Share

Oct 19, 2022

சினிமா எனும் பூதம் - பாகம் 2 சரவணன் மாணிக்கவாசகம் பார்வையில்

"சரவணன் மாணிக்கவாசகம் பார்வையில்"


சினிமா எனும் பூதம் - பாகம்- 2-
 R.P. ராஜநாயஹம்:

ஆசிரியர் குறிப்பு:

R.P. ராஜநாயஹம் ஒரு எழுத்தாளர், பேச்சாளர், நடிகர், பாடகர், சங்கீதரசிகர், இயக்குனர், கூத்துப்பட்டறை ஆசிரியர், பெரும் வாசகர், அரசியல் உட்பட பலவிசயங்களை எழுதும் பத்தி எழுத்தாளர்,  சினிமா தகவல்களை (ஹாலிவுட், உலகப்படங்கள் உட்பட) மூளையில் சுரங்கம் போல் வைத்திருப்பவர், இத்தனைக்கும் மேல் சிறந்த மனிதர். தற்போது முரசு டிவியில் சினிமா எனும் பூதம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.

எண்பதுகளில், மதுரையில் இவரோடு பழைய படங்கள் பார்ப்பதென்றால் ஒரு பட்டாளமே பரவசமாகத் தயாராகி விடும்.  சினிமாவுக்குப் போகுமுன்பே  வாழ்வில் ஓர் திருநாள் பாடலில் பாகவதர் குதிரையில் அமர்ந்து சேலையைப் பிடித்து இழுப்பது பண்டரிபாயை என்பது போன்ற தகவல்கள் படம் பார்க்கும் கூட்டத்திற்கு முன்னெச்சரிக்கையாக்கி விடும்.  அந்தக் காட்சியில் "ஆமாம் தோழரே'" என்று குரல்கள் கேட்கும்.  வசந்தமாளிகையில் அம்மா ரோல் நடிகை யார், அசோகன் படத்தில் ஹேமமாலினிக்கு நேர்ந்த அநீதி முதலிய Data சகிதம் போவோருக்கு, திரையரங்கில் மற்றவர்களை விட தாம் ஏதோ ஒரு விதத்தில் உயர்ந்தவர்கள் என்ற மமதை இருக்கும்.  அது கூகுள், Wikipedia முதலியவைகள் இல்லாத காலம். 

சினிமா எனும் பூதம் நூலின் வெற்றிக்குப் பிறகு இரண்டாம் பாகம் வெளிவருகிறது. குறைந்தபட்சம்  சினிமா எனும் பூதம் பத்து பாகங்கள் எழுதும் அளவிற்கு இவரிடம் விஷயங்கள் இருக்கும்.  உதாரணத்திற்கு கமலின் நகைச்சுவை பற்றிய கட்டுரையில் அவள் ஒரு தொடர்கதையின் விகடகவி ரோல் நாகேஷ் பாணி ரோல் என்றிருப்பது குறிப்பிடத்தக்கது. பின்னாளில்,  வளரும் நடிகராக இருந்து கொண்டு இந்தப் பாத்திரத்தை கமல் ஏன் செய்தார் என்று நான் யோசித்திருக்கிறேன். 

T R ராஜகுமாரி குடும்பத்திற்கு செய்த தியாகம்,  எம்.கே.ராதாவிற்கு எம்.ஜி.ஆரின் பதில்,  சிவாஜி," அண்ணே நூறு ரூபாய் நோட்டை முழுசா பார்ப்பேனா" என்றது,  , டைரக்டர் மகேந்திரன் மோகமுள்ளை படமாக்க எடுத்த முயற்சி, எல்லாம் மாயை தானா பாடிய போது கே.ராணிக்கு ஒன்பது வயது என்ற விஷயம்,   மனோரமா காக்கா ராதாகிருஷ்ணனுக்கு ஜோடியாக மாலையிட்ட மங்கையில் அறிமுகமானது என்பது போல் தகவல்களால் நிறைந்த நூல் இது.  தகவல்கள் என்றால் கூகுள் செய்து பெற முடியாத தகவல்கள். நடிகை சீதாலட்சுமியைப் பற்றி ஒருவர் இரண்டு பக்கங்கள் எழுத முடியும் என்பது நாம் படித்திருக்காவிட்டால் நம்மால் நம்ப முடிந்திருக்கப் போவதில்லை.

பெரும்பாலும் எழுத்தாளர்களைச் சந்திக்காதவன் நான். அதில் ஆர்வமும் இருந்ததில்லை.  ஆனால் ஒரு எழுத்தாளரை நன்கு அறியும் பொழுது அவர்கள் எழுதும் எழுத்துக்களில் பலருக்கும் தெரியாத ஒன்றை நாம் கவனிக்க முடிகிறது.  இவர் எழுதியிருக்கிறார்: "  இது இயல்பான ஒன்று. நினைவில் நிழல் விழுவதும்,  ஞாபகச்சிக்கல் ஏற்படுவதும்"

ஹாலிவுட்டின் Blockbuster படங்கள் பல இந்த நூலில் கட்டுரைகளாக வந்திருக்கின்றன. 
க்ளார்க் கேபிள் குறித்து இவ்வளவு சுவாரசியமாக யார் சொல்ல முடியும்.  When Harry met Sally படத்திற்கும் ஜானகியின் நிலா காயுதேக்கும் என்ன தொடர்பு. Associative memory தான் தொடர்பு. 

புத்தக விமர்சனங்கள் வாசித்த புத்தகங்கள் குறித்து என்ன எழுதியிருக்கிறார்கள் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தலாம். வாசிக்கவில்லை என்றால், அதில் பெரிதான ஆர்வம் பலரும் காட்டப்போவதில்லை.  ஆனால் இந்த நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் பல விஷயங்கள் யார்  வேண்டுமானாலும் உடன் ரசிப்பவை.  அதனாலேயே அதிகபட்ச எழுத்துத்திருட்டு இவரது சினிமா குறித்த பதிவுகளில் ஏற்படுகிறது.

நடிகர் சார்லி போனில் சொல்கிறார் " ராஜநாயஹம்! நீங்கள் மிக, மிக, மிகப்பெரிய ஜீனியஸ். உங்களுக்கு மிக, மிக, மிகப் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது".

ராஜநாயஹம் சொல்கிறார் " மிக,மிக,மிகப் பிரகாசமான நிகழ்காலம் இருந்திருந்தால் எவ்வளவோ நன்றாய் இருந்திருக்கும்".

பிரதிக்கு:

தோட்டா கம்பெனி 
விற்பனை உடுமலை.Com 73 73 73 77 42
முதல்பதிப்பு செப்டம்பர் 2022
விலை ரூ.240.
#தமிழ்கட்டுரைநூல்கள் 

http://saravananmanickavasagam.in/2022/10/18/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-2-r/
...

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.