Share

Jun 18, 2021

சசிகலா பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது

 ஜெயலலிதா இறந்த பின் அப்போது சசிகலா பொது செயலாளராக கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்ட போது நான் எழுதிய பதிவு :


"அண்ணா திமுக என்ற கட்சிக்கு புதிய பொதுச்செயலாளர் பதவிக்கு நியமனம் பற்றி அறிவு ஜீவிகள், மற்றும் தங்களை கொஞ்சம் விவரமான ஆளாக நினைக்கும் பலருக்கும் அதிர்ச்சி ஏற்பட என்ன இருக்கிறது? 

இந்த கட்சி எந்த நடைமுறை நியாயத்திற்கும் கட்டுப்படாத கட்சி என்பது ஊரறியத் தெரியக்கிடக்கிறது.


எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்திலிருந்து இந்த கட்சி இப்படித்தான் இருந்திருக்கிறது. ஜெயலலிதா அரசியலுக்கு வந்த காலத்தில் தான் வெண்ணிற ஆடை நிர்மலா காரணமாக மேல் சபையே கலைக்கப்பட்டது.

கட்சியில் எம்.ஜி.ஆருக்கு பிறகு முன்னிறுத்த 

எந்த ஆண் தான் அப்போது இருந்தார்?


இன்று மட்டும் அந்த அதிமுகவிற்கு திடீரென்று ரட்சகர் எங்கிருந்து வந்து குதிக்க முடியும்?


தமிழகத்தில் ஜெயலலிதாவுடன் அரசியல் செய்ய வேண்டியிருக்கிறதே என்று சங்கடப்பட்ட காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பிற கட்சிக்காரர்கள் வெளிப்படையாக பேசியிருக்கிறார்கள்.


திராவிட இயக்கம் பெரியாரில் ஆரம்பித்து பாப்பாத்தி ஜெயலலிதாவில் வந்து நிற்கிறதே என்று திகைத்து அங்கலாய்த்தவர்கள் 

எவ்வளவோ பேர்.


ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போதே ’மன்னார்குடிகள்’ கையில் தானே கட்சி இருந்தது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள், பழ.கருப்பையா உள்பட மன்னார்குடி கும்பல் அட்டகாசம், ஆர்ப்பாட்டம் பற்றி பிலாக்கணம் வைக்கத்தானே செய்தார்கள்.


இன்று சசிகலா பொதுச் செயலாளர் என்பதில் என்ன பெரிய ஆச்சரியம்,திகைப்பு, அங்கலாய்ப்பு வேண்டியிருக்கிறது?


கருணாநிதியை எதிர்ப்பவர்கள் எல்லோருக்குமே, ஜெயலலிதாவை ஆதரிப்பவர்கள் அனைவருக்குமே, துக்ளக் சோ உள்பட மன்னார்குடி கூட்டத்தார் பற்றி ஒரு Wilful blindness இருக்கத்தானே செய்தது.


What areas of the skull must be traumatized to cause Selective Amnesia?!


ஜெயலலிதாவுடன் அவ்வப்போது கூட்டணி வைத்த காங்கிரஸ், பா.ஜ.க., நல்லகண்ணு உள்ளிட்ட கம்யூனிஸ்ட்கள், ராமதாஸ், திருமாவளவன், வைகோ, விஜயகாந்த் போன்றவர்களுக்கும் மன்னார்குடி சசிகலா பற்றி ஒரு Selective Amnesia இல்லாமலா இருந்தது?


"O wonder !

How many goodly creatures are there here!

How beauteous Mankind is!

O brave new world!

That has such people in it!"


-Shakespeare in ‘ Tempest’


2011 டிசம்பரில் சசிகலா போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றப்பட்ட போது இதற்கு காரணம் சோ ராமசாமி தான் என்றார் சசிகலா.


 ஜெயலலிதா திட்டி வெளியே போகச் சொன்ன போது அங்கே சிரித்துக்கொண்டு சோ நின்றிருந்தாராம். 

மீண்டும் ’ஜெயலலிதா- சசிகலா உத்தர ராமாயணம்’ 2012 மார்ச்சில் முடிவுக்கு வந்த போது அதை சோ எதிர்த்து விட்டாரா என்ன?


ஹெலி காப்டரை பார்த்து சாஸ்டாங்க நமஸ்காரம் செய்யும் போது அதிமுக மந்திரிகளும், எம்.எல்.ஏக்களும், எம்.பிக்களும் 

ஜெயலலிதாவுடன் இருந்த சசிகலாவுக்கும் தான் மரியாதை செய்திருக்கிறார்கள்.


அதிமுக என்ற ஒரு கட்சி அகில இந்தியாவைப் பொருத்தவரை 

மிகவும் ஒரு விசித்திரமான அமைப்பு.


காமராஜர் உயிருடன் இருந்த போது ஸ்தாபன காங்கிரஸ் தான் எதிர்கட்சி என்றிருந்த போது, அடுத்த பொதுத் தேர்தலில் எப்படியும் காமராஜர் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இருந்த நிலையில் எம்.ஜி.ஆர் அண்ணா தி.மு.க ஆரம்பித்து அமோகமாக கட்சி எழுந்தது.


கூத்தாடி கையில், தமிழன் அல்லாத ஆள் கையில் தமிழ் நாடு போகிறதே என்ற பதைப்பு, அங்கலாய்ப்பு, புலம்பல் தி.மு.கவுக்கு மட்டுமின்றி ஸ்தாபன காங்கிரசுக்கும் தான் அன்று இருந்தது.


 வலது கம்யூனிஸ்ட் கல்யாணசுந்தரம் மட்டும் எம்.ஜி.ஆருக்கு பக்கவாத்தியம்.

திட்ட திட்ட திண்டுக்கல், வைய, வைய வைரக்கல்.


 திண்டுக்கல் இடைத்தேர்தலில் அண்ணா திமுகவின் விஸ்வரூபம் காண முடிந்தது. திண்டுக்கல் பெருவெற்றி என்பது நுட்பமானது. மக்கள் செல்வாக்கை அன்று சுத்தமாக இழந்திருந்த கருணாநிதியை அல்ல, நல்ல செல்வாக்கு பெற்றிருந்த காமராஜரையே பின்னுக்கு தள்ளி விட்டு எம்.ஜி.ஆர் 

எழுந்து நின்றார். 

காமராஜரின் அரசியல் வாழ்வை இல்லாமலாக்கியதில் பெரும்பங்கு 

அதிமுகவிற்கு தான்.


தீப்பொறி ஆறுமுகமும், வெற்றி கொண்டானும், சாதாரண லோக்கல் பேச்சாளனும் கூட அர்ச்சனை செய்தது ஒரு பக்கம்.

எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்த பின் துக்ளக் சோ ராமசாமியால் எம்.ஜி.ஆர் எப்படியெல்லாம் நையாண்டி அர்ச்சனை செய்யப்பட்டார்.’எம்.ஜி.ஆர் ஒரு சரியான காமெடியன்!’


அன்று படிக்காத பாமரனும், கிராமத்துப்பெண்களும் மட்டுமே எம்.ஜி.ஆரை கொண்டாடி அதிமுகவை மனையில் தூக்கி வைத்து விட்டார்கள்.


எம்.ஜி.ஆர் காலத்தில் அவருடைய மந்திரிசபையிலிருந்த க.ராஜா முகமது முன்னாள் மந்திரியான பின் “வண்ண மயில்” என்று ஒரு பத்திரிக்கை நடத்தியதுண்டு. பல இலக்கியத்தரமான விஷயங்கள் அதில் பிரசுரமாகியிருக்கின்றன.

ஜி. நாகராஜனின் “ ஓடிய கால்கள்” கதை அதில் வெளியிட்டிருந்தார்கள்.


ஜெயலலிதா காலத்தில் நடராஜன் ( சசிகலாவின் கணவர்) ’புதிய பார்வை’ என்ற தரமான பத்திரிக்கை நடத்தியிருக்கிறார். நிறைய எழுத்தாளர்கள் இதிலும் எழுதியிருக்கிறார்கள்.

புதிய பார்வை இன்னும் வருகிறதோ என்னவோ? அவரை ’புதியபார்வை’ ஆசிரியர்  நடராஜன் என்று தான் இப்போதும் குறிப்பிடுகிறார்கள்.


ஜெயலலிதா போல் போராட வேண்டிய அவசியமே இல்லாமல் இன்று சசிகலா கையில் கட்சி.


Cake walk! It happened to be an easy accomplishment for her to become a leader of the biggest party! Very Strange! 

முதலமைச்சராகவும் வரவேண்டும் என்று முழு கட்சியும் மன்றாடுகிறது. மன்றாடாத யாரும் கட்சியில் இருக்கவே முடியாதே. 

சசிகலாவான்னு முகம் சுளிக்கிறவனெல்லாம் அதிமுகவுக்கு வெளியே இருக்கறவனும், கட்சியை விட்டு வெளியேற வேண்டியவனும் தான்.


கருணாநிதி திமுக தலைவரானப்ப கூட முகம் சுளித்தவர்கள் இல்லையா என்ன? சோனியா காங்கிரஸ் தலைவர் ஆனப்ப வெளி நாட்டுக்காரியா தலைவி என்ற 

முக சுளிப்பும் அருவருப்பும். 

பிஜேபிக்கு மோடி தலைவரானப்ப முக சுளிப்பு இல்லையா?( பிஜேபிக்கு பிரசிடெண்ட் யாராயிருந்தாலும் பிரதமர் மோடிக்கு கீழே தானே? தலைமைப்பதவி மோடிக்குத்தானே?)

 எந்த கட்சியில் தான் தலைமைப் பதவி

ஆயாசமின்றி, சலிப்பின்றி நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.


’சசிகலா குரல் கூட கேட்க கிடைத்ததே இல்லை. இவர் பேட்டி கொடுப்பாரா?கட்சி கூட்டத்தில் பிரசங்கம் செய்வாரா’ என்றெல்லாம் வியாக்னங்கள்…

பொதுச் செயலாளர் நியமனத்திற்குப் பின் மேடைப்பேச்சு. கன்னிப்பேச்சு. குரல் சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்துள்ளது!


அண்ணா திமுக ஒரு வினோத உலகம். கட்சியின் இரண்டாவது தலைவரும் பெண். இன்று மூன்றாவது தலைவரும் பெண்.


இன்றைய தமிழக முதல்வர் உட்பட கட்சியின் பிற இரண்டாம், மூன்றாம் மட்டத்தலைவர்கள் தரை மட்டமானவர்கள்.

கீழ் படிதல் என்பது இவர்களை பொருத்தவரை        ”தலை” கீழ் படிதல். விசுவாசத்தின் விரிவான தன்மையை மட்டுமே போட்டி போட்டுக்கொண்டு வெளிப்படுத்தக்கூடியவர்கள். 


ஒருத்தன் தும்பிக்கய தரையில ஊனி நாலு காலையும் தூக்கி சங்கு சக்கரமா சுத்தினா, இன்னொருத்தன் மரத்தில வால தொங்கப் போட்டு ஊஞ்சலாடுவான்.


எதிர் நிலை எடுக்கவே மாட்டார்கள். 

புளி மூட்டைகள்.

Consistency is the hallmark of Mediocrity.


வைகோ தீவிரமாக அதிமுக ஏஜண்ட் ஆக செயல் படுவதால் தான் நாஞ்சில் சம்பத் வெளியேறும் நிலை! இது தான் உண்மை. ரோஷம், தன்மானம் எல்லாம் கிடையாது! ஏற்கனவே கட்சியில் ஜெயலலிதாவால் தலையில் குட்டுப்பட்டு இருந்தவர் தான் Innocent Innova!


பா.ம.க, மதி.மு.க, தே.மு.தி.க, போல Booth, Stall, kiosk என்றால் ரோஷப்பட்டு பெரும், கடும் அறிக்கை விட்டு மயிரே போச்சுன்னு வெளியேறலாம்.


(தமிழக) காங்கிரஸ், (தமிழக) பா.ஜ.க போல அதிமுக என்ன ஓட்டை வண்டியா?


துபாய் போல கொழிக்க வழி வகையுடைய ரெட்டை இலையை விட்டு வெளியேற பைத்தியமா பிடித்திருக்கிறது? என்ன வேண்டுமானாலும் எவன் வேண்டுமானாலும் “ அடிமை” என்று ஏசிக்கொள்ளட்டும்.


உண்மையில் அதிமுகவில் சுகம் அனுபவிக்கும் மந்திரிகள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களா அடிமைகள்? அவர்களால் ஆளப்படும்

 இழி நிலையிலிருக்கும் 

இந்த ’எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்கள்’ அல்லவோ அடிமைகள். 


’சோரம் செய்திடாமே, தீமை செய்திடாமே ஊரை ஆளும் முறைமை ஓர் புரத்திலும் இல்லை’ பாரதி சொல்லியிருக்கிறானே?


சசிகலா ஒரு Soft Target. ஒரு வகையில் எவ்வளவு ஆண்டுகளாக மிகக் கடும் விமர்சனங்கள். இன்று அதன் உச்சம். எல்லார் வாயிலும் விழுந்து கொண்டு…

முதல்வர் ஓ.பி.எஸ் மற்றொரு soft target. ஆனாலும் பதிலுக்கு சவாலாக, கோபமாக ஒரு வார்த்தை பேசி இன்று வரை பார்த்ததில்லை. ’பவ்யம் பாவ்லா’ பன்னீர் செல்வம். 

வெட்டிபயலெல்லாம் என்னமா சவடால் விடுறான்.

பன்னீர் எப்போதும் சித்தர் போல ஒரு பார்வை."


...

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.