Share

Feb 2, 2009

"எப்படிரா இருக்கே "

நிகழ்வு -1
ஐம்பது வருடங்களுக்கு முன் . குதிரை மீது அந்த வில்லன் நடிகர் உட்கார்ந்திருக்கிறார் . கேமெரா ஒடத்துவங்கவில்லை .ஷாட் ரெடி . இவருடைய ஊர்க்காரர்கள் ,சொந்தக்காரர்கள் சிலபேர் அங்கே படப்பிடிப்பு தளத்தில் நிற்பதை பார்க்கிறார் . கண்ணாலே வினவுகிறார் .'இறங்கி வா . அப்புறம் சொல்கிறோம் ' சொந்தக்காரர்களில் ஒருவர் சைகையில் சொல்கிறார் .ஸ்டார்ட் கேமரா ,க்ளாப் ' பை 3 டேக் 1
ஷாட் முடிந்தவுடன் குதிரையிலிருந்து இறங்கி வருகிறார் .

" டே உங்கம்மா வேற ஜாதிக்காரனோட ஓடிபோயிட்டாடா "
ஊர்க்காரர்கள் வில்லன் நடிகரிடம் சொல்கிறார்கள் .
கணீர் என்ற அவர் குரல் கம்மி விடுகிறது ." போறா கண்டார ஒலி"
....
நிகழ்வு -2
முப்பது வருடங்களுக்கு முன் அந்த நடிகர் மறைந்து விட்டார் . அவர் இறந்து ஒரு இரண்டு வருடங்களுக்கு பின் அவரிடம் அம்மா ஓடிப்போன தகவலை சொன்னவர் ,அவர் பங்காளி மதுரையில் இருந்து சொந்த ஊர் போனவர் அந்த நடிகரின் தாயாரை பார்க்கிறார் . கிழவி நல்லநைலக்ஸ் சேலை கட்டி ஜாக்கெட் இல்லாததால் தொங்கிய இரண்டு முலை யும் தெரிய " டே கருத்தக்கன்னு ! எப்படா வந்தே ! எப்படிடா இருக்க ." என சௌஜன்யமாக கேட்டாராம் .
........
இருபத்தைந்து வருடங்களுக்கு முன்..
அந்த திரை வில்லன் நடிகரின் உறவினர் தண்ணி போட்டு விட்டு நல்ல போதையிலே என்னை ஒவ்வொரு தடவையும் அரசரடி ஆரப்பாளையம் ரோட்டில் பார்க்க நேர்ந்த போதெல்லாம் இந்த இரண்டு நிகழ்வையும் கிராமபோன் ரிக்கார்டு போல நல்ல உரத்த குரலில் சொல்ல ஆரம்பித்து விடுவார் !
" ரெண்டு முலையும் காஞ்ச 'பன்'னுலே சுருங்கிப்போன கிஸ்மிஸ் பழம் மாதிரி தொங்கிசூம்பிபோய் கிடக்கு. எங்க சின்னாத்தா கேட்கிறா .' எப்படிரா இருக்கே !' என் பங்காளிபோய் சேர்ந்துட்டான் . நடிச்சு ,குடிச்சு ,கூத்தியா வச்சு அனுபவிச்சிட்டு அவன் போய்ட்டான் . அவன் போயிட்டான் .அவன் ஆத்தா கேக்கா " ஏலேய். அப்பு டே ! எப்படிரா இருக்கே "

ராயல் சமாச்சாரம்

வீரபாண்டிய கட்டபொம்மனின் இன்றைய வாரிசு ஜெக வீரபாண்டிய பீமராஜா ! ஜோசியம் சொல்லி பிழைக்கிறார் . இவர் மகன் வேன் டிரைவர் . மகனுக்கு பாஞ்சாலங்குறிச்சி பூங்கா வாட்ச்மேன் அரசாங்க வேலையாக கிடைக்குமா, அரசாங்க பியூன் வேலை கூட கிடைக்காதா என்று பீமராஜா தவிக்கிறார் .கட்டபொம்மனை தூக்கில் போட்ட பிறகு அவர் மனைவிக்கு சிறையில் ரெட்டை குழந்தைகள் பிறந்தன . அந்த இரண்டு ஆண் குழந்தைகளின் வம்சாவழி பீம்ராஜா !

பல நூற்றாண்டு முன் ராஜாவாய் இருந்த கட்டபொம்மன் வம்சாவழியின் நிலை தான் இப்படி என்றால் இன்றைக்கு

ராஜாவாக இருக்கிற பாரக் ஒபாமா தம்பி கதை அதை விட பரிதாபம் .

உலகத்துக்கே முதல் மனிதன் அந்தஸ்தில் பாரக் உசைன் ஒபாமா . இவர் தகப்பனார் இவர் தாயை விவாகரத்து செய்த பிறகு இன்னொரு திருமணம் செய்து அந்த மாற்றாம் தாய் பெற்றமகன் ஜார்ஜ் உசைன் ஒபாமா . இவர் கென்யாவில் இப்போது நைரோபியில் ஒரு குடிசைப்பகுதியில் வசித்து வருகிறார் . தொழில் மெக்கானிக் .அமெரிக்க ஜனாதிபதி யின் சகோதரனான இந்த ஜார்ஜ் ஒபாமா மரிஜுவானா என்ற போதைபொருள் வைத்திருந்தார் என்று கென்யாவில் கைது செய்யப்பட்டிருக்கிறார் .

'பாரக் ஒபாமாவுக்கு ராஜயோக ஜாதகம் . அவருடைய தம்பி ஜார்ஜ் ஒபாமாவுக்கு அவயோக பாவ ஜாதகம் . '

- இங்கே உள்ளூரு ஜோஷியர் சொல்றாரு !

"விதி செய்யும் விளைவினுக்கே வேறு செய்வார் புவி மீது உளரோ ?"

-- பாரதி 'பாஞ்சாலி சபதத்தில்' சொல்றாரு!