Share

May 15, 2019

ரெட்ட மாட்டு சாணியும், கல்யாண்குமார் கண்ணீரும்


மேட்டூர் அருகே காவேரி க்ராஸ் என்ற இடத்தில் ஷூட்டிங்.
ரெட்ட மாட்டுவண்டியோடு கதாநாயகன் பாலத்தை கடக்கிற சீன். ஷாட் ப்ரேக்கில் ரெண்டு மாடும் சாணி போட்டு விட்டது. அதை வெம்மை அடங்கு முன் அள்ளி நான் தான் அப்புறப்படுத்தினேன். அசிஸ்டண்ட் டைரக்டர்னா எல்லா வேலையும் செய்ய வேண்டும். காலையில் ஆறு மணிக்கு நிக்க ஆரம்பித்தால் ராத்திரி பன்னிரெண்டு மணின்னா கூட நின்னுக்கிட்டே தான் இருக்கணும்.
நல்ல உச்சி வெய்யில். நெஞ்சில் ஓர் ஆலயம் கதாநாயகன் கல்யாண்குமார் இந்த படத்தில் கதாநாயகனின் அப்பா ரோல்.
கதாநாயக நடிகருக்கு சிகரெட் ரோத்மன்ஸ் மெந்தால் மிஸ்ட் ஒரு நாளைக்கு ஐந்து பாக்கெட். கல்யாண்குமாருக்கு ஒரு ட்ரிபிள் ஃபைவ் சிகரெட் பாக்கெட். கதாநாயகன் ஒரு நாளைக்கு மொத்தம் நூறு சிகரெட் என்பதால் பற்ற வைத்து ஐந்தாறு இழுப்பு இழுத்து விட்டு சிகரெட்டை பாதியிலேயே கீழே போட்டு விடுவார். ஆனால் கல்யாண்குமாருக்கு ஒரு நாள் பூராவுக்கும் இருபது சிகரெட் தான் என்பதால் ஒவ்வொரு சிகரெட்டையும் ஒட்ட,ஒட்ட சிகரெட்டின் பஞ்சு வரும் வரை இழுப்பார்.

யாருக்கு சொந்தம் மாடர்ன் தியேட்டர்ஸ் படத்தில் கதாநாயகனா நடிச்சப்ப மொதலாளி டி.ஆர் சுந்தரம் முன்னாடியே சிகரெட்ட பத்த வைப்பேன்’ என்று கல்யாண்குமார் பழைய நினைவில் மூழ்கி விடுவார். வசதியெல்லாம் போய் அப்பா ரோல் செஞ்சப்ப அசதியில் இருந்தார்.
ரெண்டு மாட்டு சாணிய எடுத்து தூர போட்டுட்டு கைய தண்ணியில கழுவிட்டு வந்தப்ப, அந்த படத்தில் வில்லன் ரோல் செய்த நடிகர், அப்பா நடிகரிடம் “ராஜநாயஹம் ‘தேவன் கோவில் மணியோசை’ பாடல் பிரமாதமா பாடுறார்’’ என்று சொல்லிக்கொண்டிருந்தான்.
பி.மாதவன் முதல் முதலாக இயக்கிய படம்’தேவன் கோவில் மணியோசை’. அதில் கல்யாண்குமார் தான் கதாநாயகன். கூணனாக வருவார். சீர்காழியின் பாடல் “தேவன் கோவில் மணியோசை, நல்ல சேதிகள் சொல்லும் மணியோசை”.
கல்யாண்குமார் சிகரெட்டை ஒட்ட,ஒட்ட இழுத்து கீழே போட்டு விட்டு என்னிடம் அந்தப்பாடலை பாடச்சொல்லி வற்புறுத்தினார். நான் அந்த உச்சிவெய்யிலில் நின்று கொண்டு பாடினேன். எந்த பக்கவாத்தியமுமின்றி என் பாட்டு. சுற்றிலும் சில நடிகர் நடிகைகள்.
கல்யாண்குமார் உணர்ச்சி வசப்பட்டு விட்டார். எனக்கு இன்று நன்றாக நினைவில் இருக்கிறது. ‘இது ஆசைக்கிழவன் குரலோசை, இவன் அன்பினைக் காட்டும் மணியோசை’ வரியை மீண்டும் எடுத்து இரண்டாம் முறையாக நான் பாடிய போது
அந்தப் பெரியவர் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது.
டி.எஸ்.எலியட் சொன்னான் - An Oldman will not forsake the world which has already forsaken him.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.