Share

Jul 27, 2019

கூலிக்கு மாரடிப்பு


வாஹினி ஸ்டுடியோவில் கேண்டீன் முன் பகுதியில் ஒரு ஷூட்டிங். நல்ல ஏழைகளாக பண்டரிபாய், ஜெயப்ரதா இருவரும் தரையில் அமர்ந்து கொண்டு நடிக்கிற காட்சி. தெலுங்குப் படம். 

நிறை கர்ப்பிணி தோற்றத்தில் இருந்த ஜெயப்ரதாவுக்கு பண்டரிபாய் அம்மாவாய் நடித்தார் போல.
கர்ப்பிணிப்பெண்ணாக பிரசவ வேதனையில் துடிக்கிறார். பண்டரிபாய் தெலுங்கில் நெஞ்சே பதைபதைக்கும் விதமாக ‘யாராவது எங்களுக்கு உதவி செய்ய ஆள் இல்லையா? கர்ப்பிணி பெண்ணை ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டுமே. துடிக்கிறாளே. நான் என்ன செய்வேன்.’ – தேம்பி தேம்பி அழுகிறார்.

டைரக்டர் ‘கட்’ சொன்ன அந்த நொடியில் பண்டரிபாய் குலுங்கி குலுங்கி சிரிக்கிறார். அடக்க முடியாமல் சத்தமிட்டு சிரிக்கிறார்.

ஷாட்டுக்கு முன் ஏதோ சிரிக்கும்படியான ஏதோ விஷயம். வார்த்தைகளாலோ அல்லது காட்சியாகவோ பார்த்திருக்கிறார்.
நடிக்க வேண்டி வந்தவுடன் காரியத்தில் கண். நடித்து முடிந்தவுடன் ஷூட்டுக்கு முந்தைய அந்த விஷயத்தை நினைத்து வாய் விட்டு சிரிக்கிறார்.
அவர் நடிக்கும்போது அழுததை பார்த்தால் ’கட்’ சொன்னவுடன் சிரிக்க முடியும் என்பதே நினைத்தே பார்க்க முடியாத அசாத்தியம்.

சாவகாசமாக பண்டரிபாய் எழுந்து பக்கத்தில் ஒரு செட்டில் நடந்து கொண்டிருந்த ராஜேஷ் கன்னா இந்திப்படத்தின் ஷாட் ப்ரேக்கில் இருந்த ஹேமாமாலினியிடம் போய் கலகலவென்று உற்சாகமாக பேச ஆரம்பித்து விட்டார்.

அந்த சமயத்தில் “அண்ணி என் தெய்வம்” என்று ஒரு படம் சொந்தமாக தயாரித்துக்கொண்டிருந்தார். அந்த படம் வெளிவந்ததா இல்லை பாதியில் நின்று விட்டதா என்று தெரியவில்லை. பண்டரிபாய்க்கு பெருநஷ்டமாகத்தான் இருந்திருக்கும்.
அதில் நடித்த எம்.எஸ்.வசந்தி தன்னுடன் நடித்த நடிகரை திருமணம் செய்து கொண்டார்.
அந்த நடிகர் பின்னால் திருமுருகன் என்ற பெயரை அலெக்ஸ் பாண்டியனாக மாற்றிக்கொண்டு ”ஆண்களை நம்பாதே” என்று ’மண்வாசனை’பாண்டியனை கதாநாயகனாக வைத்து இயக்கினார்.
”காதல் காயங்களே” பாட்டில் கதைப்படி காதல் தோல்வியிலிருக்கும் பாண்டியனை விட சோகமாக (வம்படி சோகம்) நடித்திருந்தார்.
ஸ்டெல்லா புரூஸ் கதை தான் ’ஆண்களை நம்பாதே’ என்று ஞாபகம்.
 ”ஒரு முறை பூக்கும்” நாவல் என ராஜா ஹசனும் மணிஜியும் கூறுகிறார்கள்.

ஸ்டெல்லா புரூஸ் நான் படித்ததேயில்லை.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.