Share

May 26, 2020

ஜமுனா ராணி


யூட்யுபில் ஒரு கச்சேரியில் ஜமுனா ராணி "பாட்டொன்று கேட்டேன். பரவசமானேன்,
நான் அதை பாடவில்லை
பாவை என் முகத்தை பார்த்தார் ஒருவர்
நான் அதை பார்க்கவில்லை "
பாடியவுடன் அந்த அமர்க்களமான BGM
சிவாஜி உற்சாக பரவசத்துடன் பியானோ வாசிக்கிற காட்சி நினைவு வந்து கண் கலங்கியது.

எல். ஆர். ஈஸ்வரிக்கு நேர் எதிர் மாறாக
பொது வெளியில்
கச்சேரிகளில் பாடும் போது கொஞ்சமும் உணர்வுகளை காட்டாமல் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு,
குரலில் மட்டுமே
அத்தனை சித்து வேலைகளையும் காட்டுவார்             ஜமுனா ராணி.

" என் ஆசையும் என் நேசமும் ரத்த பாசத்தினால் ஏங்குவதை பாராயடா "

"செந்தமிழ் தேன் மொழியாள்"

"காமுகர் நெஞ்சில் நீதியில்லை"

" அக்காளுக்கு வளைகாப்பு அத்தான் முகத்திலே புன்சிரிப்பு "

"சித்திரத்தில் பெண் எழுதி சீர் படுத்தும் மானுடமே ஜீவனுள்ள பெண்ணினத்தை வாழவிட மாட்டாயா "

"பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் நான் அதை பாடவில்லை  "

"அத்திக்காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே "

" ஆதி மனிதன் காதலுக்குப் பின் அடுத்த காதல் இது தான்"

"நெஞ்சினிலே நினைவு முகம் நிலவிலும் தெரிவதும்
அழகு முகம் ஆசைமுகம் "

"எனக்காகவா நான் உனக்காகவா என்னைக் காணவா என்னில் உன்னைக் காணவா வா வா "

"புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் "

இந்த கீதங்களில் இசைந்து குழையும் ஜமுனா ராணி.

இது ஒரு வகை.

இன்னொரு பாணி பாடல்கள் உண்டு.

அன்பு எங்கே படத்தில் " மேலே பறக்கும் ராக்கெட்டு. மின்னல் பூச்சி ஜாக்கெட்டு "

உத்தம புத்திரனில் "யாரடி நீ மோகினி " பாட்டில்
 " விந்தையான வேந்தனே "

" காள வயசு, கட்டான சைசு, கலங்கமில்லா மனசு "

 குமுதம் படத்தில் " மாமா,மாமா மாமா "

மரகதத்தில் சந்திரபாபுவுடன் கலக்கும்
" குங்குமப் பூவே, கொஞ்சும்புறாவே"

"வாழைத் தண்டு போல உடம்பு அலேக்"

ரொம்ப பல வருடங்கள் ஸ்டுடியோ வாசலையே மிதிக்காமல் இருந்த ஜமுனா ராணிக்கு
1987ல்  'நாயகன்' படத்தில் " நான் சிரித்தால் தீபாவளி''பாடலுக்காக இளைய ராஜா மூலம் வாய்ப்பு கிடைத்தது.

ஜமுனா ராணி அந்தக்கால இசை அமைப்பாளர்கள் இசையில் பாடிய அனுபவம் பற்றி சொன்ன விஷயங்கள்:

"1. ஜி. ராம நாத ஐயர் சொல்கிற சங்கதிகள் பாடுகிறவர் குரலில் வந்தே தீரவேண்டும்.
 அந்த சங்கதிகள் வராமல்
 பின்னணி பாடகரை விடவே மாட்டார்.

2.  மாமா கே.வி.மகாதேவன் மெட்டின் உருவத்தை அழகாக கோடி காட்டி விடுவார்.
" உன் கற்பனைக்கு ஏற்றவாறு உணர்ச்சி,பாவத்துடன் பாடி ,
தேவையான இடத்தில்
சங்கதிகள் நீயே போட்டுக்கொள் " என்று பாடுபவருக்கு முழு சுதந்திரம் கொடுக்கக்கூடியவர்.

3. விஸ்வநாதன் -ராமமூர்த்தி  எப்படி சொல்லிக்கொடுக்கிரார்களோ அப்படியே தான் அச்சர சுத்தமாக பாடியே தீரவேண்டும்.
பாட்டின் ஒவ்வொரு சொல்லும்
தெளிவாக ஒலிக்கவேண்டும்.
இதில் இசை அமைக்கும்  இருவருமே
கவனமாக இருப்பார்கள்.
அப்படிப் பாடலைன்னா
ஒலிப்பதிவுக்கூடத்திலேயே
பாடுபவரின் மானம் கப்பலேறிவிடும்."

பாடத்தெரியாம ப்ளேபேக் சிங்கர்னு  சொல்லிக்கிட்டு
ஏன் பாட வர்றீங்க''
 - இப்படி எம்.எஸ். வி கேட்டு விடுவார்.
அதனால் பயந்து கொண்டே தான் பாடுவோம்."

https://m.facebook.com/story.php?story_fbid=2715146355365480&id=100006104256328

http://rprajanayahem.blogspot.in/2008/11/blog-post_291.html

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.