Share

Aug 23, 2021

ஸ்தான சலனம் கௌரவ பங்கம்

 ஸ்தான சலனம் கௌரவ பங்கம்

- R.P.ராஜநாயஹம்


பதினாறு வருடங்களுக்கு முன் 

ஒரு ஓய்வு பெற்ற காவல் துறை கண்காணிப்பாளரை ( Retired Supdt of Police) சென்னையில் சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தது.

 

அவர் தன்னிரக்கத்தால் பீடிக்கப்பட்டிருந்தார். பணிஓய்வு அவரை முடக்கியிருந்தது. 

அவர் ஒரு பிரபலமான வக்கீலிடம் அவருடைய பணியில் உதவியாக இருக்கும்போது நான் அவரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது.


ஓய்வு பெற்ற நிலையில் ஆள் அம்பு சேனை அதிகாரம் இழந்து, 

அந்த நிலையில் ஒரு டீக்கடைக்காரன் தன்னை மிகவும் அவமானப்படுத்தி விட்ட நிகழ்வு ஒன்றை விரிவாக என்னிடம் விவரித்தார்.


எனக்கு அப்போது நினைவுக்கு வந்த விஷயம் இது.

பல வருடங்களுக்கு முன் அப்போது ராஜபாளையத்தில் D.S.P யாயிருந்த  ஒரு காவல் துறை அதிகாரி என்னிடம் பேசும்போது சொன்னார்:

" மாறுதல் உத்தரவு எனக்கு ( Transfer order) வந்து விட்டாலே இந்த ஊர் கான்ஸ்டேபிள் கூட அலட்சியமாகி விடுவான். ஓய்வு பெற்ற காவல் துறை உயர் அதிகாரிகளை யார் மதிப்பார். போலீஸ் துறை துவங்கி பொதுமக்கள் வரை கண்டுகொள்ளவே மாட்டார்கள் !"


அதிகாரம் என்பது அஷ்டலக்ஷ்மிகளில் கஜலக்ஷ்மியை குறிக்கும் .அதிகாரம், மக்கள் செல்வாக்கு, சமூக அந்தஸ்து தருபவள் கஜலக்ஷ்மியாம். 


சில பெரும் பணக்காரர்கள்- இவர்களை ஊரில் யாருமே மதிக்கமாட்டார்கள். 

அவர்களுக்கு கஜலக்ஷ்மி அருள் இல்லை 

என்று அர்த்தம். 


அரசியல்வாதிகள் பதவியில் இல்லாத போது கஜலக்ஷ்மி அருள் இல்லாதவர்களாகி விடுகிறார்கள். 

பதவிக்கு வரும்போது கஜலக்ஷ்மி இவர்களை பின்னி படர்ந்து விடுகிறாள். 

இடுப்புக்கு கீழே எட்டு சுத்து. 

Politicians out of power are the different species from the politicians in power. 


அதிகார பதவியில் உள்ள காவல் துறைக்காரர்களுக்கு பணி ஓய்வு பெற்றவுடன் கஜலக்ஷ்மி நிரந்தரமாக விடை பெற்று விடுகிறாள். 


எந்த ஒரு உத்தியோக ஓய்வும் சம்பந்தப்பட்டவர்களை மனரீதியாக, ஏன் உடல் ரீதியாக கூட மிகவும் பாதித்து விடுகிறது.


பொருளாதார வீழ்ச்சியடைந்தவர்கள் பாடு கேட்கவே வேண்டாம்.


"வாழ்ந்தவர் கெட்டால் " என்று ஒரு நல்ல நாவல் க நா சு எழுதியிருக்கிறார்.


இந்த"வாழ்ந்தவர் கெட்டால்" நாவல் தான் க நா சு நாவல்களில் அசோகமித்திரனுக்கு 

மிகவும் பிடித்த நாவல்.


எனக்கு கூட "வாழ்ந்தவர் கெட்டால் " நாவல்

 மிகவும் பிடிக்கும். 

க.நா.சு வின் நடை அப்படி. 

ஆனால் க நா சு வின் "பொய்த்தேவு " நாவலும் "ஒரு நாள் " நாவலும் தான் தமிழின் முதல் சாதனை நாவல்கள். 


....................


மீள் 2009

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.