Share

Sep 30, 2014

அம்மு.. கோபம்!



எஸ்.ஏ.ஜி. சாமி  ஒரு துணை நடிகர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சுந்தர பாண்டியம் என்ற கிராமத்திலிருந்து சென்னைக்குப் போய் நாடகம் நடித்து சினிமா துணை நடிகராக  நூற்றுக்கணக்கான படங்களில்  நடித்தவர். டாக்டராக, போலீஸ் இன்ஸ்பெக்டராக 1950,1960,1970களில் பல படங்களில் தலை காட்டியவர்.

இவர் சொன்ன சம்பவம்.



'அன்னமிட்ட கை ' பட ஷூட்டிங். ஸ்டுடியோவில் சின்னவர் வந்து விட்டார். சின்னவர் என்றால் எம்.ஜி.ஆர்.
டைரக்டர்  எம்.கிருஷ்ணன் நாயர் பதற்றத்தில் இருக்கிறார்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எஸ்.ஏ.ஜி. சாமி காம்பினேசனில் எடுக்கப்பட வேண்டிய காட்சி. ஜெயலலிதா வரவேண்டும். எம்.ஜி.ஆர் மேக்கப் முடித்து ரெடியாக இருக்கிறார்.  நடிகர் எஸ்.ஏ.ஜி.சாமியும் ரெடி என்று சொல்லத்தேவையில்லை. கதாநாயகிக்காக வெயிட்டிங். பொறுமையாக கதாநாயகன்!

ரொம்ப நேரக் காத்திருப்பு. ஜெயலலிதா வருகிறார். எம்.ஜி.ஆர், கிருஷ்ணன் இருவரையும் பார்த்தவுடன் தன் கைப்பையை ஒரு சோபாவில் வீசியெறிகிறார்.
டைரக்டர் கிருஷ்ணனைப் பார்த்து எம்.ஜி.ஆர் வாயில் கை வைத்து சொல்கிறார்:  "அம்மு.. கோபம்!" 

மேக்கப் முடித்து ஜெயலலிதா செட்டிற்கு வருகிறார்.
டைரக்டர் எம்.கிருஷ்ணன் மெதுவாக காட்சியை விளக்கிச் சொல்ல ஆரம்பிக்கிறார்.
" கேமரா ஸ்டார்ட் ஆனவுன்னே சின்னவர் வர்றாரும்மா.. அப்புறம் சாமி என்டர் ஆகிறார். அப்புறம் நீங்க வர்றீங்க.. வந்து...."
உடனே ஜெயலலிதா சீறி வெடிக்கிறார்: அதெல்லாம் வேண்டாம். முதல்ல நான் வர்றேன். அப்புறம் உங்க சின்னவர் வரட்டும். அப்புறம் சாமி வரட்டும்"

எம்.ஜி.ஆர் வாயில் கை வைத்து  டைரக்டரைப் பார்த்து புன்னகையுடன் சைகையில்  சொல்கிறார்.
"அம்மு கோபமா வந்துருக்கு!"


........................................

Sep 28, 2014

Stay for the sign

                                                                                                                   



முதலாம் சார்லஸ் மன்னனுக்கு பகீரங்கமாக மக்கள் முன் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

 பாராளுமன்றத்திற்கும் சார்லஸ் மன்னனுக்கும் நடந்த 'இங்கிலிஷ் சிவில் வார்'. அரச விசுவாச படைக்கும் ஆலிவர் கிராம்வெல் தலைமையிலான படைக்கும் நடந்த யுத்தம்.

நல்ல குளிர் காலம் அது.
குளிர் என்றால் வாட்டுகிற குளிர்.
தனக்கு நிறைவேற்றப்படபோகும் மரண தண்டனையின் போது தான் பயந்து நடுங்கியதாக ஒரு பிம்பம் மக்கள் மனதில் ஏற்பட்டு விடக்கூடாது. 
மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட போது அரசன் சார்லஸ்அரண்டு மிரண்டு போயிருந்தான் என மக்கள் பேசி விடக்கூடாது.குளிரைத் தாங்கும் படியாக இரட்டை ஆடைகளை அணிந்து கொண்டு தான் கொலைக்களத்திற்கு சார்லஸ் கிளம்பி வந்திருந்தான்.
லண்டன் ஒயிட் ஹாலில் இருந்த மரண மேடை.
பிஷப் கையில் வைத்திருந்த தன் தொப்பியைக் கேட்டு வாங்கி அணியும் போது கொலையாளியைப் பார்த்து " என் தலை முடி உனக்கு தொந்தரவாக இருக்குமா?" என்று கேட்கிறான் மன்னன் முதலாம் சார்லஸ். கொலையாளி யின் பதில்- 'தலைமுடி மொத்தமும் தொப்பிக்குள் அடங்கி விட்டால் தலையை த் துண்டிக்க வசதியாக இருக்கும்.'
தலைமுடி முழுவதும் தொப்பிக்குள் செலுத்தும் முயற்சியில் சார்லஸிற்கு பிஷப், கொலையாளி இருவரும் உதவி செய்கிறார்கள்.

மன்னன் நிதானமாக 'I go from a corruptible to an incorruptible crown; where no disturbance can be, no disturbance in the world.'
பிஷப் பதில் - 'You are exchanged from a temporal to an eternal crown, - a good exchange.' 






தலையைத் துண்டிக்கப் போகும் கோடரியை வைத்திருக்கும் மரண தண்டனை நிறைவேற்ற இருக்கும் கொலையாளியிடம் சார்லஸ்"'You must set it fast.''



"தலையை பீடத்தில் வைத்த பின் நான் பிரார்த்தனை செய்து விட்டு என் கைகளை விரித்து உயர்த்துவேன். அது தான் உனக்கு சிக்னல்.Stay for the sign." 





கைகளை விரித்துக் காட்டிய அரசன் முதலாம் சார்லஸ் தலை கண நேரத்தில் துண்டிக்கப்பட்டு உடனே எல்லோரும் பார்க்கும்படியாக ரத்தம் சொட்ட சொட்ட அந்தத் தலை உயர்த்திக் காட்டப்படுகிறது.


........................................................................................