Share

Showing posts with label மிருணாள் சென். Show all posts
Showing posts with label மிருணாள் சென். Show all posts

Dec 15, 2012

Taste differs

புத்தனே
ஞானம் வாய்த்த பின்
அழக்கூடுமோ
உன்னால்
- கலாப்ரியா


அசோகமித்திரனின் ‘கரைந்த நிழல்கள்’ நாவலில் வருகிற ராம ஐயங்கார் பாத்திரம் ஜெமினி அதிபர் வாசன் தான். அதே போல இந்த நாவலில் வருகிற டைரக்டர் ராம்சிங் பதிபக்தி,பாகப்பிரிவினை,பாசமலர்,பாலும்பழமும்,பார்த்தால் பசி தீரும்,பந்த பாசம் படங்களை இயக்கிய பீம்சிங் தான்.
கரைந்த நிழல்கள் நாவலின் ஆறாவது அத்தியாயத்தில்
செக்கோஸ்லோவாக்கியாவிலிருந்து வந்த விருந்தினர்களுக்கு ராம்சிங் படம் திரையிடப்படுகிறது. அந்தப்படத்தை டைரக்ட் செய்ததற்காக ராம்சிங்குக்கு ரொக்கப்பரிசும் கிடைத்திருந்தது.வெளியே போகமுடியாத சூழ்நிலையிலிருந்த செக்கோஸ்லோவாக்கியர்கள் பார்த்தார்கள். டெலிபோன் பேசவேண்டியிருப்பதைக் காரணமாக வைத்துக் கொட்டகை வெளியில் வந்த வர்த்தகசபைத் தலைவர்,பிரஸ் இன்பர்மேஷன் அதிகாரியிடம் ‘நீங்க அந்தப்படத்தைப்பார்க்கலியா?’என்று கேட்கிறார். பதில்’அந்தத் தலைவலியை யார் பார்த்துச் சகிச்சுக்கிறது?’
அன்று மாலை செக் விருந்தினர்களுக்கு  ராம்சிங்கை பிரஸ் இன்பர்மேஷன் அதிகாரி தான் அறிமுகப்படுத்துகிறார்.’இவர் படத்தைத் தான் நீங்கள் இன்று காலை பார்த்தீர்கள்,’
செக் தலைவர் ’ஓ…. அப்படியா! ..ரொம்ப நல்ல படம் !சோக அம்சம் தான் கொஞ்சம் அதிகமாக இருந்தது, ‘
அந்தப் படத்தில் ஆரம்பத்தில் நன்றாகப் பாடி விளையாடிக்கொண்டிருந்த வாலிபக் கதாநாயகனுக்குக் கை போய், கல்யாணமான பிறகு தாய், சொத்து, பிறந்த குழந்தை இவை எல்லாம் போய்க் குருடனாகவும் ஆகிவிடுகிறான்.
செக் காரர் இறுதியாக சொல்வது”உங்கள் கதாநாயகர்களுக்குப் பெண்மை சிறிது அதிகமாக இருப்பதாகப்பட்டது.அதிலும் உங்கள் படத்து நடிகர் எல்லாவற்றிற்கும் அழுது விடுகிறார்.”
எல்லாரும் லேசாகச் சிரித்தார்கள்.ராஜ்கோபால் சிறிது உரக்கச்சிரித்துவிட்டான்.
உலகத்திலேயே தலைசிறந்த நடிகர் என்று நாட்டின் ’ஒருசிலரால்’ கொண்டாடப்படும் அந்த நடிகர் வலுவான சுவாசம் கொண்டவர்.
அசோகமித்திரன் மேற்கண்டவாறு விவரிக்கும் அந்த நடிகர் யார் என்பது படிப்பவர் யாருக்கும் புரியும். சிவாஜி கணேசன்.!
…..
89 வயது மிருணாள் சென் பெங்காலி டைரக்டர். புவன் சோம், கோரஸ், ஒக்க ஊரி கதா, பரசுராம், காந்தார்,காரிஜ்,ஏக் தின் அச்சானக் போன்ற திரை ஓவியங்களை தீட்டிய மேதை.
லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் கேப்ரியல் கார்ஸியா மார்க்யுசுக்கு நண்பர்.
எத்தனையோ உலகத்திரைப்பட விழாக்களில் இவருடைய படங்கள் பரிசு வாங்கியிருக்கின்றன.பல திரைப்பட விழாக்களில் இவர் ஜட்ஜ் ஆக கௌரவிக்கப்பட்ட கலை மேதை.
மிருணாள் சென் தனக்கு கமல் ஹாசன் நடிப்பு தான் பிடிக்கும் என்று 1998ல் எஸ்.விஜயன்(சினிமா நிருபர்) அவர்களிடம் 14 வருடம் முன்
( தினமலர் வாரமலர் 25,அக்டோபர்,1998)சொன்னாராம்.’அப்படியென்றால் சிவாஜி நடிப்பு?’ என்று கேட்டதற்க்கு ஒரு மாதிரியாக முகத்தை சுளித்தாராம்.’எனக்கு அழுது நடிப்போரைக்கண்டாலே பிடிக்காது.ஆண்கள் அழுவது கூடாது ‘ என்றாராம். அழுகையும் ஒரு நடிப்பு தானே?’ என்று இவர் கேட்ட போது மிருணாள் சென் பதில் ‘நோ நோ’
...

http://rprajanayahem.blogspot.in/2012/11/blog-post_18.html


http://rprajanayahem.blogspot.in/2012/07/blog-post_17.html

http://rprajanayahem.blogspot.in/2012/10/child-is-father-of-man.html

http://rprajanayahem.blogspot.in/2009/02/blog-post_23.html