Share

Jan 28, 2021

வண்ண நிலவனும் நல்லுசாமியும்

 

எழுத்தாளர் வண்ண நிலவன் (Ramachandran Ulaganathan) பதிவொன்றில் சுவையான ஒன்றை கவனித்தேன். 


ஒரு திரை ரசிகனாக பதிவை எழுதியிருக்கிறார். 


கே. ராஜேஷ்வருடன் ( சோமசுந்தரேஷ்வர்) வண்ண நிலவன் 'அவள் அப்படித்தான்'  கதை வசனத்தில் பங்களிப்பு செய்தவர். 


ருத்ரய்யாவின் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த இரட்டையர்கள் நல்லுசாமி - ஞானசேகரன். 

இவர்களில் கேமராமேன் நல்லுசாமி 

(U. R. Nallusami) அந்த பதிவில்

தொழில் நுட்ப விளக்கம் அளித்துள்ளார். 


நல்லுசாமியை ருத்ரய்யா பெர்க்மனுடைய கேமராமேன் ஷென் நிக்விஸ்ட் அவர்களுடன் ஒப்பிடுவார் என்று 

வண்ண நிலவன் நினைவு கூர்கிறார். 


அவற்றை இங்கே அப்படியே தந்துள்ளேன். 


வண்ண நிலவன் : " ஜி.ஆர்.நாதனின் ஒளிப்பதிவு பற்றி அவ்வளவாகப் பேசப்பட வில்லை.

அவர் இயக்குனரும் கூட.

பாடல்களின் நடுவே வரும் கை தட்டல்களை வானம்பாடியிலும் ,கருப்புப்பணத்திலும் படமாக்கியுள்ள காட்சிக் கோணம் அபாரமானது.


வானம்பாடியில் 'ஆண்கவியை வெல்ல வந்த'பாடலில் இடையே வருகிற பி.ஜி.எம்.மில் பார்வையாளர்கள் எல்லோரும் கை தட்டுவார்கள்.

வரிசையாக இணைந்து கை தட்டுகிற கைகளை மட்டும் ஒரு ஷாட் டில் படம் பிடித்திருப்பார்.


இதே போன்ற காட்சிக் கோணத்தில் தட்டும் கைகளை கருப்புப்பணத்தில் 'தங்கச்சி சின்னப் பொண்ணு' பாட்டிலும் படம் பிடித்திருப்பார்.

அந்தக் கோணம் அவருடைய கண்டு பிடிப்பு.


வேறு எந்த இயக்குனரோ, ஒளிப்பதிவாளரோ

 அந்தக் கோணத்தில் படமாக்கியதில்லை.


 ஏ.வின்செண்ட் 'சுமைதாங்கி' படத்தில் 'ராதைக்கேற்ற கண்ணனோ'பாடலில் அவருடைய கேமரா வளைந்த மாடிப்படிகளை 

அப்படியே சுற்றி வரும்.


கீழ்த் தளத்திலிருந்து அப்படியே மேலேறி கேமரா செல்லும்.


நெஞ்சில் ஓர் ஆலயத்தில் 'சொன்னது நீதானா'பாடலில் ஒரு பி.ஜி.எம்.மில் கேமரா ஜன்னல் வழியே நுழைந்து கட்டிலுக்குக் கீழே போய் தரையில் உட்கார்ந்து சிதார் வாசிக்கிற தேவிகாவை நோக்கிச் செல்லும்.


ஜூம் இன் ஷாட் தான் என்றாலும் நிதானமாக ஜூம் செய்திருப்பார்.

அண்டோனியோனியின் 'தி பேஜேஜ்'படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி யின் இறுதியில் நான்கு நிமிடங்கள் நகரும் ஜூம் காட்சி ஒன்றும் நினைவுக்கு வருகிறது."


ஒளிப்பதிவாளர் நல்லுசாமி அவர்களின் பின்னூட்டம் :


நெஞ்சில் ஓர் ஆலயத்தில் நீங்கள் குறிப்பிடும் அந்தப் பாடல் காட்சியில் வரும் அந்த சாட் zoom லென்ஸில் எடுக்கப்படவில்லை, 

எடுக்கவும் முடியாது. 


அந்த காட்சி கேமராவை கட்டிலுக்கடியில் முன்னோக்கி நகர்த்தி தான் எடுக்கப்பட்டது. 

அந்த கேமரா  கட்டிலுக்கு அடியில் நகரும் சமயம் அந்த கட்டிலையே முத்துராமன் உடன் சேர்த்து அப்படியே மேலே தூக்கி விட்டார்கள்,

கேமரா இப்பொழுது முன்னோக்கி எளிதாக நகர முடிந்தது. அது இப்படித்தான் எடுக்கப்பட்டது.


 உண்மையில்  எல்லோருமே இது எப்படி எடுத்தார்கள் என்று யோசிக்க வைத்த ஷாட் தான் அது. இந்த குறிப்பிட்ட ஷாட் இதனுடைய இந்திப் பதிப்பான படத்திலும் இடம்பெற்றிருக்கிறது.


 அதனுடைய இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் இவர்களே தான், அதாவது ஸ்ரீதரும் வின்சென்ட் அவர்களும்.


 ஜி ஆர் நாதன் அவர்களைப் பற்றி குறிப்பிட்டு இருந்தீர்கள், உண்மையில் நீங்கள் சொன்ன

 அந்த ஷாட்டுகள் மிகவும் அற்புதமானவை. அதுமட்டுமல்ல அவர் வின்சென்ட் போன்றவர்களுக்கு நிகரான முதல் வரிசை ஒளிப்பதிவாளர் தான். 

அவருடைய லைட்டிங் மிக உன்னதமாக இருக்கும். 


ஆனால் ஏனோ வின்சென்ட் போன்றவர்களுக்கு கிடைத்த அங்கீகாரம் ஜிஆர் நாதன் அவர்களுக்கு கிடைக்காமல் போய்விட்டது. 


நான் பலமுறை ஜி ஆர் நாதன் அவர்களை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன், இப்பொழுது உங்கள் வாயிலாக 

அதை நான் செய்திருக்கிறேன். நன்றி ராமச்சந்திரன் அவர்களே.


நீங்கள் குறிப்பிடும் அன்டோனியோ படத்தில் வரும் அந்த ஜன்னல் காட்சி கூட zoom லென்ஸில் எடுக்கப்பட்டது இல்லை.


 கேமரா ஜன்னலை நோக்கி வரும்பொழுது

 கேமரா லென்ஸ் ஜன்னல் கம்பியை நெருங்கியவுடன், அப்படியே ஜன்னலை இரண்டாக பிரித்து விட்டார்கள். 

அதாவது வலது புற பாதி ஜன்னல் வலது புறம் சென்றுவிடும், இடது பாதி 

இடது புறம் சென்று விடும். 


இப்பொழுது கேமரா ஜன்னலை விட்டு 

இறுதியாக வெளியே வந்து விடும்.

வெளியே வந்த கேமரா பின்னர் வாயில் வழியாக உள்ளே நுழைந்துவிடும். 

இப்பொழுது அதே நடிகர்கள் வேறு உடையில் இருப்பார்கள். 

கேமராவை கையில் வைத்துக்கொண்டு எடுக்கப்பட்டதுதான் அந்த காட்சி. 


நான் திரைப்படக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது இந்தப் படம் எங்களுக்காக திரையிடப்பட்டது, 

படம் முடிந்ததும் அதை பற்றிய விவாதம் நடந்தது, குறிப்பாக மேலே குறிப்பிடப்பட்ட அந்த ஷாட்டை பற்றி மிக விரிவான விவாதம் நடைபெற்றது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.


 நீங்கள் குறிப்பிட்ட நெஞ்சில் ஒரு ஆலயம் சாட்டும் மைக்கலாஞ்சலோவின் படத்தில் வரும் அந்த ஜன்னலை கேமரா கடந்து செல்லும் காட்சியும் உங்களைப்போலவே எல்லோரையும் வியப்படைய வைத்த காட்சி தான் அது. 


இந்த இரண்டு காட்சிகளையும் பொது வெளியில் கொண்டுவந்து நிறைய பேர்களுக்கு இதைப்பற்றி  தெரிந்துகொள்ள செய்ததற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 


உண்மையில் என்னை போன்றவர்கள்

 இது பற்றி எல்லாம் பேசி இருக்க வேண்டும். 

நல்ல வேளை நல்ல இலக்கியவாதியான நீங்கள் இதை கொண்டு கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி.

A melancholic strain



"முடிவற்று 

நீளும் பாதையில் 

சிறு நத்தையென நகர்கிறதென் 

தனிமை.. "

- பரமேசுவரி 


பரமேசுவரியின் கவிதையைத் தொடர்ந்த 

எண்ண ஓட்டத்தில்... 


சிறுவனாக இருக்கும்போது

 ஏழாம் வகுப்பில் படித்த 

William Wordsworth 's The Solitary Reaper. 


Behold her, single in the field,

Yon solitary Highland Lass!

Reaping and singing by herself;


Alone she cuts and binds the grain,

And sings a melancholy strain.. 


O listen! 


No Nightingale did ever chaunt

More welcome notes... 

 

A voice so thrilling ne'er was heard

In spring-time from the Cuckoo bird.. 


Will no one tell me what she sings?


Some natural sorrow, loss, or pain,

That has been, and may be again?


Whate'er the theme, the Maiden sang

As if her song could have no ending... 


எந்த பெரிய அனுபவமுமில்லாத 

பன்னிரெண்டு வயதில், 

நெஞ்சில் நிறைந்த துக்கத்தை 

இந்த கவிதை ஏன் ஏற்படுத்தியது?


இன்று இப்போது

 ஒன்றுமில்லாமல் புத்தி வறண்டிருப்பது

 தி. ஜானகிராமன் வார்த்தைகளில் 

இதமாகத் தான் இருக்கிறது. 

The bliss of solitude. 


உறைந்து போன நிலை. 


எட்டயபுரம் தலப்பா கட்டி தந்த சிட்சை - 

'நெஞ்சம் துவளாதிருத்தல் சுகம்'


Man is left alone in this world 

ஜோஷ் வண்டேலு 'அபாயம்' நாவலில் வருகிறது. 


ஜோஷ் சொன்னதையும் தாண்டி, 

நகுலன் 

" எனக்கு யாருமே இல்லை. 

நான் கூட " என வேதனைப்பட்டவர்.


இன்னொரு associate memory.. ஒரு சிறுகதை. வண்ணநிலவன் சிறுகதை.' மிருகம் '. பன்முக விவரணை. சிவனு நாடார் நாயை எதிர் கொள்ளும் மிருக இயல்பு. வறுமை. தனிமை.         

 பயங்கர தனிமையை சித்திரமாக்கிய கலைஞன் வண்ணநிலவன்.


..

Jan 27, 2021

பசி தான் ஸ்வாமி. பசிக்கு நைவேத்யம்

 "இல்லாததுகள் வயித்தில ரண்டு சாதம் விழணும்.                                 பசி தான் ஸ்வாமி. 

 அதுக்கு நைவேத்யம் பண்ணினாப் போதும். 


ஸ்வாமி ஞாபகம் வரணுமோல்லியோ.

 பசி ரூபத்தில தானே இருக்கான் அவன்" 


- தி. ஜானகிராமன் 


எம். ஜி.ஆர் இப்படி அன்ன தாதா என்று பெயர் பெற்றார். ராமாவரம் தோட்டத்துக்குப் போனாலே சாப்பாடு நிச்சயம். 


1960, 70களில் அவசர பொருளுதவி கேட்க துணை நடிகர்கள் 

எம். ஜி.ஆரைப் பார்க்க போவார்கள். 


நடிகர் கே. கே. சௌந்தர் சொன்னார் : 'அப்ப எம்ஜியார் ஊர்ல இல்லன்னா ஜெய்சங்கர தேடிப் போவோம்.' 


ஜெய்சங்கர் பலருக்கு பலவாறு உதவியவர். 


விஜய்காந்த் பெரிய அளவில் பலருக்கு உதவியவர். 

எம். ஜி.ஆருக்கு பிறகு தமிழ் திரையுலகம் கண்ட 

அன்னதாதா. 


விஜய்காந்த் ஆஃபிஸில் கறி சாப்பாடு எவ்வளவு பேர் போனாலும் கிடைக்கும். 

வேலையில்லாத திரைக்கலைஞர்கள் நிறைய பேர் பசியாற்றிய வள்ளல். 

இதெல்லாம் அரசியலுக்கு வருமுன்னரே. 


ஏதோ வெளிநாடு போயிருந்த போது இவரைப் பார்க்க பல தமிழர்கள் தேடி வந்திருக்கிறார்கள். 

இரு நூறு பேர் இருப்பார்களாம். 

அவ்வளவு பேருக்கும் உடனே உணவு அளித்து பெரிய தொகையை செலவழித்து விட்டார் என்று சொல்லப்படுகிறது. 


கொடுக்கிற மனசு இயல்பான குணம்.

... 

Jan 26, 2021

ந. பிச்சமூர்த்தி பற்றி

 காதுகள் நாவலில் எம். வி. வெங்கட்ராம் எழுதியுள்ள விஷயம் : "பிச்சமூர்த்திக்கும், புதுமைப்பித்தனுக்கும் அடுத்த இடம் தான் 

நான் கு. ப. ரா. வுக்கு கொடுப்பேன்" 


வெங்கட்ராம் கு. ப. ரா வின் சிஷ்ய பரம்பரை. 

கு. ப. ரா எழுத்து மீது மிகுந்த அபிமானம் கொண்டிருந்தவர் தான். 


என்றாலும் ந. பிச்சமூர்த்தியை தூக்கிப்பிடிக்கிறார். 

அவருடைய வரிசை 

1. ந. பிச்சமூர்த்தி 

2. புதுமைப்பித்தன் 

3. கு. ப. ராஜகோபாலன். 

கு. ப. ரா. வின் மற்றொரு சிஷ்யர் தி. ஜானகிராமன்.   குமுதத்தில் எழுத்தாளர்களுக்கு பிடித்த சிறுகதை கேட்டு வாங்கிய போது தனக்குப் பிடித்த ந.பிச்சமூர்த்தி 'அடகு' கதையைப் பிரசுரிக்கச் செய்தார். 



புதுமைப்பித்தன் பிரச்சினை பற்றி  நான் 

'மேலும்' இதழில் " நெஞ்சஞ்சுட உரைத்தல் நேர்மையெனக் கொண்டாயோ?" கட்டுரை எழுதி 

பிரசுரமாகியிருந்தது. 


திருச்சியில் ஆல் இண்டியா ரேடியோவில் 

கு. ப. ரா பற்றி என் இலக்கியப் பேருரை  ஒலிபரப்பாகி இருக்கிறது. 


ஒரு முறை திருச்சியில் 'ந .பிச்ச மூர்த்தியின் கலை : மரபும் மனித நேயமும் ' நூல் பற்றி கருத்தரங்கம். 

நான் தான் சுந்தர ராம சாமி எழுதிய 

இந்த புத்தகம் பற்றி பேசுவதாக ஏற்பாடு.


ஒரு பேராசிரியன் என் உரை ஆரம்பிக்கு முன்

' ந.பிச்சமூர்த்தி நாலாந்தரமான எழுத்தாளர். புதுமைப்பித்தன் தான் பெரிய எழுத்தாளர்.

ந பிச்சமூர்த்திபற்றியெல்லாம் சுந்தர ராமசாமி ஒரு புத்தகம் எழுத வேண்டுமா ?' 

என்று ஊளை இட்டான்.


இந்த பேச்சில் உள்ள அராஜகம் வெளிப்படையானது. புதுமைப்பித்தன் எழுத்து எனக்கும் மிகவும் மரியாதைக்குரிய விஷயம்.


 ஆனால் பிச்ச மூர்த்தி என்ற கலைஞனை காரணமே சொல்லாமல் நிர்த்தாட்சண்யமாக பண்டிதன் ஒருவன் பேட்டை ரௌடி போல தூக்கி வீசியதற்கு சரியான பதிலடி கொடுக்காவிட்டால் அவனுக்கு குளிர் விட்டு துளிர் விட்டு போகும்.


நான் ஆரம்பித்தேன் " வெங்கட் சாமிநாதன் சொல்வார் -' நான் மதிக்கும் ஒன்றிரெண்டு எழுத்தாளர்களில் ந பிச்ச மூர்த்தி முதலாமவர் . '


 இந்த வாக்கியம் மிகவும் சிலாக்கியமானது. மீண்டும் அவரது வார்த்தைகளை அசை போடுங்கள்.


க நா சு எப்போதும் மணிக்கொடி எழுத்தாளர்களில் சிறுகதை சாதனையாளர்களாக புதுமைப்பித்தன்,மௌனி, கு .ப .ரா, ந .பிச்சமூர்த்தி நால்வரையும் குறிப்பிடுவார்.


லா. ச .ரா சுபமங்களா பேட்டியில் கேள்வி

 " உங்களை கவர்ந்த,பிரமிக்க வைத்த எழுத்தாளர் யார்?

லா.ச .ரா பதில் " அந்த காலத்தில் ஒருத்தர் இருந்தார். ந. பிச்சமூர்த்தி. ரொம்ப விரும்பி படிச்சேன்.ஆரம்ப காலத்திலிருந்து இன்னும் அந்த பிரமிப்பு நீங்கவே இல்லை! "


நான் சொல்கிறேன் . 'கபோதி' ,' காவல் ' 'அடகு 'போன்ற பிச்ச மூர்த்தி யின் கதைகள் புதுமை பித்தனின் எந்த கதைக்கும் சவாலானவை. தனிப்பட்ட முறையில் எனக்கு

 ந பிச்ச மூர்த்தியின் மீது புதுமைபித்தனை விட அபிமானம்,மரியாதை உண்டு " என்றேன்.


Induvidual choice. 


இப்போது முக நூலில் சகோதரி பத்மஜா நாராயணன்  எழுதிய ஒரு பதிவு நினைவுக்கு 

வருகிறது. ஏனென்றால் அதில் ந. பிச்சமூர்த்தி பற்றி சிலாகித்து எழுதியிருந்தார். 

" வாசிக்கத் தெரிந்த அனைவரும் வாசித்தே

 ஆக வேண்டிய சிறுகதை பிச்ச மூர்த்தியின் 

' ஒரு நாள் '. 

க. நா. சு சிறந்த படைப்பாளி. 

'ஒரு நாள்' என்று விசேஷத்தரமான நாவல் எழுதியிருக்கிறார்.


மனதில் மேலெழும் இன்னொன்று.

 Associate memory. 

ந. பிச்சமூர்த்தியின் அப்பா பெயர் நடேசன். 


ந. முத்துசாமி தகப்பனார் பெயரும் நடேசன் தான். 


பிச்சமூர்த்தியும், முத்துசாமியும் தங்களின் ஏழாவது வயதில் தகப்பனை இழக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

... 

ஜி. நாகராஜன் 'துக்க விசாரணை'

 பாலியல் தொழிலாளி


ஜி.நாகராஜனின் ’துக்க விசாரணை’ சிறுகதை படித்துப்பாருங்கள்.


அவளுக்கு கனோரியா. வயித்து வலி வயித்து வலின்னு துடிச்சா. 

ஒரு தடியன் வந்து 'ஏண்டி எனக்குச் சீக்கா வாங்கி கொடுத்தே' ன்னு கேட்டு, செருப்ப களத்தி அடிச்சிருக்கான். அவன் போகவும் ரயிலடிக்குப் போனவ தான். 

ரயில்ல விழுந்து தற்கொலை. பத்திரிகை செய்தி.


சாவை நேருக்கு நேராக துணிந்து சந்தித்த 

ஜி. நாகராஜனின் கனமான கதை. 

..................


”அடுத்து வருபவன் ஆணா, அலியா, கிழவனா, வாலிபனா, அழகனா, குரூபியா, முரடனா, சாதுவானவனா என்றெல்லாம் கவலைப்படாது அவனிடத்துத் தன்னைத் தானே ஒப்படைத்துக்கொள்கிறாளே அந்தச் சிறுமியிடத்து யாரும் ஒரு தெய்வீக உணர்வைச் சந்திக்காமல் இருக்க முடியாது.

சமுதாயம் அவ்வப்போது கற்பிக்கும் போலி ஏற்றத்தாழ்வு உணர்ச்சிகளுக்கு இரையாகாமல் இருப்பவன் ஒருவனே இதைப் புரிந்துகொள்ள முடியும். எது எப்படியிருப்பினும், ’தேவடியாள்’ என்பதை ஒரு வசைச் சொல்லாகப் பயன் படுத்த நியாயமே இல்லை.


வேண்டுமென்றால் தி.ஜானகிராமனது கோவில் விளக்கு என்ற சிறுகதையையோ அல்லது யூஜின் ஓநீலின் அன்னா கிருஷ்டி நாடகத்தையாவது படித்துப் பாருங்கள்… 

பரத்தை மாதவியின் நல்லியல்புகள் தானே மணிமேகலையிடத்துக் குடிகொண்டன.”

- ஜி. நாகராஜன்.


......................


ஜி. நாகராஜன் குறிப்பிடுகிற யூஜின் ஒநீல் மகள்                                                         ஊனா ஓ நீல் தான்

 "Catcher in the rye நாவல் எழுதிய ஜே.டி.சாலிஞ்சருடைய காதலி.


 ஊனா ஒநீலுக்கு நீண்ட கடிதங்கள் சாலிஞ்சர் எழுதியிருக்கிறார். 1941ல்  நூல் விட்டுக்கொண்டிருந்தார் சாலிஞ்சர். 


ஆனால் சார்லி சாப்ளினை விதி வசமாக ஊனா ஓநீல் சந்திக்க நேர்ந்த பிறகு விதி விளையாடியது. சார்லி சாப்ளின் வாழ்வில் நடந்த  நான்காவது திருமணம் இந்த ஊனா ஒநீலோடு தான்!


நான்காவது திருமணமா என்று ஏளனமாக எண்ணி விடக்கூடாது. இந்த திருமணம் தான் சாப்ளின் சாகும் வரை நிலைத்து நின்றது.(1943-1977) அது மட்டுமல்ல. இந்த ஓநீல் மூலம் சாப்ளினுக்கு எட்டு குழந்தைகள். இதில் முதல் மகள் 1965ல் வந்த டாக்டர் ஷிவாகோ படத்தில் ஷிவாகோவின் மனைவி டோன்யா வாக நடித்த ஜெரால்டைன் சாப்ளின்.

பத்மஸ்ரீ பாப்பையா

 பத்மஸ்ரீ பாப்பையா. 



அமெரிக்கன் கல்லூரி ஒபெர்லின் ஹால் முன் எனக்கும் மற்றொரு மாணவனுக்கும் வாய் தகராறு முற்றி கைகலப்பு என்று ஆகிவிட்டது. 

என் மீது எந்த தவறும் கிடையாது. 

மதுரையில் அடிக்கடி பார்க்க கூடியது "கஞ்சா குடித்து மெண்டல் ஆவது. " அப்படி ஆனவன். 

என் மீது எப்படியோ ஒரு பகையை மனத்தில் உருவாக்கி கொண்டான். Paranoid delusion.


 ஏற்கனவே பேராசிரியர்களின் ஓய்வறைக்கு சென்று பிரச்சினை செய்திருக்கிறான். இப்போது என்னிடம்.


இன்று வரை மன நிலை பாதித்தவர்களுக்கும் எனக்கும் ஒத்து போவதே இல்லை.

என்னுடைய ராசி அப்படி.


திடீரென்று அவன் கத்தியை எடுத்து விட்டான். மதுரையில் கத்தியை சண்டையில் ஒருவன் எடுத்து விட்டால் மற்றவர்கள் ஒதுங்கி விடுவார்கள். விலக்கி விட மாட்டார்கள். 

அவன் கத்தியால் குத்த பலமுறை கடுமையாக முயற்சிக்கிறான். ஆனால் நான் பயப்படாமல் அவனை அடிக்கிறேன். 

லாவகமாக கத்தி குத்திலிருந்து 

தப்பித்துக் கொண்டே அவனை தாக்குகிறேன்.

விலக்கி விட மாணவர்கள் எல்லோரும் பயப்பட்ட அந்த சூழலில்தமிழ் பேராசிரியர் சாலமன் பாப்பையா என்னை பின் பக்கமாக வயிற்றோடு பிடித்து தூக்கி அந்த இடத்தை விட்டு வெளியேறி நடக்கும் போதே எங்கள் ஆங்கில பேராசிரியர் R.நெடு மாறன் அந்த கத்தி வைத்திருந்த மாணவனை இறுக்கமாக பிடித்து கொள்கிறேன். அவன் வேகம் தணியும் வரை 

அவர் பிடி தளரவே இல்லை.

கத்திகுத்து விழுந்து உயிரையே இழந்திருக்க வேண்டிய என்னை அன்று காப்பாற்றியவர்கள் பேராசிரியர்கள் சாலமன் பாப்பையாவும்,நெடுமாறனும் தான்.

என் கல்லூரி காலத்தில் பாப்பையா எனக்கு பக்கத்து தெருக்காரர் கூட. அதனால் கல்லூரியில் பார்த்து கொள்வதோடு, ஏரியா வில் லீவு நாளையிலும் ஏ.ஏ.ரோடில் எப்போதும் 

அவருடன் உரையாடிகொள்ள முடியும்.


பெரியகுளத்தில் தபால் துறையில் பணியாற்றிக்கொண்டிருந்த போது பாப்பையா, தமிழ்குடிமகன் எல்லாம் ஒரு வழக்காடு மன்றம் நடத்த வந்தார்கள். பாப்பையா நடுவர். உற்சாகமாக கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தவர் முன் நான் போய் நின்றேன். 

அவ்வளவு கூட்டத்திலும் என்னை அடையாளம் கண்டு கொண்டு பேச்சை கொஞ்சம் நிறுத்தி என்னை பார்த்து " என்னய்யா இங்கே ?" என்றார். "இங்கே தபால் துறையில் வேலை செய்றேன் அய்யா ." என்று நான் சொன்னேன்.

 "அப்படியா. ரொம்ப சந்தோசம் யா "- பதிலுக்கு அவர் சொல்லிவிட்டு

அதன் பின் தான் பட்டிமன்ற பணியை தொடர்ந்தார்.


எங்கள் ஆங்கிலத்துறை பேராசிரியர்

 R. நெடுமாறன் சில காலம் முன் 

வெற்றிகரமாக “Speak to achieve course” சென்னையில் நடத்தி கலக்கி கொண்டிருந்தார்.


 "மார்க் ஆண்டனி "என்று தான இவரை பற்றி சொல்வேன் .இரண்டு திரை படங்களிலும் தலையை காட்டி இருக்கிறார்.


நெடுமாறன் ஆங்கிலத்தில் பேசி கேட்டால் இவருக்கு தமிழ் தெரியும் என்று யாரும் நம்ப மாட்டார்கள். 

அமெரிக்க ஆங்கிலம்! தமிழில் முழங்கும் போது இவருக்கு ஆங்கிலம் தெரியும் என்று நினைத்தே பார்க்க முடியாது. 

உச்சரிப்பு அவ்வளவு தெளிவாக இருக்கும்.

செல்லப்பா

 துர்வாச முனி சி.சு.செல்லப்பா

- R.P.ராஜநாயஹம்


சி.சு.செல்லப்பா என்றாலே அவருடைய கோபம், பிடிவாத குணம் தான் உடனே நினைவுக்கு வரும்.


சி.சு.செல்லப்பா தான் தனக்கு ரிஷிமூலம், ’எழுத்து’ பத்திரிக்கை தான் தன் நதிமூலம் என்றே அன்றும் இன்றும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருப்பவர் ந.முத்துசாமி. 


’எழுத்து’ பள்ளிக்கே ’கூத்துப்பட்டறை’  நாடக செயல்பாடுகளை பெருமிதத்துடன் சமர்ப்பிப்பவர்.


 செல்லப்பாவின் கோபம் இவரையும் தீண்டியிருக்கிறது.


இலக்கிய சிந்தனை ஆண்டு விழாவொன்றில் கலந்து கொண்ட அன்றைய அமெரிக்க கான்சல் ஜெனரல் ஃப்ராங்க்ளின் தமிழ் மொழியில் சிறுகதை பற்றிய அபிப்ராயமாக ‘ முத்து சாமி ஸ்கூல்’ என்று சொல்லியிருக்கிறார். ‘INDIVIDUAL CHOICE’ என்பது எவருக்குமே உள்ள உரிமை. முத்துசாமியை தூக்கிப்பிடித்து ஃப்ராங்க்ளின் தன் அழுத்தமான கருத்தை அன்று வெளிப்படுத்தியிருக்கிறார்.


இதற்குப் பிறகு சில நாட்கள் கழித்து செல்லப்பாவை சந்திக்க அவருடைய வீட்டிற்குச்சென்ற 

முத்துசாமி அவமானப்பட நேர்ந்திருக்கிறது. 

தான் படிக்கக்கொடுத்திருந்த சில நல்ல புத்தகங்கள் தன் மீது செல்லப்பாவால் 

ஆக்ரோஷமாக, ஆவேசமாக தூக்கி எறியப்பட்டதைப்பார்த்து அதிர்ந்து போய் விட்டார். 

அதன் பின் அவரை கடைசி வரை இவர் பார்த்ததே கிடையாது.


ஞானக்கூத்தன் மறைந்த போது 

இரங்கல் கூட்டத்தில் கூட ந.முத்துசாமியின் வார்த்தை“ செல்லப்பா போல ஒரு  மட்டரகமான ஆளை  பார்க்கவே முடியாது”


சிட்டி மகன் விஸ்வேஸ்வரம் என்னிடம் சொன்ன ஒரு விஷயம். சிட்டியை சந்திக்க செல்லப்பா வந்தால் கொஞ்ச நேரத்தில் இருவருக்கும் சண்டை வந்து விடும். ’போடா அறிவு கெட்டவனே, உனக்கு ஒன்னும் தெரியாது’ என்று செல்லப்பா கோபித்துக் கொண்டு கிளம்பி விடுவாராம்!


’அலசல் விமர்சனம்’ செய்து கொண்டிருந்த செல்லப்பா நீதிபதியாக இருந்திருந்தால் க.நா.சுவுக்கு தூக்கு தண்டனை கொடுத்திருந்திருப்பார். க.நா.சுவின் ’ரசனை விமர்சனம்’ மீது அவ்வளவு கோபம் அவருக்கு.


சுந்தர ராமசாமியின் நினைவோடை.

க.நா.சு, சி.சு.செல்லப்பா, தி.ஜானகிராமன், கு.அழகிரிசாமி, கிருஷ்ணன் நம்பி, பிரமிள், ஜி.நாகராஜன் போன்ற மகத்தான படைப்பாளிகள் பற்றியெல்லாம் சுந்தர ராமசாமி 

காலத்தின் பனிக்கட்டியால் மூடப்பட்ட தன் நினைவடுக்குகளிலிருந்து எடுத்துப்போட்ட ஞாபக அனுபவங்கள்.


 சுந்தர ராமசாமியின் ’சி.சு.செல்லப்பா நினைவோடை’  படிக்கும்போது அவர் சு.ரா.வின் படைப்புகளை நிராகரித்திருக்கிறார் என்பது தெரிய வருகிறது. 


அப்படிப்பட்ட செல்லப்பாவிடம் சுந்தர ராமசாமி 

எந்த அளவுக்கு மதிப்பும் மரியாதையும் வைத்திருந்திருக்கிறார். தன்னுடைய முன்னோர்களில் ஒருவராக எப்போதும் சி.சு.செல்லப்பாவை கனப்படுத்தியவர்.


சுந்தர ராமசாமி சொல்கிறார்:

’எழுத்து’ பத்திரிக்கை ஆரம்பிக்கப்பட்டபோது அவர் கையில் ஒரு நயாபைசா கூடக் கிடையாது. 

அவர் மனைவியின் நகைகளை அடகு வைத்துப் பத்திரிக்கையைத் தொடங்கினார். அவரது மனைவிக்கு உள்ளூர வருத்தம். ஏதோ கொஞ்சம் நகைகள் தான் இருந்தன. அதையும் வாங்கிக்கொண்டு போய் விட்டார் என்று. அவர் வெளியே கொண்டு போன சாமான்கள் திரும்பி வீட்டுக்கு வந்ததாகச் சரித்திரமே கிடையாது.


 ‘ சார் இப்படிச் செய்யனுமா. நகைகளை அடகு வைத்து பத்திரிக்கை நடத்த வேண்டுமா’ என்று கேட்டதற்கு, 'அடகு தானே வச்சிருக்கேன். பணத்தைக் கொடுத்து மீட்டு விடலாமே’ என்பார். ’அப்படி முடியலைன்னா நகை கையை விட்டுப் போயிடுமே’ என்றேன். அதுக்கு அவர் ‘இந்த ’எழுத்து’ தொடர்ந்து நடந்தாக வேண்டும். நீ இப்போ ஒரு ஐயாயிரம் ரூபாய் தாயேன். அந்த நகைகளை மீட்டு அவளிடம் தந்து விடுகிறேன்.’ என்றார்.


 ஆனால் ஒரு விஷயம். நான் ரூபாய் கொடுத்தால் அதை வாங்கிக் கொள்ள மாட்டார். அநியாயமான சுயகௌரவம் அவருக்கு உண்டு. நாம் வறுமையில் வாடிச் செத்துப்போனாலும் போகலாம்;அடுத்தவரிடம் இருந்து எதையும் பெற்றுக்கொள்ளக்கூடாது என்பதில் அபாரமான வைராக்கியம் இருந்தது.


பின்னால் பல பரிசுகளை அவர் வாங்க மறுத்தார். தஞ்சாவூர் பல்கலைக்கழகத்திலிருந்து பரிசுத்தொகை தந்தபோது அதை மறுத்து விட்டார்.


 ’விளக்கு’ பரிசை அவர் மறுத்து விடுவாரோ என்று பயந்தார்கள். அவர் பரிசுப்பணமாக ஏற்க மறுத்து 'என் புத்தகங்களை வேண்டுமானால் வெளியிடுங்கள்' என்றார். அதனால் புத்தகத்தை அச்சேற்ற உதவினார்கள்.


 ஒரு ஆள் நமக்குப் பணத்தைக் கொடுக்க முன் வருகிறார் என்றால் அதை ஏற்றுக்கொள்வதை அகௌரவமாக அவர் நினைத்தார்.’


எம்.ஜி.ஆர் மீது அவர் தி.மு.கவில் இருந்த காலத்திலேயே  சி.சு.செல்லப்பாவுக்கு மிகுந்த அபிமானம்.

 சுந்தர ராமசாமிக்கு இந்த அபிமானத்திற்கு காரணம் எம்.ஜி.ஆர் இருந்த கட்சி எதுவாக இருந்த போதிலும் அவர் மனதில் இருந்ததெல்லாம் காந்தி, நேரு, காமராஜர் இவர்கள் தான். 

அதே காரணத்தால் தான் செல்லப்பாவுக்கும் எம்.ஜி.ஆரை பிடித்திருக்கிறது என்று தோன்றுகிறது.


வாக்கு வாதம் முற்றி செல்லப்பா பிடிவாதமாக 

சொல்லியிருக்கிறார். 

“ எம்.ஜி.ஆரைப் பற்றி உனக்குத் தெரியாது. 

அவன் பெரியவன். 

க.நா.சு வை விடப் பெரியவன்”


எம்.ஜி.ஆருக்கும் க.நா.சுவுக்கும் என்ன சம்பந்தம்? எதுக்கு அவர்களை ஒப்பிடணும்? எம்.ஜி.ஆரை ஆதரிப்பதன் மூலம் க.நா.சுவின் பலத்தைக் குறைத்து விடமுடியுமா என்ன?


செல்லப்பா உடை பற்றி “ அவர் வேஷ்டியைச் சலவை செய்து கொள்ளாமல் துவைத்து துவைத்துப் பழுப்பேறிப் போயிருக்கும்”

அழகிரிசாமி நினைவோடையில் சுரா ’நான் சொன்ன மாதிரியே தான் செல்லப்பாவின் உடை பற்றி அழகிரிசாமியும் சொல்லியிருக்கிறார். 


 ”செல்லப்பா சட்டையையும் வேஷ்டியையும் ஆறு மாதத்திற்கு ஒரு தடவையாவது சலவை செய்யக்கூடாதா? “ என்று வருத்தப்பட்டிருக்கிறார்’ என்கிறார் சுந்தர ராமசாமி.


அந்த அளவுக்கு உடை விஷயத்தில் எளிமையாக, அலட்சியமாக இருந்தவர் சி.சு.செல்லப்பா. 


1960களில் இப்படி இருந்த வத்லகுண்டு சி.சு.செல்லப்பா 

1935 கால கட்டத்தில் எப்படியிருந்திருக்கிறார்?!


குண்டூசி கோபால் ’ஜெயபாரதி’ பத்திரிக்கையில் வேலை செய்து கொண்டிருந்த போது நடந்த விஷயம்.

’பி.எஸ்.ஆர்.கோபாலின் குண்டூசி’ நூலில் வாமனன் குறிப்பிடுகிறார்:

‘ஒரு நாள் தஞ்சாவூர் மைனர் போல் கட்டுக்குடுமி, பட்டுச்சொக்காய், கைவிரல்களில் மோதிரங்கள், கைக்கடிகாரம், கழுத்தில் தங்கச்சங்கிலி, ஜரிகை அங்கவஸ்திரம், மயில்கண் ஜரிகை வேஷ்டி- இந்த அலங்காரங்களுடன் ஒருவர் புதிதாக உதவி ஆசிரியர் வேலைக்கு வந்து சேர்ந்தார். 

கோபாலின் எதிரே வந்து அமர்ந்தார். 

;உங்கள் பெயரென்ன?'  விசாரித்தார் கோபால். ’சி.சு.செல்லப்பா’ என்று பதில் வந்தது.


 பின்னாள் ‘எழுத்து’ ஆசிரியரின் 

அந்நாள் மெருகுடன் கூடிய 

புது மாப்பிள்ளை வேடம் அது.’


... 


மீள்

Jan 24, 2021

புதுவையில் தி. ஜானகிராமன் கருத்தரங்கம்

 புதுவை தமிழ் துறையில் தி சானகிராமன்


1989.


அப்போது நான் தி.ஜானகிராமனுக்காக 

ஒரு நினைவு மதிப்பீட்டு மடல் வெளியிட்டிருந்தேன்.


புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் கி வேங்கட சுப்ரமணியன் என் எதிர் வீட்டில் அப்போது இருந்தார். அவர் ஆச்சரியப்பட்டு ஆள் அனுப்பி என்னை அவர் வீட்டுக்கு அழைத்து என்னை வைத்து உடனே 

தி.ஜா வுக்காக ஒரு கருத்தரங்கம் நடத்த உத்தரவிட்டார்.

க .ப .அறவாணன் அப்போது தமிழ் துறை தலைவர்.


'தி.சானகி ராமன் கருத்தரங்கம் ' என்று அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டது.என் பெயர் ஆர்பி ராசநாயகம்! கிரா (அப்போது புதுவை பல்கலைக்கழக வருகை தரு பேராசிரியர் )பெயர் கி 'ராச'நாராயணன்.


விழாவுக்கு போனவுடன் இபா

 'என்ன ராச நாயகம், 

ராச நாராயணன்'என்று கிண்டல் செய்தார்.

 கிரா " நான் வேடிக்கை பார்த்துகொண்டிருக்கிறேன்!"

- பட்டிகாட்டானாக மாறி 

இந்திரா பார்த்த சாரதியை பார்த்து சிரித்தார்.


 தி.ஜா படத்திலும்' தி சானகி ராமன்' என்று எழுதியிருந்தார்கள்.


பூனைக்கு யார் மணி கட்டுவது? 

நான் எதற்கு இருக்கிறேன்?

பயம் என்றால் என்ன என்றே தெரியாதவன்.


பாரதி தாசனின் சிஷ்யர்கள் என்று பலர் வேறு அந்த சபையில்.


நான் பேசும்போது இந்த தமிழ் வெறியை குறிப்பிடாமல் விடவில்லை. I broke the ice.


" தமிழில் 'ஷ் ,ஹ ஜ'போன்ற வார்த்தைகள் இல்லை என்று சொல்வதை கேட்கும்போது

 நம்ம கன்னத்திலேயே இரண்டு கைகளாலும் அடித்து கொள்ள வேண்டும் போல் தோன்றுகிறது. இருக்கிற சிறகை பிய்த்து விட்டு 

தனி தமிழ் சிறகு ஒட்டவைப்பது அபத்தம்" 

- இப்படி தி ஜானகிராமன் சொல்வார். 

அவர் பெயரையே அவர் படத்திலும் 

அவர் பற்றிய கருத்தரங்க அழைப்பிதழில் அபத்தமாக எழுதிவிட்டீர்கள் " 

 என் எதிர்ப்பை  தெரிவித்தேன்.


அவ்வளவு தான். தனி தமிழ் வெறியர்கள் எல்லோரும் எழுந்து விட்டார்கள். 

உடனே க.ப .அறவாணன் மேடைக்கு வந்து மன்றாடினார் ' தயவு செய்து எல்லோரும் அமருங்கள்.உங்களை கையெடுத்து கும்பிட்டு கேட்கிறேன் '


தமிழ் பேராசிரியர் அறிவு நம்பி 'தயவு செய்து ராசநாயகத்திடம் சானகிராமன் பற்றி மட்டும் கேளுங்கள். தனித்தமிழ் பற்றி தயவு செய்து கேட்கவேண்டாம். உங்களை கும்பிட்டு கேட்டுகொள்கிறேன் '


விழா முடிந்த பிறகு புதுவை தமிழ் துறைக்கு 

பல 'கன்னட' கடிதங்கள்.

அது என்ன அது ஆங் .. கண்டன கடிதங்கள்.


"தமிழ் துறை நடத்திய விழாவில் 

ஒருவன் தமிழை பழிக்கிறான். 

எங்கள் கையையும் வாயையும் கட்டிப்போட்டு விட்டீர்களே "


டெல்லியில் இருந்து திஜாவின் மகன் 

சாகேத ராமன் எனக்கு 

ஒரு கடிதம் 

நொந்து எழுதினார்.

"சாணி உலகம். 

இந்த சாணியில் 

'சானகிராமன்'தான் நிற்க முடியும் "


..............



'சினிமா எனும் பூதம்' பற்றி விநாயக முருகன்

 "சினிமா எனும் பூதம் வெறும் சினிமா நூல் அல்ல. 

அதுவும் வாழ்ந்துகெட்டவர்களை பற்றி சொல்லும் இடங்களில் ராஜநாயஹத்தின் எழுத்து சற்று கூடுதலாக மிளிருகிறது." 


- விநாயக முருகன் 


R. P. ராஜநாயஹம் சினிமா எனும் பூதம் பற்றி 

விநாயக முருகன் பதிவு கீழே :


"பொதுவாக நான் சினிமா சார்ந்த அதுவும் தமிழ்சினிமா சார்ந்த நூல்களை படிப்பதில்லை. அவை பெரும்பாலும் கிசுகிசுக்களாகவோ  யார் யாரை வைத்திருந்தாங்க என்று வாரமலர் ரகமாகவோ இருக்கும்.  ஒருசில விதிவிலக்குகள் தவிர்த்து. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் அண்மையில் சித்ரா லட்சுமணனின் சில நேர்காணல்கள் யுடியூப்பில் பார்த்தேன். அருமையாக இருந்தது. புத்தகம் என்றால் நான் விரும்பி படித்தது சந்திரபாபு நினைவலைகள். சிறுவயதில் நூலகத்தில் பிலிம்நியூஸ்  வாசிக்கும்போதுதான் பிலிம் நியூஸ் ஆனந்தன் என்ற பெயர் அறிமுகமானது. ஆனால் அவரது எழுத்தில் ஏதோ ஒரு போதாமை இருப்பதாக தோன்றும். என்னவென்று தெரியாது. வெகுநாட்கள் கழித்துதான் அது புரிந்தது. அவர் வெறுமனே தகவல் திரட்டியாகத்தான் இருந்தார் என்று. ஆனால் அதுவும் முக்கியமான பணிதான். இப்போது விக்கிபீடியா வந்துவிட்டது. அது இல்லாத காலத்தில் மிகப்பெரிய பணியைத்தான் அவர் செய்துள்ளார். அதனால்தான் பிலிம் நியூஸ் ஆனந்தனை  சினிமாவில் தகவல் களஞ்சியம் என்று அழைத்தார்கள். தமிழ்சினிமாவை தவிர்த்து தமிழ்சமூகத்தின் வாழ்க்கையை புரிந்துக்கொள்ளமுடியாது. உதாரணமாக நம் சிறுவயது நினைவுகளை அசைபோடும்போது எங்கோ கேட்ட இளையராஜா பாடல்களோ, சிறுவயதில் பார்த்த ரஜினி, கமல் திரைப்படங்களோ , நண்பர்களோடு தியேட்டருக்கு சென்றதோ ஒரு மூலையில் தோன்றும். ஒவ்வொருவருக்கும் அந்தஅந்த காலக்கட்ட இசையமைப்பாளர்கள், நடிகர்கள், நடிகைகள் என்று நினைவுக்கு வருவார்கள். சினிமா இல்லாமல் தமிழன் இல்லை. ஆனாலும் இவ்வளவுபெரிய தமிழ்சினிமா பற்றி குறிப்பிடத்தக்க எத்தனை நூல்கள் வெளிவந்துள்ளன என்று பார்த்தால் குறைவே.

 அந்தப்புத்தகங்களும் ஒன்று திரைக்கு பின்னால் இருக்கும் தொழில்நுட்பம் பற்றி இருக்கும். இல்லாவிட்டால் வெறும் தகவல் களஞ்சியமாக                     இருக்கும். 


அண்மையில்தான் R. P. ராஜநாயஹம் எழுதிய  'சினிமா எனும் பூதம்' என்ற நூலை படித்தேன். 


மு.க.முத்து பற்றி அவர் எழுதிய ஒரு குறிப்பை படித்துவிட்டுதான் அவரை முகநூலில்  தொடர ஆரம்பித்தேன்.


  தொடர் அனுபவப்பதிவுகள்   பார்த்துவிட்டு 

பிறகு சாருநிவேதிதா கட்டுரை பார்த்துவிட்டு 'சினிமா எனும் பூதம்'  நூலை வாங்கிப்  படித்தேன்.


 இது வெறும் சினிமா நூல் அல்ல. அதுவும் வாழ்ந்துகெட்டவர்களை பற்றி  சொல்லும் இடங்களில் ராஜநாயஹத்தின் எழுத்து 

சற்று கூடுதலாக மிளிருகிறது."



https://m.facebook.com/story.php?story_fbid=3598639693504964&id=100000769078139


Jan 23, 2021

ராஜநாயஹம் பற்றிய தரிசனம்

 Murugan RD :


R. P. ராஜநாயஹம் எழுத்துக்களையும், எழுத்து நடையையும் 

என்சைக்ளோபீடியா, நடமாடும் நூலகம் அப்படி இப்படின்னு எதனுடனும் ஒப்பிடவே முடியாது,,, கூடாது,,,


எழுத்தாளர்ங்கிற அடைமொழி கூட ராஜநாயஹத்தின் தனித்துவமான எழுத்து திறமைக்கு முன் கால்தூசி.. தயவு செஞ்சு உங்களை எழுத்தாளர்னு யாரும் அழைத்தால் மறுத்துடுங்க. ஏன்னா இங்க பொது வாசகர்களுக்கு எழுத்தாளர்கள் மீதிருக்கும் அலர்ஜி  அப்படிப்பட்டது,


உங்க பிளாக் தற்செயலாக பார்க்க நேரிட்ட போது தொடர்ந்து ஒரு வாரம் விடாமல் அசராமல் படித்தேன், ஆச்சர்யத்தில் பிரமிச்சி போயிட்டேன், என் நண்பர்கள் நிறைய பேருக்கும் உங்க வலைதளத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறேன். 


சாதாரண வாசர்களுக்கு ஏற்கனவே படித்த ஒரு புக்கை இன்னொரு தடவ படிக்க மனசே வராது, ஆனா உங்க பதிவுகள் பலவற்றை திடீர்னு ஞாபகப்படுத்தி ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை படித்திருக்கிறேன், சில விஐபிகளின் குடும்பம், உறவினர்களை கோர்வையாக ஞாபகப்படுத்தி அவர்களுக்கிடையிலான உறவையும், அவர்களின் தொழிலையும், அவர்களின் வெற்றி, தோல்வியையும், அவர்களின் தற்போதைய அல்லது கடைசி காலகட்டங்களையும் எழுதியதையெல்லாம் படிக்கும் போது அழகான ஒரு சிலந்தி வலைப்பின்னலின் நுணுகத்தை பார்த்து ரசிப்பது போல இருக்கும்,,


நன்றி 

வாழ்த்துக்கள் சார்,




...

R. P. ராஜநாயஹம்

 M.M. Abdulla :

R. P. Rajanayahem is an unsung hero. 

எவ்வ்வ்வளவு எழுதினாலும் அதற்கும் மேல் அவர்!! 


Vaidheeswaran Sundaram : 

வாழ்க்கையை விரித்துப் போட்ட 

பரந்த வியப்பு நிறைந்த விதானம் 

 ராஜநாயஹத்தின் வெளிப்பாடுகள். 


Krishnamoorthy Sundara :

 R. P. ராஜநாயஹம் தமிழகத்தின் பொக்கிஷம். 

மிக ஜாக்கிரதையாகப் பாதுகாக்கப்பட வேண்டியவர்.

Jan 22, 2021

பெர்டோல்ட் ப்ரெக்ட் கவிதை - ஒரு ஓவியனைப்பற்றி '

 பெர்டோல்ட் ப்ரெக்ட் கவிதை. 

'ஒரு ஓவியனைப்பற்றி'


பிரம்மராஜன் மொழிபெயர்ப்பில். 


ப்ரெக்ட் இருபத்துநான்கு வயதில் இலக்கிய வண்ணத்தை மாற்றியவர் என அறியப்பட்டவர். 

இந்த குறிப்பிட்ட கவிதையை இருபது வயதையொட்டி எழுதியிருப்பார் போல. 


முப்பது வருடங்களுக்கு முன்பு படித்த போது                 ஓவியங்கள், ஓவியர்கள் மீது ஈர்ப்பு ஏற்படுத்தியது. 


ஓவியன் பெயர் நெஹர் காஸ். 

பாலைவன மணலில் ஒட்டகத்தின் மீது செல்கிறான். வாட்டர் கலரில் ஒரு பச்சைப் பேரீச்சை மரத்தைத் தீட்டுகிறான். 


கங்கையாற்றின் மீதான நிறமிழந்த வானத்தை வரைய வேண்டியிருந்த வேளையில், 

ஆகாயம் அழகாயிருக்கிற காரணத்திற்காக நெஹர் காஸ் குடித்துக்கொண்டே இருந்திருக்கிறான். 


பெரிய கான்வாஸில் வரைய வேண்டும். 

அவனுடைய கான்வாஸை ஏழு கூலியாட்கள் தூக்கி நிறுத்துகின்றனர். 


இவன் குடித்துக்கொண்டே.... 

பதினான்கு கூலியாட்கள் நெஹர் காஸை தூக்கி நிறுத்துகின்றனர். 


இரவில் கற்களின் மீது உறங்குகிறான். கடினமாய் இருப்பதற்காக கற்களை கெட்ட வார்த்தையால் திட்டுகிறான். 

தன் வசையையும் அந்த கற்களையும் கூட அழகென்று கண்டு அதை சித்திரமாக்க விரும்புகிறான். 


வயலட் நிற வானத்தை நெஹர் காஸ் வெண்மை நிறத்தில் தீட்டுகிறான். காரணம் நீல நிற வர்ணம் மிச்சமில்லை அவனிடம். 

பாவம். Running short of painting material also. 


கடலில் பழைய கப்பல் ஒன்றின் உள்பகுதியில், அவனின் மிகச் சிறந்த சித்திரத்தை, 

மூன்று வர்ணங்களை பயன்படுத்தி,

 இரண்டு பக்கவாட்டுத் துளை வெளிச்சம் 

மட்டுமே கொண்டு தீட்டிக்கொண்டிருக்கிறான். 


பிறகு கப்பல் மூழ்கியது, அவன் தப்பித்தான். 

நெஹர் காஸ் சித்திரம் பற்றி பெருமை கொண்டிருக்கிறான். 

அது விற்பனைக்காக இருக்கவில்லை.


.. 



Jan 21, 2021

ந. முத்துசாமி - பாலகுமாரன் கடைசி சந்திப்பு

திருவல்லிக்கேணியில் ஞானக்கூத்தன் இரங்கல் கூட்டத்தில் பாலகுமாரனின் பேச்சில் ஒரு ஆச்சரியப்படத்தக்க தகவல் ஒன்று கிடைத்தது. அவர் நெக்குருகி நெகிழ்ந்து சொன்னார். “ நான் இன்று சுவையாக எழுதுகிறேன் என்றால் அது ஞானக்கூத்தன் போட்ட பிச்சை.”


நிறைய நாவல்கள் எழுதிய பாலகுமாரனிடம் ஆதங்கத்துடன் “கவிதையெழுதுவதை விட்டுட்ட பார்த்தியா” என்பாராம் ஞானக்கூத்தன்.


பாலகுமாரனின் கவிதைவரிகள் உடனே நிழலாடியது.

“ சவுக்கடி பட்ட இடத்தை நீவிடத்தெரியாக்குதிரை

கண் மூடி வலியை வாங்கும் இதுவுமோர் சுகமென்று

கதறிட மறுக்கும் குதிரையைக் கல்லென்று நினைக்க வேண்டாம்”


பாலகுமாரன் மிகவும் தளர்ந்து கையில் ஊன்றுகோலுடன் வந்திருந்தார்.எழுத்துலக கமலஹாசனாக கொண்டாடப்பட்டவர்!

மிகவும் தளர்ந்து போய் இருந்த அவர் பேசுவதற்காக மேடை ஏற வேண்டி இருந்த வேளை, 

தள்ளாடிய பாலகுமாரனை 

நான் அவர் கை பிடித்து நடத்தி 

மேடையில் ஏற்றி அமர வைத்தேன்.


ஞானக்கூத்தன் பதினைந்து வருடங்களுக்கு முன் திருப்பூர் வந்திருந்தார். சென்ட்ரல் லயன்ஸ் கிளப்பில் அழகான உரை நிகழ்த்தினார்.


அன்று அவர் அங்கு சொன்னதை இந்த திருவல்லிக்கேணி இரங்கல் கூட்டத்தில் 

நான் மேடையில் பேசும்போது நினைவு கூர்ந்தேன். 

“ராஜநாயஹம் கவிஞர் அல்ல. ஆனாலும் கவிஞர் ஞானக்கூத்தனின் மாணாக்கன் என்று சொல்லிக்கொள்ள முழு உரிமை இவருக்கு உண்டு.”


பாலகுமாரனும் ந.முத்துசாமியும் மறைவதற்கு

 சில மாதம் முன் ஒரு உணவுக்கூடத்தில் தற்செயலாக சந்தித்துக் கொண்டார்கள்.   


அடுத்தடுத்து சில மாதங்களிலேயே இருவரும் அடுத்தடுத்து மறைய இருந்த தருணம் அது.


இது தான் இருவரின் கடைசி சந்திப்பு. 


இருவருமே TAFE ல் வேலை பார்த்தவர்கள்.


இருவரும் உணர்ச்சி வசப்பட்ட நிலை.


பேராசிரியர் செ.ரவீந்திரன் கூட அப்போது முத்துசாமியுடன் இருந்திருக்கிறார்.


வர்த்தக எழுத்தாளர் பாலகுமாரன் மனம் விட்டு நெகிழ்ந்து அப்போது முத்துசாமியை கனப்படுத்தி சொல்லியிருக்கிறார்.

“ முத்துசாமி மட்டும் இல்லேன்னா நான் TAFE ல கடைசி வரை க்ளார்க்காவே தான் இருந்திருப்பேன்.”


....


 பிறந்த நாளுக்கு நான் அன்பளிப்பாக கொடுத்த ரேமண்ட் சட்டையைத் தான் அன்று முத்துசாமி அணிந்திருக்கிறார்

Jan 19, 2021

Between birth and death

 

பிறப்பையும் இறப்பையும் பார்த்திருக்கிறேன். இரண்டுமே வேறானவை என்றே நினைத்தேன் என குழம்பினார் டி. எஸ். எலியட். 


ஷோப்பன் ஹீர் தரும் தத்துவ விளக்கம் 

- 'பிறப்புக்கு முன்னதாக நீ என்னவாக இருந்தாயோ, அதுவாகவே சாவுக்குப் பின்னும் ஆகி விடுவாய்' 


All living things faces the birth and death cycle. 


பிறப்பு என்பது பிறப்பவன் அறியாமல் நிகழ்வது. 

சாவு சிலருக்கு தெரிந்தும், சிலருக்கு தெரியாமலும், சிலருக்கு எதிர் பாராமலும் நேர்கிறது. 


பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட வேடிக்கையில் நடப்பவை. 

Contacts, feelings, actions, reactions. 

ஆட்டம்,  நாட்டம் 

Shakespeare is a superpower. 

'..A Walking shadow.. A poor player struts and frets upon the stage  and is heard no more... 

.. A tale told by an idiot,  full of  sound and fury and signifying nothing. ' - Macbeth 



Between birth and death - A short visit to a departmental store?!


இடைப்பட்டு நடப்பவை மொத்தமும் கனவு? 


ஆத்மார்த்தி, கயல் இருவரும் எழுதியுள்ள கவிதைகள் கீழே 


'அலைய ஒரு காடு 

தொலைய ஒரு தூரம் 

புதையச் சிறு குழி 

உறங்க ஒரு மேடு 

கலையச் சில கனா 

புணர ஒரு மேனி 

போக்கச் சில பொழுது 

போற்ற ஒரு தெய்வம் 

போக ஒரு நாள் 

கரைய ஒரு நதி 

சாலச்சுகம்' 


- ஆத்மார்த்தி 


'இலை மறுத்துப் பூக்களாலான மரம்.

முதுகயம் மூழ்கடிக்கா நாணல்.

உடலே அகலாக்கும் மினுக்குப்பூச்சி.

பூவமர்ந்து கள்ளுண்ணும் தேன்சிட்டு.

அந்துப் பூச்சி முட்டையிடத் தளிர்கள்.

பிழைகள் பொருட்படுத்தா மூப்பு.

யாவும் நிகழ் சாத்தியமுள்ளதெனில்

எனக்கருளக் கடவது

குற்றவுணர்வுக் குறிப்புகளற்ற மரணம்.'


 - கயல்


.... 

Jan 18, 2021

லல்லு லொள்ளு

மூன்று கூடாரங்கள். 

மூன்று போட்டி. 

மூன்றிலும் லல்லு வென்றாக வேண்டும்.


1 .முதல் கூடாரத்தில் ஒரு மது பாட்டில். 

காக்டைல் சரக்கு.கடுமையானது. 

ஒரு மூன்று அவுன்ஸ் குடித்தாலே 

பயங்கரமாக ஏறிவிடும். 

ஆனால் இந்த பாட்டிலில் முப்பது அவுன்ஸ். விஸ்கி,ரம்,பிராந்தி, எல்லாம் கலந்த மது பாட்டில். அந்த மது கலவையை raw ஆக

 மிச்சம் வைக்காமல் முழுதாக 

குடித்து விடவேண்டும்.


2. இரண்டாவது கூடாரத்தில் ஒரு சிங்கம். பல்வலியால் துடிக்கிறது. 

அதன் சொத்தை பல்லை பிடுங்க வேண்டும்.


3.மூன்றாவது கூடாரத்தில் ஒரு வீராங்கனை. கராத்தேயில் பல மெடல்கள் வாங்கியவள். அவளுடன் உடலுறவு கொள்ளவேண்டும். ஆனால் அவள் சம்மதிக்கவே மாட்டாள். எங்கணமாயினும் அந்த பெண்ணை புணர்ந்து விடவேண்டும்.


கவனமாக மூன்று போட்டிகளையும் லல்லு மூளையில் ஏற்றிக்கொண்டார்.

பொதுவாக என் மனசு தங்கம்.

ஒரு போட்டியின்னு வந்து விட்டா.


லல்லு முதல் கூடாரத்தில் நுழைந்து முழு பாட்டிலையும் காலி செய்ய இருபது நிமிடங்கள் ஆயிற்று.


கூடாரத்தை விட்டு வெளியே வந்தார். பிஹாரிகள் ஆரவாரம் விண்ணை பிளந்தது என்றால் மிகையாகாது.


பயங்கர போதையில் சிறுமூளை பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் கையை அசைத்து 

பாராட்டுக்களை லல்லு பெற்றுக்கொண்டு இரண்டாவது கூடாரத்திற்குள் 

தைரியமாக நுழைந்தார்.


சிங்கம் கர்ச்சனை.

" டே அயோக்கியா " 

கோபமாக சிங்கம் போராடும் சத்தம்.


" என்னை விடுறா " சிங்கத்தின் பயங்கர கூப்பாடு.


"கொலை வெறி ஆயிடுவேண்டா "

" ச்சீ .. ச்சீய் .. அசிங்கம் பிடிச்சவனே ..

விடுறா என்னை ..

உங்கொப்பன் மகனே நான் ஆம்பள சிங்கம்டா

டேய் படுக்காளி, நான் ஆம்பள சிங்கம்டா. "


பிஹாரிகள் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தார்கள்.


'' அவசரத்துலே அன்டாக்குள்ளேயே கை போகாது. சிங்கம் வாய்க்குள்ளே சொத்தைப் பல்லு. 

நல்ல போதையிலே கவனமா 

எப்படி புடுங்கப் போறாரோ தெரியலெயே.

லல்லுவுக்கு உயிராபத்து ஏற்பட்டு விடக்கூடாது கடவுளே,

 பொல்லாத சிங்கம் அவரை கொன்று விடக்கூடாது.''


கடைசியில் பல நிமிடங்கள் நிசப்தம். 

ஒரே சஸ்பென்ஸ்.

கூடாரத்தினுள் என்ன ஆயிற்று..?

முப்பது நிமிடம் கடந்தது. 


லல்லு இரண்டாவது கூடாரத்தில் இருந்து 

ரொம்ப களைப்பாக 

தள்ளாடியவாறு வெளியே வந்தார்.

 பிஹாரிகள் கரகோஷம் மீண்டும் 

விண்ணைப் பிளந்தது 

என்பதை சொல்லவும் வேண்டுமோ.


லல்லு வணங்கிய பாவனையில் தலைகுனிந்து கையை கூட்டத்தை நோக்கி ஆட்டி விட்டு குழறியவாறு கேட்டார் 

" அந்த பல்லு பிடுங்கவேண்டிய பொம்பளை எங்கே? "


அந்தோ, Misplan.


அறியப் படும் நீதி : குடி போதையில் 

குழப்பமில்லாமல் 

முக்கிய காரியங்களை, 

சவால்களை திட்டமிடுதல் 

மிகவும் சிரமம். 

வெற்றிகரமாக சவால்களை 

ஜெயிப்பதும் துர்லபம்.


.....


இந்த' பல்லு புடுங்க வேண்டிய பொம்பளை ' ஜோக் ரொம்ப ரொம்ப பழசு.

 ஓஷோ ரஜ்னீஷ் சொன்னது.


 மறைந்த சுஜாதா பல வருடங்கள் முன்

 இந்த ஹைதர் காலத்து அரத பழசை 

பெரிய பத்திரிகையில் எழுதி மகிழ்ந்திருந்தார்.


இப்போது இங்கே ' ஆர்ட் புச்வால்ட் சாயம்' பூசப்பட்டு 

வேற்றுரு கொண்டு விட்டது. 


ஆர்ட் புச்வால்ட் இந்த பாணியில் தான் 

அந்தக்காலத்தில் 

அமெரிக்க அரசியல் பற்றி எழுதுவார்.


...

Jan 17, 2021

Bigg Boss 4 Grand finale கூட்டுக்குடும்பி

 Bigg Boss 4  grand finale 


ஒண்டுக் குடித்தன கூட்டுக் குடும்பி

கண்டு பிடித்தது ரப்பர் வளையல்.


- எழுதியவர் கவிஞர் நீலமணி. 


கமல்ஹாசன் சொல்வது போல 

சுப்ரமணிய ராஜு அல்ல. 

தவறாக சொல்லிக் கொண்டே தான் இருக்கிறார். 


கமல் இப்படியே பல காலமாக நம்பிக் கொண்டிருக்கிறார். அவருக்கு 

 நீலமணி என்று எடுத்துச் சொல்ல யாருமில்லை.

.... 

Jan 16, 2021

எல்லாந்தெரிஞ்ச ரெண்டு ஏகாம்பரங்கள்



1990 ல் ந. ஜயபாஸ்கரன் தினமணியில் செப்டம்பர் மாதம் எழுதிய கட்டுரையில் 

 இரண்டு தமிழ் பேராசிரியர்களின் 

படு அபத்தமான மதிப்பீட்டுக் குறிப்புகளை

 சுட்டிக் காட்டியிருந்தார். 


ஜானகிராமன் மீது மிகுந்த அபிமானம் 

கொண்டிருந்த ந. ஜயபாஸ்கரன். 


ஜானகிராமனுக்கு இப்படியும் ஒரு இழுக்கு நேர்ந்த விஷயத்தை 'தி. ஜானகிராமனின் இரண்டாவது மரணம்' என்று தலைப்பிட்டு 

கவிஞர் ந. ஜயபாஸ்கரன் 

எழுதிய போது தான் தெரிய வந்தது. 


தி. ஜா.வின் அம்மா வந்தாள் நாவல் பற்றி 

டாக்டர் சு. திருநாவுக்கரசு சொல்லியிருப்பதைப் பாருங்கள். 


"  'அம்மா வந்தாள் எனும் 

புதினத்தின் தலைவன் அப்பு. 


வேத சாஸ்திர வல்லுநன். 

அவன் பல பெண்களை விரும்புகிறான். 


அவன் அடி மனத்தில் தாயைப் பற்றிய 

எண்ணமே இருந்து வருகிறது. 


ஒரு நாள் தாயையும் பெண்டாள்கிறான். 


பிறகு தன் செயலுக்கு நாணி, வெறுப்புற்றுத் திருந்திய மனிதனாக மாறி விடுகிறான். "


இப்படி சு. திருநாவுக்கரசு 'திறனாய்வு அணுகுமுறைகள் : உளவியல் அணுகுமுறை' நூலில் (பக். 119 - 120) உளறியிருக்கிறார். 


இன்னொரு பேராசிரியர் டாக்டர் தா. ஏ. ஞானவேல் 

என்பவர் எழுதிய நூலில் (பக். 196 - 197) 

'உயிர்த் தேன்' அனுசுயா பற்றி 


" அனுசுயா என்பவள் பல ஆடவரோடு உறவு கொள்வதையே மையமாக வைத்து 'உயிர்த் தேன்'  என்ற புதினம் புனையப்பட்டுள்ளது. 


தான் பல ஆடவரோடு உடலுறவு கொள்வதை அவள் பெருமையாகவும் பேசிக்கொள்கிறாள். 


பல ஆடவரோடு உறவு கொள்வதே அன்பு என்று அவள் கருதுகிறாள். 


அன்பு என்ற சொல்லின் புனிதமான பொருளையே அவள் சிதைத்துக் கூறுகிறாள். 


பல ஆடவரோடு உறவு கொள்ளும் உரிமை ஒரு பெண்ணுக்கு வேண்டும் என்பதை இப்புதினம் உணர்த்துவது போல் தோன்றுகிறது.


 இது போன்ற  புதினங்கள் மக்கள் உள்ளத்தை எளிதில் உணர்ச்சி வயமாக்கிக் கவர்வதற்கே எழுதப்படுகின்றன எனலாம். 


இவற்றை எங்கனம் உயர் தர இலக்கியமாகக்

கொள்ள முடியும்? "


மேற் கண்ட சு. திருநாவுக்கரசு, தா. ஏ. ஞானவேல் என்ற இரண்டு பேராசிரியர்களும் Hypocrites. 


யப்பா பைரவாக்களே, நீங்க யாரு பெத்த பிள்ளைகளோ? 


 இரண்டு நாவல்களை படிக்காமல், மனசாட்சியில்லாமல் 

எழுதியிருக்கிறார்கள் என்பதை 

அம்மா வந்தாளையும் உயிர்த் தேனையும் 

படித்த வாசகர்கள் அறியமுடியும். 


இந்த கூற்றுகள் தகவல் பிழை, மதிப்பீட்டு வழுவும் கொண்டவை. அடிப்படை ஆய்வியல் நெறி கூட  காப்பாற்றப்படவில்லை.


https://m.facebook.com/story.php?story_fbid=2961403914073055&id=100006104256328


..

புதிய கூண்டு

வைகோ பெரியாரின் பிரமாண்ட படத்தை வீட்டில் வைத்திருக்கிறார்.


வைகோவின் மகன் துரை வையாபுரியின் மனைவி கோவிலுக்குப்போவார்.

 வைகோவின் ஒரு மூத்த சகோதரி

 dedicated chriistion. 

மகள்களில் ஒருவர் கிருஸ்தவராகவே மாறிவிட்டார். கணவர் பெயர் ஜான் புஷ்பராஜ்.


ஜீன் மெஸ்லியரின் மரணசாசனம், 

பெர்ட்ரண்ட் ரஸ்ஸலின் ‘ நான் ஏன் ஒரு கிருஸ்தவனல்ல?’ போன்ற கிருஸ்தவத்திற்கு எதிரான நூல்களை 

மொழி பெயர்க்கச்சொல்லி 

பெரியாரே பதிப்பித்திருப்பதை 

வைகோ அறியாதவரல்ல.


கோவில் கோவிலாக ஏறி இறங்கும் மன்னார்குடி குடும்பங்கள்.


திடீரென்று ஆவியானவரால் ஆசீர்வதிக்கப்பட்டு சசிகலா வெள்ளையுடை உடுத்தி பைபிளை எடுத்துக்கொண்டு “ ஏ,பாவிகளே, விரியன் பாம்புக்குட்டிகளே,” என்று கூவினால் 

பிரமிக்க வேண்டியதே இல்லை. 


 உமா சங்கர் ஐ.ஏ.எஸ் அதிகாரி பைபிளை கையில் எடுத்து 'ஏசு என்னிடம் பேசினார். அல்லேலூயா' என்று இப்போது  சொல்லிக்கொண்டிருக்கிறார்.


ஆட்டோ சங்கர் தூக்கில் இடப்படுவதற்கு முன் பைபிளை படித்து மதம் மாறி விட்டாராம். 

தூக்கிலிட்ட பின் 

ஆட்டோ சங்கருக்கு நாமம் போட்டிருந்தார்கள்.

அவர் மனைவி  அல்லேலூயா பிரச்சாரகராய் இருந்தார்.


கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன்  பெந்தகோஸ்ட் கிறிஸ்டியன் என்று சொல்லப்பட்டது. 

சாருஹாசன் பிரசங்கம் செய்யும் D.V.D  வேண்டுமா என்று ஒரு கிருஸ்தவர் என்னிடம் நூல் விட்டுப்பார்த்தார். எனக்கெதற்கு?

 மறுத்து விட்டேன்.


சாருஹாசன் மதம் மாறியது பொய் என்றால் இப்படி ஒரு வதந்தி எப்படி பரவியது?


ஒரு பிராமணன் கிருத்துவனாக மாறுவதாக “அஸதோமா சதகமயா”  படத்தில் அவர்  நடித்ததால் பரவி விட்டதா? 


'எனக்கு இன்னும் தெய்வ நம்பிக்கையே வரவில்லை

அதற்குப்பின் தானே மதம் மாற வேண்டும்'

 - இப்படி சாருஹாசனே சொல்வதால் அவர் மதம் மாறியதாக பரவிய செய்தி வதந்தி தான் என்று  தெரிகிறது.


கமல்ஹாசன் பற்றி கே.பாலச்சந்தர் “ அவன் நாத்திகனாகவே இருந்து விட்டுப்போகட்டும். ஆனா இதையே ஏன் எப்பவும் சொல்லிக்கிட்டே திரியறான்?”


ஆத்திகப்பிடிவாதம்,மத வைராக்கியம் போல

 நாத்திக வைராக்கிய பிடிவாதமும் கூட 

ஒரு ‘கூண்டு’ தான்.


திருப்பூரில் நான் ஸ்போக்கன் இங்க்லீஷ் டீச்சராய் இருந்த போது மூன்றாம் வகுப்பில் படிக்கும் அபிநயா என்னிடம் அழுதாள்

 “My auntie has met with an accident and she is now in an hospital”

 நான் அவளை சமாதானப்படுத்தினேன்

 “ Let us pray for her.”  


குழந்தைகள் அனைவரும் கண் மூடி கை கூப்பி நான் சொன்னதை திருப்பிச் சொன்னார்கள் “ Oh God, Our Abinaya’s auntie should get well soon.”


அபிநயா சந்தோஷமாகிவிட்டாள்.


அடுத்த வாரம் அவளுடைய அம்மாவின் சகோதரி குணமாகி வீட்டிற்கு வந்தபோது 

வீட்டில் பெருமையாக “ எங்க க்ளாஸில  நாங்க எல்லோரும் ராஜநாயஹம் சார் கூட சேர்ந்து ப்ரேயர் செய்தோம்.”

அவள் க்ளாஸுக்கு நான் மறுபடி போனபோது என்னிடம் சந்தோஷமாக ஆண்ட்டி 

குணமான விஷயத்தை சொன்னாள்.  

I love the way of grace.


அந்தக்காலத்தில் டாக்டர் கி.வேங்கடசுப்ரமண்யத்தின் Cousin   ஜெஸ்விட் பாதிரியார் லாரென்ஸ்.


வெள்ளைக்காரன் காலத்திலேயே திருநெல்வேலியில்  நான்கு பிராமணக்குடும்பங்கள் கிருஸ்தவ மதத்தை தழுவி விட்டார்கள்.


புதுமைப்பித்தன் கிருஸ்தவ மதத்தின் ஊடுறுவல் பற்றி பிரமாதமான ஒரு கதை எழுதியிருக்கிறார். அந்தக்கதை “புதிய கூண்டு” 

ஆஹா என்ன ஒரு தலைப்பு. என்ன அழகாக மதமாற்றம் பற்றி 

ஆறே எழுத்தில் சொல்லிவிட்டார்.


என்னுடைய உறவினர் தம்பதியரை 

பல வருடங்களுக்கு முன் 

ஒரு முறை சமயபுரம் கோவிலில் சந்தித்தேன்.


“மருமகனே, மாரியம்மா ஆயிரம் கண்ணுடையாள். சக்தி வாய்ந்த தெய்வம்!” என்றார் 

அந்த தூரத்து அத்தை. 

ஆறு மாதத்தில் திருச்சியில் என்னிடம் “அய்யா, மருமகனே, சொன்னாக்கேளுங்கய்யா. ஏசப்பாவை நம்புங்க. ஏசு தான்யா உண்மையான தெய்வம்.” 

அந்த தம்பதியர் தீவிர கிறிஸ்தவர்கள் ஆகியிருந்தார்கள்.

 வைகோவின் வார்த்தைகளில் சொல்வதானால் dedicated christians.

 

‘மகமாயி மகமாயி’ என்று புலம்பிய ஏ.வி.எம் ராஜன் தானே ஏசுவின் அடிமை.


தி.மு.க பேச்சாளர் குமரி முத்து அதோடு கிறிஸ்தவ பிரச்சாரகருமாக கடைசி காலத்தில் இருந்தார்.

 இவருடைய அண்ணன் நம்பிராஜன்.

அண்ணி தாம்பரம் லலிதா. 


நடிகை அம்பிகாவை “அவன் இவன்”, “ஜிகர்தண்டா” படங்களில் பார்த்தபோது 

யார் சாயலோ தெரிகிறதே எனத்தோண்றியது. 

ஆங், வயதானவுடன் அம்பிகா 

இப்போது தாம்பரம் லலிதா போலத்தெரிகிறார். 

ஷோபா நடித்த “பசி”யில் தாம்பரம் லலிதாவைப் பார்த்த மாதிரியே தான் அம்மா அம்பிகா இருக்கிறார்.


ஜூனியர் பாலையா மாலை போட்டு என்னிடம் சபரிமலை ஐயப்பன் பெருமை பேசியது இன்னும்  நினைவிருக்கிறது.

அவர் இப்போது பெந்தகோஸ்ட் கிறிஸ்டியன்.


மதமாற்றும் முயற்சி பலிக்காத நிலையில் "சைத்தான்கள்.. ஞானியாக ஏசப்பா இவர்களை தெரிந்தெடுக்கவில்லை.அஞ்ஞானிகள்" என்று கிறித்துவ பாதிரிகளும் பிரச்சாரகர்களும்               சலித்து சாபமிடுவார்கள். 

வறுமையில் உள்ளவர்களை சுலபமாக மதமாற்றம் செய்யமுடியும்.

பிரச்னைகள்,பிரச்னைகள்.


பொருளாதார வீழ்ச்சியடைந்தவர்கள்,

பெரும் நம்பிக்கை துரோகங்களை சந்தித்தவர்கள், ரத்தஉறவின் மரணம் தரும் மீளாத்துயரம்,

நோயாளிகள்,

சிறைக்கைதிகளில் ஆயுள் தண்டனை,

மரண தண்டனை பெற்றவர்கள்,

கோர்ட்,கேஸ்,சிறை என்று நொம்பலப்படுபவர்கள், பெரும் துயரத்தில் இருப்பவர்கள். 

மனம் இவர்களுக்கு மிகவும் பலகீனமாக இருக்கும். இவர்களை சுலபமாக மதமாற்றம் செய்ய இயலும்.


...

Jan 15, 2021

என் பெயர் R.P. ராஜநாயஹம்

 என் பெயர் R. P. ராஜநாயஹம் 


 பொதுவாக, அப்பா பெயர் பீட்டர், பீர் முகமது, பீதாம்பரம் என்றிருந்தால் ஆங்கிலத்தில் இனிசியல்

 இருப்பது தான் நல்லது. 


தனித்தமிழ் வாதிகளுக்கு 

 இதெல்லாம் புரியாது. 


அப்பா பெயர் பீதாம்பரம் என்று பிடிவாதமாக பீ.வாசு என்று எழுத வேண்டுமா? தமிழில் பி.வாசு என்று எழுதினால் அப்பா பெயர் பிரபாகரா, பிச்சைமுத்துவா,பிள்ளையாரா? 


ஆங்கில இனிசியல் P என்பதை 

எதற்காக ’பி’ என்று ஏன் எழுத வேண்டும்.


 இங்கிலீஷ்ல இனிசியல் போடுகிற சுதந்திரம் பிறப்புரிமை.


ஒரு தனித்தமிழ் வெறியன் ‘ இங்கிலீஷ்ல இனிசியல் போடுறவனெல்லாம் இங்கிலீஷ்காரனுக்கு பொறந்தவனுங்க’ என்று அபத்தமாக ’மைக்’ல கூப்பாடு போட்டான்.


என் பெயரை என் விருப்பப் படி R.P.ராஜநாயஹம் என போட மறுத்து இனிசியலை தமிழில் தான் போடமுடியும் என்று ’தி இந்து’ தமிழ் செய்தித்தாள் பிடிவாதம் பிடித்தது.  நான் எழுதிய கட்டுரைகளில்

 என் பெயர் ஆர்.பி.ராஜநாயஹம் என்று தான்  பிரசுரிக்கப்பட்டது.


குமுதம் வாரப்பத்திரிக்கை  என் பெயரை என் விருப்பப்படி என் கட்டுரைகளில் ’R.P.ராஜநாயஹம்’ என அச்சிட்டிருந்தது.


ஆனந்த விகடன் 'அடடா, R. P. ராஜநாயஹம் என்று போட வேண்டும் என்று சொல்லியிருந்தால் நிச்சயம் அப்படி பிரசுரித்திருப்போமே' என்று சொன்னார்கள். 


கோவை ஞானி பலவருடங்களுக்கு முன்

 இந்திரா பார்த்தசாரதியின் ‘ கிருஷ்ணா, கிருஷ்ணா’ நாவலுக்கு ஒரு விமர்சனம் கேட்டார். நான் ‘லீலார்த்தம்’ தலைப்பிட்டு அனுப்பி வைத்தேன்.


கோவை ஞானி ’ராஜநாயஹம் என உங்கள் பெயரை பிரசுரிக்க மாட்டேன். ராஜநாயகம் தான். ’ஹ’ போட மாட்டேன்..’ 


 நான் ‘ ராஜநாயஹம் என்று என்னை சுந்தர ராமசாமி, கி.ராஜநாராயணன், அசோகமித்திரன், பிரமிள் ஆகியோர் கூட குறிப்பிட்டிருக்கிறார்களே’


கோவை ஞானி ‘ அவங்க எல்லாம் மனுசங்க தானா? எனக்கு சந்தேகமாயிருக்கு.

 நான் ராஜநாயகம்னு தான் அச்சிடுவேன்.’


 நான்  ‘ நீங்க என் லீலார்த்தத்தை பிரசுரிக்க வேண்டாம். கிழிச்சிப்போட்டுடுங்க’


பிறகு எம்.ஜி.சுரேஷின் பன்முகம் பத்திரிக்கையில்                           R.P. ராஜநாயஹம் ’லீலார்த்தம்’ பிரசுரமானது.

(என் ’டேட் ஆஃப் பர்த். விசாரித்த பிரமிள் ரொம்ப சீரியஸாக என் பெயரை R.P.RAJANAYAHEM என்று 37 எண் வரும்படி மாற்றிக்கொள்ளச்சொன்னார்.
’நான் 21 தேதியில் பிறந்தவன். 37ல் மாற்றிக்கொள்ளச்சொல்கிறீர்களே.’

‘ஜே.கிருஷ்ணமூர்த்தி( J.Krishnamurti) 12 தேதியில் பிறந்தவர். கருணாநிதி( M.Karunanidhi) 3ம் தேதி பிறந்தவர்.இருவருக்கும் 37ல் தான் பெயர். அதனால் 21ல் பிறந்த உங்களுக்கும் 37 கைகொடுக்கும். 3 வரிசையில் பிறந்தவர்களுக்கு 37 அதிர்ஷ்ட எண்’ பிரமிள் ஆணித்தரமாக  சொன்னார்.
சம்பிரதாயமாக சொல்லவில்லை.கிளம்பும் வரை R.P.Rajanayahem என்று பெயர் மாற்றம் குறித்து வலியுறுத்தியவர் கடைசியாகக் கூட அதையே சொன்னார்.

அன்று முதல் நான் அவர் சொன்ன பெயரில் தான் இருக்கிறேன். பிரமிள் யாருக்குத்தான் பெயர் மாற்றி வைக்கவில்லை. ஆனால் அவர் சொன்னபடி பெயரைஅப்படியே மாற்றிக் கொண்டவர்கள் என்னைப் போல் எத்தனை பேர்?) 


'தமிழ்ல ஹ, ஸ,  ஷ, ஜ என்ற எழுத்தெல்லாம் கிடையாது என்றால் நம்ம ரெண்டு கன்னத்திலேயும் நாமே 

அடித்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. 

இருக்கிற சிறகைப் பிய்த்து விட்டு 

தனித்தமிழ் சிறகு ஒட்ட வைப்பது அபத்தம்.'

என்று தி. ஜானகிராமன் சொல்வார். 

(தி. ஜானகிராமன் இறந்து ஏழு வருடங்களுக்குப் பிறகு புதுவை பல்கலைக் கழகத்தில் அவர் குறித்த கருத்தரங்கத்தில் அவர் பெயரை தி. சானகிராமன் என்று அச்சில் எழுதினார்கள்.) 

 

என் பெயரை தயவுசெய்து 

என்னுடைய விருப்பப்படி 

R. P. ராஜநாயஹம் என்று எழுதுங்கள். 


ஆங்கிலத்தில் R. P. Rajanayahem 


.....................................

Jan 13, 2021

Natesh on R. P. Rajanayahem

 Koothuppattarai Boss M. Natesh 

on Actor R. P. Rajanayahem 


"By 1990 I was 11 years old in theatre. 

Kind of knew all techniques to train

 an actor’s body-voice; 

but not the mind. 


I thought that a person with trained skills 

in all that I know can go on stage, 

pick up his/her life’s problems and deliver a solo show of good theatre.

 No text by-hearting, no rehearsals. IT NEVER HAPPENED.


 IN 2018  Rajanayahem comes on stage and does exactly that 28years later!!!!!!!!!!!!!... 

I acknowledged the same day after the show

 in front of the audience. 

An intelligent, evocative, transformative actor changing roles like a chameleon. 


R. P. Rajanayahem is a Transformative Actor "


.................................. 


......... 


..

Jan 11, 2021

பத்மஜா நாராயணன் கவிதை 'நாய்க் கனவு'

 பத்மஜா நாராயணன் கவிதை 'நாய்க் கனவு' 


"ஓர் அபூர்வமான 

மார்கழி மழை நாளில் 

வீட்டில் சரணடைந்தது 

கருப்பு நாய்க் குட்டி ஒன்று. 

பறந்து பறந்து 

கொட்டாங்கச்சி பால் அருந்தி 

தள்ளாடும் நடை மயக்க 

நானறியாமல் அதன் தோழியானேன். 

அதற்கென ஒரு கிண்ணம் 

படுக்க ஒரு பாய் விரிப்பு 

என பழக்கியும் 

பல நாட்கள் 

என் கூந்தல் கதகதப்பில் 

கண்ணுறங்கும். 

குழந்தையென 

ஊஞ்சலாட்டி தூங்கியபின் 

அதன் முகம் பார்த்து 

வினாவொன்று எழும் 

என்றாவது 

எப்போதாவது 

அதன் கனவில் 

நான் வருவேனா? "


பழகாத நாயைப்பார்க்கும் போது தான் திகில், பயம். நம்மிடம் பழகும் நாய்கள் மனிதருக்கு தோழர்கள் தானே.


கூத்துப்பட்டறை தெருவில் இருக்கும் ஒரு வெள்ளை நாய் (வெள்ளக்கண்ணு என்று பெயர் வைத்திருக்கிறேன்.) முத்துசாமி சாருக்கும் எனக்கும் நல்ல நண்பன். எப்போதும் இதற்காக பொறை போடுவேன். சார் அவ்வளவு சந்தோஷப்படுவார். ”இதோட பேர் என்ன சொன்னீங்க” என்று அடிக்கடி கேட்டுக்கொள்வார். குஞ்சலி மாமி கூட பொறை தருவார்.


முத்துசாமிக்கும் பூனைகளுக்குமான பந்தம் பூர்வ ஜென்ம பந்தம். அது பற்றி தனியாக எழுதவேண்டும்.


இப்போது வெள்ளக்கண்ணு என்னைப்பார்த்தவுடன் கூடவே வருகிறது. A very interesting one. இதற்காகவே நான் பட்டறையில் பொறை எப்போதும் வைத்திருப்பேன்.

சென்ற வருடம் வரை எதிர்த்த வீட்டுக்கு பக்கத்து வீட்டில் ஒரு கறுப்பு பெண் நாய். 

ப்ளாக்கி என்று பெயர்.

 அதை முத்துசாமி சார் ஒரு நாளில் பல முறை கூப்பிடுவார். ஓடி வந்து

 அவர் காலடியில் உட்கார்ந்து விடும்.


அதற்கு எப்போதும் பொறை வீட்டில் இருக்கிறதோ இல்லையோ அப்போது என்னிடமிருந்த ஸ்கூட்டரில் இருக்கும். பொறை போடும் போது சார் முகம் மலர்வதை பார்க்க வேண்டும். 

அவ்வளவு சந்தோஷப்படுவார்.


அதன் பாய் ஃப்ரெண்ட் தான் வெள்ளக்கண்ணு.

நல்ல வெள்ளை நிறம். அதனால் வெள்ளைக்கண்ணு என்று பெயர் வைத்தேன். 


 ப்ளாக்கியை பார்க்க பட்டறைக்கே வந்து விடும்.


வெள்ளக்கண்ணு இருக்கும்போது பொறை போட்டால் ப்ளாக்கி எப்போதும் வாய் வைக்காது.“அதிதியை கவனியுங்க” என்ற தோரணையில் இருக்கும். 


வெள்ளக்கண்ணு பொறைகளை அவுக்கு, அவுக்குன்னு தின்னும்.


குஞ்சலி மாமி சொல்வார் "ராஜநாயஹம்,              உங்களுக்கு பைரவர் கடாட்சம், அருள் 

நிறைய்ய கிடைக்கும்" 


ஒரு நாள் நான் சாரோடு வீட்டுக்குள் இருக்கும் போது “ ஐயய்யோ” என்று பதறிப்போய் 

மிக சத்தமாக சொன்னார். 


ப்ளாக்கியை அதன் எஜமானரே ஆட்கள் மூலம் பிடித்து ஒரு வேனில் ஏற்ற முயற்சித்த போது பட்டறைக்குள் ஓடி வந்து விட்டது. 

சார் விடாமல் ’ஐயோ, ஐயோ’ என்று கத்தினார்.


நாயின் எஜமானரும், எஜமானியும் என்னிடம்

 “ அதற்கு தோல் வியாதி. ட்ரீட்மெண்ட் முடிந்தவுடன் மீண்டும் வீட்டுக்கு வந்து விடும்.” என்றார்கள்.

 சாரிடம் இதை சொல்லி சமாதானப்படுத்தினேன்.


அந்த நாய் வேனில் கட்டி ஏற்றப்பட்ட போது என்னை பரிதாபமாக பார்த்த பார்வை… Its eyes had the power to speak a great language.


அப்போது என்னருகில் இருந்த 

இஸ்ரேலி ஜென் மாஸ்டர் கில் ஆலன்

 “ I suspect it’s a lie. They won’t bring the dog back,

 I think” என்று சொன்னது தான் 

உண்மை என்றாயிற்று.

 ப்ளாக்கி திரும்பி வரவேயில்லை.


வெள்ளக்கண்ணு அந்த கறுத்தம்மா ப்ளாக்கி இழப்பை எப்படி தாங்கிக்கொண்டதோ தெரியவில்லை.


மறைந்து விட்ட முத்துசாமி சாரையும் தான் வெள்ளக்கண்ணுவால் கூட மறக்க முடியுமா?


தெருநாய் என்பதால் அவ்வப்போது அதன் முகத்திலும், காது, உடல் பகுதியில் காயங்கள்

காணக்கிடைக்கும். 

'யாருடா ஒன்ன அடிச்சா? 'எனும் போது பரிதாபமாக பார்க்கும். 


ஒரு நாள் ஒரு அம்மாள் கையில் குச்சியோடு 

அதை விரட்டிக் கொண்டு ஓடி வந்தாள். 


' அம்மா, பாவம்மா அடிக்காத ' என்று நான் சொன்ன போது 

' சார், சாப்பாட்ட தட்டுல இருந்து தட்டி விட்டுடுச்சு சார் ' என்றாள் அந்த அம்மாள். 


கூத்துப்பட்டறையிலிருந்து நான் வெளியேறி 

இப்போது ஒரு வருடம் ஓடி விட்டது. 


அங்கே அந்த தெரு நாய் 

வெள்ளைக்கண்ணு எப்படியிருக்கிறதோ? 


"வெள்ளைக்கண்ணு, 

உன் கனவில் நான் வருகிறேனா?"


மிலன் குந்தேரா சொன்னது போல

 “Dogs are our link to paradise.”


..

Jan 10, 2021

எஸ். எஸ். ஆர் சந்தித்த உயிராபத்துகள்


எஸ். எஸ். ஆர் நடிகராக மட்டுமின்றி

 அரசியல் வாதியாகவும் இருந்தவர்.

 நாடகநடிகராக இருந்த போதே 

அரசியல் ஈடுபாடு கொண்டிருந்தார். 


' நான் டவுசர் போட்டிருக்கும் போதே அண்ணாவின் கையைப் பிடித்துக் கொண்டு மேடையேறியவன் '

என்று பெருமையாக சொன்னவர். 


அண்ணாவின் ஐம்பத்தொன்றாவது பிறந்த நாளில் ஐம்பது பவுன் தங்கத்தோடு ஐம்பத்தொன்றாக தன் உயிர் காணிக்கை என்று எழுதிக் கொடுத்தார். 


எம். ஜி.ஆருக்கு முன்னரே எம். எல். ஏ  ஆனவர். 


அரசியல் வாழ்க்கை அவருக்கு உயிராபத்தை கொடுத்திருக்கிறது. 


அன்பகத்தில் அவர் மீதான தாக்குதல் எல்லோரும் அறிந்ததே. 


அதற்கும் சில வருடங்களுக்கு முன்பு 

எஸ். எஸ். ஆர் வீட்டிற்குள் நுழைந்து 

சிலர் தாக்குதல் நடத்திய போது 

ஒரு பத்திரிகையில் 

அவர் பேட்டி வெளியாகியிருந்தது. 


அவர் முத்து மண்டபம் படத்தில் நடிகராக தலையில் கட்டு போட்டிருக்கும் படத்தை போட்டு அன்று திரைப்படத்தில், இன்று நிஜத்தில் தாக்கப்பட்ட நிலையில் என்று 

தாக்கப்பட்டு தலையில் கட்டோடு 

உள்ள படத்தையும் போட்டிருந்தார்கள். 


எஸ். எஸ். ஆரின் அந்தப் பேட்டி விசேஷமானது. 

அதற்கு முன் தான் சந்தித்த ஆறு உயிராபத்துகள்

பற்றி சொல்லியிருந்தார். 


அதில் மூன்று நிகழ்வுகள் - 


அவர் தாயின் வயிற்றில் இருக்கும் போதே தந்தையின் சகோதரி அந்த கருவைக் கலைக்க முயன்று மருந்து கொடுத்திருக்கிறார். அதையும் மீறி கரு வளர்ந்து ராஜேந்திரன் பிறந்து விட்டார். 


அவர் நாடக கம்பெனியில் பதின் பருவத்தில் ஜானகிராமன் என்ற மற்றொரு பதின்பருவ நடிகன் ராஜேந்திரன் மீது மிகுந்த பகை, துவேஷத்துடன் இருந்திருக்கிறான். 


ஆற்றில் குளிக்கப் போன இடத்தில் இவரை அவன் பார்த்து விட்டு நீரில் அமுக்கி கொல்ல முயன்றிருக்கிறான். வாழ்வா, சாவா போராட்டத்தில் இவர் அவனை நீரில் அமுக்கியிருக்கிறார். ஜானகிராமன் செத்து விட்டான் என்று கிளம்பி நாடக கொட்டகைக்கு வந்திருக்கிறார். கொலை செய்து விட்டோமே என்ற நடுக்கத்துடன் மேடையேறினால், ஆடியன்ஸில் ஒரு போலீஸ் ஆஃபிசர். இவருக்கு பதற்றம். அந்த சீன் முடிந்தவுடன் இவர் பார்க்கிறார். 

ஜானகிராமன் இவரை கோபத்துடன் முறைத்துப்பார்த்துக்கொண்டு நின்றிருக்கிறான். 


அடுத்து இவர் தேனியில் 1962 தேர்தலில் 

தி. மு. க வேட்பாளராகப் போட்டியிட்ட போது

 ஒருவன் அரிவாளால் இவர் கழுத்தில் வெட்டப் பாய்ந்திருக்கிறான். அண்ணாவின் முரட்டுப்பிள்ளை மதுரை முத்து சட்டென்று மின்னல் வேகத்தில் தன்னுடைய மேல் துண்டால் அரிவாளைத் தடுத்து இவரை காப்பாற்றியிருக்கிறார்.


.... 


https://m.facebook.com/story.php?story_fbid=2914989692047811&id=100006104256328


https://m.facebook.com/story.php?story_fbid=2906250719588375&id=100006104256328

Jan 7, 2021

சௌந்தரம் ஸ்ரீநிவாசன் காப்பி பேஸ்ட்

 http://rprajanayahem.blogspot.com/2008/11/blog-post.html?m=0


சௌந்தரம் ஸ்ரீநிவாசன் Muktha films 

சரோஜா தேவி பற்றிய என்னுடைய மேற்கண்ட பதிவில் இருந்து பல பகுதிகளை காப்பி பேஸ்ட் செய்திருக்கிறார். அப்பட்டமாக. ஃபேஸ்புக்கில். 

கண்டனம் தெரிவிக்க வேண்டும்.


என்னுடைய 'சினிமா எனும் பூதம்'  நூலில் இடம் பெற்றுள்ள மிக பிரபலமான கட்டுரை 

'சரோஜா தேவி'

கண்டனங்களைப் பார்த்து விட்டு நீக்கியிருக்கிறார். 


https://www.facebook.com/groups/897137793992554/permalink/1256214888084841/

Jan 5, 2021

Garden and the frog pond

 Claude Monet 's Garden


Color is my daylong obsession, joy, and torment.

I perhaps owe having become a painter to flowers. 

- Claude Monet.


https://m.facebook.com/story.php?story_fbid=2966503566896423&id=100006104256328




Impressionism – Monet and Renoir, 

La Grenouillére (The Frog Pond), 1869


1. Monet 's Frog Pond painting 


2. Renoir' s Frog Pond


https://m.facebook.com/story.php?story_fbid=2965847356962044&id=100006104256328






Jan 4, 2021

Palindrome - மாலை மாற்றல்

 'Palindrome' என்பதை பள்ளியில் ஆசிரியர் சொல்லி நான் முதலில் தெரிந்து கொள்ளவில்லை. 


என் அப்பா ஒரு வாக்கியம் சொல்லி விளக்கினார். 

"Able was I ere I saw Elba"

மாவீரன் நெப்போலியன் சொன்ன வார்த்தை. 

இப்படி ஒரு  எண்ணம். எல்பா தீவை பார்த்த பின் தான் தன்னுடைய வீழ்ச்சி ஆரம்பம்.. 

அவன் ஃப்ரஞ்ச்சில் தானே சொல்லியிருப்பான். 

அதிலும் palindrome வரும்படியாக சொன்னானா? 

ஆங்கில மொழிபெயர்ப்பில் மட்டுமே palindrome?


Was it a cat I saw? 


No lemon, no melon 


Top spot 


தமிழில் palindrome என்பது 'மாலை மாற்றல்' 


ஒரு மாலை மாற்றல் எல்லோரும் அறிந்தது. 

"நீ வாத மாதவா 

தாமோக ராகமோ 

தாவாத மாதவா நீ "


... 


Picture 

Napoleon Bonaparte leaving Elba