Share

Feb 17, 2020

வெஜ்ஜி - நான் வெஜ்ஜி

சின்ன ப்பியாரஸ் எங்க பள்ளியில் ஒரு ஆசிரியர். பிராமணர்.
P. R. சேதுரத்னம். ஆங்கில ஆசிரியர்.
பேசும்போது  வலது கை விரல்களால் தன் இடது உள்ளங்கையில் ஒரு தட்டு தட்டி விட்டு "அடேய்" என்று மாணவர்களை விளிப்பார்.

 இவருடைய அண்ணாவும் எங்கள் பள்ளியில் ஆசிரியர்.
 பெரிய ப்பியாரஸ்.
P. R. சுவாமிநாதன். விஞ்ஞான ஆசிரியர்.
இருவருமே நல்ல முதியவர்கள். ரிட்டயர்மெண்ட்டுக்கு பிறகும் பள்ளியில் ஆசிரியராக நீடிக்க நிர்வாகம்
இந்த சகோதரர்களுக்கு அனுமதியளித்திருந்தது.

சின்ன ப்பியாரஸ், "அடேய், ராஜநாயஹத்தை பார்க்காதீர்கள். அவன் ஒரு லூசு. Mischievous boy.
Blundering boy.  அவனுடைய slapstick comedy, jokes உங்கள் கவனத்தை படிப்பிலிருந்து திசை திருப்பி விடும். You should avoid this 'watching Rajanayahem temptation' "

 ஆனால்  வகுப்பு தோழர்களுக்கு  வகுப்பு நடக்கும் போது என்னை கவனிக்காமல் இருப்பது சாத்தியப்படாத விஷயமாய் இருந்தது.

அவர் எப்போதுமே non - vegetarians பற்றி ஒன்று சொல்வார்.

" அடேய், மாமிசம் சாப்பிறவாளாலே தான் காய்கறி விலை ஒரு கட்டுக்குள் இருக்கிறது. அவாளெல்லாம் வெஜிட்டேரியனா மாறிட்டான்னா, லோகத்தில காய்கறி விலையெல்லாம் வாங்க முடியாதபடி ரொம்ப டிமாண்ட் வந்துடும் "

வீடு வாடகைக்கு தேடும் போது பல இடங்களில் வெஜிட்டேரியனா இருந்தா தான் என்ற சட்டத்தை பார்க்க வேண்டியிருந்தது.

Non vegetarian என்பது ஒரு உணவுப் பழக்கம்.
கெட்ட பழக்கம் போல ஏன் முத்திரை குத்தப் படுகிறது?

 வெஜிட்டேரியன் எப்போதுமே காய்கறி தான் சாப்பிடுவார்கள். ஆனால் மாமிசம் சாப்பிடுபவர்கள் காய்கறியும் சாப்பிடுவார்கள். சொல்லப்போனால் பெரும்பான்மையோர்
 வாரம் ஒரு முறை வீட்டில் non-veg சாப்பிடுபவர்கள். அவ்வளவு தான் வசதி.

இதில் ஒமட்டுது, வாந்தி வருதுன்னு அருவருப்பு  சைவம் சாப்பிடறவங்களுக்கு என்னத்துக்கு?

முஸ்லிம்கள் மாட்டுக்கறி சாப்பிடுவது ஆர். எஸ்.எஸ், பி. ஜே பி காரர்களுக்கு ஆபாசமாக தெரிகிறது.
முஸ்லீம்களுக்கு பன்றிக் கறி ஆகாது. பன்றின்னு வாயால சொன்னாலே ஹராம்.

கிறிஸ்தவர்கள் மாட்டுக்கறியும் சாப்பிடுவார்கள். பன்றிக் கறியும் விரும்பி சாப்பிடுவார்கள்.
சீனாக்காரனுக்கு எதுவுமே தள்ளுபடி கெடையாதே. வளச்சி வெட்டுவானே.
படைத்தான் படைப்பெல்லாம் மனுவுக்காக.

என்னுடைய இளைய மகன் அஷ்வத். இவனுடைய ஆஃபிஸில் ஒரு கலீக். அன்பரசன்.

லஞ்ச் சாப்பிடும் போது அன்பரசன் கர்சிஃபை எடுத்து தன் மூக்கில் வைத்துக் கொண்டு, சைவம் சாப்பிடும் ஒருவரைப் பார்த்து சொல்வது
" ஏங்க அந்தாள எந்திரிச்சு அடுத்த ரூமுள போய் ஒக்காரச்சொல்லுங்கங்க. தயிர் சாத நாத்தம் ஒமட்டிக்கிட்டு வருது. யோவ் ஏய்யா சித்ரவத பண்ற.. போய்யா அடுத்த ரூமுக்கு."

எங்காவது ஆஃபிஸ் பார்ட்டிக்கு ரெஸ்ட்ரெண்ட் போனால் கூட பேரரிடம் சைவ மனிதரை காட்டி "இந்தாளுக்கு பக்கத்திலே எங்கயாவது சாம்பார் சாதம், தயிர் சாதம் வாங்கி கொண்டாந்து கொடுங்க. என்னாது வெஜிடபிள் ரைஸ் போதுமா..
யோவ் நீ நாலு டேபிள் தள்ளி போய் ஒக்காந்துக்க. என் கண்ணு முன்னாடி ஒக்காந்துடாத. எனக்கு வாந்தி வந்துடும்"

தயிர் சாதமுண்பவரிடம் அன்பரசன் செய்வது, அசைவம் சாப்பிடுபவர்களை பார்த்து முகம் சுளித்து எப்போதும் அருவருப்பவர்களுக்கெதிரான
Shock treatment. எள்ளல். பகடி.

...

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.