Share

Oct 21, 2012

நடிகையர் திலகம் சாவித்திரி


கேமராவிற்கென்றே வடித்த முகம் ஒன்று என்றால் அது சாவித்திரியின் முகம் தான்!
எப்போதும் நான் பொது இடங்களுக்கு செல்லும்போது சாவித்திரி போல ஒரு பெண் தென்படுகிறாரா என்று தேடுவேன். தேடிக்கொண்டே தான் இருக்கிறேன்.இன்னும் சாவித்திரி போன்ற அச்சு அசலாக இன்னும் ஒரு பெண்ணை பார்க்க வாய்க்கவில்லை. வாழ்க்கையில் எத்தனையோ நிராசைகள்!என்னுடைய சாவித்திரி பாசமலர்,பாதகாணிக்கை,காத்திருந்த கண்கள் போன்ற படங்களில் வரும் செழிப்பான சாவித்திரி.




சாவித்திரிக்கு சிவாஜி போலவே ஒவ்வொரு காலகட்டத்திலும் உடல் அமைப்பில் மாறுபாடு  உண்டு.
தேவதாஸ்,மிஸ்ஸியம்மா,மாயாபஜார் சாவித்திரி ஒரு வகை அழகு.

களத்தூர் கண்ணம்மா,பாசமலர், பாவமன்னிப்பு, பாதகாணிக்கை, காத்திருந்த கண்கள் போன்ற படங்களில் வரும் சாவித்திரி வேறு வகை அழகு.

அப்புறம் பூஜைக்கு வந்த மலர் படத்தில் வரும் குண்டு சாவித்திரி.

திருவருட்செல்வர் படத்தில் ’ஊதிப்பெருத்த’ சாவித்திரி.

பின்னால் மலையாளப்படம் ’சுழி’ சாவித்திரி.

அப்புறம் அம்மா கதாபாத்திரங்களில் மெலிந்த ஒல்லி சாவித்திரி

அமிதாப் பச்சன் கூட இப்போது சாவித்திரி பற்றி குறிப்பிட முடிகிறது. ரேகா தன் சோட்டி மம்மி பற்றி சிலாகிக்கிறார்.

சாவித்திரி மட்டுமே அனைத்து நடிகைகளிலிருந்தும் வித்தியாசமானவர்! நடிகைகள் அனைவரிலும் மேலான திறமை கொண்டவர் தான் சாவித்திரி.

பத்மினி,சரோஜாதேவி,தேவிகா இந்த வரிசையில் முதலிடம் சாவித்திரிக்குத் தான்.

வேற்று மொழிப்பெண்கள் தமிழ் திரையில் அன்று நிகழ்த்திய கண்ணிய சாதனை மகத்தானது. முழுக்க ஹீரோ நடிகர்களின் ஆக்கிரமிப்பின் காலத்தில்,ரசிகப்பெருமக்களும் அந்த நடிகர்கள் பற்றிய பிரமிப்பில் இருக்கின்ற நிலையில்,  பெண் கதாபாத்திரங்களை ஏற்று நடித்த அன்றைய சாவித்திரி,பத்மினி,சரோஜாதேவி,தேவிகாவெல்லாம் உயர்ந்த கலாபூர்வ நளினத்தை வெளிப்படுத்தினார்கள்.

சாவித்திரி தன் துணை யாரென்று ஆரம்ப காலத்திலேயே,16 வயதிலேயே தேர்ந்தெடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்திருக்கிறார்.அதிலும் சாஸ்திரப்படி இரண்டாவது மனைவி அந்தஸ்தில், சம்பிரதாய வரிசைப்படி மூன்றாவது தாரமாக வாழ்க்கைப்பட்டவர்.ஜெமினி கணேசனுக்கு அப்போது 32 வயது!

(படிப்பதற்கே தலை சுற்றுகிறதென்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.)

சில வருடங்கள் ரகசியமாக அந்தத் திருமணத்தைப் பேணிக்காக்கவேண்டிய சூழ்நிலை வேறு! தலைமறைவுத் தாம்பத்தியம்.இதற்கு அவருடைய வளர்ப்பு தகப்பன் சௌதுரி மட்டும் காரணமல்ல.ஆனால் ஜெமினிகணேசன் காந்தர்வத்திருமணம் ( எவ்வளவு யோசித்தும் வேறு வார்த்தை கிடைக்கவில்லை.) செய்து கொண்ட பிரபல நட்சத்திரம் புஷ்பவல்லியும் தான் காரணம்.முதல்மனைவி பாப்ஜி அமைதியாக வேடிக்கை பார்த்தாலும் கூட புஷ்பவல்லி கடுமையான குரோதத்தை சாவித்திரி மீது காட்டினார்.
தான் ஓட்டி வந்த காரை இவர் மீது ஏற்றிக் கொல்லத்துணிகிற ஆவேசம்,துவேசம் புஷ்பவல்லிக்கு இருந்தது.

1952ல் மனம்போல் மாங்கல்யம் படத்தில் நடித்துக்கொண்டிருந்த காலத்தில் சாவித்திரிக்கு திருமணம். ஏற்கனவே ஜெமினி கணேசனுக்கு1951செப்டம்பர் 22ல் புஷ்பவல்லியோடு தொடர்பு ஏற்பட்டு விட்டது.புஷ்பவல்லிக்கு 1954ல் ரேகாவும் 1955ல் ராதா என்ற பெண்ணும் பிறந்த நிலையில் அந்த வருட கடைசியில் Gemini-Pushpavalli relationship ended abruptly. 1956ல் தான் சாவித்திரியுடன் ஜெமினி திருமண உறவு வெளித்தெரிந்தது.

இவ்வளவிலும் சாவித்திரியின் நடிப்புத்திறமை ஜ்வலித்த மாயம் தான் பெரிய விஷயம். Director’s delight என்றே பெரிய இயக்குனர்கள் வாய்விட்டுச்சொன்னார்கள்.பிரமிக்க அடிக்கிற நேர்த்தியான நடிப்பு.

An angel’s graceful performance!

தெலுங்கு தமிழ் திரையுலகங்களில் கதாநாயக தேவேந்திரர்களின் இந்திராணியாக சாவித்திரி எட்டுக்கண்ணும் விட்டெரிய வலம் வந்தார்.

நிர்மலமான அழகுமுகம் கொண்ட சாவித்திரி.
பெண்மையின் மொத்த சாரமும் இயைந்து ஊறிய ஈர மென்மை.

எந்த ஹீரோ நடித்தாலும்,படத்தின் பெரும்பகுதியையும் ஹீரோ ஆக்கிரமித்தாலும் சாவித்திரி தன் விஷேச நடிப்பால் புறந்தள்ளி விட்டார்.

காதல் காட்சிகளில் vulgarity,obscenity எதுவும் காணமுடியாது. வேட்டைக்காரனில் எம்.ஜி.ஆருடன் காதல் காட்சி பற்றி கொஞ்சம் முணுமுணுப்பு இருந்தது.

சாவித்திரி தெலுங்குப்பெண்.ஆனால் தமிழ் பேசுவது ரொம்ப கச்சிதம். Accent and Diction பிரமாதம். சிவாஜி கணேசனுக்கு இணையாக ஏன் இன்னும் கூடிய அளவில் தமிழ் உச்சரிப்பு சிறப்பாகவே இருக்கும்.ஆனால் சிவாஜி ஒரு தெலுங்குப் படத்தில்(பெம்புடு கொடுகு) நடித்தபோது “Ganesan’s Telugu pronunciation is horrible” என்று அங்கே ஒரு பத்திரிக்கையில் (Kinema, Dec 1953 issue)எழுதினார்கள். நடிகர் திலகத்தை விட நடிகையர் திலகம் எத்தகைய திறமை வாய்ந்தவர்!
சார்லி சாப்ளின் போலவே சாவித்திரியும் Left hander!சாவித்திரியின் நடிப்பைப் பற்றி விளக்கக்கூட ஒரே வார்த்தை-'Perfect'.

சாவித்திரியின் கண்கள் பேசிய கதைகள்! முக பாவங்களின் உணர்ச்சிகள்!

சரோஜாதேவி தனக்கு கிடைத்த வாய்ப்புகளால் சாவித்திரியை மிஞ்சி விடமுடிந்தாலும் அவருடைய திறமையான நடிப்பை நெருங்க முடிந்ததில்லை.

நடிகையாக சாவித்திரியின் சாதனைகள் பற்றி எழுதி உணர்த்தி விட சாத்தியமில்லை. The greatest actress ever born and ever to be born!
ஆறு படங்கள் இயக்கியவர்.ஜெமினி,வாணிஸ்ரீ யுடன் நடித்த ’குழந்தையுள்ளம்’,(’முத்துச்சிப்பிக்குள்ளே ஒரு பூவண்டு,துயில் கொண்டதே இன்பத்தேனுண்டு’ என்ற ஆரம்பகால எஸ்.பி.பி பாடல் இந்தப்படத்தில் தான்!)சிவாஜியுடன் இவர் நடித்த’பிராப்தம்’ (பி.சுசிலா டிஎம்எஸ் பாடிய ’சொந்தம் எப்போதும் தொடர்கதை தான்.முடிவே இல்லாதது.எங்கே சென்றாலும் தேடிகிடைக்கும் இனிய சுகம் இது’)இரண்டு படங்களும் சாவித்திரியே இயக்கியவை தான்.
1969ல் ஜெமினி கணேசனும் சாவித்திரியும் பிரிந்து விட்டார்கள்.
Even though unforgiving, never

Against thee shall my heart rebel
                                 -Byron


சாவித்திரி தமிழில் எடுத்த ’பிராப்தம்’ படமும் தெலுங்கில் எடுத்த ’விண்ட சம்சாரம்’படமும் இவர் பொருளாதாரத்தை சிதைத்து வாழ்வு தடம்புரளக்காரணமாகிவிட்டது.
தெலுங்கில் சாவித்திரியுடன் அக்கினேனி நாகேஸ்வரராவ்,ஜமுனா நடித்து வெற்றி பெற்ற படம் ’மூக மனசுலு’.இதைத்தான்  சாவித்திரி தமிழில் 1969ல் படப்பிடிப்பை துவங்கி சிவாஜி,சந்திரகலாவும்  நடிக்க ’பிராப்தம்’ என்ற பெயரில் தானே கதாநாயகியாக நடித்து,தயாரித்து இயக்கினார்.
’பிராப்தம்’ படம்  இரண்டு வருடம் தயாரிப்பில் இருந்ததால் வட்டி எகிறி விட்டது.சிவாஜி படங்கள் சில அந்த நேரத்தில் சரியாக ஓடாததால் வினியோகஸ்தர்கள் இந்தப் படவெளியீட்டில் ஒத்துழைக்கவில்லை.அதனால் படம் படுதோல்வி கண்டது.

தமிழில் சிவாஜி பத்மினி நடித்த ’வியட்நாம் வீடு’ படம் தான்தெலுங்கில்1970ல் துவங்கி ரீமேக்காகி ’விண்ட சம்சாரம்’ என்ற பெயரில் சாவித்திரியும் ஜக்கையாவும் நடித்து வெளியானது.

பிராப்தம், விண்ட சம்சாரம் இரண்டு படங்களுமே ஒரே நாளில் 1971ல் வெளியாகிய படங்கள். துரதிர்ஷ்டங்கள் எப்போதுமே தனியாக வருவதேயில்லை!

ரு மனுஷியாக saint என்று தான் சொல்லவேண்டும். சொத்துக்களை இழந்து,ஹபிபுல்லா ரோடு பங்களாவை இழந்து, அண்ணா நகர் வீட்டில் இருந்த போதுகூட அவர் செய்த உதவிகள் பற்றி தெரிய வரும்போது ஆச்சரியம் தான் மிஞ்சுகிறது.

ஒரு ரசிகர். தினமும் நூறு ரூபாய் மணியார்டர் சாவித்திரிக்கு செய்து வந்தவர்.திடீரென்று ஒரு நாள் தன் தொழிலில் நொடித்துப்போய் சாவித்திரியைக் காண வந்து தன் நிலையை சொல்கிறார். 6000 ரூபாய் இருந்தால் மீண்டும் பிசினசை துவங்கமுடியும். வீட்டில் உள்ள தன் ஷீல்டுகள் எல்லாவற்றையும் ஒரு சேட்டுக்கடையில் விற்று 10000 ரூபாய் அந்த ரசிகருக்கு கொடுத்தவர்.

அண்ணாநகர் வீட்டுக்கு இவருடைய பழைய டிரைவர் ஒருவரின் மகள் வருகிறார்.தன்னுடைய விலையுயர்ந்த சேலையை எடுத்து வீட்டு முன் இருக்கிற ரிக்‌ஷாக்காரனிடம் கொடுத்து விற்று வரச்சொல்லி,கிடைக்கும் பெருந்தொகையான பணத்தை அந்தப்பெண்ணின் திருமணச்செலவுக்கு கொடுக்கிறார்.
பெண் தெய்வம் சாவித்திரி!

எம்.ஜி.ஆருடன் மஹாதேவி,வேட்டைக்காரன்,பரிசு ஆகிய படங்கள். சந்திர பாபு தயாரித்து இயக்கி, வாழ்க்கையைப் பாழாக்கி, முடியாமல் நின்று போன ’மாடி வீட்டு ஏழை’யில் கூட எம்.ஜி.ஆருக்கு ஜோடி சாவித்திரி தான்.

சிவாஜியோடு ஜோடியாக அமரதீபம்,வணங்காமுடி,அன்னையின் ஆணை, காத்தவராயன் துவங்கி,ரத்தத்திலகம்,கை கொடுத்த தெய்வம், நவராத்தி்ரி, திருவிளையாடல் தாண்டி பிராப்தம் வரை சாவித்திரி!

ஜெமினி கணேசன் தான் சாவித்திரிக்கு மிகப்பொருத்தம் என்று இன்றும்

”யார் யார் யார் அவள் யாரோ ஊர்பேர் தான் தெரியாதோ” “காலங்களில் அவள் வசந்தம்” காற்று வந்தால் தலை சாயும் நாணல்” போன்ற பாடல்கள் சாட்சி சொல்கின்றன.

பாசமலர் படம் ரிலீஸ் அன்று எல்லாம் உனக்காக என்று ஒரு படமும் வெளியானது. அதில் சிவாஜியின் ஜோடி சாவித்திரி. ஆனால் அண்ணன் தங்கையாக பாசமலரில் வந்தவர்கள் அதே நேரத்தில் இதில் ஜோடியாக நடித்ததை ரசிகர்கள் ஏற்கவில்லை.


சாவித்திரியின் Rash car driving பற்றி இப்போதும் பலர் நினைவில் வைத்திருக்கிறார்கள்.அவருடைய குடிப்பழக்கம்....
மிகத்தேர்ந்த நடிகை சொந்த வாழ்க்கையில் வேஷம் போடத்தெரியாதவராயிருந்திருக்கிறார்!
அவருடைய அம்மா சுபத்ராம்மா,அக்கா மாருதி ஆகியோரை புகைப்படங்களாக பார்க்கும்போது அவர்கள் சாவித்திரியின் பேரழகுக்கு உறை போடக்காணமாட்டார்கள் என்று உடனே தோன்றுகிறது. சேற்றில் செந்தாமரை தான்.
ஒன்றரை வருடங்கள் கோமாவில் கிடந்து சாவித்திரி இறக்கவேண்டியிருந்திருக்கிறது.அப்போது 46 வயது.
சில மரணங்கள் ஆறாத துயர வடுக்களை ஏற்படுத்தி விடுகின்றன.
ஆறாது ஆறாது அழுதாலும் தீராது
ஆனாலும் வழியென்ன தாயே!

இந்திய அரசாங்கம் 08-03-2009ல் ஒரு தபால்தலை சாவித்திரிக்கு வெளியிட்டது.இந்த விஷேச கௌரவம் இந்தி நடிகை தேவிகாராணி,மீனாகுமாரிக்கும் கூட கிடைத்திருக்கிறது.
.......

http://rprajanayahem.blogspot.in/2009/12/blog-post_29.html

14 comments:

  1. மறக்க முடியாத நடிகையர் திலகம்...

    நன்றி...

    ReplyDelete
  2. தங்களின் கலை உள்ளத்திற்கு தலை வணகுகிறேன்.
    தாங்கள் கூறியது அனைத்தும் உண்மையே. அழகாக தொகுத்து அளித்த விதம் மனதை நெகிழ வைத்தது.

    ReplyDelete
  3. சாவித்திரி நடித்த மிஸ்ஸியம்மா, மாயா பஜார் போன்ற படங்களை எவ்வளவு தடவை வேண்டுமானாலும் பார்த்து ரசிக்கலாம்.
    மிஸ்ஸியம்மா படத்தில் ஜெமினியும் சாவித்திரியும் அனேகமாக-- ஒரு சீன் தவிர-- தொட்டுக் கொள்வதே இல்லை. ஆனாலும் மென்மையான காதல் இழையோடி நின்றது.
    இப்படியான ப்டங்களை எடுக்க இப்போது ஆட்கள் இல்லை.
    Old is Gold என்ற அடிப்படையில் சொல்லவில்லை. அவையெல்லாம் உண்மையாகவே சிறந்த ப்டங்கள்.கதையில் வலு இருந்தால் படம் சிறக்கும்.

    ReplyDelete
  4. RPR sir, the WOW factor of your writing increases with every piece you write. I wonder if all the information that you write is from your tenacious memory or you also do some research for certain subjects. Hats off!!!

    ReplyDelete
  5. saavithri is a phenomenon.

    ReplyDelete
  6. பாசமலர் படத்தில் “எங்களுக்கும் காலம் வரும்” என்ற பாடலில் சாவித்திரி, சிரித்த முகமாய் துள்ளித் துள்ளி ஆடி பாடிய காட்சி மறக்க முடியாதது.

    ReplyDelete
  7. நல்ல நடிகை,மனிதாபிமானம் போற்றதக்கது!

    ReplyDelete
  8. My all time favourite. A wonderful childish look. She was the true Nadigayar Thilagam. We will never get a actress like Savithiri amma. Hats off to this article.

    ReplyDelete
  9. nice post.

    what do you think about the twitter issue and the action of Chinmayi?

    ReplyDelete
  10. I am walking down the memory lane, recollecting all thoughts associted with the anecdotes you had covered, because Savithri was such an integral part of our lives.Wonderful article so well written. V Viswanathan

    ReplyDelete
  11. I read somewhere savithri from shenoy nagar in her penaltimate days visited mgr s office in t nagar and mgr helped her medical and other expenses with one lake rupees. I think it was in one of the articles by mgr s erstwhile body guard

    ReplyDelete
  12. பாவப்பட்ட ஜென்மம். இப்போது தொலைக்காட்சியில் பார்க்கும் போது அவருடைய கடைசி நாட்கள் தான் நினைவுக்கு வருகின்றன.

    ReplyDelete
  13. நீங்கள் சொன்ன எல்லாவற்றையும் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். ஆனாலும் இன்னொரு பார்வையும் உண்டு - http://dharumi.blogspot.in/2005/10/98.html


    ReplyDelete
  14. அவரது மகன் என்னவானார்? பேரன் நடிகனாக ஆயோச்சோ?(ராமானுஜம்)

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.