Share

Apr 22, 2024

ஜெய்சங்கர் பாட்டு - ஜானகியின் நாயகனே ராமச்சந்திரா


ஜெய்சங்கர் பாட்டு - ‘ஜானகியின் நாயகனே ராமச்சந்திரா’

 வருடம் 1976 
"ஜானகியின் நாயகனே ராமச்சந்திரா, 
தர்மம் நிலைக்கும் என்று சொன்னவனே, 
நீ நாடாள வர வேண்டும்" 
இந்த வாலி பாடல் பாடி நடித்தவர் ஜெய்சங்கர். 

செய்தித்தாளில் இந்த பாடல் வரிகளோடு ஜெய்சங்கர் தலையில் கும்பத்தோடு ஆடி பாடுகிற ஸ்டில் போட்டு 'பணக்காரப்பெண்' பட விளம்பரம். 

மறு வருடம் 1977ல் எம். ஜி.ஆர். ஆட்சி ஆரம்பம் என்பது தெரிந்த விஷயம். 
எம். ஜி.ஆர் முதல்வரான பிறகு 
மறு வருடம் 1978ல் 
'வண்டிக்காரன் மகன்' கலைஞர் படத்திற்கு மருமகன் அமிர்தம் இயக்குநர். 'மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே' பாடல் வண்டிக்காரன் மகனில் தான். 

பின் கலைஞர் படங்கள் நெஞ்சுக்கு நீதி, ஆடு பாம்பே, 
1980ல் 'காலம் பதில் சொல்லும்'. இந்த படங்களில் ஜெய்சங்கர் தான் கதாநாயகன். 

ஜெய்சங்கரின் தாயார் மறைந்த போது கலைஞர் அவருடைய வீட்டிற்குப் போய் துக்கம் விசாரித்தார். 

'காலம் பதில் சொல்லும்' படத்திற்கு பிறகு கலைஞர் படங்களில் அமிர்தம் இயக்கத்தில் ஜெய்சங்கர் நடித்ததில்லை. 

1987ல் எம். ஜி.ஆர் மறைவு. 

1989 ல் கலைஞர் கருணாநிதி 13 வருடங்களுக்கு பிறகு ஆட்சிக்கு வந்தார். 
ஆட்சியை கைப்பற்ற நடந்த கடுமையான போராட்டம். 

கலைஞருக்கு எதிராக பெரு வியூகம். 
காங்கிரஸ் கலைஞருக்கு கை கொடுக்காமல் எதிராக தேர்தலை மூப்பனார் தலைமையில். 

உடைந்த அ.தி.மு.கவின் பகுதி எம்ஜியார் மனைவி ஜானகி தலைமையில் சிவாஜி கணேசன் தமிழக முன்னேற்ற முன்னணியும், ஜெயலலிதா அணி சேவல் சின்னத்தில். 

தி. மு. க வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய போது நக்கீரனில் பிரபஞ்சன் 'தி. மு.க. வின் வெற்றி ஐயர்களின் தோல்வி'  என்று குறிப்பிட்டு 
தி. மு. க விற்கு எதிராக பிரசாரம் செய்த ஐயர்கள் பெயர்களை ஐயர் என்ற அடையாளமிட்டு குறிப்பிட்ட பெயர்களில் நடிகர் ஜெய்சங்கரையும் கூட ஜெய்சங்கர் ஐயர் என்று குறிப்பிட்டு எழுதியிருந்தார். ஆமாம். கலைஞருக்கு எதிராக ஜெய்சங்கர் 1989ல். 

மேஜர் பெயரையும் சுந்தர்ராஜ ஐயர் என்றே எழுத்தாளர் பிரபஞ்சன் எழுதினார். 

மணிக்கொடி சிட்டி என்ற பெ.கோ. சுந்தர்ராஜன் அப்போது கோயம்புத்தூரில் பிரபஞ்சனின் அந்த நக்கீரன் கட்டுரை படித்து விட்டு என்னிடம் சொன்னார் : அடுத்த தடவை பிரபஞ்சனைப் பார்க்கும் போது.                          'என்னை தெரியுதா? நான் தான் சுந்தர்ராஜ ஐயர்'  என்று சொல்வேன் ' என்றார். 
சிட்டியின் இந்த மெல்லிய நகைச்சுவை பற்றி 1990ல் புதுவையில் பிரபஞ்சனிடம் நான் சொன்ன போது ரசித்து புன்னகைத்தார்

….

20.08.2021 பதிவு

Apr 19, 2024

The Proud will be scattered

 
மிகப் பிரபலமான சினிமா படக்கம்பெனி.
தயாரிப்பாளருடன் கதாநாயகன், இயக்குநர் உள்பட இன்னும் சில பிரபலங்கள் அமர்ந்திருக்கிறார்கள். எல்லோருமே உழைப்பால் முன்னேறியவர்கள். 

செக்யூரிட்டி வேலை கேட்டு ஆள் வந்திருக்கிறார். 

தயாரிப்பாளர்" என்ன படிச்சிருக்கிற?" 

அந்த நபர்  " மூணாங்கிளாசு  படிச்சிருக்கேன், சார்"

பிரபல இயக்குநர் அவரிடம் " உனக்கு நான் வேல தரச்சொல்றேன். ஆனா எங்கள எல்லாரையும் விட நீ தான் அதிகம் படிச்சிருக்கிறங்கற கர்வம் மட்டும்
ஒனக்கு  வரவே கூடாது "

Apr 16, 2024

R.P. ராஜநாயஹம் பற்றி உஸ்மான் அலி

 
R.P. ராஜநாயஹம் பற்றி உஸ்மான் அலி 

"எங்கள் மதுரை அமெரிக்கன் கல்லூரியின் கதாநாயகன்.. இவருடைய மாங்குயில் பாடிடும் கீதம் பாடல் இவருடைய குரலில் கேட்டு சொக்கிப்போய்த் திரிந்தோம்‌‌..அந்த பாடலை வைத்து "தருமி" வேலைகள் செய்துள்ளோம் பக்கத்தில் இருந்த மகளிர் கல்லூரிகளில்..அது அவருக்கு தெரியுமோ!!"

Apr 13, 2024

ராகுலம்

2024
ராகுலம் 

அண்ணனுக்கு இனித்த பலகாரம் தந்த தம்பி

அற்புதமான, மறக்கவே முடியாத ஆளுமை
ராகுல் காந்தி

.......

2019
ராகுலம்

ஸ்டெல்லா மாரிஸ்
Call me Rahul, not sir என்று ராகுல்காந்தி சொன்னவுடன் அந்த மாணவி வெட்கப்பட்டு நாக்கை நீட்டிய அழகு காட்சியின்பம்.
சற்று நிதானித்து “ ராகுல்” சொல்லி தன் கேள்விக்கிடையிலும்
“ ராகுல் “ என்று இழுத்து மீண்டும் கேள்வியை தொடர்ந்தது அற்புதம்.
எந்த சினிமாவிலும் காண முடியாத நேர்த்தியான காட்சி.

Pierre Bonnard's "Nude in the bath, with a dog"

Piere Bonnard's "Nude in the bath, with a dog"
பியர் பொனார் ஓவியன். 
பாரிஸ் நகர ட்ராம் வண்டியில் இருந்து இறங்கிய ஒரு பெண் மீது உடனே மையல் கொண்டு பின் தொடர்ந்து சென்றிருக்கிறான். 
அவள் பிணங்களுக்காக தயாரிக்கப்படும் மலர் வளையங்களில் முத்து மணிகளை தைப்பவள்.
நெருங்கிய பழக்கத்தில் வேலையை விட்டு விலகி பொனாருடன் இணைகிறாள். 

அவள் தன் வயது 16 என்றும், பெயர் மார்த் து மெலினி என்றும் பொய் சொல்கிறாள். முப்பது வருடங்களுக்கு பின் அவள் பெயர் வேறு என்பதும் அவள் சந்தித்த காலத்தில் பொனார் போல 20 ஒட்டிய வயதுடையவள் தான் என்பதும் தெரிய வந்தது.

மார்த் இறப்பதற்கு பதினைந்து வருடம் முன் இருவரும் ஒரு கிராமத்தில் செட்டிலாகிறார்கள். யாருடனும் ஒட்டாத தனிமை வாழ்க்கை.

தினமும் மணிக்கணக்காக மார்த் குளியல் தொட்டியிலேயே கிடந்திருக்கிறாள் மார்த்.

அவளுடைய மரணத்திற்கு ஒரு வருடம் முன் 1941 ல் இருந்து 1946 வரை கூட இந்த ஓவியத்தை பொனார் முடித்திருக்கவில்லை. அதாவது அவள் இறந்து ஐந்து வருடங்களுக்கு பின்னும் இந்த ஓவியத்தை வரைந்து கொண்டிருந்திருக்கிறான்.

 ஓவியத்தில் அவளுடைய டாஷண்ட் நாய் படுத்து பார்த்துக்கொண்டு இருக்கிறது.

கடைசியாக தீட்டிக்கொண்டிருந்த அந்த குளியலறை ஓவியங்களில் கிழவி எழுபது வயது ’மார்த்’ தை முதலில் தான் சந்தித்த போது நம்பியிருந்த பதினாறு வயது பெண்ணாகவே தான் வரைந்து கொண்டிருந்திருக்கிறான்.

ஐரிஷ் எழுத்தாளர் ஜான் பான்வில் எழுதியுள்ள
“ The Sea" நாவலில் இந்த ஓவியம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
இந்த “கடல் “ 
மான் புக்கர் பரிசு பெற்றிருக்கிறது.

Nude in the Bath, with Dog

In Nude in the Bath, with Dog, begun in 1941, a year before Marthe’s death and not completed until 1946, left end, and beneath the bath on that side, in the same force-field, the floor is pulled out of alignment too, and seems on the point of pouring away into the corner, not like she lies there, pink and mauve and gold, a goddess of the floating world, attenuated, ageless, as much dead as alive, beside her on the tiles her little brown dog, her familiar, a dachshund, I think, curled watchful on its mat or what may be a square of flaking sunlight falling from an unseen window. The narrow room that is her refuge vibrates around her, throbbing in its colours. Her feet, the left one tensed at the end of its impossibly long leg, seem to have pushed the bath out of shape and made it bulge at the a floor at all but a moving pool of dappled water. All moves here, moves in stillness, in aqueous silence. One hears a drip, a ripple a fluttering sigh. A rust-red patch in the water beside the bather’s right shoulder might be rust or old blood, even.
- John Banville in "The Sea"

....

29, September, 2018 post

https://www.facebook.com/share/p/r1vQ6WxPDYg1gRuC/?mibextid=oFDknk

R.P. ராஜநாயஹம் ட்ராட்ஸ்கி மருதுவுடன்

R.P.ராஜநாயஹம்
ஓவியர் ட்ராட்ஸ்கி மருதுவுடன். 


ஃபென்னர் ஸ்டீபன் திருமணம் மதுரையில்.

பம்பைத்தலை பெல்பாட்டம் ட்ராட்ஸ்கி.
ராஜநாயஹம் மாடர்ன் ஃபாரின் ஜீன்ஸ்.
சர்ட் இன் பண்ணி.. ஃபுல் ஹாண்ட் சர்ட் மடித்து..

அந்த வருடம் ட்ராட்ஸ்கி 'செக் போஸ்ட்' இயக்குநராக படம் ஆரம்ப விழா சென்னையில் நடந்தது. முயற்சி ஈடேறவில்லை.
 அந்த கதையை ஒட்டி பின்னர் 
வேறொரு 'பகவதிபுரம் ரயில்வே கேட்'  அன்னக்கிளி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்தது.

முந்தைய வருடம் ஹிண்டு ரங்கராஜன் "அழைத்தால் வருவேன்" ராஜநாயஹம் அசிஸ்டன்ட் டைரக்டர். படம் ரிலீஸ் ஆகி படு தோல்வி.

இந்த திருமண நிகழ்வு போது 
திலகர் மருது 'டார்லிங் டார்லிங்' பாக்யராஜ் படத்தில் அசிஸ்டன்ட் டைரக்டர். பின்னர்  தொடர்ந்து முந்தானை முடிச்சிலும் பாக்யராஜிடம் திலகர்  அஸிஸ்டன்ட்.

ஃபென்னர் ஸ்டீபன் திருமணத்திற்கு வந்திருந்த செந்தூர் இந்த நிழற்படத்தில் கண்டு பிடித்து விட்டேன். அருண் இருக்கிறான்.

பிரபலமான பொன். மாணிக்கவேல் புகைப்படத்தில் கடைசியாக ஓரத்தில் நிற்கும் செந்தூர் அருகில்.

ஸ்டீபன் கல்யாண பந்தியில் எல்லோரும் பந்தியில் சாப்பிடும் போது செந்தூர் எல்லோரையும் சுற்றிலும் பார்த்து கலகலப்பாக வாய் விட்டு சிரித்து சொன்னான் " ஒன்னும் சாதிக்கப் போறதில்ல"

Apr 12, 2024

டூப்பு

R. சுந்தர்ராஜன் இயக்கிய 
விஜய்காந்த் படங்கள் வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோயில் கிழக்காலே, தழுவாத கைகள் தாண்டி
 என் கிட்ட மோதாதே, என் ஆசை மச்சான், காந்தி பிறந்த மண்.

படப்பிடிப்பில் 
இருவரும் சாப்பிட உட்கார்ந்த போது அடுத்த படத்துக்கு விஜய் காந்த் கால்ஷீட் கேட்டிருக்கிறார். விஜய் காந்த் உதட்டை பிதுக்கி கால்ஷீட் இல்லை என மறுத்து விட்டார்.

சுந்தர்ராஜன் மூட் அவுட். ஸ்டண்ட் சீனுக்காக அந்த நேரத்தில் ஒரு சத்தம்
 "விஜய் காந்த் டூப் எங்க?"

சுந்தர்ராஜன் உடனே விஜய்காந்த்தை காட்டி 
" டேய் இவர் தான்டா டூப். அவன் நிஜமாவே மேல இருந்து குதிக்கிறவன்டா. அவனைப் போயி டூப்புங்றீங்க. குதிக்கிற மாதிரி நடிக்கிற இவரு தான்டா டூப்பு"

விஜய்காந்த் செம பதில் "அப்ப அவனயே வச்சி படத்த எடுத்துக்க"

Apr 10, 2024

புத்தம் புதிய மூன்று புத்தகங்கள்


சாய் ரமணாவின் ஜெய்ரிகி வெளியீடாக                                                                                       R.P. ராஜநாயஹம் புத்தம்புதிய நூல்கள்

1. டிசம்பர் - மார்கழி - ஜனவரி

2. தித்தித்தது

3. தூறலாய் சாரல்

.....

R.P.ராஜநாயஹம் 9வது நூல்
டிசம்பர் மார்கழி ஜனவரி

10வது நூல்
தித்தித்தது

11வது நூல்
தூறலாய் சாரல்.

ஜெய்ரிகி வெளியீடாக
5, 6, 7 வது புத்தகங்கள்
.....


பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி

ராஜநாயஹம் உறுதியான கணிப்பு : பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க அமோக வெற்றி காணும்.

பா.ஜ.க. , தே.மு.தி.க., பா.ம.க.,வுக்கெல்லாம் ஒரு இடம் கூட உறுதியாக கிடைக்கவே கிடைக்காது.

ராஜநாயஹம் உறுதியான விருப்பம் : மத்தியில் I.N.D.I.A கூட்டணி மந்திரிசபை அமைய வேண்டும் 

Apr 8, 2024

செந்தாமரை

கோபிச்செட்டிப்பாளையம் லாட்ஜ். 
காலை நேரத்தில் மேலே இருந்து
 கீழே டீக்கடையை எட்டிப்பார்த்து 
பிஸியான பிரபல நடிகர் செந்தாமரை சத்தமாக 
" டேய் ஒரு டீ குடுத்து விடுடா, டேய்"
கீழேயிருந்து டீக்கடைக்காரர் அதே தோரணையில் மிக சத்தமாக மேலே இவரைப் பார்த்து உடன் பதில் 'அடி'
 " ஸ்ட்ராங்கா வேணுமாடா, இல்ல லைட்டா டீ வேணுமாடா, ஏன்டா"

யாராயிருந்தாலும் டேய் என்று அதட்டலாக மீசையை நீவியவாறே தான் ஜபர்தஸ்தாக தன்னை காட்டிக்கொள்வார் செந்தாமரை.

"டேய் அலெக்ஸ்" என்று வாகினி ஸ்டுடியோவில் இயக்குநர் மகேந்திரனை செந்தாமரை கூப்பிட்டதை பார்த்திருக்கிறேன்.
அப்படி கூப்பிடும் போது அதை பலரும் கவனிக்கும்படி தான் 'டேய்' சொல்வார் 
மகேந்திரன் அப்போது ஜானி வரை இயக்கியிருந்த நேரம்.
மகேந்திரனுக்கு 1960களிலேயே செந்தாமரை நெருக்கமானவர். 

மகேந்திரன் எழுதிய 'இரண்டில் ஒன்று' நாடகம் செந்தாமரை காவல் துறை அதிகாரியாக நடித்து நூற்றுக் கணக்கான தடவை மேடையேற்றப்பட்டது. பின்னர் இதே நாடகம் 'தங்கப்பதக்கம்' என்று சிவாஜி கணேசன் நடிக்க மேடையேறி மிகவும் பிரபலமாகி 'தங்கப்பதக்கம்' சினிமாவானது.

 ரொம்ப தாமதமாக மெட்டியில் தான் இவருக்கும், மகேந்திரன் தன் ரத்த சொந்தம் ராஜேஷுக்கும் ( ராஜேஷின் அத்தான் மகேந்திரன். அத்தை மகன் )வாய்ப்பு கொடுத்தார்.

டேய் என்று மகேந்திரனை கூப்பிட்ட போது சரியான பட வாய்ப்பின்றி தான் செந்தாமரை இருந்தார். ஆனாலும் பந்தாவாகத் தான் டேய் சொன்னார். அவருடைய இயல்பு.

வி. எஸ். ராகவனும் செந்தாமரையும் நடித்த போலீஸ் ஸ்டேஷன் காட்சி படப்பிடிப்பு அடையார் திரைப்பட கல்லூரியில் நடைபெற்ற போது ஷூட்டிங்கில் பார்த்தேன்.
செந்தாமரை இன்ஸ்பெக்டராக மீசையை தடவிக் கொண்டு அசிஸ்டன்ட் டைரக்டரிடம் 
"டேய் பிரபாகர். என்னடா டயலாக் வாசிக்கிற. உச்சரிப்பே சரியில்ல. 
நான் தமிழ் வாத்தியார்டா" 

 வி.எஸ். ராகவனுடன் பேசினேன். ஆனால் செந்தாமரையிடம் பேசத் தோன்றவில்லை.

ராஜேஷ் "அந்த ஏழு நாட்கள்" படத்தின் மூலம் பிரமாதமான வரவேற்பு பெற்றவர். இன்று வரை அவருக்கு பிடித்த படமாக சொல்வார். 
"மெட்டி"யை தனக்கு பிடிக்காத படமாக வெளிப்படையாக என்னிடம் ராஜேஷ் சொல்கிறார்.

செந்தாமரை அசதியாக இருந்த சமயத்தில் ராஜேஷிடம் " டேய் ராஜேஷ், பாக்யராஜ் கிட்ட சொல்லுடா. படமில்லாம இருக்கேன்"

ராஜேஷ் இவருக்கு வாய்ப்பு தரச்சொல்லி
பாக்யராஜிடம் கேட்டிருக்கிறார். 

பாக்யராஜ் எவ்வளவு பேர் வாழ்க்கையில் சிறப்பான மாற்றம் ஏற்படுத்தியிருக்கிறார்.

"தூறல் நின்னு போச்சி" செந்தாமரை கண்ட பசுமையான வாய்ப்பு. அதன் பிறகு தான் பல பொன்னான வாய்ப்புகள்.

நியூமராலஜி ஜோதிடம் பார்த்து  
பெயரை எப்படி எந்த எண்ணில் மாற்ற வேண்டும் என்று பலருக்கும் சொல்லிக் கொண்டிருந்தார்.
குமுதம் இதழில் நியூமராலஜி ஜோதிடம் பற்றி தொடர் எழுதினார்.

நன்றாக நினைவிருக்கிறது.
1992ல் ராசுக்குட்டி டப்பிங் ஏ.பி.என். டப்பிங் தியேட்டரில் நடந்து கொண்டிருந்தது.

இரண்டு நடிகர்கள் மரணச் செய்தி பற்றி தகவல் கேட்க நேர்ந்தது. 
ஒருவர் செந்தாமரை. 
இன்னொவர் பழம் பெரும் நடிகர்
 எம். கே. முஸ்தபா. 
ஒரே நாளில் தான் 
இருவருமே மறைந்தார்கள்.

https://www.facebook.com/share/p/QKuGG7YVxi29c23r/?mibextid=oFDknk

Apr 5, 2024

டைரக்டர் பாக்யராஜ் இரண்டாவது அழைப்பு

05. 04. 2024 மாலை 
 
நடைப்பயிற்சியின் போது கையில் மொபைல் ஃபோன் வைத்துக் கொள்வதில்லை.
அந்தி மாலை வீட்டிற்கு வந்தவுடன் பார்த்தால் மிஸ்ட் கால். 
இயக்குநர் பாக்யராஜ் அழைப்பு.

அழைத்தேன். 
"காரணச்செறிவு" தலைப்பு விபரம் கேட்டார்.
'அன்னலட்சுமி' கட்டுரையின் முடிவில் எழுதியுள்ள
"When you are destined to be hanged, you will never be drowned" பற்றி பாக்யராஜ் விசாரித்தார்.

சில சம்பவங்கள்  சொன்னார். 
'பைபிள் சத்தியம்'  தொட்டு,
எழுத்தாளர் ரா.கி. ரங்கராஜன்
 கதை டிஸ்கஷனில்  ரெண்டு நாளா வாளாவிருந்து பாக்யராஜிடம் 'நான் கிளம்புறேன்'ன்னு ஒதுங்கிக் கொண்ட விஷயம்..

ராசுக்குட்டி சமயம் பாக்யராஜ் பேசிய சுவையான பழைய விஷயங்கள் நினைவில் இருந்தெல்லாம் சிலவற்றை கூறினேன்.

நான்கு நாட்களில் டைரக்டருடன்                     ராஜநாயஹம் இரண்டாவது உரையாடல்.


Aharathi Visit

அகராதி : "புறநகரின் கட்டட அடுக்குகளிடையே எழுத்தாளர் ஒருவரை எதிர்பார்க்கவில்லை. பார்த்தவுடன் அடையாளம் கண்டு  (புக் ஃபேர்ல நானும் என் வைஃபும் பாத்தோம். நீங்க பாக்கல) இயல்பாகவும் இனிதாகவும் பேசினார். வீட்டுக்குச் சென்றால் அவர் மனைவியும் அதே இயல்பு இனிது என்றிருக்கிறார்!
ராஜநாயஹத்திடம் அனுபவக் கிடங்குகள் உண்டு. மனிதர் அத்தனை பரிட்சார்த்த முயற்சிகளில் ஈடுபட்டிருந்திருக்கிறார். மத்திய அரசு வேலையை கால்கடுதாசியில் தூக்கிப்போட்டு வந்திருக்கிறார் என்றால் பாருங்கள்..புனைவின் பக்கம் காலெடுத்து வைத்தால் அதகளம்தான்.. பேசும்போது நாலு வரிகளுக்கு ஒரு முறை சரவணன் பிரசன்னமாகிறார். அழகான நட்பு!  சந்தோஷமாக இருக்கிறது.❤️"

Apr 4, 2024

விஸ்வேஸ்வர ராவ்


மாஸ்டர் விஸ்வேஸ்வர ராவ்
 'எங்க மாமா'வில்  துறுதுறுப்பாக, குழந்தை சில்மிஷங்களால் படம் பார்த்தவர்களை களிப்பூட்டி பரவசப்படுத்தியவர். 

"நான் தன்னந்தனி ராஜா, என் தோட்டத்தில் எத்தனை ரோஜா"

"செல்லக் கிளிகளாம் பள்ளியிலே,
செவ்வந்தி பூக்களாம் தொட்டிலிலே"

நான் ஏன் பிறந்தேன் படத்திலும் மாஸ்டர் விஸ்வேஸ்வர ராவ்.

" தம்பிக்கு ஒரு பாட்டு, அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு, வாழ்வில் நம்பிக்கை வளர்வதற்கு நான் சொல்லும் கதைப்பாட்டு"


பாலா 'பிதாமகன்' 
லைலாவின் அப்பாவாக நடித்த விஸ்வேஸ்வர ராவ். 

 கதாநாயகி லைலா பேசிய வசனம்
"லூஸாப்பா நீ" ரொம்ப பிரபலம்.


மரணச் செய்தி தெரிய வந்தது.

எங்க மாமா டைட்டிலில்.

நான் ஏன் பிறந்தேனில்.

Apr 3, 2024

பாக்யராஜ் பேசினார்

இயக்குநர் பாக்யராஜ் அவர்களிடம்
ஜெய்ரிகி பதிப்பாளர் அசோக் சாய் ரமணா அன்பளிப்பாக 
R.P. ராஜநாயஹம் நூல்கள்
தழல் வீரம், காரணச்செறிவு இரண்டின் பிரதிகளை தந்திருக்கிறார்.

Thank you so much Sai Ramana.

இரவு ஒன்பது மணி போல் இயக்குநர் பாக்யராஜ் மொபைலில் அழைத்துப் பேசினார்.
காரணச்செறிவில் படித்தது பற்றி பேசினார். பின் அட்டை படம் பார்த்தவுடன் ராஜநாயஹம் பற்றி ஞாபகம் வந்து விட்டது என்றார். 
32 வருடங்களுக்கு முன் ஐந்து மாதங்கள் ராசுக்குட்டி பட அனுபவம்.

1992 டிசம்பர் 13ம் தேதி அவரை கடைசியாக வீட்டில் சந்தித்தேன்.

இப்போது 2024 ஏப்ரல் 2ம் தேதி நீண்ட உரையாடல். நாற்பத்தைந்து நிமிடங்கள்.  ஈடுபாட்டுடன் விசாரித்து கேட்கிற குண இயல்பு அசாதாரணம்.

வீட்டிற்கு அவசியம் வரச்சொல்லி வற்புறுத்தினார். அடையாருக்கு வீடு மாற்றிய பின் கட்டாயம் வள்ளுவர் கோட்டம் ஐந்தாவது க்ராஸ் வீட்டிற்கு சந்திக்க வர வேண்டும் என்றார்.

நடிகர் ராஜேஷ் கூட ராஜநாயஹம் 'சினிமா எனும் பூதம்' வாசித்துக் கொண்டிருக்கும் போதே மொபைலில் அழைத்து பாராட்டிப் பேசினார். சில மாதங்களுக்கு முன்.
 " என்னை சந்திக்க வேண்டும் என்று உங்களுக்கு ஏன் தோன்றவில்லை" 
யாரையும் தேடிப் போய் பார்க்கும் இயல்பு இல்லை என்பதை சொல்ல வேண்டியிருந்தது. 

வருகிற பத்தாம் தேதி சரத் பாபு, ராஜேஷ் 
பற்றி சினிமா எனும் பூதம் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஷூட்டிங்.  ( இயக்குநர் நடிகர் பாக்யராஜ் பற்றி போன வருடமே சினிமா எனும் பூதம் நிகழ்ச்சியில் பேசி விட்டேன்.)
தெரிவித்த போது " உங்கள் முகமே எனக்கு தெரியாதே. உடனே சந்திக்க வாருங்கள்."

ஆர்ட் டைரக்டர் ஓவியர் JK அன்போடு கேட்டார்.
" நாம் சந்திப்போமா? "

ஏப்ரல் 15 அடையார் போனபின் 
நெறைய பார்க்க இருக்கிறது.


Apr 1, 2024

நன்னயம்

நன்னயம்

நூல்கள் நன்கொடை 

மாம்பாக்கம் SBIOA UNITY ENCLAVE
நூலகத்திற்கு
80 நூல்கள் 
R.P. ராஜநாயஹம் 
அன்பளிப்பு

ராஜநாயஹம் எழுதிய 8 புத்தகங்கள் உள்பட.

தழல் வீரம்,
காரணச்செறிவு,
கிளர்ந்தெழும் தாபம்,
அதி மதுர மதுர,

மணல் கோடுகளாய்.. , 
சினிமா எனும் பூதம் பாகம் - 2,
அரசியல் பிழைத்தோர்,
சினிமா எனும் பூதம் 

.....


The coming of honor or disgrace!

Once you have honor , the next thing you should expect is disgrace.

People say that I deserve so much honor, but  what I feel is, that I don't deserve so much disgrace.

.....

Mar 31, 2024

ராஜநாயஹம் நான்கு நூல்கள் - வழக்கறிஞர் பா. அசோக்

மதுரை பிரபல வழக்கறிஞர் பா. அசோக்:

"R.P. ராஜநாயஹம் அவர்களின் நான்கு நூல்கள்....
தழல் வீரம், 
காரணச்செறிவு,
கிளர்ந்தெழும் தாபம்,
அதி மதுர மதுர

இசை, இலக்கியம், வாசிப்பு, சினிமா, அரசியல், அனுபவம் என தனது பல்துறை சான்றாண்மையை பந்தி படைத்துள்ளார்...

ஒவ்வொரு நூலாக  விமர்சித்து எழுத வேண்டும். ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு வகை. 

இப்போது வாசித்துக் கொண்டிருக்கும் அண்ணன் Prabhu Rajadurai யின் நூல் " நும்மினும் சிறந்தது நுவ்வை" யின் ஒரு கட்டுரையில் சேக்ஸ்பியரின் வரிகளை ராஜநாயஹம் சார் எடுத்தாண்ட விதத்தை சிலாகித்து சொல்லியிருந்தார்...

அது ஏன் ராஜநாயஹம் என "ஹம் " என்றால் கவிஞர் பிரமிள் சூட்டியது...

தனது ஆசான்கள் மீது 
அத்தனை மதிப்பு.. 

இன்றும் மாறவில்லை...

அசோகமித்திரனாகட்டும்,லாசரா,  கி.ரா.  பிரமிள், தி.ஜானகிராமன்,  என இன்னும் பலரின் எழுத்துக்களை ஆதியோடுயந்தமாய் அறிந்தவர்...

கலைஞர் டிவியில் தொலைக்காட்சியில் தொடர்ந்து 120 வாரங்கள்
 " சினிமா எனும் பூதம் " 
என்ற தலைப்பில் ஞாயிறு தோறும் பேசுகிறார். 

எதை பற்றியும் பேசினாலும் 
யாரைப்பற்றி பேசினாலும் 
கையில் ஒரு குறிப்பு இராது...

மடமடவென அருவி போல செய்திகள் கொட்டும். 

இவரது தகவல்களை களவாடி உயர்ந்தோர் பலருண்டு...

ஆனாலும் வற்றா அறிவுக்கேணி. 

எத்தனையோ உயரங்களுக்கு 
போக வேண்டியவர்...

காலம் ஒரு நாள் இந்த பிதாமகனை 
உயர்த்திப்பிடிக்கும்...

அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்கள். தவறவிடாதீர்கள்.

Versatility.... 

thy synonym is 
R.P. Rajanayahem.."

Mar 30, 2024

தி. ஜா. 'அன்ன விசாரம்' சிறுகதை


ரயில் பிரயாணம் வருகிற 
தி. ஜானகிராமன் கதைகள் என்றால் 
'சிலிர்ப்பு',
 'மறதிக்கு... '
' அக்பர் சாஸ்திரி' எல்லாம் கண் முன் வந்து நிற்கிறது. 

ரயில் பிரயாணத்தில் நடக்கிற மற்றொரு                 தி. ஜா. கதை 'அன்ன விசாரம்’ அட்டகாசம். 'கச்சேரி' தொகுப்பில் உள்ள கதை. 

எழுபது வருடங்களுக்கு முன்பு எழுதியிருக்கிறார். 

எழுபத்து நான்கு வயது கிழவர் சரியான glutton. 

மனிதன் தூங்குகிறதும், சாப்பிடுகிறதும் கோரமான காட்சிகள். சாப்பிடுகிற போது மன்மதனை, ரதியை கூட பார்க்க விரும்ப முடியாது. 

ஆனால் கிழவரின் தோரணை, அடுக்கடுக்காக பிரமிக்க அடித்த சம்பிரமம். 

' கறந்த படிக்கே காய்ச்சின பாலு. தண்ணி உடாம காச்சினா, மாட்டுக் காம்பு வெடிச்சிப் பூடும்னு பால்ல ஒரு பொட்டு தண்ணீரைத் தெளிச்சு இருப்பாங்க. '

' தயிருன்னா கத்தி போட்டு அறுக்கணும், தெரிஞ்சதுங்களா?'

'உப்புமா, தோசை, பொங்கல், வடை எண்ணெய் வாடையே வீசப்படாது. எல்லாம் நெய்.’

‘கத்திரிக்காயும், வாழைக்காயும் சேர்த்து கொத்ஸு பண்ணுவாங்களே, அதுக்கு ஈடாச் சாப்பிட்டதே கிடையாது’

‘ராத்திரி சாப்பாடு ஒரு சாம்பார், கறி, கூட்டு, ரசம், பப்படம், வறுவல். படுக்கறப்ப பசும்பால் சுண்டச் சுண்டக் காய்ச்சி, ஜாதிக்காயும், குங்குமப்பூவுமா மணத்துக்கிட்டு மஞ்ச மஞ்சேருன்னிட்டு, அமிர்தமாப் பொங்கும். '

' மைசூர் பாகு, ஜிலேபி, கோதுமை அல்வா, தக்காளிப் பழ பஜ்ஜி, காபி எல்லாம் முரட்டுத்தனமாத்தான் இருக்கும். நெய்யைக் கக்கும் '

வெங்கடபதி வீட்டில் தான் சாப்பிட்ட கதையை விலாவாரியாக பேசும்
 அந்த கிழப் பயணி. 

ரயில் பயணத்திலும் கிடைப்பதையெல்லாம் சாப்பிட்டு வெளுத்து விரியக்கட்டி விட்டு அந்தப் பெரியவர் சொல்கிறார் : “அஞ்சாறு மாசமா வயிறு மந்தமா இருந்து வருது. ருசிக்க எதையும் சாப்பிட முடியல. அன்னத் திரேஷம் மாதிரியா இருக்கு"

DINNER! MUSIC!
விருந்து என்றால் இதற்கு மேல் கிடையாது. Dinner. இதற்கு மேல் வித விதமாக பரிமாற முடியாது. Dinner Items. இதற்கு மேல் எப்படி சாப்பிட முடியும். 
அப்படி ஒரு விருந்து. 
பர் லாகர் க்விஸ்ட் எழுதிய "THE DWARF" நாவலில். 
இந்த ஸ்வீடிஷ் நாவலை தி.ஜானகிராமன் ஆங்கிலம் வழி தமிழில்
' குள்ளன் ' என்ற பெயரில் மொழிபெயர்த்திருந்தார்.

Music with dinner is an insult
 both to the cook and the violinist.
- G. K. Chesterton 
Dinner. Dinner Items. 
Music. 

விருந்து, இசை இரண்டையும் ஜேம்ஸ் ஜாய்ஸ் மிக அழகாக தன்னுடைய 'The Dead' கதையில் நேர்த்தியாக ஓவியம் போல வரைந்திருப்பார். உணவு, இசை இரண்டும் சுவையில் தோய்ந்தது. 

தி.ஜானகிராமன் இசைக்காக "மோகமுள்" மட்டுமல்ல சமையலை கௌரவித்து "நளபாகம்" நாவலும் எழுதினார்.

..‌.
...

Lion R.P. RAJANAYAHEM

திருப்பூரில் 2009 - 2010
லயன்ஸ் கிளப் மெம்பராக.

(உத்தியோகம் -  Assistant merchandiser in Tubeknit fashions. பெருமையின்றி சிறுமையில் அரசன்.)

பால்கி திருப்பூரில் மறக்கவே முடியாத அற்புதமான மனிதர்.
நெறய்ய மலையாளம் கலந்த அவருடைய அழகான, சுவையான மழலைத் தமிழ் இப்போதும் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

பாலகிருஷ்ணன் லயன்ஸ் கிளப் ஆஃப் டாலர் சிட்டியின் பிரசிடெண்ட். 

ராஜநாயஹம் தேவை என இந்த லயன்ஸ் க்ளப்பில் மெம்பராக்கியவர் பால்கி தான்.

Mar 29, 2024

அல்லேலூயா பொம்பளயோட ரீலு மாதிரியே

இன்னாது இது? 
மண்டயில மரம் மொளக்கிது..

கொஞ்ச நாள் முன்ன அல்லேலூயா பொம்பளயோட  ரீலு மாதிரியே..
அதே அதே

ஆனந்தன் அம்பானியான் கதயிலயும் 
வீடு வர்து, காரு வர்து.

எல்லாம் அமஞ்சிகர்து தான் வாச்சிகர்து தான்.


https://www.facebook.com/share/p/g5nc6BJYzjq6rvdP/?mibextid=oFDknk