Share

Aug 29, 2012

கரிச்சான் குஞ்சு என்ற அதிமானிடன்


Oct 2, 2008


 சாரு நிவேதிதா வின் முதல் நாவல் ’எக்ஸிஸ்டென்சியலிசமும் ஃபேன்சி பனியனும்’விமர்சனத்தில்(’மேலும்’ பத்திரிக்கை மே மாதம், 1990) நான் குறிப்பிட்டேன் .

"கு.ப .ரா எட்டடி பாய்ந்தால் கரிச்சான் குஞ்சு தன் 'பசித்த மானிடம் ' நாவலில் பதினாறடி பாய்ந்து விட்டார் ."
முப்பது வருடங்களுக்கு முன் மீனாக்ஷி நிலையம் வெளியிட்ட நாவல் .
தி.ஜா தான் மீனாக்ஷி நிலையம் செல்லப்பனிடம் இந்த நாவலை பிரசுரிக்க சொல்லி வற்புறுத்தியிருக்கிறார் . நாவலின் தனி தன்மைக்காக மட்டுமல்ல . கரிச்சான் குஞ்சு வின் மகளுக்கு அப்போது கல்யாண செலவுக்கு பணம் தேவை பட்டது . செல்லப்பன் வியாபார நோக்குடனும் , இதை வெளியிடுவதினால் பின்னால் கலாச்சார காவலர்களின் அச்சுறுத்தல் களுக்காக வும் தயங்கியிருக்கிறார் . தி .ஜா வின் வற்புறுத்தல் தான் 'பசித்த மானிடம்' நூலை பதிப்பிக்க காரணம் ஆகியிருக்கிறது . என்னிடம் செல்லப்பன் இந்த விஷயத்தை நாவல் வெளியான மூன்றாம் ஆண்டு நான் நாவலை வாங்கிய போது தெரிவித்தார் . கலாச்சார காவலர்களின் பார்வைக்கு இது தப்பி விட்டதற்கு காரணமே இந்த நாவல் வெளியான விஷயமே அவர்கள் கவனத்திற்கு செல்ல வில்லை என்பது தான் . (அரசியல் கட்சிகாரர்களுக்கும் அப்போதெல்லாம் இப்போது போலவே படிக்கிற வேலையெல்லாம் கிடையாது .)அதன் காரணமாகவே விற்பனையும் படு மந்தம் . செல்லப்பன் என்னிடம் பேசும்போது பசித்த மானிடம் நாவல் பிரசுரம் நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டது என்பதை பற்றி தான் ஆதங்கமாக பேசினார் .
இலக்கிய பத்திரிகைகள் கூட இந்த நாவலை அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை . க . நா . சு . சுந்தர ராம சாமி , வெங்கட் சுவாமிநாதன் , பிரமிள் போன்றோர் கூட பசித்த மானிடம் பற்றி பிரமாதமாக பேசவில்லை .
ஒரு மிக சிறந்த நாவலின் கதி பாருங்கள் . கோவை ஞானி , அ .மார்க்ஸ் கொஞ்சம் தாமதமாக கரிச்சான் குஞ்சு பற்றி கட்டுரை எழுதி பிற கட்டுரைகளுடன் புத்தகங்களாக வந்தன .
ஆதவன் தான் கரிச்சான் குஞ்சு ஆளுமை பற்றி மிக அழகாக சொன்னார்
' அறிவை மறைத்து வைத்து இயல்பாய் இருப்பது சிரமமான காரியம் . அது கரிச்சான் குஞ்சுவுக்கு சாத்தியம் ஆகியிருக்கிறது '
முன்பெல்லாம் மறு வாசிப்பு செய்கிற நாட்களில் ஒவ்வொரு எழுத்தாளருக்கும் மூன்று மாதம் ஒதுக்குவேன் . அப்படி மறு வாசிப்புக்காக கரிச்சான் குஞ்சுவுக்கு ஒதுக்கி ' பசித்த மானிடம் ' நாவல் மற்றும் அவரது சிறுகதைகள் மறு வாசிப்பு செய்த போது அவரை கண்டடைந்ததற்காக மிகவும் சந்தோசம் அடைந்திருக்கிறேன் .
தேவர்களுக்கு வாகனங்கள் !
சனீஸ்வரனுக்கு வாகனம் காகம் . பிள்ளையாருக்கு எலி . முருகனுக்கு வாகனம் மயில் . எமனுக்கு வாகனம் எருமை .
இப்படி குபேரனுக்கு வாகனம் என்ன தெரியுமா ? மனிதன் !
கரிச்சான் குஞ்சு ஒரு சிறுகதையில் சொல்வார் " பேஷ் பேஷ் . என்ன அழகாக வேதத்தில் எழுதி இருக்கிறான் . குபேரனுக்கு வாகனம் மனிதன் . பணக்காரன் மனிதர்கள் மீது தானே சவாரி செய்கிறான் . அதிலும் ஏழை எளியவர்கள் பணம் படைத்தவனுக்கு வாகனம் என்பது சரிதானே . பேஷ் பேஷ் ."
ஏழை எளியவர்கள் தானே பணம் படைத்த குபேரனுக்கு வாகனம் .
இப்போது என்னுடைய முந்தைய பதிவை -' விவசாயி - உழவும் வாழ்வும்' மீண்டும் ஒரு முறை படித்து பாருங்கள் .



...........................

Sep 1, 2009


நாயைக்கறந்தா நாட்டுக்கு பால் தருவது!?
கரிச்சான் குஞ்சு எழுதிய "பசித்த மானிடம்" நாவலில்
திருச்சி கோட்டை ரயில்வே ஸ்டேசனில் தனியிடம் பார்த்து அமர்ந்து கணேசன் பணத்தை தன் பையில் இருந்து எடுக்க முயற்சி செய்யும்போது போலீஸ் பசுபதி பார்க்கிறார் . கணேசன் குஷ்டரோகி .
" இந்த ஊருக்கு நான் புதியவன் . பிச்சையெடுத்து சாப்பிட்டு பிச்சைக்காரர்களுடன் கலந்து வாழ முடிவு செய்திருக்கிறேன் " என்கிறான் .
பசுபதி தீவிர ஆன்மீகவாதி ." எவ்வளவு பழுத்த ஞானம் இருந்தால் இந்த முடிவுக்கு வர முடியும் !" புல்லரித்து ,செடியரித்து, மரமரித்து சிலிர்த்துப் போகிறார் .
கணேசன் உள்ளதை உள்ளபடி சொல்கிறான் "அப்படி கிடையாது நான் ஒரு அழுகல் , எச்சிக்கலை நாய் . மலத்தில் மகிழும் பன்றி."
பசுபதி விடுவதாய் இல்லை . மேலும் சிலிர்த்து " நாய் போல் பன்றி போல் , நாணம் இல்லா நக்கனுமாய் , பேய் போல் ,பித்தனைப்போல் பிரம்மவித்து தோன்றிடுவான் !" ஒரு செய்யுள் எடுத்து விட்டு கணேசனை வழிபடுகிறார் .
கணேசன் " நான் உதவாக்கரை . காசுபணம் சுகபோகம் கண்டவன் .பண்ணின பாவத்தால் அழுகிச்சொட்டுகிறது உடம்பு .நான் ரொம்ப நல்லாயிருப்பேன் முன்னெல்லாம் . அந்த உடம்பு செத்துப்போயிடுச்சி ; இது புது உடம்பு " யதார்த்தமாய் இப்படி சொல்வதையும் பசுபதி தத்துவார்த்தமாக எடுத்துக்கொண்டு "கொஞ்சமா பேசினீங்க . ஆனால் நிறைய சொல்லிட்டீங்க . அதிலேயும் ரத்தினச்சுருக்கமா , பழைய உடம்பு செத்துப்போயிடுச்சின்னு சொன்னீங்களே ! இதுவரை எனக்கு புரியாத ஞானங்கள் எல்லாம் புரியுதுங்க !" வியந்து கணேசனை சித்தன் என்றே நம்புகிறார் .
பசுபதி பின்னால் போலீஸ் வேலையிலிருந்து ரிட்டயர் ஆனதும் சேத்ராடனங்களுக்கு சாமி கும்பிட கிளம்பும் முன் " சாமி ! நல்லா பாருங்க என்னை . கண்ணால் வரும் ஞானம் பொன்னாலும் வராது .உங்க கண்பார்வை பட்டதால் நீங்க காட்டிய எல்லா தத்துவங்களும் எனக்கு நல்லா புரியது "
இல்லாத ஒன்றை இருப்பதாக பாவித்து சாதாரண சராசரி அல்லது சராசரிக்கும் கீழானவர்களை மகான் ஆககாட்டும் வறட்டு ஆன்மீகத்தை கரிச்சான் குஞ்சு சத்தமில்லாமல் ,கோஷமே இல்லாமல் பசித்த மானிடத்தில் மட்டுமல்ல
"குச மேட்டு சோதி " சிறுகதையிலும் காட்டுகிறார் .
கோவில் கோபுரத்தடியில் விவாதம் செய்யும் நண்பர்களில் ஒருவன் சொல்கிறான் " இந்த நவீன காலத்திலும் வீண் பிரமைகள் . நம்புவது நல்லது என்றால் நாயைக்கறந்தா நாட்டுக்கு பால் தருவது " என்று இந்த மூட குருபக்திப் பற்றி சொல்கிறான் . ஒரு வேடிக்கையை அப்போதே நடத்தி காட்டுகிறான் .அங்கே இருக்கிற ஒரு பைத்தியத்தைக் கிளப்பி கடைவாசலில் ஒரு சீப்பு பழம் வாங்கி தருகிறான் .அந்தப் பைத்தியம் பழத்தை தின்னும்போது அதன் வாயிலிருந்து நழுவி விழுவதை பிடிக்க ஏந்துவது போல தன் கையை நீட்டிக்கொண்டே நிற்க ஆரம்பிக்கிறான் . சீப்பு ,சீப்பாக பைத்தியம் சாப்பிடுகிறது . கூட்டம் கூடிவிடுகிறது . " என்ன ? என்ன !"
இவன் சொல்கிறான் " ஒரு துளி எச்சல் கேட்கிறேன் . சாமி தரமாட்டேன்னுது !"
இருபத்தாறு மாதத்தில் குசமேட்டில் அந்த பைத்தியம் விஷேசமான மகானாக ஆக்கப்பட்டு ஆஸ்ரமம் , பூஜை, மேல்நாட்டு வெள்ளைக்கார பக்தர்கள் என்று அமர்க்களப்பட்டு விடுகிறது !

" ஒரு மாதிரியான கூட்டம் " கரிச்சான் குஞ்சுவின் குறுநாவல் . மயிலாப்பூரில் வசிக்கும் ஜெயாவின் 'அப்பா , அம்மா , அக்கா ,தம்பி' இவர்கள் தான் மிக பலகீனமான 'ஒரு மாதிரியான' கூட்டம் . பெரியப்பாவிடம் டெல்லியில் வளரும் பெண் ஜெயா . பெரியப்பா ரொம்ப ஸ்ட்ராங் கேரக்டர் . ஜெயாவின் பெரியப்பா அவளுடைய அப்பா பற்றி இப்படி சொல்கிறார் :" என் தம்பி ஒரு வெறும் ஆள் ,சுத்த உதவாக்கரை , குதிரை ரேஸ் , சீட்டாட்டம் நு சூதாடியே வீணாப் போனவன் . இப்போ இந்த (காஞ்சி ) பெரியவாள் பைத்தியம் வேற ஏற்பட்டிருக்கு. வெறும் ஆஷாடபூதித்தனம் ,பூஜை ,கீஜை ன்னு வேற கூத்தடிக்கிறான் "
காஞ்சி மடத்தின் மீதான போலி அனுஷ்டான பித்து பற்றி இப்படி ஒரு பிராமண எழுத்தாளர் நாற்பது , ஐம்பது வருடங்களுக்கு முன் எழுதி இருக்கிறார் !
மறைந்த மகத்தான எழுத்தாளர் ஆதவன் சொல்வார் :
"தி ஜானகிராமன் கதைகளில் ஆஷாடபூதித்தனத்திற்கும் ,போலி அனுஷ்டானங்களுக்கும் எதிரான ஒரு கோபம் எழுத்தில் இழையோடக்காணலாம் . கரிச்சான் குஞ்சு கதைகளும் அது போலத்தான் "

.........

http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_01.html


http://rprajanayahem.blogspot.in/2009/10/blog-post_21.html

 

 

3 comments:

  1. /// குபேரனுக்கு வாகனம் மனிதன் . பணக்காரன் மனிதர்கள் மீது தானே சவாரி செய்கிறான். ///

    பகிர்வுக்கு நன்றி சார்...

    ReplyDelete
  2. இப்படியும் பொருள் கொள்ளலாமோ , வேதத்தை
    பணத்திற்கு மயிலோ, காகமோ, காமதேனுவோ
    மதிப்பு கொடுக்காது
    மனிதன் மட்டுமே கொடுப்பன்

    எனவே தான் குபேரன் (பணத்தை வரமாக அளிப்பவன்) மனிதனை வாகனமாக தேர்ந்து எடுத்து உள்ளான்

    ReplyDelete
  3. திருச்சி, ஸ்ரீரங்கம் என்று அங்குள்ள எனக்கு தெரிந்த இடங்களையே இந்த நாவல் சுற்றி சுற்றி வந்தபடியினால் ரசித்துப் படித்துள்ளேன். பல வருடங்களுக்கு முன்னர் படித்த இந்த நாவலை அண்மையில் எனது வலைப் பதிவில் நூல் விமர்சனம் செய்துள்ளேன்.
    http://tthamizhelango.blogspot.com/2012/03/blog-post_08.html

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.