Share

Sep 26, 2019

Don't cry



நேற்று இங்கே என் ஸ்டேட்டஸில் 1992ல் இந்திரா பார்த்தசாரதியின் மனைவி இந்திரா மாமி மறைவு செய்தியை  ஹிண்டு ஆபிச்சுவரியில் பார்த்து தான் தெரிந்து கொள்ள முடிந்தது என்பதை எந்த நேரத்தில் எழுதினேனோ, சில மணி நேரத்தில் கி. ரா வின் மனைவி கணவதியம்மாவின் மரணம் நிகழ்ந்திருக்கிறது.


கி. ரா, இ. பா இருவருடனும் புதுவையில் நான் பழகி, நட்பு சீராட்டிய காலங்கள் அபூர்வ வாய்ப்பு.
இந்திரா பார்த்தசாரதியையாவது அதன் பிறகு சென்னையில் இரு முறை வெவ்வேறு சமயங்களில் சந்தித்திருக்கிறேன். அதுவும் இப்போது நான் சென்னையில் கூத்துப்பட்டறையில் வேலை பார்க்கும் இந்த நான்கு வருடங்களில் இ. பா. வை பார்த்ததில்லை.
கி. ரா. வை புதுவையை விட்டு வந்த பின்னர் இந்த இருபத்தொன்பது வருடங்களாக சந்தித்ததேயில்லை.

கடிதங்கள் பரிமாற்றம் இருந்தது. அதன் பின் போன். மணிக்கணக்கில் பேசிக்கொண்டே இருந்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் கணவதியம்மாவும் குரல் கொடுக்க தவறியதேயில்லை:'நல்லாயிருக்கீங்களா ராஜநாயஹம், எப்ப இங்க வருவீங்க, எவ்வளவு காலமாச்சி'

கதை சொல்லியில் என்னைப்பற்றி கிரா எழுதியது பதினான்கு வருடங்களுக்கு பிறகு. பழைய நட்பை அசை போட்டு எழுதியிருக்கிறார்.
நான் "ஆன வயதிற்களவில்லை எனினும் தெளிவே வடிவாம் கி. ரா" கட்டுரை எழுதியது அவரை சந்தித்து 17 ஆண்டுகள் ஓடி விட்ட போது 2007ல்.

கணவதியம்மாவின் மரணச்செய்தி கேட்டவுடன், 97 வயதாகி விட்ட கி. ரா. விடம் 'துஷ்டி' விசாரிக்க அட்டெண்டன்ஸ் கொடுக்க பிரபலங்களில் இருந்து துர்பல பிரகிருதிகள் வரை நெருக்கியடித்து படுத்தியெடுப்பார்களே என்ற நிதர்சனம் கவலையளிக்கிறது.

கல்யாணம், இழவு எல்லாமே ரொம்ப எந்திரத்தனமான சம்பிரதாயங்கள்.

நிறைய வேஷ விஷயங்கள் நிரம்பியது.

எவ்வளவோ நூற்றுக்கணக்கான கல்யாணங்களுக்கு போய், கிரகப்பிவேசங்களுக்கு, பிறந்த நாள் வைபவங்களுக்கு போனாலும் சரி போகாவிட்டாலும் கூட அளவுக்கதிகமாக மொய் செய்த நான் சென்ற ஆண்டு என் மகன்களின் திருமணங்கள் நடந்த போது ஒருவருக்குமே அழைப்பிதழ் தரவேயில்லை என்பதை அறிய வந்த போது கி. ரா. ரொம்பவே மனதார பாராட்டி மகிழ்ச்சி தெரிவித்தார்.

எவ்வளவோ எழவுகளுக்கு எடுத்தேறி செலவழித்திருக்கிறேன்.

என் தாய், தந்தை சமாதிகளை நான் பார்த்ததில்லை. மதுரையில் எங்கே இருக்கின்றன என்பதும் இன்று வரை தெரியாது.

2013ல் என் தகப்பனார் இறந்த நேரத்தில்   ஏழு மாத  காலமாக வேலையில்லாமல் இருந்தேன்.
கண்ணில் ஒரு சொட்டு கண்ணீர் வரவேயில்லை.
சாவுக்கு போன நான் ஈமக்கிரியைகளில் கலந்து கொள்ளவில்லை.

2014லில் ஆறு மாதம் வேலையில்லாமல், என் அம்மா இறந்த அன்று தான் புதிய வேலைக்கு சேர்ந்திருந்தேன்.
'அம்மா எறந்துட்டாங்க. 'அலை பேசி செய்தி. அம்மாவே போன பிறகு யார் முகத்தை போய் பார்க்க வேண்டும்?

வகுப்புக்கு போய் பாடம் நடத்தினேன்.

குழந்தைகள் முன் அம்மா இறந்த அன்றும் கூட பாடினேன்

When I was just a child I asked my mama
What will I be?
Will I be a doctor?
Will I be an actor?

This what she said to me.
'Che Sara, sara
What ever will be,
Future is not ours to see
Che Sara, sara

அடக்க முடியாமல் பீறிட்டு கலங்கியழுத போது குழந்தைகள் 'Why do you Cry sir?' என குழம்பிக்கேட்ட போது நான் 'I have no father and mother'

All the children consoled me : 'Don't cry sir. We are all with you. 
Don't cry sir '

....






No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.