Share

Sep 27, 2019

ராஜநாயஹம் பற்றி சாரு நிவேதிதா இன்று


ராஜநாயஹம் பற்றி சாரு நிவேதிதா
இன்று எழுதியுள்ள ஒரு கடிதம்

அன்புள்ள ராம்ஜி, காயத்ரி,

என்னுடைய நீண்ட கால நண்பர் R.P. ராஜநாயஹம் முகநூலில் எழுதி வரும் குறிப்புகள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளிவர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.  இதை நான் உங்களிடம் தனிப்பட்ட முறையில் கூட சொல்லியிருக்க முடியும்.  ஆனால் அவரைப் பற்றி தமிழ்ச் சமூகத்துக்குத் தெரிய வேண்டும் என்று நினைக்கிறேன்.  நான் அவரைப் பற்றி பலமுறை எழுதியிருக்கிறேன்.  வீழ்ந்தாலும் லியர் மன்னன் லியர் மன்னனே என்ற என்னுடைய ஒரு கட்டுரை போதும், அவருடைய பெருமையைச் சொல்ல.  அவர் மாதிரி ஆட்கள் ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருக்க வேண்டியவர்கள்.

எனக்கு ஷேக்ஸ்பியரில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அவருக்குத்தான் போன் போட்டுக் கேட்பேன்.  நம்ப முடியாத அளவுக்கு ஞாபக சக்தியும் ஞானமும் கொண்டவர்.  அறிவுக் கடல் என்றே சொல்லலாம்.  அவர் சொல்லும் தகவல்களைக் கேட்டால் அவர் வயது 105 இருக்கும் என்று தோன்றும்.  ஆனால் வயது என்னவோ 55 தான்.  அதற்குக் குறைவோ என்னவோ?

லௌகீகம் என்றால் என்னவென்றே தெரியாது எனக்கு என்று நினைத்துக் கொள்வேன்.  ஆனால் ராஜநாயஹத்தைப் பார்த்தால் நானெல்லாம் லௌகீகத்தில் ஜாம்பவான் என்றே சொல்லிக் கொள்ளலாம்.  லௌகீகத்தில் ஒரு மண்ணும் தெரியாது.  பெரும் செல்வந்தராக வாழ்ந்தவர்.  வருகிறவன் போகிறவனுக்கெல்லாம் பணத்தை வாரி இறைத்து விட்டு இப்போது அந்தக் கால பாரதியைப் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.  இரண்டு பையன்களுக்கும் திருமணம் செய்து விட்டார் என்பதுதான் அவரது லௌகீக சாதனை.  திருப்பூரில் அவர் வசித்த போது அவரைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே சென்னையிலிருந்து திருப்பூர் போய் பார்த்தேன்.

ராஜநாயஹம் ஒரு நடமாடும் நூலகம்.  அவரிடம் உள்ள தகவல்கள் அனைத்தும் புத்தகமாகத் தொகுக்கப்பட வேண்டும்.  எழுதுங்கள் எழுதுங்கள் என்று அவரைப் பார்க்கும் போதெல்லாம் நச்சரித்துக் கொண்டிருக்கும் நண்பன் நான் என்பதால் இதையெல்லாம் சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது என்று நம்புகிறேன்.  மற்ற பதிப்பகங்கள் அவரை அணுகுவதற்குள் அவரை அணுகி காண்ட்ராக்ட் போட்டு விடுங்கள் என்று உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.  அவருக்கு லௌகீகமே தெரியாது.  தாண்டவராயன் என்பவர் இப்போது இந்த க்ஷணம் ஒரு பதிப்பகம் ஆரம்பித்து உங்கள் எழுத்தையெல்லாம் எனக்குக் கொடுங்கள் என்று பேப்பரை நீட்டினால் கையெழுத்துப் போட்டுக் கொடுத்து விடுவார்.  டாக்ஸி செலவுக்கும் பணம் கொடுத்து அனுப்புவார்.  அந்த மாதிரி ஆள்.  அவரை அப்படி விட்டு விடாதீர்கள்.  அவர் தமிழின் சொத்து.  மேலும் ஒரு விபரம், தி.ஜானகிராமனை நான் ஒரு refined பாலகுமாரன் என்று முட்டாள்தனமாகத் திட்டிக் கொண்டிருந்த காலகட்டத்தில் பொறுமையாக உங்கள் வாழ்நாளில் ஒருநாள் தி.ஜா.வை கடவுள் ஸ்தானத்தில் வைத்துக் கொண்டாடப் போகிறீர்கள்; அதை நான் பார்க்கத்தான் போகிறேன் என்று முப்பது ஆண்டுகளாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.  இப்போது அவர் வாக்கு பலித்து விட்டது.

முகநூலில் இன்றைய அவரது குறிப்பைப் பாருங்கள்.

https://www.facebook.com/rprajanayahem/posts/2525200787693372

....

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.