Share

Mar 24, 2020

R.P.ராஜநாயஹத்திற்கு கி.ராஜநாராயணன் கடிதம்


புதுவையில் நான் இருந்த போது லாஸ் பேட்டில் இருந்து
கி. ராஜநாராயணன் எழுதிய சுவாரசிய கடிதம்.
லாஸ் பேட் 24.12.89
பிரியமுள்ள ராஜநாயஹம்,
நலமாகுக.
அருமையாய் வடிவமைக்கப்பட்ட
உங்கள் லெட்டர் ஹெட் கடிதம் வந்தது. மகிழ்ச்சி.
எனக்கும் ஒரு வேலை போட்டுக் கொடுங்கள்; நானும் வந்துருதேன்!
யுனிவர்சிட்டிக்காரன் கொடுக்கிற 4000/த்தை விட உங்கள் 400 / எனக்குப் பெரிசு.
உவர்மண் சுமக்கிற கழுதையாய் இருப்பதை விட
பூவைச்சுமக்கிற கழுதையாய் இருப்பது மேலல்லவா!
கோணங்கி என்கிற பொன் வண்டு
உங்கள் தீப்பெட்டிக்குள் அடங்கி
நீங்கள் போடுகிற
கருவை இலையைத் தின்று கொண்டு
முட்டையிடுமா என்று தெரியவில்லை.
செய்து பாருங்கள்;
எல்லாக் குழந்தைகளும் பிரியப்படுகிற விளையாட்டு தான் இதுவும்.
உங்கள் குட்டி ராஜநாயஹம் எப்படி இருக்கிறான்?
உள் வாங்கிய சிரித்த நாணத்துடன், எனது நீட்டிய கையைப் பற்றிக் குலுக்கினான் பயல்.
எமப்பயல்!
அப்பாவுக்கு எனது அன்பைத் தெரிவியுங்கள்.
உங்கள் வீட்டம்மாவுக்கு எங்கள் பிரீதியையும் வரத்தையும் தெரியப்படுத்துங்கள்.
இன்னொரு தடவையும் வவ்வா மீன் சாப்பிடனும்.
புத்தாண்டு வாழ்த்துக்களுடன்
இராஜநாராயணன்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.