Share

May 2, 2019

இசைப்பேரறிஞர் மதுரை சோமுவின் விழா


மதுரை சேம்பர் ஆஃப் காமர்ஸ் கட்டிடத்திற்கு நான் 1983ம் ஆண்டு மதுரை சோமு கச்சேரி கேட்பதற்காக போயிருக்கிறேன். அதன் பிறகு 36 வருடங்களுக்குப்பிறகு இப்போது ஏப்ரல் 28ம் தேதி மதுரை சோமு நூற்றாண்டு விழாவில் தொடக்கவுரை நிகழ்த்துவதற்காக. எனக்கு சிலிர்ப்பு ஏற்பட்டது. Everything is governed by an intelligence and not by chance. 

சோமு கச்சேரியின் போது ஜெயகாந்தன் முதல் வரிசையில். அதே வரிசையில் ஒரு இரண்டு சீட் தள்ளி தான் நானும் A.K.ரவியும் அமர்ந்திருந்தோம்.
 சோமு பாடும் போதே பாடலில் ஒரு வரியாக 'எங்கள் ஜெயகாந்தா' என்று முன் வரிசை எழுத்தாளரை பார்த்து பாடினார். ஜெயகாந்தன் அதற்கு தலை வணங்கி சோமுவை அப்போது நமஸ்கரித்தார். மறக்க முடியாத காட்சி.
சோமு பாடும் போது ரொம்ப அற்புதமான அனுபவமாய் எப்போதும் இருக்கும். ஒரு கீர்த்தனையின் போது பக்கவாட்டில் ஒரு சில வினாடிகள் படுத்து விட்டார்.
”என்ன கவி பாடினாலும்” பாடினார்.
நாட்டக்குறிஞ்சி 'மாணிக்க மூக்குத்தி அலங்காரி'யும்.

சோமு கச்சேரி காட்சியின்பம். குருநாதா என்பார். முருகா என்பார். வயலின் வாசிப்பவரை பார்த்து பாராட்டாக “ஐயோ” என்பார். எதிரே உட்கார்ந்திருப்பவரோடு பேசுவார். சமிக்ஞை செய்வார். குழந்தைமையும் கள்ளமின்மையும் கொண்ட ஜீவன். 
The child in him was battling with the man in him.
நாடகக்கலையையும் இசைப்பாட்டில் இணைத்தவர். Undoubtedly, Madurai Somu was a theatre personality.


நூற்றாண்டு விழாவில் நீதியரசர் அரங்க மஹாதேவனின் சந்திப்பு இனிய நிகழ்வு. என்னை சந்தித்தவுடன் நான் முப்பது வருடங்களுக்கு முன் எழுதிய கடிதம் பற்றி குறிப்பிட்டு என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
விழா முடிந்தவுடன் என்னிடம் “உங்களுக்கு இன்னொரு சர்ப்ரைஸ். நீங்கள் எழுதிய கடிதம் என்னிடம் இருக்கிறது” என்று நீதியரசர் சொன்ன போது என்ன பதிலும் சொல்ல முடியாமல் அசந்து போய் விட்டேன்.

அவருடைய தந்தை ம.அரங்கநாதனின் ”வீடு பேறு” சிறுகதை தொகுப்பு எத்தகைய கனமான ஒன்று. ”பொருளின் பொருள் கவிதை” என்ற மற்றொரு நூலும்.
அரங்கநாதன் நடத்திய ”முன்றில்” பத்திரிக்கையின் சந்தாதாரர் நான். க.நா.சு முன்றில் பத்திரிக்கையில் அப்போது எழுதிய கட்டுரையொன்றில் “ஊரெல்லாம் விபச்சாரிகள் என்று தி.ஜானகிராமன் மாதிரி கதையெழுதி விடுகிறார்கள்” என்ற ஒரு வரியால் துடித்துப்போய் நான் அந்த வயதின் ஆவேசத்தை காட்டி ஒரு கடிதம் 1988 டிசம்பர் 1ம்தேதி அவருக்கு எழுதி அதை ஜெராக்ஸ் செய்து முன்றில் உட்பட 200 பேருக்கு போஸ்ட் செய்தேன். டிசம்பர் 16ம் தேதி க.நா.சு மறைந்தார் என்பதெல்லாம் மறக்க முடியுமா?

முன்றில் பத்திரிக்கையின் முழுப்பொறுப்பும் அன்று அரங்கநாதனின் மகன் தான் சுமந்தார். பிழை திருத்தம் துவங்கி தபாலில் பத்திரிக்கை பிரதிகளை சேர்ப்பது வரை பார்த்து பார்த்து பத்திரிக்கையை நடத்தியவர் தான் இன்றைய உயர் நீதி மன்ற நீதிபதி மஹாதேவன்.
இன்னொரு விஷயம். பிரமிளின் நெருங்கிய நண்பர்.
விழாவில் நீதியரசர் மஹாதேவனின் பேச்சு மிகவும் பிரமிக்கும்படி அமைந்தது. தெளிந்த நீரோடை போல அப்படி ஒரு அருமையான பிரசங்கம். மதுரை சோமுவிற்கு முழுமையான அஞ்சலி.

என்னிடம் மொபைலில் பேசும்போது சொன்னார் ”சார் என்று கூட வேண்டாம். மஹாதேவன் என்றே சொல்லலாம்.” A great man is always willing to be little.


வழக்கறிஞர் பா.அசோக் என்னிடம் காட்டிய அன்பு பற்றி நான் விவரிக்கவே கூடாது. ஸ்தம்பித்துப்போய் அவரிடம் என்ன பேசுவது என்று திகைத்து நிற்கிறேன்.
எனக்கு ஒரு மகன் தான் அசோக். என்னை ரொம்ப நேர்த்தியாக சபைக்கு அறிமுகப்படுத்திய அழகு. “ குடத்தில் இட்ட எரிமலை ராஜநாயஹம்” 

அசோக் அவர்களின் சித்தப்பா பி.வரதராஜன் விழாவை பிரமாதமாக நடத்தினார்.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.