Share

May 27, 2019

தி.ஜாவின் ”தீர்மானம்”


சென்ற வாரம் கூத்துப்பட்டறையில் தினமும் ஒரு சிறுகதை தேர்ந்தெடுத்து உரக்க வாசித்து விரிவாக பேசினேன்.
தி.ஜானகிராமனின் ’தவம்’, ’பரதேசி வந்தான்’, ’தீர்மானம்’ அசோகமித்திரனின் ‘காந்தி’, ’கடன்’.
அடர்த்தியான கதைகள்.

தி.ஜானகிராமனைப்பற்றி, 

அசோகமித்திரனைப்பற்றி

நிறைய சொன்னேன்.

தி.ஜானகிராமனையும் அசோகமித்திரனையும் தான் எத்தனை முறை மறு வாசிப்பு செய்திருக்கிறேன். பிரமிப்பு விலகாத விசேஷமான அனுபவமாகவே ஒவ்வொரு முறையும்.
தி.ஜா ’தீர்மானம்’ கதையை வெள்ளிக்கிழமை வாசித்தேன்.
நான் கண் கலங்குவது, அழுவது எல்லாம் தனிமையில் தான்.
Sorrows find relaxation in solitude. Every man has his secret sorrows.
மற்றவர்கள் முன் இளகி கலங்குவதில்லை.
தீர்மானம் கதையை வாசிக்கும் போது அடக்க முடியாமல் விம்மினேன். கண்ணில் இருந்து நீர் வடிந்து விடாமல் இருக்க கைக்குட்டையால் துடைத்துக்கொண்டேன். தொண்டை தழதழக்க மேலே வாசிக்க முடியாமல் நிறுத்தினேன்.

Charles Dickens, in his novel Great Expectation says
“We need never be ashamed of our tears.”

Shakespeare in Julius Ceasar “If you have tears, prepare to shed them now.
பத்து வயது விசாலம் எனும் சிறுமி தான் எப்பேர்ப்பட்டவள். தாயில்லா பிள்ளை. தந்தையுடன், அவருடைய சகோதரியின் பராமரிப்பில் இருப்பவள். அந்த அத்தை வாழாவெட்டியா, விதவையா?
ஆறு வயதில் விசாலிக்கு பால்ய விவாகம். அப்போது கணவனுக்கு இருபத்திரெண்டு வயது என்பது அவன் இப்போது அவளை அழைத்து வரச்சொல்லி இவள் வீட்டுக்கு வந்துள்ள கணவனின் உறவினர்கள் அவன் வயது இருபத்தாறு என்று சொல்வதிலிருந்து தெரிகிறது.
வந்திருப்பவர்கள் கணவனின் அண்ணா, பெரியப்பா, சித்தப்பா ஆகியோர். கணவனுக்கு அம்மா, அப்பா கிடையாது.
பத்து வயது குழந்தையை புகுந்த வீட்டுக்கு அழைத்துச்செல்ல வந்திருக்கிறார்கள்.
குழந்தை தன் தோழி ராதையுடன் சோலி விளையாடக் காத்திருந்தவள்.
அப்பா வீட்டில் இல்லை. நான்கு வருடங்களுக்கு விசாலியின் திருமணத்தின் போதே அப்பாவுக்கும் கணவன் வீட்டார்க்கும் மனஸ்தாபம். உறவு கெட்டுப் போய் விட்டது.
அத்தை தன் சகோதரன் வரட்டுமே என்று தவித்து அங்கலாய்க்கிறாள் இப்போது.
கணவன் வீட்டாரோ பச்சை தண்ணீர் கூட இந்த வீட்டில் குடிக்கத் தயாராயில்லை. சாப்பிட வேண்டிய குழந்தை விசாலியை அழைத்துக்கொண்டு வண்டியில் கிளம்ப தயாராகிறார்கள்.
விசாலி உடனே தீர்மானிக்கிறாள். ’அத்தை, அப்பா கிட்ட நான் கிளம்பிட்டேன்னு சொல்லிடு.’
கணவன் வீட்டுக்கு கிளம்ப ஆயத்தமாகிறாள். என்ன ஒரு தீர்மானம்.
என்னால் மேலே உரக்க வாசிக்கவே முடியவில்லை. கண்ணை நீர் மறைக்கிறது. தொண்டையில் இருந்து குரல் வரவில்லை.
ஒரு வழியாக சில நிமிடங்கள் உறைந்து விட்டு நிலை கொண்டு மீண்டும் கவனமாக வாசித்து முடிக்க முயன்றும் சிரமமாகவே இருந்தது.
என்ன ஒரு கதை. எத்தனை முறை வாசித்த கதை.
எத்தனை வருடங்கள் கழித்து வாசித்தாலும் நெஞ்சை அடைக்கும் கதை.
இதெல்லாம் சென்ற நூற்றாண்டின் கதை. இது இப்ப தேவையா? என்றெல்லாம் விகார மூளைகள் விவாதம் செய்யட்டும்.
தி.ஜாவின் கதைகள் அந்த கால கட்டங்களின் வரலாற்று ஆவணங்கள். உன்னத மனத்தால் மட்டுமே இப்படி காட்சிப்படுத்த முடியும்.
………………………

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.