Share

May 30, 2019

கிருஷ்ணன் நம்பி எனும் குழந்தைமை கலைஞன்


தகவல் பிழை எழுத்தில் வந்து விடக்கூடாது என்பதில் எவ்வளவு அக்கறை எடுத்துக்கொண்டாலும் அதையும் மீறி ஏற்படவே செய்கிறது.
கிருஷ்ணன் நம்பி ஆக்கங்களில் அவருடைய நீலக்கடல் முகவுரை இல்லை என்றே எனக்கு தோன்றியது. அதை கிருஷ்ணன் நம்பி பற்றிய பதிவில் குறிப்பிட்டு எழுதியிருந்தேன்.
ஆனால் அந்த ’நானும் கடவுளும் அறிஞனும்’ என்ற முகவுரை காலச்சுவடு வெளியிட்ட கிருஷ்ணன் நம்பி ஆக்கங்களில் இடம்பெற்றிருக்கிறது என்பதை நம்பியின் தம்பி கிருஷ்ணன் வெங்கடாச்சலம் எனக்கு கவனப்படுத்தினார்.
என்னுடைய ‘ இலக்கியம், இசை, ஹாலிவுட் பதிவுகள்’ நூலை படித்து விட்டு தொலைபேசியில் பேசி அவர் வீட்டுக்கு வரச்சொன்னார். அவரை சந்தித்த போது என் தகவல் பிழை பற்றி சுட்டிக்காட்டினார்.
அதை உடனே ப்ளாக் பதிவில் திருத்தி விட்டேன். ஆனால் நூலில் இடம் பெற்றிருக்கிறது.
இது போல் சென்ற மாதம் என்னுடைய மற்றொரு தகவல் பிழை பி.பி.ஸ்ரீநிவாஸ் பாடிய பாடலொன்று ’நாளைய தீர்ப்பு’ படத்தில் இடம்பெற்றிருந்ததாக பி.பி.எஸ் பற்றிய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அந்த படம் ‘நாளைய செய்தி’ என்பதை அறியவந்தேன். இதையும் ப்ளாக்கில் திருத்தினேன்.
நம்பி எழுதிய முகவுரை சிறப்பான ஒன்று. எனக்கு ’குட்டி இளவரசன்’ பிரஞ்சு புனைவில் அந்த்வான் செந்த் எக்சுபெரி எழுதிய குட்டி முகவுரைக்கு ஈடான அற்புதமான ஒன்று.
’நானும் கடவுளும் அறிஞனும்’ படிக்கும்போதெல்லாம் நம்பி தான் சந்திரன் என்றும் சுந்தர ராமசாமி தான் சூரியன் என்பதாகவுமே எண்ணுவேன்.
மீண்டும் அந்த முகவுரையை இங்கே தருவதில் தவறில்லை.

கிருஷ்ணன் நம்பி ’நீலக்கடல்’ சிறுகதைத் தொகுப்புக்கு அந்த எழுதிய முகவுரை.
நானும் கடவுளும் அறிஞனும்
நான் உள்ளத்தாலேயே சிந்திக்கிறேன்; உணர்ச்சியாலேயே சிந்திக்கிறேன். என் புத்தி தன் போக்கில் இயங்கி, அதிலிருந்து அறிவின் சாரம் -அறிவு ரஸம் - ( ’ஸீரம்’) என் உள்ளத்தில் இறங்கி என் உணர்ச்சிகளில் கலக்கிறது. கவியின் அறிவுக்கேந்திரம் உணர்ச்சி தான். அறிஞனுக்கு உணர்ச்சி வேலைக்காரன் என்றால், கவிக்கு அறிவு வேலைக்காரன். அறிவின் தீட்சண்யம் கதிரவன் என்றால், உணர்ச்சியின் தீட்சண்யம் சந்திரன். சந்திரன் தண்மை நிறைந்தது; மென்மை நிறைந்தது. மக்கள் மனத்தில் கனவுகளையும், காதலையும் எழுப்பவல்லது. இன்பமயமானது; இனிமையானது. ஓ, அறிஞனே, நீ சூரியன். நீ உஷ்ணமானவன். உன் உஷ்ணம், உன் வெம்மை, அத்தியாவசியமானது எனினும், சக்தி வாய்ந்தது எனினும், நீ இன்பமானவன் அல்ல. உன் தழுவல் சுறுசுறுப்பை, உழைப்பை, செயலைத் தூண்டும் எனின், சந்திரனாகிய என் தழுவல் இன்பத்தை, கனவை, கவியை, போதையைத் தூண்டும். உனக்கு மாபெரும் வெற்றிகள் சித்திக்கலாம். ஆனாலும் உன் வெற்றியை ஒப்புக்கொள்ள எனக்குப் பிடிக்காது. சூரியனே சந்திரனுக்கு ஆதாரம் என்றாலும் சூரியன் சூரியன் சூரியன் தான்; சந்திரன் சந்திரன் தான்! நான் பலவீனமானவன் என்றாலும் நான் உன்னதமானவன். நான் கடவுளின் செல்லக்குழந்தை. நீ கடவுளின் போர்வீரன். உன்னைக் கண்டு நான் அஞ்சி ஓடக்கூடும் எனினும், நான் கடவுளின் மார்பில் கொடியாய்த் தவழக்கூடிய செல்ல மதலை. நீயோ கடவுளருகில் கம்பீரமாய் நிற்கவேண்டிய காவல் வீரன். நீ அழுதால் சினந்து சீறும் கடவுள், நான் அழுதால் என்னைத் தோளில் போட்டுத் தழுவுவான். முத்த வெள்ளம் சொரிவான். உன்னை அழைத்து, “ ஓ, போர் வீரா! ஓடிப்போய் இந்தப் பயலுக்குப் பாரிஜாத மலர்கள் பறித்து வா; ஓடிப்போ!” என்பான் ஈசன்.
கிருஷ்ணன் நம்பி பற்றி நகுலன் பிரமாதமாக சொல்லியிருக்கிறார்.
“நாஞ்சில் நாட்டிலிருந்து நமக்குக் கிடைத்திருக்கும் – ஒரு என்று சொல்வதை விட ‘ஒரே’ என்று சொல்லும் அளவுக்கு – ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளர் ஸ்ரீ கிருஷ்ணன் நம்பி”
’நம்பி ஓர் உண்மையான கலைஞன்’ என்பது நகுலனின் ஆணித்தரமான அபிப்ராயம். ‘ஒரு எழுத்தாளன் என்ற வகையில் நம்பியைப்போல் தோல்வி ( இது தோல்வி என்றால்) அடைவதையே நான் மதிக்கிறேன்’ என்றார்.
குழந்தைமை மனவார்ப்பு அற்புதமாக கொண்டிருந்த எழுத்தாளர் கிருஷ்ணன் நம்பி.
நீலக்கடல், விளையாட்டுத்தோழர்கள் போல எத்தனை குழந்தை கதைகள்.
நீலக்கடல் 1952ல் எழுதஆரம்பித்து அரைகுறையாக அப்படியே போட்டு விட்டு 1961ல் தான் முடித்தாராம்.
இதில் பாட்டி சொல்லும் கதை - பாலகிருஷ்ணன், பாலமுருகன், பிள்ளையார் கிட்டிப்புள் விளையாண்ட கதையை நான் ஸ்போக்கன் இங்க்ளீஷ் டீச்சராய் இருந்த போது குழந்தைகளுக்கு நான் ஆங்கிலத்தில் எப்போதும் சொல்லியிருக்கிறேன்.
மருமகள் வாக்கு, அவனும் ஒரு மரநாயும், தங்க ஒரு .. வருகை, போன்ற கதைகளெல்லாம் பெருஞ்சாதனை.
ஆதவன் மரணம் தந்த துக்கம் அளவிற்கு நம்பி அகாலமாய் இறந்திருக்கக்கூடாது என்ற தவிப்பும் எப்போதும் இருக்கிறது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.