவேண்டும்.
உடனே இவர் ஒரு காரட் அதற்கு தருவார்.

வீட்டிற்கு விருந்தாளி யாராவது வரும்போது அவர்களுக்கு தன் கொல்லையில் வளர்க்கப்படும் முயல்களை காட்டும்போது
இந்த குறிப்பிட்ட முயலை கூப்பிட்டு
அது இவர் முன் மூன்று குட்டிகரணம்
போடுவதை காட்டி
விருந்தாளிகள் ஆச்சரியப்படும்போதே
குட்டி கரணத்திற்கு ஊக்க போனஸாக
காரட் கொடுப்பார்.

அந்த முயல் தன் சக முயல்களிடம் சொன்னதாம்
 " இந்த ஆள் ரொம்ப தமாஷான ஆள். வேடிக்கையை பார்.
நான் இப்போ குட்டிகரணம் போடுறேன்.
இவன் ஓடி வந்து காரட் கொடுப்பான் பார்."

மூன்று குட்டிகரணம் போட்டது முயல்.
ஓடி வந்து அவர் காரட் கொடுத்தார்.
ஏனைய முயல்கள்
அந்த ஆள் செய்யும் சர்க்கஸை
மிகவும் ரசித்து மகிழ்வது வழக்கமாகிவிட்டது.

தெய்வாம்சமும் மிருகாம்சமும்




போன்னி சாம்பர்லைன் என்ற எழுத்தாளர்
 எழுதிய சிறுகதை.
'யூதாசின் முகம் ' என்ற தலைப்பு.

சிசிலிய நகரத்தின் தேவாலயத்தில் சுவர் ஓவியம் தீட்டும் வாய்ப்பு கிடைக்கபெற்ற ஓர் ஓவியர் பல ஓவியங்களை கோவில் சுவற்றில் வரைய ஆரம்பிக்கிறார்.
குழந்தை ஏசு வின் ஓவியம் வரைய அவருக்கு
மாசு மரு இல்லாத ஒரு முகத்தை தேடியிருக்கிறார்.

 ஒரு நாள் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவனை பார்க்கிறார்.
அழுக்காக இருந்தாலும் அந்த பால் முகம் தான் அவர் தேடிய முகம் என்பதால்
அந்த சிறுவனை அழைத்து கொண்டு போய் அவனுடைய அழகிய முகத்தை
குழந்தை ஏசுவாக வரைகிறார்.

யூதாஸ் ஓவியம் அவருக்கு மிகப்பெரிய சவாலாகி விட்டது
. ஏசுவை காட்டிகொடுத்த கயவன் முகம்.
பல வருடம் தேடியும் அவர் எதிர் பார்த்த
தீய , காம, கொடூர முகம் கொண்ட பல மனிதர்களை அவர் காண நேர்ந்தும்
ஓவியருக்கு யூதாஸ் முகம்
என யாரையும் தேர்வு செய்ய இயலவில்லை.

வருடங்கள் ஓடி விட்டது.
ஒரு நாள் வைன் குடிக்க பார் போயிருந்த போது ஒரு ஆள் 'வைன், எனக்கு வைன் வேண்டும் ' என புலம்பியவாறே பார் வாசலில் விழுகிறான்.

 வைன் அருந்திகொண்டிருந்த ஓவியர் எழுந்து வந்து அவனை தூக்கி பார்க்கிறார்.
 ஆச்சரியம். அவர் எதிர்பார்த்த
கொடூர ,பயங்கர முகம் கொண்ட மனிதன் அவன்.
அதி பயங்கர மிருக முகம்.

'வா, உனக்கு வைன், உணவு ,உடை தருகிறேன் ' என அழைத்துக்கொண்டு போய் அவனையே யுதாசாக வரைய ஆரம்பித்தார்.

இரவும் பகலுமாக வரைந்து கொண்டிருந்த நிலையில் அவன் அழ ஆரம்பித்தான்.

" உங்களுக்கு என்னை தெரியவில்லையா ? என்னைத் தான் நீங்கள் பல வருடங்கள் முன் 'குழந்தை ஏசு'வாக வரைந்தீர்கள்.
என்னை உங்களுக்கு இன்னுமா அடையாளம் தெரியவில்லை?"

தேம்பி தேம்பி அழுதான்.

கி. ரா கேட்ட பொஸ்தகம்

இருபது வருடங்களுக்கு முன்பு திருச்சியில் இருந்த என்னிடம் கி. ரா ஒரு உதவி வேண்டினார்.

'வியத்தகு எண்ணெய் மருத்துவம் '
என்று ஒரு நூல் அவருக்கு தேவையாம்.

திருச்சி காஜா மலை பக்கம் ஏதோ ஒரு வீட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது. எப்படியாவது தேடிப் பிடித்து இரண்டு பிரதியை வாங்கி அனுப்பும் படி கேட்டு எழுதியிருந்தார்.

 லெப்டினன்ட் கர்னல் தும்மல கோட்டேஷ்வர ராவ் எழுதிய தெலுங்கு புத்தகத்தை
ராயப்பேட்டை கோ.கிருஷ்ண மூர்த்தி தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருந்தது.

மலைக்கோட்டை பக்கம் எத்தனை புத்தக கடை.
அவற்றில் விற்பனைக்கு கொடுத்து தொலைத்திருக்கலாமே. மெயின் கார்ட் கேட் பகுதியில் எதற்கும் தேடிப்பார்க்க முயன்றேன். ம்ஹூம் கிடைக்கவில்லை.

காஜாமலை போன பின் பஸ்சில் இருந்து இறங்கி ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத ரோட்டில் ரொம்ப தூரம் நடக்க வேண்டியிருந்தது.

என்னவோ ஏழு கடல், ஏழு மலை தாண்டின்ற அலுப்பு. நீண்ட தூரத்திற்கு ஒரு ஆளே பார்க்க முடியாமல், விசாரிக்க ஒரு கடை கூட காண கிடைக்காமல்.

'மதுரக்கி வழி வாயில'ன்னு சொல்றது திருச்சிக்கு செல்லுபடியாகாது போல.

ஒரு வழியா அந்த வீட்ட கண்டுபிடிச்சி
மூணு பொஸ்தகம் விலைக்கு வாங்கி
 ஒன்ன என் அப்பாவுக்கு குடுத்துட்டு
ரண்ட கி. ராஜநாராயணனுக்கு
ரிஜிஸ்டர் போஸ்ட்டில் அனுப்பி வைத்தேன்.

காலயில பல்ல விளக்கிட்டு காலக்கடனெ முடிச்ச பெறகு, சாப்பிடுறதுக்கு முன்ன ரெண்டு தேக்கரண்டி நல்லெண்ண, இல்ல கடலெண்ண, இல்லாட்டி ரீஃபைண்ட் சூரிய காந்தி எண்ணய வாயில விட்டு பதினஞ்சி, இருவது நிமிஷம் கொப்பளிச்சு துப்பிடனும். வாய நல்லா கழுவிடனும்.

ஒரு நாள்ள மூணு தடவ கூட கொப்பளிக்கலாம். ஆனா வெறும் வயித்துல தான்.

இது தான் 'வியத்தகு எண்ணெய் மருத்துவம்'.

ஆமா, இன்ன நோயின்னு இல்ல, எல்லா வியாதிக்கும் இந்த ஒரே மருத்துவ முறையாம்.

கி. ரா அப்புறம் ரொம்ப நன்றி சொன்னார்.

இந்த எண்ண கொப்பளிக்கிற வைத்திய
சிகிச்சைய செய்ய ஆரம்பிச்சாச்சுன்னு உற்சாகமாக சொன்னார்.

இந்தா பாருங்க இப்ப அவருக்கு
தொண்ணூத்து ஏழு வயசாகுது.

ஏதோ கி. ரா. வோட இந்த பூர்ண ஆயுசுக்கு நானுந்தான் காரணமோ?

....

Mar 6, 2020

Mohamed Fazlulla Khan on R.P.Rajanayahem


Mohamed Fazlulla Khan(the famous linguistic scientist)  on R.P.Rajanayahem


"I started addressing you on this platform with the thought
that I was once your senior at college.
But as I browse through your writings in Tamil, that carry appropriate quotes and references from English and other literatures, I realise that I am dealing with a well read person turned into a sublime writer, a valuable critic of life, language, religion and literature.
I can only express my awe and wonder at your intellectual and linguistic calibre.
Hats off to you.
Keep up the good work."

R. P. ராஜநாயஹம் நூல் "சினிமா எனும் பூதம்"


இந்தத் தலைப்பே புத்தக உள்ளடக்கத்தைச் சொல்லி விடுகிறது. இந்தத் தமிழ்த் திரை பூதம் காட்டிய அசாதாரண அசுர கலைஞர்கள் அனுபவித்ததெல்லாமே மானுட வேட்கை சார்ந்த அசந்தர்ப்ப நிர்ப்பந்தங்கள்தான்.

எந்தக் குறிப்புகளின் தேடலுமின்றி முற்றிலும் என் ஞாபக அடுக்குகளை மட்டுமே
கொண்டு, அறிந்த திரை ஆளுமைகள் பற்றிய அறியாத சுவாரசிய விஷயங்களை
இந்த நூலில் ஆவணப்படுத்தியிருக்கிறேன்.

zero degree publishing
Ramjee mobile 98400 65000

Mar 1, 2020

அப்பாவின் உடல் freezer box ல்


அப்பாவின் உடல்
freezer box ல்.
பார்க்கும் போது நாற்பத்திரண்டு வயதில் பார்த்த அப்பா போல தோற்றம்.
ஒரு நாற்பது வயது திடீரென்று காணாமல் போய் விட்டதா?

இறந்த மனிதர் போலவே இல்லை.

அழகான ஒரு நடுத்தர வயது மனிதர் உறங்குவது போல தெரிகிறது.
சாவுக்கு வந்திருந்த ஒவ்வொருவரும் தவறாமல் சொன்ன விஷயம் - " இறந்த உடல் என்றே நம்ப முடியவில்லை"
"பிணம் இவ்வளவு அழகாக பார்த்தது
இது தான் முதல் தடவை. "
அப்பா இறப்பதற்கு போராட ஆரம்பித்த சமயம் நான் சென்னையில் இருந்து ரயிலில் வந்து கொண்டிருந்தேன். என் உடல்நிலை ஆரோக்கியமாயில்லை.                        திடீரென்று அப்படி ஆயிற்று.
திருப்பூரில் ரயிலில் இருந்து இறங்கி,
மூத்த மகன் கீர்த்தி பைக்கில் பின்னால் அமர்ந்து வீடு வரும் போது ரோட்டில்            மயங்கி சரிந்து விழுந்து விடுவேனோ என்று பயமாயிருந்தது.
அந்த இரவு மதுரையில் அப்பா மரணப்போராட்டம்.
இங்கே என்னால் ஒரு நிமிடம் தூங்க முடியவில்லை.
என் உடல் நிலை படாத பாடு பட்டது.
காலையில் அப்பா இறந்து விட்ட செய்தி.
நான் கீர்த்தியை இறுக்க பற்றிக்கொண்டேன்.
டாக்டரை பார்த்த பின் மதுரை கிளம்பினேன்.
மதுரைக்கு போன பின்னர் என் உடல் நிலை இன்னும் மோசமாகியது. காலையில் மீண்டும் ஒரு முறை ஹாஸ்பிடல் போக வேண்டியிருந்தது.
அப்பா உடலை freezer box ல் இருந்து எடுத்து இறுதி யாத்திரைக்கு ஆயத்தப் படுத்திய போது நானே நினைக்கிறேன் " இறந்து முப்பது மணி நேரம் ஆன பின்னும்                   அப்பா முகத்தில் இவ்வளவு தேஜஸா?"
யாரோ ஒரு அம்மாள் பதற்றத்துடன் சொல்கிறார்
" டாக்டர கூப்பிடுங்கங்க. உயிரோட தான் இருக்கிற மாதிரி தெரியுதுங்க.                      உயிரு இருக்குது.
டாக்டர கூப்பிட்டு எதுக்கும் கடைசியா ஒரு தடவ செக் பண்ணிடுங்க "
நான் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியாதபடி உடம்பு படுத்தியெடுத்து விட்டது.

......... ...................................................................
............... ..............................................................................
1. அப்பாவின் மடியில் கீர்த்தி, பின்னால் நிற்பது ராஜநாயஹம்
2. அப்பா
3. அப்பா இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம்

The priest and the frogs



அந்தோனி டிமெல்லோ ஒரு கிறித்துவ பாதிரி.        நிறைய குட்டிகதைகள் எழுதியுள்ளார்.

மதத்திற்கு விரோதமான கருத்துக்கள்
 அந்த கதைகளில் இருப்பதாக அவர் மீது                      கத்தோலிக்கம் கண்டனம் வைத்தது.
அவர் எழுதிய குட்டி கதை ஒன்று.

' ஒரு பாதிரி ஜெபம் செய்ய ஆரம்பிக்கிறார்.                                   அப்போது மழைக்காலம்.
 அதன் காரணமாக அவருடைய சர்ச் ஒட்டியுள்ள வீட்டை சுற்றி தேங்கிய குட்டையில் தவளைகள் சப்தம்.

பாதிரியார் பிரார்த்தனைக்கு இந்த தவளை சத்தம் குந்தகம் விளைவிக்கின்றன
என எண்ணி அயர்ச்சியடைகிறார்.

“Quiet. I’m at prayer” என்று ஒரு கூப்பாடு போடுகிறார்.

தவளைகள் அனைத்தும் நிசப்தமாகி விடுகின்றன. பயங்கர அமைதி.

பாதிரி சந்தோசமாக
உரக்க கூவி பிரார்த்திக்கிறார்.

“My Father, Who art in heaven”

வானத்திலிருந்து ஒரு அசரிரி

“OK, I am hearing you.
But why did you stop the prayer of the Frogs?”

...