Share

May 30, 2017

பெரிய இடத்துப்பிள்ளை


திருச்சியில் என்னுடைய பணம் வாங்கியிருந்த நபர் பைபாஸ் சர்ஜரி செய்து கொண்டிருந்தார். அதையே சாக்காக்கி என் பணத்திற்கான வட்டி தராமல், பணத்தையும் தராமல், பணத்தை கேட்டால் தனக்கு மாரடைப்பு வந்து இறந்தால் அந்த பாவம் என்னைத் தான் சேரும் என மிக கவனமாக என்னை மிரட்டினார்.

என்னுடைய பணம் போச்சு. கடைசியாக என்னிடம் மிஞ்சியிருந்த முதலும் போச்சு.

உடனடியாக நான் ஒரு வேலையில் சேர்ந்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தம்.
ஓய்வு பெற்ற சுங்க அதிகாரியான என் தகப்பனார் என்னை ஒரு பெரிய நிறுவன அதிபரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

அந்த நிறுவன அதிபர் என் தகப்பனாருக்கு நாற்பது ஆண்டுக்கும் மேல் நல்ல பழக்கம். சுங்க அதிகாரியாக திருச்சியில் சக்தி மிகுந்திருந்த காலத்தில் இருந்தே ரொம்ப நெருக்கம்.

அவருடைய பெரிய பங்களாவுக்கு தொலை பேசியில் தகவல் சொல்லி விட்டுத் தான் நானும் அப்பாவும் சென்றிருந்தோம்.
முதலாளி இன்முகத்துடன் எங்களை வரவேற்றார்.

உடனே அவருடைய தாயார் வந்து விட்டார்.
முதலாளியின் அம்மா உணர்ச்சி வசப்பட்டு கும்பிட்டார்.“ அய்யா எப்படி இருக்கீங்க அய்யா. நீங்க எங்க தெய்வம்”
ஸ்வீட் காரம் நிறைய ஒரு தட்டில்.

அந்த அம்மா என்னைப்பற்றி விசாரித்தார். “ உங்க மகனா? கல்யாணம் ஆச்சா?”
அப்பா “ இவனுக்கு கல்யாணம் ஆகி இருபது வருடம் ஆகுதும்மா!”
”அப்படியா! நம்பவே முடியலயே?” முதலாளியின் அம்மா ஆச்சரியப்பட்டார். எனக்கு இரண்டு மகன்கள் என்ற விஷயம் அவரை இன்னும் ஆச்சரியப்படுத்தியது.
என் அப்பா “ இவனிடம் கெட்ட பழக்கம் எதுவும் கிடையாது. அது தான் ரொம்ப இளமையா இருக்கான்.”

அந்த அம்மாள் என் அப்பாவின் கன்னத்தை வாஞ்சையுடன் வருடினார். ஒரு கையால் தாடையைப் பிடித்து, மறுகையால் வாயில் ஊட்டி விட்டார்.
“சாப்பிடுங்கய்யா!”

அப்பா “ இவன் ஃபைனான்ஸ் தொழிலில் எல்லா பணத்தையும் தொலச்சிட்டான்.இவனுக்கு உடனே ஒரு வேலை வேணும்.”

அந்த அம்மா தன் மகனிடம் சொன்னார். “ இந்தப் பையன் இனி நம்ம பிள்ள. உடனே நீ இவனுக்கு நல்ல வேல குடுத்துடணும்ப்பா.”
முதலாளி முகமலர்ச்சியுடன் “ சரிம்மா”

அம்மா தன் மகனுடைய பேரைச்சொல்லி சொன்னார். “ உனக்கு நல்லா ஞாபகம் இருக்காப்பா? முப்பது வருடத்திற்கு முன்னால அய்யா தானப்பா நம்ம குடும்பத்தை காப்பாத்தினாரு. என்னப்பா சொல்ற. இவரு இல்லன்னா நாம தெருவில தானப்பா அன்னக்கி நின்னுருப்போம். அய்யா நம்ம தெய்வம். விளக்கேத்தி வச்ச தெய்வமில்லையா? அவரு பிள்ளைக்கு ஒரு நல்ல வேல கொடுக்க வேண்டியது நம்ம கடமைப்பா. சொல்லுப்பா… அன்னக்கி அய்யா மட்டும் உதவலன்னா நாம தெருவில தானப்பா நின்னுருப்போம்.”

அந்த அம்மா மிகவும் உணர்ச்சி வசப்பட்டு என் தகப்பனாரை வணங்கி, இதே வார்த்தைகளை மீண்டும் சொன்னார். “ ஏப்பா.. அது சாதாரண உதவியாப்பா! தெய்வம்யா இந்த அய்யா!”

மீண்டும் எனக்கும் அப்பாவுக்கும் ஸ்வீட் ஊட்டி விட ஆரம்பித்தார்.
அவருடைய அன்பை கண்டு நான் நெகிழ்ந்து போனேன். இப்படிப்பட்டவருக்கு நான் பிள்ளை என்பதும் எனக்கு எவ்வளவு பெரிய கௌரவம்.


முதலாளி அப்பாவிடம் “ சார்! எனக்கு ஒரு பதினைந்து நாள் டைம் கொடுங்க. அப்புறம் வந்து உங்க மகன் என்னை ஆஃபிசில் பார்க்கட்டும்.”
எனக்கு கை கொடுத்து “கவலைப்படாதீங்க.” என்றார்.


பதினைந்து நாள் கழித்து அவருடைய அந்த பெரிய நிறுவனத்திற்கு நான் போனேன்.
“ அடுத்த வாரம் புதன் கிழமை வந்து என்னை பாருங்க. கொஞ்சம் டைம் தேவப்படுது.”

அடுத்த புதன் கிழமை போனேன். அவர் என்னைப்பார்த்த போது அவருடைய முகம் லேசாக வெளிறியது. மேனேஜரைக் கூப்பிட்டு ஏதோ சொன்னார்.

மேனேஜர் என்னிடம் வந்தார். “ தம்பி! முதலாளி மூணு வாரமா
‘ பெரிய இடத்துப்பிள்ளய நம்ம எப்படி வேலக்கு வச்சிக்க முடியும்’னு வேதனப்பட்டு மெள்ளவும் முடியாம, முழுங்கவும் முடியாம புழுங்கறாரு. என் கிட்ட புலம்புறாரு. தயவு செய்து புரிஞ்சிக்கங்க தம்பி. நீங்களெ சொல்லுங்க. இது தர்மசங்கடம் இல்லையா?! நீங்க பெரிய இடத்துப்பிள்ள. உங்களுக்கு இப்படி ஒரு கஷ்டம். ஆனா நாங்க எப்படி இங்க உங்கள வச்சிக்க முடியும்? நீங்களே சொல்லுங்க.”

நான் உடைந்து போய் மெதுவாக எழுந்தேன்.
கௌரவம் கொடுத்து கொலை செய்வது என்பது இது தானா?

அப்புறம் தான் திருப்பூருக்கு பஞ்சம் பிழைக்கப்போய் அங்கே பன்னிரண்டு வருடங்கள்.
இப்போது சென்னை வந்து இருபது மாதங்கள் ஓடி விட்டன.


…………………………………

http://rprajanayahem.blogspot.in/2013/04/blog-post_18.html

http://rprajanayahem.blogspot.in/…/child-is-father-of-man.h…

http://rprajanayahem.blogspot.in/2017/05/blog-post_9.html

http://rprajanayahem.blogspot.in/2016/12/blog-post_2.html





May 29, 2017

வியாபார வசியம்


சென்னையில் பம்மலில் யா.முஹைத்தின் பிரியாணி கடை. ஒரு ஞாயிற்றுக்கிழமை அந்த கடைக்கு என் மகன் கீர்த்தி அழைத்துப் போய் காட்டிய போது அசந்து போனேன்.

ஏதோ ரஜினி படம், அஜீத், விஜய் படங்கள் ஓடுகிற ஒரு பழைய தியேட்டரில் டிக்கட்டுக்கு நிற்கிற மாதிரி பெரிய க்யூ ரெண்டு. பணம் கட்டி பிரியாணி வாங்க ஒரு க்யூ. Card swiping செய்வதற்கு ஒரு க்யூ.
பார்சல் வாங்க வரிசை. பெரும்பாலோர் பெரிய பக்கெட்டில் பிரியாணி வாங்கிப்போகிறார்கள். உட்கார்ந்து சாப்பிட ரொம்ப சின்ன இடம். அதற்கு காத்திருக்கும் பெரிய கூட்டம்!

என்ன வசியம் இது! சென்னையில் பிரியாணி ஹோட்டல்கள் ஆயிரக்கணக்கில் இருக்கும் போது இந்த பம்மல் முஹைத்தின் பிரியாணிக்கு இப்படி வியாபார வசியம்.



எல்லா ஊரிலும் இப்படி ஓட்டல் கடைகள், பலகார கடைகள், டீக்கடைகள் வசியம் கொண்டவையாக இருக்கின்றன.

நான் முப்பது வருடங்களுக்கு முன் இருந்த ஒரு ஊர் பிரபலமான கோவில் காரணமாக பிரசித்தி பெற்றது.

ஊரில் அந்த ஓட்டல் ரொம்ப பிரபலம். ரெண்டு தடவ I.P. கொடுத்தவர் அந்த அசைவ ஓட்டலின் உரிமையாளர். பத்து பேர் தான் உட்கார்ந்து சாப்பிடமுடியும். பார்சல்கள் அதிகம்.

உரிமையாளர் ஓட்டல் முன் நின்றவாறே கல்லாவில் காசை வாங்கி போட்டுக்கொண்டே தான் இருப்பார். பக்கத்தில் அதை விட வசதியான நல்ல விசாலமான இடவசதியுள்ள மற்ற அசைவ உணவகங்கள் உண்டு. ஆனால் இந்த கடையில் தான் சாப்பிட காத்து நிற்பார்கள்.

எழுபது வயது முதலாளிக்கு உடம்பில் பல பிரச்னைகள். கல்லாவில் காசை வாங்கிப்போடும்போதே ஐந்து நிமிடத்திற்கொரு முறை அந்த சின்ன ஓட்டலை விட்டு கொஞ்சம் தள்ளிப் போய் சத்தமாக காறி துப்புவார். சாப்பிடுபவர்களோ, பார்சல் வாங்க வந்தவர்களோ முகம் சுளிக்கவே மாட்டார்கள்.

அவர் வந்தவர்களிடம் சொல்வார்.” உழைப்பு, திறமை எல்லாம் ஒன்னும் நம்பாதீங்க. நேரம் தான் மனுஷன மேல கொண்டு போகுது. கீழ விழுத்தாட்டறதும் நேரம் தான். நான் அறுபது வயது வரை என்னென்னமோ செஞ்சி கடுமையா உழச்சி தல கீழா நின்னு பார்த்தேன். மஞ்ச கடுதாசி
 ( insolvency) தான் கொடுத்தேன். நாப்பது, அம்பது வயசில எல்லாம் பட்ட பாடு, அவமானம் கொஞ்ச நஞ்சமில்ல. என்ன செஞ்சாலும் நஷ்டம் தான்.அம்பத்தெட்டு வயசில இந்த சின்ன ஓட்டல நடத்த ஆரம்பிச்சேன். பத்து வருசத்தில இந்த ஓட்டல் பேர்லயே இந்த ஊர்ல ஒரு காலனியே எனக்கு இருக்கு. அவ்வளவு வீடுகளும் இந்த சின்ன ஓட்டல்ல இப்ப சம்பாரிச்சது தான்.”


எவனோ எட்டிமடை ஜோசியன் சொன்னான்னு
மதியம் பிசியான நேரத்திலும் மாலை பிசியான நேரத்திலும் அரைமணிக்கு ஒரு முறை எல்லாரும் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே சாம்பிராணி புகை போடச்சொல்வார். அந்த சாம்பிராணி புகையை கண்ணெரிய சகித்துக்கொண்டே, ’ஒரு பன்னீர் சிக்கன் கொடு’, ’ஒரு மட்டன் வருவல் கொடு’, கண்ணை கசக்கிக்கொண்டே ’இன்னும் கால் பிளேட் பிரியாணி கொடு’ ’ஒரு முட்டை புரோட்டா’
என்று கேட்டு சாப்பிட்டு விட்டு இலையை எடுத்து தொட்டியில் போடுவார்கள். சாப்பிடும் இடத்தில் எப்பவும் சாம்பிராணி புகை மண்டலம்.


காறித் துப்பிக்கொண்டே கடை முதலாளி சொல்வார் – அந்த ஊரின் பிரபலமான தெய்வத்தின் பெயரை சொல்லி “ அவன் எல்லாத்துக்கும் ஒரு கணக்கு வச்சிருக்கான். எனக்கு பாருங்க. நாலு பொம்பள பிள்ளைங்க. எனக்கு ஒரு ஆம்பிள பிள்ள சொத்துக்கு வாரிசா இல்லாம அவன் பண்ணிட்டானே… நாலு பொட்ட பிள்ளையையும் கட்டி கொடுத்திருக்கேன். இப்ப பாருங்க. எந்த காட்டுப்பயல்களோ என் சொத்துக்காக மூக்கு வேர்த்து தவிக்கிறானுங்க. இவ்வளவையும் எந்த காட்டுப்பயல்களோ தின்னுட்டு போகப்போறானுங்க.. என் தலையில ஓத்த விதி!”
காட்டுப்பயல்கள் = இவர் பெத்த பெண்பிள்ளைகளின் மாப்பிள்ளைகள்!


…………………………………………………………………

http://rprajanayahem.blogspot.in/2017/03/blog-post.html

May 26, 2017

ஒன்னாங்கிளாசிலேயே சேட்டையாடா?






பெரியகுளம் பீரு கடை சர்புதின். அப்பா பேர் பீர் முகமது. பீரு கடை நாற்பது வருடங்களுக்கு முன் தென்கரையில் ரொம்ப ஃபேமஸ்.


சர்புதினின் அண்ணன் திருச்சி ஜமால் முகமது காலேஜ் ப்ரொபசர். ஆனால் சர்புதின் ஏழாவது வகுப்பு வரை தான் படித்தவர். ஆள் பார்க்க சிவாஜி சாயலில் நல்ல குண்டு. ரொம்ப குண்டு. தென்கரை பஜாரில் எம்.என்.பி ஸ்டோர்ஸ் இவருடைய கடை.

இங்கிலீஷ் பேச ரொம்ப ஆசை.
கண்டினுவஸ் டென்ஸில் A சேர்த்து நிறைய ஓவர் ஆக்ஷன் செய்து அவர் பேசுவது ரொம்ப ரசிக்கும்படியாக இருக்கும்.
அவர் மனைவி ரொம்ப கறார் கண்டிப்பு உள்ளவர்.
“ நேத்து செகண்ட் ஷோ பாத்திட்டு வீட்டுக்கு போறேன். The door was a opening!
The wife was a sleeping.  I was a தட்டிங்.. ’செல்லம்,செல்லம்’ தட்டிங்!
The wife was a angry. The wife was a shouting? 'Why was a second show??' ”


’The’ ரொம்ப பயன்படுத்துவார்.
’யோவ் இப்ப கடைக்கு வந்துட்டு போனாரே. அவரு யாருய்யா. என்ன செய்றாரு.’
சர்புதின் பதில் – ’தி நெல்லு, தி உருளைக்கிழங்கு, தி மிளகாய் இதுக்கெல்லாம் போடுவாங்கள்ள தி உரம்! அது தயாரிக்கிற தி கம்பெனி வச்சிருக்கார்.'

ராத்திரி பஜாரில் கரண்ட் போய் விட்டால்  கடை பையன் மெழுகுவர்த்தியை பற்ற வைத்து எடுத்து வருவான். காற்றில் மெழுகுவர்த்தி அணைந்து விடாமல் இரு கையால் நெருப்புச்சுடரை மூடியவாறு சொல்வார்.
 ( ’பதற்றம்’ ஓவர் ஆக்‌ஷன்)
 “ Candle.. Candle with care..Candle with care! ”

அப்போது நான் சென்ட்ரல் கவர்ன்மெண்ட் எம்ப்ளாயி. போஸ்டல் டிபார்ட்மெண்ட். ஆஃபீஸ் போக கிளம்பி வருகிறேன்.

சர்புதின் கடையில் இருக்கிறார். கீழே அவர் மகன் ஒன்னாங்கிளாசு படிக்கும் மகன் நயினார் முறுக்கிக்கொண்டு நிற்கிறான். போ.. நான் போக மாட்டேன்.

சர்புதின் என்னைப் பார்த்ததும் நான் “ யோவ் சர்பு, என்னய்யா?”

சர்பு “ இங்க பாருய்யா.. நயினார் பள்ளிக்கூடம் போக மாட்டேங்கிறான். நீ கொஞ்சம் சொல்லி அனுப்பி வை இவனை.”

நான் பொறுப்பை சிரமேற்கொண்டேன்.
நயினார் கடும்பகையை தன் இரு கண்ணில் காட்டி என்னைப் பார்த்து ’முடியாது’ என்பதாக தலையை ஆட்டினான்.
நிச்சயம் என்னை ’போடா’ சொல்வான். சர்புதினே மகனுக்கு சமிக்ஞை செய்து ரகசியமாக வாயை விரித்து சத்தமில்லாமல் சொன்னார் “ போடா சொல்லு…..”

நான் நயினாரைப் பார்த்து சொன்னேன் “ நயினாரு! ஒன்னாங்கிளாசுலேயே சேட்டையாடா? படிப்பு ரொம்ப முக்கியண்டா. சொன்னா கேளு. ஒன்னாங்கிளாசுலயே இப்படி பண்ணாத. ஒங்க அத்தா மாதிரி ஏழாங்கிளாசு வரை படிக்க வேண்டாமாடா? ஏழா…..ங்கிளாசு..”
……………………………………………………

http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post.html

 

May 24, 2017

Cause Celebre




’தமிழர்’ -  ரொம்ப ரோஷத்துடன் விவாதிக்கப்படும் சிக்கலான விஷயமாகியிருக்கிறது.


45 வருடங்களுக்கு முன் தி.மு.க எம்.பி செ.கந்தப்பன் என்பவர்
(பின்னால் கிரானைட் வீரமணியாக அறியப்பட்டவரின் உறவினர்.)
ஒரு வாக்கியம் சொல்லி அது ரொம்ப பிரபலம்.

இந்திராகாந்தியின் மத்திய அமைச்சரவையில் அப்போது மோகன் குமாரமங்கலம் ஒரு மந்திரி.

செ.கந்தப்பன் சொன்னார் : ”மோகன் குமாரமங்கலம் விஞ்ஞான ரீதியாக முழு தமிழர் ஆகமாட்டார்.”

துக்ளக் சோ இதை பிரமாதமான ஜோக் ஆக பாவித்து, தன் வாசகர்களிடம் செ.கந்தப்பனுக்கு ’ஒரு பைசா’ மணியார்டர் சன்மானமாக அனுப்பச்சொன்னார். அந்த மணியார்டர் அக்னாலெட்ஜ்மெண்டை துக்ளக்கிற்கு அனுப்பி வைத்தால் அந்த வாசகர்கள் பெயரை துக்ளக்கில் பிரசுரம் செய்தார்.

நிறைய, ஏராளமான வாசகர்கள் மணியார்டர் அனுப்பினார்கள் என்பது தெரிந்தது.
செ.கந்தப்பன் அந்த ஒரு பைசா மணியார்டர்களை மறுக்காமல் சலிக்காமல் கையெழுத்திட்டு வாங்கியிருந்திருக்கிறார்!


......................

http://rprajanayahem.blogspot.in/2009/12/cause-celebre.html

May 23, 2017

அரிப்பெடுத்து அருவாமனையில ஏறுனா...


ரஜினியின் பிரகடனம் – ’அரசியலில் எதிர்ப்பு தான் மூலதனம். போருக்கு தயாராகுங்கள்.’

அரிப்பெடுத்து அருவாமனையில ஏறுனா யாருக்கு நஷ்டம்?

 ’கீழ்த்தரமான தமிழர்கள்’ என்று நீ சொன்னால் உடனே,உடனே ஒரு சல்லிப்பயல் ‘மராட்டிய நாயே’ என்று தானே பதிலடி கொடுப்பான்?

ரஜினி அரசியலுக்கு அவருடைய உடல் நிலையே முதல் எதிரி. முதல் எதிர்ப்பு அவருடைய சீர் குன்றிய உடல் நிலை மூலமே என்பது எப்படி மூலதனம் ஆகக்கூடும்?

சிங்கப்பூர் வைத்தியத்தில் மீண்ட ரஜினி. சினிமாவில் அதன் பிறகு இவரை வைக்கோல் கன்றுக்குட்டியாக வைத்துக்கொண்டு பணம் கறக்கிற வேலை நடந்தது. இப்போது வாக்கு கறக்க பயன்படுத்த முடியுமா என்றும் பரிசோதனை ஆரம்பம்.

ரஜினியின் எச்சரிக்கை – ‘பணம் சம்பாதிக்க ஆசைப்படுபவர்களை பக்கத்திலேயே நெருங்க விடப்போவதில்லை.’
அவர் வீட்டுப்பெண்கள் மூலம் தான் அவருடைய இந்த எச்சரிக்கைக்கு ஆபத்து இருக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இவர் கௌரவத்திற்கு பங்கமாக அகலக்கால் வைத்து மனைவி, மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா ஆகியோர் பொருளாதார சிக்கல்களை எப்படியெல்லாம் உண்டாக்கி சிரமப்படுத்தியிருக்கிறார்கள்.

விஜயகாந்தை விட ரஜினி  நூறு மடங்கு மேல். செல்வாக்கு, அந்தஸ்து, பிரபலம் என எப்படிப் பார்த்தாலும் ரஜினி சினிமா நடிகராகவே ரொம்ப,ரொம்ப பெருமைப்படும்படியான நிலை தான்.
அரசியல் பிரமுகராகவே தே.மு.தி.க தலைவரை விட இவருக்கு யோக்யதை அதிகம்.


இப்படி சொல்வது ரஜினிக்கான சிவப்பு கம்பளமல்ல.
எந்த செல்வாக்குமேயில்லாமல், தகுதியுமில்லாமல் அரசியல் உலகில் விஜயகாந்த் தமிழகத் தலைவர்களை பயமுறுத்த முடிந்திருக்கிறது. ரஜினிக்கென்ன? தங்காத்து!

ஆனால் ரஜினி அரசியலுக்கு வருவதை தமிழக மக்கள் ரொம்ப வருடங்களுக்கு முன்னரே விரும்பவில்லை.

1996ல் அரசியல் மாற்றத்துக்கு தன்னை காரணமாக அடிக்கடி பெருமைப்பட்டுக்கொள்ளும் ரஜினி 2004ல் பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராக வாக்களிக்கச் சொன்ன போது என்ன நடந்தது என்பதை ஏன் கவனமாக மறக்க வேண்டும். Selective Amnesia!

அதிமுக, திமுக இருதுருவ அரசியலை அசைக்க முடியுமா?
மெரினா கடற்கரை கிளர்ச்சி, நெடுவாசல் போராட்டம், தாஸ்மாக் கடைகளின் மீதான தாய்மார்களின் ஆவேச தாக்குதல் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. மயிலிறகால் வருடுவது போல நம்பிக்கைக் கீற்று தெரிகிறது.

இந்த நிலையில் ’வந்தேன்டா, புது ஆட்டம் கட்டி ஆடப்போறேன்’ என்று ரஜினியின் எண்ட்ரி?
’கண்ணால் கண்டதை சொல்லாவிட்டால் கத்தியால் வெட்டுவான் பாதர் வெள்ளை’ என்று அடுத்த கூத்து துவங்குகிறது.
புது கனவு, புது பாதை, காட்டப்போவதான பாவ்லா.
உட்டோப்பியா, எல் டொரடா கானல் அரசியல்.



எம்.ஜி.ஆரை பார்த்து அரசியலில் இது வரை பொல்லாச்சிறகை விரித்த சினிமா நடிகர்களின் வரிசையில் இன்று ரஜினி!
மற்ற நடிகர்கள் போல் வெத்து வேட்டு அல்ல. விஜயகாந்த், பாக்யராஜ், டி.ராஜேந்தர், சரத்குமார் போல வெத்து வேட்டு அல்ல என்றாலும் ரொம்ப லேட்டு.


இப்பவே ஒரு ஜாதிக்கட்சி தலைவர் பதற்றத்துடன் தூண்டில் போடுகிறார் -’பி.ஜே.பியில சேர்ந்திடாதீங்க’
அமித் ஷா பிஜேபியில சேரச்சொல்கிறார்.

எப்படியோ! தமிழர்கள் ’பப்பள, பள,பள,பள’ ஜிகினா காட்சிகள் காண இருக்கிறார்கள். மீடியா, பிரேக்கிங் நியூஸ் என்று சரியான எண்டர்டெய்ன்மென்ட் காத்திருக்கிறது. ’ஜனங்களின் நல்லதிற்கான கூட்டணி’ கனவுகளுடன் நம் அரசியல்வாதிகள் சுறுசுறுப்பாகி அடுத்த ரவுண்டு வருவார்கள். விஜய்காந்தையே தலைக்கு மேல் தூக்கி கொண்டாடிய கம்யூனிஸ்ட்களுக்கும், மற்ற அரசியல் பிழைப்பவர்களுக்கும் ரஜினி பெரிய ரட்சகராயிற்றே!

தும்பிக்கய ஊனி, நாலு காலையும் மேல தூக்கி சங்கு சக்கரமா, பம்பரமா சுத்தினால், வேடிக்கை பார்க்கும் பொது ஜனங்கள், கட்சிகளின் தொண்டர்கள் எல்லோருமே கைய தட்டி ஆரவாரம் செய்து, ’வாழ்க’ கோஷம் போட்டு குஷியாகி விட மாட்டார்களா?
இந்தியாவில் எந்த சுகமும் காணாமல் கட்சித்தொண்டர்கள், சினிமா நடிகர்களின் ரசிகர்கள் என்று இருப்பது போல வேறு எந்த நாட்டிலும் இப்படி ஒரு lunatic fanaticism உண்டா!
தனி மனித வழிபாட்டு குதூகலத்திற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

.........................................................

http://rprajanayahem.blogspot.in/2010/01/blog-post_07.html


http://rprajanayahem.blogspot.in/2008/11/blog-post_4726.html

http://rprajanayahem.blogspot.in/2017/05/blog-post_21.html

http://rprajanayahem.blogspot.in/2017/03/blog-post_28.html

http://rprajanayahem.blogspot.in/2009/10/blog-post_5351.html



May 21, 2017

நடப்பு





’ரஜினி அரசியல்’ அற்புத விளக்கா?  
வைக்கோல் கன்றுக்குட்டி!

ரஜினியே கூட வைக்கோல் கன்றுக்குட்டி தான்.
……………………………………………………………….


விகடன் தடம் இந்த மாத இதழில்இன்னும் சில சொற்கள்”.
கேள்விகள் கேட்கப்படும். அதற்கு ஒவ்வொரு இதழிலும் பழுத்த எழுத்தாளர் ஒருவர் பதில் சொல்லும் பகுதி.
சிற்பியிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி
அசோகமித்திரன்?
பதில்இருபது வருடங்களாக இறந்து கொண்டிருந்தவர்.’


விசித்திரமாக இப்படி கூடவா ட்ரிப்யூட்?

வானம்பாடி தானே சிற்பி.
.......


எனக்கு என்னவோ ஆரம்பத்துல இருந்தே கவிதைகள் மேல ஈடுபாடு இல்லைஎன்று எப்போதும் அசோகமித்திரன் சொல்லிக்கொண்டிருந்தவர்.
ஞானக்கூத்தன், ஆத்மா நாம் கவிதைகளையாவது கொஞ்சம் பாராட்டியிருந்திருப்பார்.
சிற்பி ஒரு கவிஞர் என்பது நிச்சயம் தெரிந்திருந்திருக்கும்!
...............................................

http://rprajanayahem.blogspot.in/2017/03/blog-post_28.html

http://rprajanayahem.blogspot.in/…/ashokamitrans-letter-to-…

http://rprajanayahem.blogspot.in/2017/03/blog-post_27.html

http://rprajanayahem.blogspot.in/2013/03/blog-post_27.html

http://rprajanayahem.blogspot.in/…/hollow-eye-and-wrinkled-…

May 15, 2017

திருப்பதியில் ந.முத்துசாமி


ந.முத்துசாமி திருப்பதிக்கு போயிருக்கிறார். முழுக்கை ஜிப்பா. மூல விக்ரகத்தை நெருங்கும்போது தேவஸ்தான ஊழியரின் சத்தம் காதில் விழும் - ”ஜர்கண்டி,ஜர்கண்டி”. முத்துசாமியை அந்த ஊழியர் அப்படி சொல்லாமல் நின்று சாவகாசமாக சேவிக்கும்படி மிக நீண்ட நேரம் அனுமதித்திருக்கிறார். ஆனால் விந்தை பாருங்கள்! இவர் வெங்கடாஜலபதியை பூஜிக்கவில்லை.
அந்த இடத்தில் தன் குல தெய்வம் செண்டாடுமையனை நினைத்திருக்கிறார்!
இதனை முத்துசாமி சார் சொன்னபோதில் இந்நிகழ்வில் ஒரு poetic quality இருப்பதாக எனக்கு தோன்றியது.


'செண்டாடுமையன் துணை' சிறுகதையில் ந.மு. சொல்வது
“ அவர்கள் கடவுள்களில் ஒருவராகச் செண்டாடுமையனை நினைக்கிறார்கள். நான் அவனை எங்கள் குடும்பத்தில் ஒருவனாக நினைக்கிறேன். எல்லா தெய்வங்களுமே மனிதர்களைப் போலத் தான் என்று எனக்குத் தெரியுமாதலால் நான் ஏன் அவர்களை நம்ப வேண்டும்?”

“ வினவு தெரியாமல் செண்டாடுமையன் என் மனோதத்துவத்தில் ஆழப் பதிந்திருந்த போதிலும் சற்றுக் கூடுதலாக நற்றுணையப்பன் என் ஆளுமையை வகுத்திருக்கிறான் போலும்”

புஞ்சையில் உள்ள நற்றுணையப்பன் கோவிலை ஆதித்ய கரிகாலன் கட்டியிருக்கிறான். இவனை சூழ்ச்சி செய்து நான்கு பிராமணர்கள் மூலம் கொன்று விட்டுத் தான் ராஜராஜ சோழன் மகுடம் சூட்டிக்கொண்டான்?

.................


.................

http://rprajanayahem.blogspot.in/2016/08/blog-post_5.html

http://rprajanayahem.blogspot.in/2015/12/blog-post.html

http://rprajanayahem.blogspot.in/2016/01/blog-post.html

http://rprajanayahem.blogspot.in/2016/01/blog-post_26.html

http://rprajanayahem.blogspot.in/…/not-every-friendship-is-…

May 13, 2017

தமிழக அரசு இலச்சினை


சில விஷயம் பரவலாக ஆழமாக பதிந்து போய் விடும். அது உண்மையல்ல என்பதாகவோ மாற்றுக்கருத்தோ வரும்போது அதை ஏற்றுக்கொள்வது மிகவும் சிரமமாய் இருக்கும்.

ராஜபாளையம் ராம்கோ சிமெண்ட் நிறுவனத்தில் பணிபுரியும் பலரையும் சந்திக்க வாய்ப்பு கிடைத்த போது அவர்கள் கூறிய விஷயமொன்று - தங்கள் கம்பெனி லோகோ ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம்.
இதைச் சொல்லும்போதே அவர்கள் தமிழக அரசு லோகோவும் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் தான் என்ற பரவலாக அறியப்பட்ட விஷயத்தையும் சொல்கிறார்கள்.

ராம்கோ லோகோ ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் என்பது இங்கே முக்கியமில்லை. அது அந்த நிறுவண விஷயம்.

ஸ்ரீவில்லிபுத்தூர்காரர்கள் எப்போதும் இது குறித்து பெருமைப்படுவார்கள். ’எங்க கோபுரம் தான் தமிழக அரசு முத்திரையில் இருக்கு!’

தமிழ் நாட்டில் எந்த ஊர்க்காரராக இருந்தாலும் பொது அறிவு விஷயமாக ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் பற்றி இதை தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

ஐந்து வருடங்களுக்கு முன் குமுதத்தில் ”ராசாவின் மனசிலே” தலைப்பில் இளையராஜா ஒரு கேள்விக்கு பதில் சொல்லியிருந்தார்.

எல்லோரும் நம்பிக்கொண்டிருக்கும் இந்த விஷயத்தை ஆணித்தரமாக மறுத்திருந்தார்.
“ தமிழக அரசு இலச்சினையில் தமிழக முத்திரையில் இருப்பது ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரமே அல்ல. மதுரை மேற்கு கோபுரத்தின் தோற்றம் தான் அது.”


இது குறித்து ஆதாரபூர்வமான உண்மை என்ன? இளையராஜா சொல்வது சரி தானா? இளையராஜா சொல்வதற்கு யாரேனும் பெரிதாய் எதிர்வினையாற்றினார்களா?

We must be more concerned with truths than opinions. Stick to truths.
It is important that such information should be double-checked for authenticity and credibility.
………………………..

http://epaperbeta.timesofindia.com/Article.aspx…


http://rprajanayahem.blogspot.in/2008/11/blog-post_9130.html

May 9, 2017

கானல் ’பொய்’கை


1986ம் வருடம். என் அப்பா அழைப்பதாக அவருடைய ஆபிஸில் இருந்து போன் வந்தது. திருச்சி ராஜா காலனி வீட்டில் இருந்து கிளம்பி போனேன். அப்போது சைல்ட் ஜீசஸ் ஆஸ்பிட்டலுக்கு எதிரே இருந்த கஸ்டம்ஸ் ஆபிஸில் அப்பா சூப்ரிண்ட்.


அப்பாவின் கேபினில் நுழைந்தேன்.
அப்பா முன் ஒருவர் அமர்ந்திருந்தார். அப்பா “ இவர் யார் தெரியுமா? பாக்யராஜின் அண்ணன் தன்ராஜ்.”
அப்பா காரணத்தோடு தான் என்னை அழைத்திருக்கிறார்.

நான் ஹிண்டு ரங்கராஜன் தயாரித்த ‘அழைத்தால் வருவேன்’ படத்தில் உதவி இயக்குனராய் வேலை பார்த்ததை பாக்யராஜின் அண்ணனிடம் சொல்லியிருக்கிறார். ‘என் பையனை உங்க தம்பியிடம் சேர்த்து விடுங்கள்’ என்று சொன்ன பின்பு தான் என்னை ஆஃபிஸிற்கு வரச்சொல்லியிருக்கிறார்.
தன்ராஜ் உடனே “ இவர் தானா உங்கள் மகன் ராஜநாயஹம்! கவலைப்படாதீர்கள். நான் என் தம்பி கிட்ட சொல்லி இவரை அஸிஸ்டண்ட் டைரக்டரா சேத்து விட்டுடுறேன்.”

உடனே தன் தம்பிக்கு என்னை அவருடைய அஸிஸ்டண்டாக சேர்த்துக்கொள்ளச்சொல்லி பிரமாதமான கடிதம் அங்கேயே ஆங்கிலத்தில் எழுதி என்னிடம் கொடுத்தார். Rajanayahem’s father is wellknown to me. He is very helpful to me…….. இப்படி..இப்படி.
”நீங்கள் இந்த கடிதத்தை கொடுங்கள். நான் பத்து நாளில் சென்னை வருவேன். அப்போது நேரடியாகவே நானும் தம்பியிடம் சொல்வேன். இனி உங்களுக்கு நல்ல எதிர்காலம்.”


தன்ராஜ் கோவையில் நடத்தி வந்த வீடியோ கேஸட் கடை மீது அப்போது ஒரு கஸ்டம்ஸ் கேஸ்.


தன்ராஜ் ரொம்ப உற்சாகமாக என்னிடம் பேசினார்.
நான் சென்னை போகவில்லை. பாக்யராஜிடம் சேரவுமில்லை.


அன்றைய மன நிலை. மீண்டும் சினிமாவுக்கு போக வேண்டுமா? Once bitten twice shy. வேண்டாம்.

....................


1992ம் வருடம் மார்ச் மாதம் பள்ளபட்டி பெரிய சேட்டு என்னை ஃபெமினா ஹோட்டலில் ரிஸப்சனிஸ்டாக பார்க்கிறார்.
“ Gabie! It’s a pleasant surprise.”
சென்னை போனவுடன் பெரிய சேட்டு போன் “ எனக்கு உன்னை ரிஸப்சனிஸ்டாக பார்த்தது பிடிக்கவில்லை.”
நான் வேலைக்கு சேர்ந்து அந்த ஐந்தாவது மாதம் ரிஸைன் செய்து விட்டேன்.
அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். ‘ There is always trial and error.’

அந்த கடிதத்தை அவருடைய நண்பர் போலீஸ் டெபுடி கமிஷனர் பாஸ்கர் படித்திருக்கிறார். திரும்ப திரும்ப அந்த கடிதத்தை ரசித்து படித்திருக்கிறார்.

மே மாதம் முதல் வாரம் மீண்டும் பெரிய சேட்டு போன்.
“ நீ உடனே கிளம்பி சென்னை வா. பாக்யராஜ் உன்னை சந்திக்க விரும்புகிறார்.”
டெபுடி கமிஷனருக்கும், பெரிய சேட்டு ஃப்ரூக் இருவருக்குமே பாக்யராஜ் நண்பர். மூன்று பேரும் பேசிக்கொண்டிருக்கும் போது பாக்யராஜ் “ பாக்யா பத்திரிக்கையிலிருந்து சஞ்சீவி விலகி விட்டார். எம்.ஜி.வல்லபனை எடிட்டோரியலில் போட்டிருக்கிறேன். ஒரு நல்ல ஆள் பத்திரிக்கைக்கு தேவை.”
உடனே ஃபரூக் ” என் தம்பியுடைய க்ளாஸ்மேட் ஒருவன் இருக்கிறான். ராஜநாயஹம். இலக்கியமெல்லாம் கரைத்து குடித்தவன்.”
உடனே பாஸ்கர் “யாரை சொல்றீங்க?”
ஃபரூக் “ அந்த ட்ரையல் அண்ட் எர்ரர் கடிதம் எழுதியிருந்தானே!”
“ ஓ அந்த பையனா? பாக்யராஜ்! நானே ரெகமண்ட் செய்கிறேன். அவன் எழுதிய கடிதம் நான் படித்து அசந்து போனேன். அப்படி ஆள் தான் பாக்யாவுக்கு தேவை.”
பாக்யராஜ் “ உடனே ராஜநாயஹத்தை அழைத்து வாருங்கள். பத்திரிக்கை எடிட்டிங் லைனில் சேர்த்துக்கொள்கிறேன்.”

பாக்யா பத்திரிக்கை பார்த்திருக்கிறேன். கணையாழி, நடை, கசடதபற, பிரக்ஞை, ஞானரதம் போன்ற பத்திரிக்கைகளின் வாசகன் நான். பாக்யா பத்திரிக்கையில் சேர்வதா?
முடியாது. மறுத்து விட்டேன். அவரிடம் அசிஸ்டண்ட் டைரக்டராக வேண்டுமானால் சேர்கிறேன். பெரிய சேட்டு விடவில்லை. “ வாப்பா நீ மொதல்ல.”

மே 19ம் தேதி சென்னை போய் விட்டேன். பெரிய சேட்டு என்னிடம் சொன்னார் “ பாக்யராஜ் ‘அம்மா வந்தாச்சு’ ஷூட்டிங்குக்காக பாம்பே போயிருக்கிறார். எப்ப வருவாரோ? பொறுமையா இரு. ஒரு வேளை அவரை நீ சந்திக்க ஒரு மாசம் கூட ஆகலாம்.”

மறு நாள் பரபரப்பான திருப்பம். பாக்யராஜ் சென்னை வந்து விட்டார். அது கூட திருப்பம் என்று சொல்ல முடியாது. அன்று மாலை அவர் அண்ணன் தன்ராஜை கோவையில் வீடியோ கேஸில் அரஸ்ட் செய்து விட்ட செய்தி பாக்யராஜுக்கு வந்தது. உடனே சென்னையில் தன் நண்பர் டெபுடி கமிஷனருக்கு போன் போட்டு சொல்கிறார். பாக்யராஜ் ரொம்ப மன உளைச்சலில். காரணம் அரெஸ்ட் செய்த போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் தான் பாக்யராஜின் அண்ணன் என்பதை தனராஜ் வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால் அந்த இன்ஸ்பெக்டர்
 “ நீ எவனா இருந்தா எனக்கென்ன?” என்று சொல்லி விட்டார்.
பாக்யராஜ் புலம்பல் – “ இந்த வீடியோ கடை பிஸினஸ் வேண்டாம் என்று எவ்வளவோ சொன்னேன். என் அண்ணன் கேட்கவில்லை. இப்போது இப்படியாகி விட்டதே.”

இங்கிருந்து பாஸ்கர் கோவைக்கு போன் செய்து ஒரு வழியாக தன்ராஜ் லாக் அப்பில் இருந்து வெளிவர நள்ளிரவு தாண்டி விட்டது.
பாஸ்கரும் ஃபரூக்கும் பாக்யராஜை தேற்ற விரும்பியிருக்கிறார்கள். பாஸ்கர் தன் ஆஃபிஸிற்கே வரச்சொல்லியிருக்கிறார்.
நள்ளிரவில் பாக்யராஜ் பாஸ்கரையும் ஃபரூக்கையும் சந்தித்தவுடன் கொஞ்ச நேரத்தில் பாஸ்கரே சொல்லியிருக்கிறார்.“ ராஜநாயஹம் வந்தாச்சு. “
பாக்யராஜ் என்ன சொல்ல முடியும்! ”நாளை காலை பத்து மணிக்கு பாக்யா ஆஃபிஸ்க்கு அழைத்து வாருங்கள்.”

ஃபரூக் பைக்கில் தி. நகர் கிளம்பிப் போனோம். அங்கே உடனே வள்ளுவர் கோட்டத்தையொட்டியிருக்கும் லேக் ஏரியா வீட்டுக்கு அழைத்து சென்றார்கள்.
“ உங்களை பாக்யா பத்திரிக்கைக்காகத்தான் அழைத்தேன்.”
நான் “ இல்ல சார். நான் மூவி மீடியாவிற்குத் தான் வர விரும்புகிறேன்.”
”நிறைய அஸிஸ்டண்ட்ஸ் இருக்காங்க.”
”பால்ல சக்கரை மாதிரி கரைஞ்சிடுறேன்.”
இரண்டு மணி நேரத்திற்கு மேல் என்னை பரிசோதித்தார்.
பின் அவருடைய பிரபல டயலாக்கில் சொன்னார் – “ சரி. ஜோதியில ஐக்கியமாகிடுங்க”


மீண்டும் 21ம் தேதி மாலை ஐந்து மணி முதல் பதினொரு மணி வரை என்னை பேச விட்டு கேட்டுக்கொண்டிருந்தார்.
வேறு யாரையும் அப்போது சந்திக்க மறுத்தார். கவிஞர் வாலி வந்திருப்பதாக தகவல் சொல்லப்பட்ட போது அவரை மறு நாள் சந்திப்பதாக சொல்ல சொன்னார். அப்போது ஆஃபிஸில் வேலை பார்த்துக்கொண்டிருந்த ( பழைய ’முந்தானை முடிச்சு’ அசோசியேட் டைரக்டர் )  இளமுருகு, தன் மனைவி, மாமனாருடன் சந்திக்க முயன்றார். “ம்ஹூம்.” மறுத்து விட்டார்.
பாக்யா ஆஃபிஸில் எல்லோரும் இதை ஆச்சரியத்துடன் கவனித்துக்கொண்டிருந்தார்கள். இளமுருகு கமெண்ட்
“ராஜநாயஹத்தை நம்ம டைரக்டர் பம்ப் செட் போட்டு உறிஞ்சிக்கொண்டிருக்கிறார்!”

பிறகு பாக்யா ஆஃபிஸில் ஒரு நாள் தன்ராஜை சந்தித்தேன். அவர் கொடுத்த கடிதம் பற்றி ஞாபகப்படுத்தினேன். ஆர்வமாக கேட்டார். ”அப்பா எப்படியிருக்காங்க!”
இப்போது டெபுடி கமிஷனர் பாஸ்கர் மூலமாக பாக்யராஜிடம் சேர்ந்திருக்கிற விஷயத்தை சொன்னேன்.
தன்ராஜ் “ எல்லாத்துக்குமே ஒரு நேரம் வர வேண்டியிருக்குதுல்லங்க!”
அப்போது பாக்யராஜின் கார் ஆஃபீஸில் நுழைந்தது.
பாக்யராஜ் காரில் இருந்து மனைவி பூர்ணிமாவுடன் இறங்கியதும் என்னுடன் நின்ற தன் அண்ணனைப் பார்த்து விட்டு கேட்ட கேள்வி
“ தனம்! நீ எப்ப வந்த?”
ஓ! தன்ராஜ் சென்னை வந்தால் பாக்யராஜ் பங்களாவிற்கு வருவதில்லை போலிருக்கிறது. ஹோட்டலில் தான் தங்குகிறாரா?


ஐந்து மாதம் ’ராசுக்குட்டி’யில் குப்பை கொட்டி விட்டு நான் கிளம்பும்படியானது. சினிமாவில் என்னுடைய இரண்டாவது எண்ட்ரி பிரமாதமான தோல்வி. A successful failure!
ஆறு வருடங்களுக்கு முன் தன்ராஜ் கொடுத்த கடிதத்தை ராசுக்குட்டி தீபாவளி ரிலீஸுக்குப் பின் டிசம்பர் மாதம் ’கடைசியாக’ பாக்யராஜை அவர் வீட்டில் சந்தித்த போது தான் கொடுத்தேன். படித்துப் பார்த்து விட்டு சிந்தனையில் சில நிமிடம் கழித்த பின் திருவாய் மலர்ந்தார் “ அது தான் வந்துட்டிங்களே!”
திரும்ப பாக்யராஜை சந்தித்ததேயில்லை.

........................

2006ல் திருப்பூரில் வேலை செய்து கொண்டிருந்த போது மதியம் சாப்பிட்டு விட்டு ஆஃபிஸ் திரும்பும்போது ராக்கியாபாளையம் பிரிவில் பாக்யராஜ் வேனில் நின்றவாறு மைக் பிடித்து பேசிக்கொண்டிருந்தார். தி.மு.க தேர்தல் பிரச்சாரம். திருப்பூர் மாநகராட்சி தேர்தல்! பிரச்சார வேனை சுற்றி சின்ன கும்பல்.ஒரு பத்து பேர் தான்.
நான் ஸ்கூட்டரில் சென்றவாறே மிக அருகில் அவரைப் பார்த்துக்கொண்டே சினி பார்க் ரோட்டில் திரும்பினேன். அந்த ரோட்டில் ஸ்கூட்டர் திரும்புவதற்கு பாக்யராஜ் வேனையொட்டித்தான் செல்ல வேண்டியிருந்தது.


........................................

http://rprajanayahem.blogspot.in/2012/07/blog-post_29.html

http://rprajanayahem.blogspot.in/2013/01/blog-post_6.html

http://rprajanayahem.blogspot.in/2014/10/blog-post_20.html

http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_13.html

 http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_14.html

http://rprajanayahem.blogspot.in/…/loose-words-are-gold-coi…


http://rprajanayahem.blogspot.in/2008/09/blog-post_16.html 

http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_03.html

http://rprajanayahem.blogspot.in/2008/12/blog-post_05.html

http://rprajanayahem.blogspot.in/2013/04/blog-post_18.html

http://rprajanayahem.blogspot.in/2012/11/never-explain.html




May 1, 2017

சித்ரகுப்தன்




கருணாநிதியின் ஏட்டை சித்திரகுப்தன் தொலைத்துவிட்டான்.
திமுக தொண்டர்களை சந்திக்க இருக்கிறார் தலைவர்!?

எம தர்ம தர்பாரில் கணக்கு முடிக்கிற சித்ரகுப்தன். இவன் தான் மனித ஜென்மங்களின் ஏட்டை வைத்துக்கொண்டு ஆராய்ந்து ஆயுள் கணக்கை முடிக்கிறவன்.



எனக்குத் தெரிஞ்சி ரெண்டு முருக பக்தர்கள். ரெண்டு பேருமே திருச்செந்தூர் முருக தரிசனம் மாதா மாதம் செய்பவர்கள். ரெண்டு பேருமே பரம எதிரிகள்! ’இவன் விளங்காத பய’ என்று அவனும் 
“ வீணாப்போனவன் ” என்று இவனும் ஒருவரையொருவர் பரஸ்பரம் தூற்றிக்கொள்பவர்கள்!

ஒவ்வொரு தடவையும் ஒரு புது பொம்பளையோடு தான் திருச்செந்தூர் போவார்கள். முதல் நாளே போய் ரூம் போட்டு தங்குவார்கள். ‘தெங்கு’வார்கள்! நெம்புகோலின் தத்துவ விளக்கம்.
மறுநாள் காலை சன்னதியில் நின்று முருகா முருகா என்று உருகுவார்கள். பக்கத்தில் நிற்கிற புது பொம்பளையும் கண்மூடி பக்தி வெள்ளத்தில் மிதப்பாள். ஒரு தடவயாவது முருகக்கடவுள் “ ஏம்ப்பா… இப்படி கோவிலுக்கு என்னைப் பார்க்க வரும்போதெல்லாம் புதுசு புதுசா தள்ளிக்கிட்டு வர்ரீங்களேடா.. இது நல்லாவா இருக்கு..” என்று கேட்க மாட்டாரா?

இந்த ரெண்டு பேர்ல ஒருத்தனுக்கு  சித்ரகுப்தன் மேல பயங்கரமான obsession. தினமும் திரும்பத் திரும்ப சித்ரகுப்தன பத்தியே பேசிட்டே இருப்பான்.

சிலருக்கு தாங்கொண்ணா துயரம், இழிவு, சிறுமை கண்டு புழுவாய்த் துடிப்பார்கள். ஏன்?

’ஏன்னா அவிங்க ஏட்டை கையில் எடுத்து பார்த்துக்கொண்டிருக்கிறான் சித்திர குப்தன். வச்ச கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறான். ஆயுள் பங்கம் இல்லைன்னாலும் 30 வயதிலிருந்து, 40 வயதிலோ, 50 வயதிலோ எல்லா வயதிலும், எந்த வயதிலோ நொம்பலப்பட்டுக்கொண்டு இருக்கிறாங்கென்னா இவனுங்க ஏட்டை கையில் எடுத்து உத்துப் பாக்கிறான்னு அர்த்தம். சித்திரவதை தாங்க முடியாது.

யாரெல்லாம் நல்லா இருக்கானோ அவன் ஏடு சித்திர குப்தன் கையில சிக்கலன்னு அர்த்தம். அதெ போல ஒருத்தன் சாவு தள்ளிப்போனால் சித்ரகுப்தன் அவன் ஏட்டை நிச்சயமா தொலைச்சிட்டான்.’

இந்த ஃப்ராடுக்கு நகைக்கடை வியாபாரத்தில் தன் யுக்தி பலிக்கவில்லை என்றால்
புலம்பல் இப்படித்தான் ‘ சித்ரகுப்தன் என் ஏட்டை கையில எடுத்துட்டான். நிம்மதியே இல்ல. எனக்கு வாச்சவ சரியில்ல. எங்கப்பன உதைக்கப் போறென்.’ 

சரியான சாமியார் பைத்தியம். சாமியார்களை தேடி அலைவான். சித்தர், புதையல் ஏக்கம் தான்.
இந்த சித்ரகுப்தன் கதை கூட எவனாவது சாமியார் தான் இவன் கிட்ட சொல்லியிருப்பான். 

அப்போது நான் தந்த பெருந்தொகைக்கு பல மாதங்களாக இந்த நகைகடை முதலாளி வட்டி தரவே இல்லை. முதலும் திரும்பி வரவில்லை.

கேட்கப்போன என்னிடம் இவன் சொன்ன பதில்
" மைனர் வாங்க உட்காருங்க. ஐயோ மைனர்...  
காபி, கூல்ட்ரிங்க்ஸ் சாப்பிட மாட்டேனு பிடிவாதமா இருக்கீங்களே.  
திருச்சி வயலூர் முருகனை போய் கும்பிட்டேன். அப்பிடியே சமயபுரம் ஆத்தாளுக்கும் ஒரு அர்ச்சனை பண்ணிட்டேன். கேரளாவிலே ஒரு விஷேசமான கோவில்னு சொன்னாங்க. அங்கேயும் போய் என்ன எழவு செய்யனுமோ செஞ்சிட்டு வந்துட்டேன் பாத்துக்கங்க. ஐயோ மைனர்! திருச்செந்தூர் முருகனுக்கு என் முடி, என் பிள்ளைகள் முடி எல்லாத்தையும் காணிக்கையா கொடுத்துட்டேன் போங்க...
முந்தா நாள் தின தந்தியிலே ஒரு விளம்பரம்.ஒரு தாயத்து..ரொம்ப விஷேசமான தாயத்தாம். அதை கையில வச்சிகிட்டா அஷ்ட லக்ஷ்மியும் கிடைக்குமாம். அதற்கும் மணி ஆர்டர் நூறு ரூபா அனுப்பிட்டேன். நான் என்ன செய்யட்டும் நீங்களே சொல்லுங்க. 
சித்திரகுப்தன் என் ஏட்ட கையில எடுத்துட்டான். என் ஏட்டத்தான உத்துப்பாக்கிறான்."

ரோட்டில இவனுக்குப் பிடிக்காத ஒரு வசதியான பெரிய மனிதர் அப்போது போனார். உடனே அசூயையுடன் கத்தினான் “ இவன் ஏட்ட சித்ரகுப்தன் கையில எடுக்க மாட்டேன்றானே. இவன்  ஏட்ட தொலச்சிட்டான்னு நெனக்கிறேன்.”