Share

May 9, 2019

கு.அழகிரிசாமி


”கு.அழகிரிசாமியின் சிறுகதைகளை தனித்தனியாக பத்திரிக்கைகளில் அவ்வப்போது படித்துப் பார்த்தபோது அவை அப்படி ஒன்றும் பிரமாதமானவையாகத் தோன்றவில்லை. ஆனால் சேர்த்து புஸ்தக ரூபத்தில் ஒன்றன் பின் ஒன்றாகப் படிக்கும் போது, சங்கீத ரஸிகர்கள் சொல்கிறார்களே அது போல் ‘ஐயோ!’வென்றிருக்கிறது. எப்படித்தான் இந்தச் சிறுகதையாசிரியர் இப்படியெல்லாம் எழுதினாரோ? என்றிருக்கிறது” என்று க.நா.சு 1959லேயே மலைத்துப் போயிருக்கிறார்.

நகுலன் “அழகிரிசாமியின் கதைகள் மனநிலைகளை நுணுக்கமாக விவரிப்பதிலும் சௌந்தரிய உணர்ச்சியின் பரிணாமத்தையும் உள் வளைவுகளையும் தாங்கியிருப்பதிலும் இவ்வளவு இருந்தும் பிரத்தியட்ச உலகின் தொடர்பு அறாமலிருப்பதிலும் நம்மைக் கவர்கின்றன, ஆனால் கு.அழகிரிசாமி கலையைப் புரிந்துகொண்டு அனுபவிப்பதற்கு வாசகனும் நுண்ணுணர்வு பெற்றவனாக இருக்கவேண்டும்.”
மேலும் நகுலன் 1961ல் சொன்னார் “ புதுமைப்பித்தன், கு.ப.ரா, மௌனி, இவர்களுடன் உடன் வைத்துப் பேசக்கூடிய தகுதி வாய்ந்தவர் கு.அழகிரிசாமி. சொல்லப்போனால் இக்குறிப்பிட்ட ஆசிரியர்களின் சாயை அழகிரிசாமியிடம் ஒரு நூதன ரூபமெடுத்திருக்கின்றன. இவர்கள் அனைவரிடமிருந்தும் தனித்து நிற்கும் ஒரு பண்பும் கலைத்திறனும் அவருடைய கதைகளுக்கு உண்டு. அவருடைய கதைகளை ஒருமுறைக்கு இரு முறையாக படிப்பவர்களுக்கு சௌந்தரிய உணர்ச்சி என்பதன் தனி அர்த்தம் தெளிவாக விளங்கும்.
கதைத்தொகுதிகளை இன்று மூன்றாவது முறையாகப்படிக்கும் போது வட்டமிடும் உணர்ச்சி என்னவென்றால் அவர் கதைகளில் காணப்படும் ஒரு நூதனமான ’நகைச்சுவை’. விளக்கமாகச் சொல்லப்போனால் அவருடைய கதைகளுக்கெல்லாம் அர்த்தம் கொடுப்பது ஒரு தனிவிதச் சிரிப்புத்தன்மை. ஆனால் அவரை நாம் ஒரு பொழுதும் ஒரு நகைச்சுவை ஆசிரியராகச் சாதாரணமான அர்த்தத்தில் கருத முடியாது. ஒரு மேல்நாட்டு ஆசிரியர் ஆனந்த பாஷ்பத்தின் அடித்தளத்தில் நாம் துக்கக் கண்ணீரின் உலர்ந்த சுவட்டைக் காணலாம் என்று சொன்னார். அந்த அர்த்தத்திலும் நாம் அழகிரிசாமியின் நகைச்சுவைக்கு வியாக்கியானம் அளிக்க முடியாது. இதைச் சற்று வார்த்தைகளில் விவரிப்பது கடினம் தான்.”
அழகிரிசாமி செய்த ஒரு சபதம் “குழந்தைகளை அடிக்க மாட்டேன். கம்ப ராமாயணத்தின் மீது சத்தியம்.”
அவருடைய பிள்ளைகள் அதிர்ஷ்டக்காரர்கள். சாரங்கன் தன் அப்பா கையால் அடிவாங்காத மகன். கம்பராமாயணத்தின் மீது சபதம்.

அழகிரிசாமிக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்கள் புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் ஆகியோர். He was having some strong likes and dislikes. மௌனியையும் லா.ச.ராவையும் சுத்தமாக பிடிக்காது. இவர்கள் இருவரும் எழுதியவை கதைகளாகவே தனக்குத்தோன்றவில்லை என்று கடுமையாக பேசினார்.
அழகிரிசாமி சிறுகதைகள் முழு புத்தகமாக பதிப்பாசிரியர் பழ அதியமான் அவர்களின் சீரிய முயற்சியில் காலச்சுவடு வெளியீடாக எட்டு வருடங்களுக்கு முன் வந்திருக்கிறது.


அழகிரிசாமியின் சில கதைகள் படித்து எவ்வளவு காலம் ஆனாலும் கூட சட்டென்று சிரமமின்றி நினைவின் மேலெழும்பி வரக்கூடியவை.
திரிபுரம், அன்பளிப்பு, ராஜா வந்திருக்கிறார், அழகம்மாள், திரிவேணி, குமாரபுரம் ஸ்டேசன்,சுயரூபம் ஆகிய கதைகள். சில கதைகளை குறிப்பிடுவதால் கொஞ்சம் நல்ல கதைகள் தான் போல என்று யாருமே எண்ணி விட வேண்டாம்.
கி.ராவுக்கு அழகிரிசாமி எழுதிய கடிதங்கள் காட்டும் உலகம்.

கு.அழகிரி சாமி இசையறிஞர் விளாத்திகுளம் சுவாமிகளைப் பார்த்தவுடன் கி.ராவிடம் சொன்னாராம் " கம்பர் இப்படித்தான் இருந்திருப்பார்!"
இதே போல கு.அழகிரி சாமி ரசிகமணி டி.கே.சி யைப் பார்த்தவுடன் உடனே,உடனே சொல்லியிருக்கிறார் "அடையா நெடுங்கதவு வீடுகொண்ட சடையப்ப வள்ளல் இப்படித்தான் இருந்திருப்பார்!"
 1990ல் புதுவையில் ஒரு கட்டடத்தில் புத்தகக்கண்காட்சி. கி.ராவுடன் நான் உள்ளே நுழையும்போது செருப்பை வெளியே விட வேண்டியிருந்தது. உடனே கி.ரா
“இப்படி செருப்பை கழற்றி விட்டு செல்ல வேண்டியிருக்கும் போது அழகிரிசாமி என்ன செய்வான் தெரியுமா? ஒரு செருப்ப இங்கன போடுவான். இன்னொரு செருப்ப அங்கன போடுவான்.”
திருடு போய்விடக்கூடாது என்பதற்காக!
இப்படி அழகிரிசாமி பற்றி கி.ரா. நினைவில் இருந்து அள்ளித் தெளிக்கும் விஷயங்களை கேட்கும்போது அவரை பார்க்க எனக்கு கொடுத்து வைக்கவில்லையே என்ற ஏக்கம் தான் ஏற்படும்.

திருச்சி தமிழ் இலக்கியக் கழகத்தில் அமுதன் அடிகள் என்னிடம் கு.அழகிரிசாமியின் சிறுகதைகளை அங்கே ஒரு பிரபலத்திற்கு தந்துதவும்படி சொன்னார். ”புத்தகங்கள் திரும்ப கிடைக்கும். நான் பொறுப்பு” என்றார்.
அதன் படி அந்த மனிதர் என் வீட்டுக்கு வந்து என்னிடம் இருந்த அனைத்து அழகிரிசாமி சிறுகதை தொகுப்புகளையும் வாங்கிச்சென்றார்.
அவருக்கு அழகிரிசாமி கதைகள் ஒரு கட்டுரை எழுத வேண்டியிருக்கிறதாம். ஒரே மாதத்தில் திருப்பித்தருவதாக சொன்னார்.ஆறு மாதமாக தரவேயில்லை.
அமுதன் தர்மசங்கடத்துடன் கையை பிசைந்தார். என்ன இந்த மனிதர் இப்படியிருக்கிறார் என்று வேதனைப்பட்டார்.
நான் மனந்தளரவில்லை. அவருடைய வீட்டுக்குப் போய் விட்டேன். அவருடைய மனைவி தான் இருந்தார். புத்தகத்தை திருப்பித்தர நினைவு படுத்தி விட்டு வந்தேன்.
ஒரு வாரம் கழித்து அவர் தன் மகளை அழைத்துக்கொண்டு வந்தார். முகம் விளங்கவில்லை. புத்தகங்களை திருப்பி கேட்டு அவரை அவமானப்படுத்தி விட்டதாக கருதுகிறார் என்பது அவர் முக விலாசத்தில் தெளிவாக தெரிந்தது. “நானெல்லாம் ரொம்ப கௌரவமானவன். ரோஷமானவன்.” என்று சொல்லி புத்தகங்களை திருப்பி தந்து விட்டு நன்றி சொல்லாமலே திரும்பிச் சென்று விட்டார்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.