Share

Mar 22, 2020

" என்னடா இங்க வந்துட்ட"

There are more things in heaven and earth
 than are dreamt of in your philosophy

- Shakespeare in Hamlet

வண்ண நிலவன் 'கடல் புரத்தில்' நாவலை படமாக்க வேண்டும் என
முகேஷ் சுப்ரமணியம் என்று ஒரு இளைஞன் ஆசைப்பட்டு கோணங்கியிடம் சொல்லியிருக்கிறான்.

முகேஷை அழைத்துக் கொண்டு போய்
வண்ண நிலவனிடம் கோணங்கி அறிமுகப்படுத்தி விஷயத்தை சொன்ன போது,
அவர் கோணங்கிக்காக பணம் எதுவும் வாங்க மறுத்து கடல் புரத்தில் நாவலை படமெடுக்க அனுமதி கொடுத்திருக்கிறார்.

வண்ண நிலவன் நாவலை மிகுந்த ஈடுபாட்டுடன் முகேஷ் சுப்ரமணியம் படமாக வளர்த்தெடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறான்.

சர்ச் காட்சிகளில் போர்ச்சுகீஸிய இசை ரீரிக்கார்டிங் ஆக இணைத்து பிரமாதமான அர்ப்பணிப்பு.
படம் முடிக்க முடியவில்லை.

கோணங்கியின் அபிப்ராயத்தில் இந்த படம் முழுமையாக முடிக்கப்பட்டு வெளி வந்திருந்தால் அற்புதமான செல்லுலாயிட் ஓவியம்.

பொருளாதார விஷயம் எப்படியெல்லாம் நல்ல பெரு முயற்சியை காவு வாங்கி விடுகிறது?

ஆனால் எந்த நோக்கத்திலும் வேறு  விதமான சிறப்பான விளைவு இருக்கவே செய்கிறது.

முடியாத கடல்புரத்தில் கதாநாயகி பிலோமியாக நடித்த பெண்ணுக்கும், இயக்குநர் முகேஷுக்கும் காதல் முகில் கூடியது.

அந்த பிலோமியாக வேடந்தரித்த பெண்ணின்
ஊர் சிங்கம்புணரி.

சிங்கம்புணரியில் திருமணம் செய்து கொள்ள
 ஒரு வீடு பத்து நாளுக்கு வாடகைக்கு இந்த இளம் ஜோடி எடுத்திருக்கிறார்கள்.

அந்த திருமண நிகழ்வில் கலந்து கொள்ள கோணங்கி சிங்கம்புணரிக்கு போயிருக்கிறான்.
ப. சிங்காரத்தின் சொந்த ஊர்.

சிங்காரம் தாத்தாவின் ஈமக்ரியை சொந்த ஊரில் தான் இறந்த பின் நடந்திருக்கிறது.

அங்கே இந்த திருமணம் இப்போது.

கோணங்கி அங்கே தெருவில் சிங்காரம் தாத்தா நடந்து வருவதை கண்ணால் பார்த்திருக்கிறான்.

"டேய், என்னடா இங்க வந்துட்ட " - சிரித்த முகத்துடன்
ப. சிங்காரம் கேட்டுக்கொண்டே நடந்து போனாராம்.

One need not be a chamber to be haunted

- Emily Dickinson

கோணங்கி அந்த ஊரிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி விட வேண்டும் என்று முடிவே செய்து விட்டான்.

வேலை பார்ப்பவர்க்கு தான் வீடு கொடுக்க முடியும் என்று சொல்லி விட்டார்கள்.

கோணங்கியின் திட்டம் இதனால்
தகர்ந்து போனது.

https://m.facebook.com/story.php?story_fbid=2680551848824931&id=100006104256328

..............................................................................................

.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.