Share

Sep 16, 2012

சிறை மீண்டு ராதா மீண்டும்


எம்.ஜி.ஆரை சுட்ட வழக்கில் எம்.ஆர்.ராதா விடுதலையாகி வெளி வந்த பின் அவருக்கு மங்குதசை தான்.
பாகவதர் புகழின் உச்சியில் இருக்கும்போது லட்சுமிகாந்தன் கொலைவழக்கில் கைதாகி என்.எஸ்.கே.,ஸ்ரீராமுலு நாயுடு ஆகியோருடன் குற்றவாளியாகி சிறை சென்று விடுதலையானபின்னால் அவருக்கு சாதிக்க எதுவுமே இல்லையென்றானது.

ம்ஹும்.. யார் வாழ்வு தான் சதம்?

ராதாவும் சிறையிலிருந்து விடுதலையானபின் அவருடைய முந்தைய சாதனைகளுக்கு ஈடாக திரைப்படங்களில் எதுவும் பெரிதாய் சாதிக்கமுடியவே இல்லை.

பரபரப்பான சூழ்நிலையில் மதுரை மேலமாசிவீதியில் நடந்த ராதா நாடகத்திற்கு அவரைப் பார்க்கிற ஆர்வத்தில் சரியான கூட்டம்.
 நாடகத்தில் வழக்கம்போல அவருடைய சுதந்திர வசனம்.
’நான் நடிகன். அதுக்காக எனக்கு ரசிகர் மன்றமெல்லாம் ஆரம்பிச்சிடாதீங்க.’

‘அங்க யாரு கச,கசன்னு பேசிக்கிட்டிருக்கிறான்.நான் இங்க கத்துறேன். அவனும் கத்துறான்.போலீஸ் என்ன செய்ற? அவனை அடிச்சி தூக்கி வெளியே
 வீசு.’

ராதாவின் மாறும் முகபாவங்கள் தூரத்தில் நிற்பவர்களாலும் மிக தெளிவாக க்ளோசப் ஷாட் போல காண முடியும்.

சில படங்கள் ராதா நடிப்பதாய் தினத்தந்தியில் முழு பக்க விளம்பரங்கள் பிரமாண்டமாய் வந்தன.

“அண்ணா பேரை சொல்லி”

”சுட்டான் சுட்டேன்”


அவ்வளவு தான்.பருப்பு வேகவில்லை. படம் எதுவும் வரவில்லை.தேங்காமூடி படங்கள்.

சிறை மீண்ட ராதாவை சிவாஜிகணேசன் ஆதரிக்கவில்லை.  அவருடைய படங்களில் எம்.ஆர்.ஆர்.வாசுவுக்கு வாய்ப்பளித்த சிவாஜி ஏனோ ராதாவை ஒதுக்கிவிட்டார்.

மங்கு தசையில் வாய்ப்பு எப்படி இருக்கும். ஜெய்சங்கர் படமும் மு.க.முத்து படமும் தான் ராதாவுக்கு கிடைத்தன.

கே.எஸ்.ஜியின் தசாவதாரம் படத்தில் ஒரு வாய்ப்பு.

1976ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்ட நிலையில்  பலரும் மிசாவில் கைது செய்யப்பட்டபோது மீண்டும்  ராதா சிறை செல்ல வேண்டியிருந்தது.
ஒரு பிரமுகரை சிறைஅதிகாரிகள் அப்போது கடுமையாக தாக்கியபோது ராதா தைரியமாக ”அடிக்க வேண்டாம்” என்று சொன்னாராம்.

பஞ்சபூதம், வேலும் மயிலும் துணை, கந்தர் அலங்காரம் இப்படி சாகும் வரை நடித்தார்.
பழைய scene stealer காணாமலே போய்விட்டார்!
‘ஸ்டார்ட் கேமரா, க்ளாப்,ஆக்‌ஷன்’ என்றவுடன் சீறி நடிக்கும் முதியவர் ராதா ’கட்’ சொன்னதும் உட்கார்ந்து இரைத்து இளைப்பார்.
கடைசி வரை நாடகங்கள் போடுவதை நிறுத்தவில்லை. சிங்கப்பூர்,மலேசியா என்று போய்க்கொண்டிருந்தார்.


”ரெண்டு பேர் கையிலும் துப்பாக்கி இருந்தது.சுட்டுக்கிட்டோம்” என்றே கடைசி வரை மேடைகளில் சொன்னவர்.

....................................

Sep 13, 2008



எம் ஆர் ராதா

எம்.ஆர் .ராதா தன் சந்தேகம் ஒன்றை பெரியாரிடம் கேட்டாராம்.
"அய்யா ஒரு சந்தேகம் "


பெரியார் குறுநகையுடன் தலையை ஆட்டினாராம் .இவன் ஏதோ விவகாரமாக தான் பேச ஆரம்பிக்கிறான் என்பதை புரிந்து கொண்டு தான் அப்படி குறு நகையுடன் தலையை ஆட்டி காதை கொடுத்திருக்கிறார்.

" இந்த இங்கிலீஷ்லே ஏதோ சொல்லி அதுக்கு தமிழ்லே அர்த்தம் சொல்றான். அது புரியது. தெரியாத பாஷையிலே உள்ளதை தமிழ்லே சொல்றது நியாயம் ...சம்ஸ்க்ரிதத்திலே ஸ்லோகன் சொல்லி தமிழ்லே அர்த்தம் சொல்றான் .சரி ... நியாயம் ...
தமிழ்லேயே ஸ்லோகன் சொல்லி அதுக்கு ... தமிழ்லேயே அர்த்தம் சொல்றானே .. இது என்ன .. எனக்கு புரியலெயே ....."

பெரியாருக்கு சிரிப்பை அடக்க முடியலையாம்.
பண்டிதத்தை ,புலமையை இதை விட அழகாக நையாண்டி செய்ய முடியுமா? Snobbery க்கு சரியான சூடு! செத்து உறைந்து போன தமிழ்!

         எம்.ஜி.ஆரை சுட்ட வழக்கில் கோர்ட்டில் இரண்டு பேருடைய வக்கீல்களும் சீரியஸா வாதாடிகொண்டிருந்த போது ' பாவம் இவங்க என்னனதையோ போட்டு குழப்பிக்கிட்டு தவிக்கிறாங்க. ஆனா உண்மை என்னன்னு எனக்கும் எம்ஜியாருக்கும் தான் தெரியும். என்ன ராமச்சந்திரா !'- இப்படி கோர்ட்டிலேயே எம்ஜியாரைப் பார்த்து படு ஜாலியாக கேட்டவர் ராதா. நீதிபதி,வக்கீல்கள் எல்லோரும் இவருடைய இயல்பை கண்டு அசந்து போனார்கள்.

           ராதா ஷூட்டிங்கிற்காக அதிகாலை காரில் வந்து ஸ்டுடியோவில் இறங்குகிறார். செட்டிற்கு வெளியே அஞ்சலி தேவி அசத்தலாக உட்கார்ந்திருந்தாராம். இவர் இறங்கியவுடன் உடைகளை கழட்ட ஆரம்பித்திருக்கிறார். அஞ்சலி தேவிக்கு கொஞ்சம் தர்ம சங்கடம். அண்டர் வேர் உடன் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்திருக்கிறார்.

அஞ்சலி தேவி ' அண்ணே என்னன்னே இது '
ராதா ' என்ன '
'பொம்பிளை நான் இங்கே இருக்கிறேன். நீங்க பாட்டுக்கு உடுப்பை பூரா கழட்டிட்டு இப்படி அண்டர் வேரோட இப்படி.. '
ராதா ' நீ இருக்கிறியேன்னு தான் அவசர அவசரமா டிரஸ கழட்டிட்டு நிக்கிறேன்!'

எம் ஆர் ராதாவும் கண்ணதாசனும் அந்த காலத்தில் நடிகைகளை பற்றி செய்துள்ள கிண்டலும் நையாண்டியும் கடுமையானது.
இந்த காலத்தில் இந்த வைரமுத்து கொஞ்சம் வருடம் முன் நடிகைகளை தரக்குறைவாக என்னவோ ஏதோ சொல்லி விட்டார்.அல்லது எழுதி விட்டார்.
நடிகர் சங்கத்தில் வைத்து அவ்வளவு முன்னணி நடிகைகளும் (இதில் எம் ஆர் ராதிகாவும் அடக்கம் ) கூந்தலை விரித்து போட்டு சிலம்பை உடைச்சி ஒத்த முலையை பிச்சி போட்டு ... ...பத்திகிட்டு எரிஞ்சிச்சு ..
வைர முத்து உடனே தோப்புகரணம் போட்டு உடனே கால்லே விழுந்து ......உடனே மாப்பு கேட்டு ...

அப்புறம் இந்த தங்கர் பச்சானும் தான் மாட்டிக்கொண்டு பாவம் ....

.....

http://rprajanayahem.blogspot.in/2012/06/carnal-thoghts-32.html

http://rprajanayahem.blogspot.in/2012/08/blog-post_13.html

3 comments:

  1. எம்.ஆர்.ராதாவின் ரத்தக்கண்ணீர் திரைப்படத்தை நேற்று டிவியில் பார்த்தேன். ஒவ்வொரு வசனங்களும் அவரின் முகபாவமும், நடிப்பும் இப்படி ஒரு நடிகன் இனிமேல் பிறக்கவே முடியாது. உண்மையான நடிகர். சார், நிறைய எழுதுங்கள். வரலாறாகும் உங்கள் பெயருடன்.

    ReplyDelete
  2. எம்.ஆர்.ராதா பேசின பேச்சுக்கு என்ன கிடைக்கணுமோ அது நன்றாகவே கிடைச்சது. சினிமால குஷ்டம்னா நிஜத்துல சிறை தண்டனை.

    ReplyDelete
  3. கல்கியில் நாகேஷ் ஒரு தொடர் எழுதிக் கொண்டிருந்த சமயம் இந்த விஷயத்தை கூறியிருந்தார். எந்தப் படம் என்று‍ நினைவி்‌ல்லை. சிறையிலிருந்து‍ வந்த ராதாவும் நாகேஷூம் ஒரு‍ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். ராதாவுக்கு‍ வில்லன் ரோல். கதாநாயகனை சுடுவது‍ போல ஒரு‍ காட்சி அமைப்பு! இடைவேளையின் போது‍ ராதா சொன்னாராம், "சுடத் தெரியாதவனுக்கெல்லாம் துப்பாக்கிய கொடுத்து‍ சுடச் சொல்றானுங்க"
    பாபு
    கோவை

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.