Share

Jun 21, 2020

ஏ. எல். ராகவன்

ஏ. எல். ராகவன் மறைந்து விட்டார் என்ற செய்தியை எனக்கு தெரியப்படுத்தியவர் கவிஞர் வைத்தீஸ்வரன். 

'கல்லும் கனியாகும்' படத்தை டி. எம். எஸ்ஸுடன் இவர் இணைந்து தயாரித்து இரண்டாவது கதாநாயகனாக நடித்த போது, நடிப்பு என்பது பின்னணி பாடகர்களான இருவருக்குமே சாத்தியப்படவில்லை. 
 ராகவன் முக லட்சணம் காரணமாக ' இவர் நடிகராக ஒரு ரவுண்டு வர முடியும்.' என்று
 ஒரு பத்திரிகை குறிப்பிட்டதுண்டு. 

பார்த்தால் பசி தீரும் படத்தில் 
'அன்று ஊமை பெண்ணல்லோ ' பாடல் நிறைய வித்தியாச தன்மை கொண்ட விரிவான பாடல். 
இதை அற்புதமாக, அசத்தலாக பாடியிருக்கிறார். 
குரல் கூட ஜெமினி கணேசனுக்கு பிசிறேயில்லாமல் நேர்த்தியாக
 பொருந்தியது தான் விசேஷம். 

இவர் பாடியதில் உச்சம் தொட்ட பாடல்' அன்று ஊமை பெண்ணல்லோ. '

' எங்கிருந்தாலும் வாழ்க ' 
ஒரு பிரமாதமானதென்று சொல்ல வேண்டும். 

ஜெமினி கணேசன், பாலாஜி, முத்துராமனுக்கெல்லாம் பாடியவர். 

எம் ஆர் ராதாவுக்கு ஒரு பாடல் "புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை... அட அசட்டு பய புள்ள ஆராரோ"

பாலாஜிக்கு பாடிய' பட்டு சிறகு கொண்ட சிட்டுக் குருவி ஒன்று பக்கத்தில் வந்து நின்ற போது... '
சரணத்தில்' தேர் கொண்டு வந்ததோ, தேனள்ளி தந்ததோ, வானத்தில் தூது சென்றதோ ஓஓஓ, வானத்தில் தூது சென்றதோ '

நாகேஷுக்கு நிறைய பாடினார். 
ஏ. எல். ராகவன் குரலும், பாவமும் அட்டகாசமாக நாகேஷுக்கு என்றே வார்த்தாற் போல பொருத்தம். 

சீட்டு கட்டு ராஜா, ராஜா பாடலில் ' ஊட்டி மலை ரோஜா ரோஜா, '

' குபு குபு குபு குபு நான் எஞ்சின்,
டக்கு டக்கு டக்கு டக்கு நான் வண்டி 

இஞ்சின் வேகம் இளமையின் வேகம் 
என் பின்னாலே தொடராதே 

இஞ்சின் மட்டும் ரயிலாகாது 
என்னை விட்டு போகாதே '

' வாழைத் தண்டு போல உடம்பு அலேக் 
நான் வாரியணைச்சா வழுக்குறியே நீ அலேக் '

நவக்கிரகம் படத்தில் நாகேஷுக்கு 'எல்லாமே வயத்துக்கு தான்டா, இல்லாத கொடுமைக்கு தான்டா. 
அதிலேயே இன்னொரு பாடல் பரீட்சார்த்தமாக பாலசந்தர் வைத்தார். 
ஏ. எல். ராகவன்' பேசுங்க சார் 'ன்னு ஆரம்பித்து' நாய் வாலை நிமிர்த்தி வைக்க ஆன மட்டும் பாடு பட்டேன் 'ன்னு பாடலை முடித்திருப்பார்.

ஆங்கில உச்சரிப்புள்ள பாடல்களில்  சாதனையே செய்தவர். 

சந்திர பாபுவின் 'ஹலோ மை டியர் ராமி' யில் சரிக்கு சரி 'சைனா பஜாரு நைனா உஷாரு' மெட்ராஸ் பாஷையில் கலக்கியிருப்பார். 

அன்பே வா 'ஒன்ஸ் எ பாப்பா மெட் எ மாமா இன் எ லிட்டில் டூரிஸ்ட் பஸ்.' தூள். 

குழந்தையும் தெய்வமும் -' சன்டே பிக்சர், மன்டே பீச்சி, ட்யூஸ்டே சர்க்கஸ், வென்ஸ்டே ட்ராமா.. டூடூடூ டூடூடூடுடு பாமா '

நான் யார் தெரியுமா பாட்டில்' ஸ்டாப் தட் ' என்று நுழையும் குரலில் ஒரு ஆப்பிரிக்க பாடலை என்ன ஒரு வேகத்துடன் பாடியிருப்பார் தெரியுமா? 

சௌராஸ்டிரரான ராகவன்
 அதே கண்களில் 
' சொட்டிஜா, சொட்டிஜா, சொட்டிஜா 
ஏ சொன்னவா, சொன்னவா, சொன்னவா '

' எவ்வளவு பாடல்கள் சார் சினிமாவில் பாடினீர்கள்? ' என்று நான் கேட்ட போது
 சற்று நிதானித்து ராகவன் சொன்னார்
 "  ஒரு ஐநூறு இருக்கும்" 

பழம்பெரும் நடிகை எம். என். ராஜத்தின் கணவர் என்பது One more feather in his cap. 

........ 

பழங்கதையாய் கனவாய் 
- R. P. ராஜநாயஹம் 

சென்னையில் ஹேமா மாலினியின்
 ரிக்கார்டிங் தியேட்டர்.

  ஹிண்டு ரங்கராஜன் தயாரித்த படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தி பெங்களூரில் நடித்த காட்சிகளுக்கு டப்பிங் பேசுவதற்கு வந்திருந்தார்.

பேசி முடித்து விட்டு தியேட்டரின் உள்பகுதியிலிருந்து வெளியே வந்தவுடன் வெண்ணிற ஆடை மூர்த்தி என்னிடம் 
“ என்னை நேராக இருந்து பார்க்காமல் பக்கவாட்டில் இருந்து  பாருங்கள். அப்படிப்பார்க்கும்போது 
நான் ‘வாத்து’ போலவே இருப்பேன்”
 
மேக்கப்பில்லாமல் இருக்கும் மூர்த்தி முகம் இன்னும் எனக்கு நினைவிருக்கிறது.

டப்பிங் தியேட்டரில் இருந்த ஜெயா சக்ரவர்த்தி (ஹேமாமாலினியின் தாயார்)யிடமும் தன்னை பக்கவாட்டில் இருந்து பார்க்கும்போது 
வாத்து போலவே இருப்பதை ஊர்ஜிதமாக வெண்ணிற ஆடை மூர்த்தி மீண்டும் சொன்னார்.

வெண்ணிற ஆடை படத்தில் அறிமுகமான காலத்திலிருந்து   எவ்வளவு உற்சாகமாக நடித்துக்கொண்டிருந்த நடிகர். 

நாகேஷ்,
தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன்,
கவுண்டமணி, ஒய்.ஜி.மகேந்திரன், 
ஜனகராஜ், விவேக்,
வடிவேலு என்று காமெடி கிங் ஆக 
மார்க்கெட்டில் டாப்பில் யார் இருந்தாலும் சளைக்காமல் அவர்களுக்குத் துணையாக 
நின்று ‘சள,சள’ என்று, வழ,வழ வசனம் பேசிக்கொண்டிருந்தவர்.

ஹேமாமாலினி தியேட்டருக்கு அப்போது காரில் பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் (எம்.என்.ராஜத்தின் கணவர்) வந்தார்.

 அந்த நேரம் அவர் ஒரு படம் எடுத்துக்கொண்டிருந்தார்.

 இந்த படம் இன்னும் அடுத்த சில மாதங்களில் அவருக்கு பெரும் நஷ்ட த்தைக்கொடுத்து அவரையும் நடிகை எம்.என்.ராஜத்தையும் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கி விட்டது.

என்னையும் சுப்ரமண்ய ஐயரையும் அவர்  காரில் ஏறிக்கொள்ளச்சொன்னார். 

நான் வேலை செய்யும் பட டைரக்டர் பெயரைச் சொன்னபோது “ அப்படி ஒரு டைரக்டரா?” என்றார்.
 அவருக்கு  டைரக்டரைத்தெரியவில்லை.

 இது தான் சினிமா உலகம். இத்தனைக்கும் அந்த டைரக்டர் அப்போது இயக்கி பதினொரு வருடத்தில் நான்கு படங்கள் வெளி வந்திருந்தன.

ஏ.எல்.ராகவனிடம் சொன்னேன். “ நீங்க பாடிய பாடல்களில் மாஸ்டர் பீஸ்
‘எங்கிருந்தாலும் வாழ்க’ தான்.

 'நான் யார் தெரியுமா?' ஜெய்சங்கர் படத்தில் 
இவர் ஒரு பாடலில் விசித்திரமாக
 ஆப்பிரிக்க மொழியில் பாடியிருப்பார்.
அந்த பாடலைப்பற்றி கேட்டேன். 

https://www.youtube.com/watch?v=4RnGvxOAd6k
 
 ஏ.எல் ராகவன் “ஒரு நாள் வீட்டுக்கு வாங்க.”

எஸ்.பாலச்சந்தரின் “அந்த நாள்".
 அதில் ஏ.எல்.ராகவன் நடித்திருப்பதைப்பற்றி நான் சொன்னவுடன் அவருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.
”ஃபீல்டுல யாருக்கும் தெரியாத விஷயமெல்லாம் எப்படி தெரிஞ்சி வச்சிருக்கீங்க”

சுப்ரமண்ய ஐயர் “ எனக்கு இந்தப் பையனப்பார்க்கும்போதெல்லாம் இது தான் பிரமிப்பு.என்சைக்ளோபீடியா. 
இந்த வயசுக்கு தெரியாத பல விஷயங்கள் ராஜநாயஹத்துக்குத்தெரிஞ்சிருக்கு”

பாண்டி பஜாரில் காரில் இருந்து இறங்கும்போது ஏ.எல்.ராகவன் வாஞ்சையுடன் “ ராஜநாயஹம், அவசியம் நீங்க எங்க வீட்டுக்கு வரணும்!”

கமலா தியேட்டரில் ராகவன்- ராஜம் தம்பதியரின் சொந்தப்படம் காற்றாடிக்கொண்டிருந்த போது தூரத்தில் அங்கே தியேட்டரில் நின்று கொண்டிருந்த டைரக்டரை ராகவன்  திட்டினார். 

நூல்வேலி படத்தில் வரும் பங்களா
 இவர்கள் சொத்து. 
அதை இந்த படத்தயாரிப்பு காரணமாக 
இழக்க நேரிட்டது. 

ஏ.எல்.ராகவன் தயாரித்த
 அந்த பட த்தில் அஸிஸ்டண்டாக சேர்க்க
 என் பெரியப்பா
 திருச்சி டிஸ்ட்ரிப்யூட்டர் சுகுமார் மூலமாக
 என்னை அழைத்துச்சென்றிருந்தார். 

வீட்டில் நுழையும் போது எம்.என்.ராஜம் மாடியில் துணிகள் காயப்போட்டுக்கொண்டு இருந்தார்.

என் பெரியப்பா காரில் இருந்து இறங்கியவுடன் 
மேலே பார்த்து அடையாளம் கண்டு "அம்மா, வணக்கம்மா" என்ற போது சிரித்த முகத்துடன்
 எம். என். ராஜம் பதில் வணக்கம் சொன்னார். 

 ஏ.எல்.ராகவனும் எம்.என்.ராஜமும் கட்டாயம் என்னை தாங்கள் தயாரிக்கும் பட த்தில் 
உதவி இயக்குநராக சேர்த்துக்கொள்ள 
டைரக்டரிடம் சிபாரிசு செய்வதாக
 முழு மனதோடு தான் சொன்னார்கள். 

ஆனால் டைரக்டர் மறுத்து விட்டார்.

 அதன் பின் தான் ஹிண்டு ரங்கராஜன்
 தயாரித்த படத்தில்
 நான் உதவி இயக்குனரானேன்.

...

https://m.facebook.com/story.php?story_fbid=2733065920240190&id=100006104256328

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.