Share

May 29, 2021

மூனு எளனி

 2018 


மினி பஸ், சிட்டி பஸ், ஷேர் ஆட்டோ என்று 

ஸ்ரீ ஐயப்ப நகர் ஸ்டாப்பில் இறங்கியவுடன்

 இளநீர் ஒரு வண்டியில். 

இளனிக்கார ஆளை காணவில்லை. 


பார்வையை ஓட்டுகிறேன். 


பக்கத்தில் ஆட்டோக்காரர் சவாரி ஏதாவது கிடைக்காதா என்று காத்திருப்பவர் 

எழுந்து வந்தார்.


“சார்,அவன் டீ சாப்பிட போயிருக்கிறான்.”


சரி, வெய்ட் பண்றேன்.


ம்ஹும். ஆளக்காணோம்.


என்னை விட அந்த ஆட்டோக்காரர் 

ரெஸ்ட்லெஸ் ஆகி விட்டார்.

“இருங்க சார், நான் போய் கூட்டி வர்றேன்.”


இருபது கடை தாண்டி இருக்கும் ஐயப்பநகர் மெயின்ரோட்டு முனையில் இருக்கும்

 டீக்கடைக்கு ஓடுகிறார்.


அவரையும் கொஞ்ச நேரம் காணோம். 

சரி வேண்டாம்னு எனக்கு கிளம்ப மனசில்லை.


 எனக்காகவும் இளனிக்காரருக்காகவும் 

இப்படி சம்பந்தமேயில்லாத ஆட்டோக்காரர் மெனக்கெடும்போது 

நான் பொறுமை காப்பது தான் நியாயம்.


ஷேர் ஆட்டோக்களும், மினி பஸ்ஸும், சிட்டி பஸ்களும், ஃபாஸ்ட்ராக், ஓலா, உபர் கால்டாக்ஸிகளும் இருக்கும் ஊரில் 

ஒரு ஆட்டோக்காரரின் தொழில் தான் எத்தனை போராட்டமானது?


கொஞ்ச நேரத்தில் ஆட்டோக்காரர் ஓடி வருவது தெரிந்தது. வரும்போதே என்னைப் பார்த்து 

கை காட்டிக்கொண்டே தான் வந்தார்.


“சார், டீ குடிச்சிட்டு இருக்கான். 

நான் சொல்லிட்டேன். இப்ப வந்துடுவான். போயிடாதீங்க”


“ அதெப்படிங்க நான் போக முடியும். நீங்க இப்படி எனக்கு ஒரு எளனி குடிக்க, 

அந்தாளுக்கு ஒரு எளனி விக்க வேண்டி சிரமப்படுகிற போது 

உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதுன்னே தெரியலே.”


கொஞ்ச நேரம் கழித்து எளனி வண்டிக்காரர் 

ஓடி வந்தார். வரும்போதே இங்கே ஆட்டோக்காரர் ‘எளனி குடிக்க ஆள் இன்னமும் நிக்கிறார்’ என்று கையால் சிக்னல் செய்தார்.


நான் சொன்னேன் “ ஆட்டோக்காரர் பாரு, எவ்வளவு நல்ல மனசு. ஒன் வியாபாரத்துக்கு எவ்வளவு மெனக்கிடுறார்.”


பரிதாபமான பஞ்ச தோற்றத்தில் எளனிக்காரர்.


 காலை சாப்பாடே அந்த டீயாகத்தான் இருக்கும் என்பது நிச்சயம்.


”ஆட்டோக்காரருக்கும் ஒரு எளனி கொடு.

 நான் காசு கொடுத்திடுறேன்.”


ஆட்டோக்காரர் வேண்டவே வேண்டாம் 

என்று மறுத்தார். 

நான் ஆட்டோக்காரரும் குடிக்க வேண்டும் என்று பிடிவாதம் செய்து எளனி வாங்கிக்கொடுத்தேன்.


“ ஒரு எளனிக்கு ஒனக்கு என்ன கிடைக்கும்?”


“ நாலு ரூபா சார். ஓனருக்கு ஒரு எளனிக்கு

 ஐந்து ரூபா”


நான் ரெண்டு எளனி காசை கொடுத்து விட்டு இன்னொரு நாலு ரூபா சேர்த்துக்கொடுத்தேன்.


’எதுக்கு சார்?’


”ஒனக்கு மூனு எளனி வித்த லாபம் 

கிடைச்சதா இருக்கட்டும்.”


..

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.