Share

Mar 26, 2018

சுப்புவும் வைத்தியும்


கலைக் கோவில் 1964ம் வருடம் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளி வந்த படம்.
இதற்கு முன் ‘காதலிக்க நேரமில்லை’ அதே வருடம் சக்கை போடு போட்ட படம்.
கலைக் கோவில் படுதோல்வியடைந்த படம்.
இருபத்தி ஆறு நாளில் எடுக்கப்பட்டதாம்.
பாலமுரளி கிருஷ்ணாவின் ‘தங்கரதம் வந்தது வீதியிலே’ பி.பி.எஸ் “ முள்ளில் ரோஜா” “நான் உன்னை சேர்ந்த செல்வம்” பாடல்கள்.
”தேவியர் இருவர் முருகனுக்கு”
இன்ஸ்பெக்டர் சாந்தாவுக்கு ’வரவேண்டும் ஒரு பொழுது, வராமலிருந்தால் சுவை தெரியாது’ கிளப் டான்ஸ். நாகேஷுடன் சர்வர் சுந்தரம் படத்தில் ’அவளுக்கென்ன அழகிய முகம்’ பாடலில் கலக்கிய இன்ஸ்பெக்டர் சாந்தா.
சிட்டிபாபுவின் வீணை.
முத்துராமன் ரோலை செய்ய வீணை பாலசந்தர் ஆசைப்பட்டிருக்கிறார். ஸ்ரீதர் ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் சிட்டிபாபுவின் வீணை படத்தில் இசை பொழிந்தது.
கலைக் கோவில் சுப்பு பாத்திரம் நாகேஷுக்கு.

”லோகம்னு இருந்தா துரோகம்னு இருக்கத்தான் இருக்கும். ஏன்டாப்பா முதல் முதல்ல உங்கிட்ட அவள அறிமுகப் படுத்தும் போது நளாயினின்னா சொன்னேன்”
நாகேஷின் கலைக் கோவில் சுப்பு பாத்திரம் அதன் பின்னர் நான்கு வருடங்களில் ஏ.பி.நாகராஜனின் தில்லானா மோகனாம்பாள் படத்தில் நாகேஷ் செய்த வைத்தி மாஸ்டர்பீஸ் ரோலுக்கு அண்ணன்.

இரண்டு கதாபாத்திரமும் ஒன்றே எனும் அளவுக்கு ஒற்றுமை.
எஸ்.வி.சுப்பையா, முத்துராமன், ராஜஸ்ரீ, சந்திரகாந்தா, வி.கோபாலகிருஷ்ணன் யாரும் ஜொலிக்கவில்லை.
சுப்பையா, முத்துராமன் தூங்கு மூஞ்சித்தனமாக நடிப்பு.
நாகேஷ் மட்டும் அமர்க்களம். என்ன ஒரு Form! இந்த படம் ஓடியிருந்தால் வைத்தி பாத்திரம் சுப்புவின் காப்பி என்று கூட சொல்லியிருந்திருப்பார்கள்.
“இந்த வைத்தி இல்லன்னா இந்த லோகத்தில நல்லதும் நடக்காது..கெட்டதும் நடக்காது.”
’கலைக் கோவில்’ தயாரிப்பாளர்களில் ஒருவரான எம்.எஸ்.வி இசை பிரமாதம். அந்த அளவுக்கு ஸ்ரீதர் அவ்வளவாக மெனக்கிடவில்லை. தண்டவாளத்தை விட்டு தடம்புரண்ட மாதிரி இயக்கம்.
...................................

மாலியின் கச்சேரி ஒன்று நடந்து கொண்டிருக்கும் போது அவருடைய தந்தை அந்த சபாவுக்குள் நுழைகிறார். மாலி புல்லாங்குழல் வாசிப்பதை நிறுத்தி விட்டார். மூட் அவுட். சரியான கோபம். “ அவரை போக சொல்லுங்கள். அவர் போனால் தான் வாசிப்பேன்.” 
மாலியின் அப்பாவை அங்கிருந்தவர்கள் வெளியே அனுப்பி வைத்தாக வேண்டிய நிர்ப்பந்தம். அவர் வெளியேறிய பின்னர் தான் புல்லாங்குழல் மீண்டும் இசைத்திருக்கிறது.

வீணை எஸ். பாலசந்தருக்கும் கூட அவருடைய அப்பாவிடம் இப்படி விரோத மன நிலை இருந்திருக்கிறதாம்.

கலைக் கோவில் படத்தில் இப்படி ஒரு காட்சி உண்டு.
வீணை வாசிக்கும் முத்துராமன் அரங்கத்தை விட்டு எஸ்.வி.சுப்பையாவை வெளியேற்றச் சொல்வார்.
ஸ்ரீதர் இந்த மாலி சமாச்சாரம் பற்றி கேள்விப்பட்டு தான் அப்படி ஒரு காட்சி அமைத்திருப்பாரோ என்னவோ?
.....................................








No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.