Share

Jun 28, 2019

பேய்யி


ஒரு சின்னதான நகரம். பக்கத்திலேயே ஒரு ஐந்து கிலோ மீட்டரில் ஒரு கிராமம். ஒரே ஸ்ட்ரெய்ட் ரோடு. கிராமத்தில் உள்ள சினிமா தியேட்டரில் ‘கும் நாம்’ இந்திப்படம். கொஞ்சம் பழைய படம் தான் என்றாலும் இந்தி படத்திற்கு அப்போதெல்லாம் தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் நல்ல ரசிகர்கள் அதிகம். அதிலும் திகிழ் படம்.
”டேய் இந்திப்படத்தில பாட்டெல்லாம் பிரமாதமா இருக்கும்டா.”
”கலர்ப்படம்னாலே இந்திப்படம் தான்டா ஜோரா இருக்கும், கலர்ல இந்திக்காரன அடிச்சிக்க முடியாதுடா. தமிழ்ல ’சாந்தி நிலையம்’, ’சங்கமம்’ ரெண்டு தான். ரெண்டும் ஜெமினி கணேசன் படம்.”
அந்த சின்ன நகரத்தில் இருந்து ஒரு இருபது பேர் சைக்கிள்ல டபுள்ஸ், சிங்கிள்ஸ்னு கிளம்பி அந்த கிராமத்திற்கு ‘கும் நாம்’ பார்க்க கிளம்பினார்கள். அப்பல்லாம் சைக்கிள் டபுள்ஸ் போனா போலீஸ் கேஸ். சமாளிச்சு பதுங்கி தான் போலீஸ கண்டா சட்டுனு இறங்கி கவனமா தான் ஓட்டனும்.
அதில சிங்கிள்ல போற குருசாமி ஒரு சோடா புட்டி கண்ணாடி. பயங்கர பவரான கண்ணாடி. அந்த கண்ணாடி வழியா குருசாமி கண்ண பாத்தாலே பாக்கறவன் கண்ணு கூசி கண்ணு கலங்கி தண்ணி வந்துடும். குருசாமிக்கும் கண்ணாடிய கழட்டிட்டா முன்னால நிக்கறவன் யாருன்னு அடையாளமே தெரியாது. இதனால அவன் கண்ணாடிய பின்னால நின்னு ஒர்த்தன் இவன் கவனிக்காம கழட்டுவான். முன்னால நிக்கறவன் ‘ நான் யாருன்னு சொல்லு பாப்போம்’ ன்னு குரல மாத்தி கேப்பான். குருசாமி “டேய் என் கண்ணாடிய குடுங்கடா”ன்னு தவிச்சி தக்காளி விப்பான்.
”கும் நாம் பாத்துட்டு நாமல்லாம் கும்முன்னு ஒன்னா வருவம்டா”ன்னு சொல்லிக்கிட்டு தான் சைக்கிள்ள ஏறினார்கள்.
செகண்ட் ஷோ விட ரெண்டு மணியாகிடுச்சி. ”ச்சே.. நியூஸ, விளம்பரத்த போட்டு கொல்றானுகடா. இண்டர்வல் முக்கா மணி நேரம். பன்னு, முறுக்கு, கடலமிட்டாய், டீ, காபி நல்லா விக்கனுமாம். கழுத்தறுக்கறானுங்க. படத்த மட்டும் போட்டு முடிப்பம்னு எந்த தியேட்டர்காரனும் நெனக்கமாட்டங்கறான்.”
தியேட்டர விட்டு வெளிய கொஞ்ச வந்ததும் தான் குருசாமிக்கு ஒன்னுக்கு போகனும்னு தெரிஞ்சுது. உள்ளூர்க்காரங்க சில பேரு ஒக்காந்ததும் தான் இவனுக்கும் டேங்க்க காலி பண்ணிக்குவம்னு தோனுச்சி. ஒன்னுக்கு போயிட்டு பாக்குறான். கூட வந்த இவன் ஊர்க்காரங்க எல்லாம் முன்ன போயிட்டாங்கே. சல்லுன்னு சைக்கிள அழுத்து பறந்திருக்காங்க.
இவன் அந்த நேர் ரோட்டில சைக்கிள மிதிச்சான். இப்படி இருட்டு நேரத்தில யாரும் தனியா இந்த ரோட்டில நடக்கவும் மாட்டாங்கெ. சைக்கிள்ளயும் போக மாட்டாங்கெ.
போற வழியில ரெண்டு பக்கமும் மரங்கள். அப்பல்லாம் நெறய தற்கொல மரத்துல தொங்கறது தான்.
எந்தெந்த மரத்தில யார் யார் தொங்கினாங்கன்னு எல்லோரையும் போல குருசாமிக்கும் தான் தெரியும். பேயா, ஆவியா அலயறவங்க பேரெல்லாம் கூட தெரியும்.
பயத்தோட இவன் வேகவேகமா சைக்கிள அழுத்திக்கிட்டு முன்னால போறவங்கள பிடிக்கனும்னு பாத்தா முடியல.
திடீர்னு வலது பக்கம் ரொம்ப பக்கத்தில ஒரு வெள்ள உருவம்.

போன வருசம் மரத்தில தொங்குன பேச்சியம்மாளா?
இவன் எட்டாங்கிளாசு படிக்கும் போதே தொங்குன கன்னியம்மாளா?
கன்னியம்மாள கூட்டமா சேந்து சோலி பாத்து கொல பண்ணி மரத்துல தொங்க விட்டுட்டானுங்கன்னு ஒரு வசந்தி ..ச்சீ.. வதந்தி அப்ப இருந்துச்சி.
ரெண்டு வருச முன்ன இவன் தெருக்காரன் வீராச்சாமி இங்கன தான் தூக்கு போட்டுக்கிட்டான்.
அந்த வெள்ள உருவம் யாரு. இவன் கூடவே ரொம்ப ரொம்ப கிட்டக்க முன்னவே வந்துக்கிட்டிருக்கு.
கட்டிப்பிடிச்சிடுச்சின்னா.. Ghost hug! 
You can’t feel it, its there.
இவன் சைக்கிள எவ்வளவு வேகமா மிதிச்சாலும் வெள்ள உருவத்த முந்தவே முடியல.
வேர்த்து விறுவிறுத்து தன்னையே மனசில திட்டித்தீர்த்துக்கொண்டே சைக்கிள அழுத்தினான். ஊர் வந்தாச்சு. காலியா கிடந்த ஊருக்குள்ள வரும் போதும் அந்த வெள்ள உருவம் கிட்டக்கவே முன்னால.
வீட்டுக்கு உள்ள வந்து தன் சோடா புட்டி கண்ணாடிய கழட்டினான்.
வலது கண் கண்ணாடி லென்ஸ் ஃப்ரேம்மில் ஒரு சின்ன வெள்ள நூல் சிக்கியிருந்தது.
......................................

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.