Share

May 10, 2019

கு.அழகிரிசாமியின் தந்தை பற்றி கி.ரா


கு.அழகிரிசாமியின் அப்பா தன் காலத்தில் ஜோதிடம் தொழில் பார்த்தவர். 
என்னிடம் கி.ரா. அவருடைய விசித்திர ஜோதிடம் பற்றி நான் புதுவையில் இருந்த காலத்தில் வேடிக்கையாக விவரித்திருக்கிறார்.
கீழே கி.ரா எழுதியுள்ள விஷயம்
”வறுமை ஒழிக என்ற அவயம் கேட்டுக் கொண்டிருந்த ஒரு ”பொற்காலம்”. எழுத்தாளர் கு.அழகிரிசாமியின் குடும்பத்தார், இனி இடைச்செவலில் பிழைக்க முடியாது என்று வண்டி கட்டிக்கொண்டு புறப்பட்டு விட்டார்கள். அந்தப் புறப்பாட்டைப் பார்க்க முடியாமல் என் வீட்டினுள் கிடந்தேன். அழகிரிசாமி சென்னையில் சிரமதிசையில் இருந்தான். வண்டியில் எல்லோரும் ஏறிக்கொண்டார்கள். அழகிரிசாமியின் அப்பா மட்டும் ஏறமுடியாது என்கிறார். செத்தாலும் நா இங்கே தான் சாவேன். கோயமுத்தூருக்கு வரமாட்டேம் என்கிறார்.
என்ன செய்ய. யார் சொன்னால்க் கேட்பார் இவர்.
ஒரு ஊரில் ஒவ்வொருவருக்கும், இன்னார் சொன்னாத்தாம் இவர் கேட்பார் என்று உண்டு. கு.அ.வின் மாமா ஒருவர். அவருக்குத் தெரியும் நான் சொன்னால் அவர் கேட்பார் என்று. என்னைத் தேடி வந்து விட்டார்.
எழுந்து போனேன். கிட்டே போய் அவருடைய கைப்பிடித்தேன். அவருக்குப் பார்வை போயிருந்தது. எனது தொடுதலிலிருந்தெ என்னைத் தெரிந்து கொண்டார். ஒரு குழந்தை போல் அழுது கொண்டே ’நா போக மாட்டேன் ராஜு போக மாட்டேன். நீயும் போகச் சொல்லுவியா. அய்யோ, ஏங்குடும்பம் இப்பிடி ஆயிட்டதே தேவுடா.’
எப்படி அவரைச் சமாதானம் செய்ய; தெரியவில்லை.
மாமா, நீங்க மட்டும் எப்பிடி இங்கே இருக்க முடியும்.
“ஏம் எனக்கு நீ கஞ்சி ஊத்தமாட்டியா? ஒரு வேளை மட்டும்; அரை வகுத்துக்குப் போதும்”
சீனி மாமா சொன்னார்: “ராஜூ உமக்குக் கஞ்சியும் ஊத்துவார்; பொடிப்பட்டை செலவுக்கும் தருவார், சரி விடிஞ்சதும் ”மந்தை”க்குப் போகக் கையெப் பிடிச்சிக் கூட்டிட்டுப் போவாரா, நாளைக்குச் சட்டடியா படுத்துட்டா ஒம்மோட பீத்துணியை அலசிப் போடுவாரா!”
இது நகைச்சுவை இல்லையென்றாலும், அவ்ர் சொன்னது அங்கிருந்த அனைவரையும் முகம் திருப்பி ஒரு வகைச் சிரிப்பைத் தந்தது.
வயசாகிப்போன ஒவ்வொருவருடைய இறுதி நாள் கவலை அது.
இது தான் நேரம் என்று, சீனி மாமா தனது மாமனாரான கு.அவின் அப்பாவின் கையிலிருந்த கைத்தடியை வாங்கிக்கொண்டு அவரைக் குண்டுக் கட்டாகத் தூக்கி வண்டிக்குள் வைத்தார்.
என்னிடம் சொல்லிக்கொண்டு எல்லோரும் புறப்பட்டுப் போனார்கள். அவர்களை நான் பார்த்தது அது தான் கடேசி என்று அன்று நினைக்கவில்லை. அதுவே கடேசிக் காட்சியாக அமைந்து விட்டது.”
- கி.ராஜநாராயணன் “ வேதபுரத்தார்க்கு நூல்
( குமுதத்தில் தொடராக வந்தது)
அன்னம் வெளியீடு

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.