Share

Sep 21, 2020

செருகளத்தூர் சாமா

 செருகளத்தூர் சாமா 


தஞ்சை மாவட்ட கிராமம் செருகளத்தூர். 


சென்னை காங்கிரஸ் அலுவலகத்தில் 

ஒரு ரெண்டு மாதம் குமாஸ்தா. 

அதன் பின் காஸ்மாபாலிட்டன் கிளப்பில் குமாஸ்தா. 


இவருக்கு மூன்று பெண் புத்திரங்கள். 


இந்த செக்கு மாட்டு குமாஸ்தா வேலையில் இருந்து விடுபட்டு 

தமிழ் திரையுலகில் 1930களில் நுழைகிற வாய்ப்பு. 


சாஸ்த்ரீய சங்கீத ஞானமிக்கவர். 


முதல் படத்தில் நாரதராக நடித்தார். 

கிருஷ்ணர் வேடத்தில் மூன்று படங்கள். 


1937ல் சிந்தாமணியில் கிருஷ்ணராக

 இவர் பாடினார். 


அம்பிகாபதியில் கம்பராக 

செருகளத்தூர் சாமா. 


அப்புறம் மூன்று படங்கள் தானே தயாரித்து இயக்கி, முக்கிய பாத்திரத்தில் நடித்தவர். 

ஷேக்ஸ்பியர் மெர்ச்சண்ட் ஆஃப் வெனிஸ் 

'ஷைலக்' 1940ல்


'சுபத்ரா அர்ஜுனா' 1941 


' ராஜ சூயம்' 1942 


சொந்தமாய் தயாரித்த படங்கள் கை கொடுக்கவில்லை. 


1942ல் நந்தனாராக நடித்த தண்டபாணி தேசிகருக்கு இணையான கதாபாத்திரத்தில் வேதியராக சாமா நடித்தார். 

மயிலாப்பூர் ரமணி 

 ஒரு காட்சியில் பரம சிவனாக தலை காட்டினார். மயிலாப்பூர் ரமணி யார் தெரியுமா? நடிகர் ரஞ்சன். கொத்தமங்கலம் சுப்பு, அவர் துணைவி சுந்தரி பாய் கூட நந்தனார் படத்தில் நடித்திருந்தார்கள். 


ஜெமினி வாசன் தயாரித்த இந்த படத்தில் 

நந்தன் சரித்திரத்தை திரைக்கு எழுதியவர் மணிக்கொடி எழுத்தாளர் கி. ராமச்சந்திரன். 

A. K. ராமச்சந்திரன் என்ற கி. ரா.


தாடியோடு படங்களில் சாமா வர ஆரம்பித்தார். 


செருகளத்தூர் சாமா தாடி பிரபலம். 


தியாக ராஜ பாகவதரின் சிவ கவியில் நடித்துள்ளார். 


பின்னால் ஏழை படும் பாடு, 


எம். ஜி.ஆரின் மர்ம யோகியில் இவர் யோகி. 


மாயா பஜார் 


1962 ல் பட்டினத்தாராக பின்னணி பாடகர் 

டி. எம். எஸ் நடித்த படத்திலும் செருகளத்தூர் சாமா 

நடித்தார். 


இவருடைய மரணம் பற்றி தெரியவில்லை. 


அசோகமித்திரனின் சிறுகதை 'சுண்டல்'. 


அதில் மூன்று பாத்திரங்கள். 


பெருங்களத்தூர் சம்பு, 

நீலகண்டன், 

நாதன். 


மெர்ச்சண்ட் ஆஃப் வெனிஸ் 

'ஷைலக்' என்பதை அசோகமித்திரன் 

'கிங்லியர்' ஆக மாற்றி புனைந்திருக்கிறார். 


"நீ சினிமாக் காரன். தாடியை உருவிண்டு வந்தா ஊரே உன் பின்னால் வரும் "


அன்றைய திரையுலகம் பற்றிய

 ஒரு குறுக்கு வெட்டு தோற்றம் 'சுண்டல்' 

சிறுகதை. 


உதவிக் கரம் நீட்டும் நாதனால் காணக்கிடைக்கும் லாப பணம். 


இன்றைக்கும், புதிய அமைப்பிலும் 

சினிமாவுலகில் நடக்க கூடிய,

 நடக்கிற சாத்தியப்பாடு உண்டு. 


'கிங்லியர் திரைப்பட உலகில் மிகக் குறைந்த இடங்களில் - மிகக் குறைந்த காட்சிகள் காட்டப்பட்ட படங்களில் ஒரு சிறப்பிடம் சம்பாதித்துக் கொண்டது. ' என்ற வரிகளையடுத்து விரிகிற 

நீலகண்டன், சம்பு, நாதன் மூவரின் 

பிந்தைய வாழ்க்கை காட்சி விவரங்கள். 


நான் இந்த கதையை மட்டுமே 

ஒரு பத்து தடவை படித்திருக்கிறேன். 

ஈர்ப்பான சிறுகதை. 

நாவலாக எழுத வேண்டிய

 கரு, களம். 


குமாஸ்தா வேலை பார்த்தவரை பள்ளிக்கூட தலைமையாசிரியராக மாற்றி புனைந்திருப்பார் படைப்பாளி அசோகமித்திரன். 


'எல்லாமே கதைகள். அதே நேரத்தில் உண்மையைச் சாராம்சமாகக் கொண்டவை.'

என்பார் அசோகமித்திரன்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.