Share

Apr 25, 2020

எட்வர்ட் நிர்மல் மங்கத் ராய்


 Edward Nirmal Mangat Rai

எட்வர்ட் நிர்மல் மங்கத் ராய்  ஒரு ஐ சி எஸ் அதிகாரி. கிறிஸ்தவர்.
குஷ்வந்த் சிங்குடன் டெல்லி செயிண்ட் ஸ்டீபன் கல்லூரியில் படித்தவர். அதி புத்திசாலி மாணவன்.
 ’பன்ச்சி’ என்ற செல்லப்பெயர் கொண்ட எட்வர்ட் நிர்மல் மங்கத்.

 இண்டர்மீடியட் முடித்தவுடன் லாகூர்
அரசு கல்லூரியில் படிக்க குஷ்வந்த்
 செல்ல இருப்பதை அறிய வந்தவுடன்
மங்கத் பிரிவாற்றாமையில் அழுதிருக்கிறார்.

குஷ்வந்த் ஐ.சி.எஸ் பரிட்சையில் தோற்றவர்.
 மங்கட் ரெய் நல்ல ரேங்கிலெ ஐ.சி.எஸ் தேறியவர்.

குஷ்வந்த் சிங் மிக க்கடுமையான போட்டியில் கவல் மாலிக் மனம் கவர்ந்து திருமணம் செய்ய இருந்த போது Wrong choice என்று மங்கத்  அபிப்ராயப்பட்டவர்.
” இவ என்ன பெரிய அழகியா? அறிவிலும் ரொம்ப சுமார்” என்று ஏகடியம் பேசியிருக்கிறார்
 மங்கத் ராய்.

File:Sir Sobha Singh (1890-1978).jpg
குஷ்வந்த் சிங்கின் தந்தை சர். ஷோபா சிங் டெல்லியில் பெரிய கட்டிட காண்ட்ராக்டர்.

 இந்தியா கேட், சௌத் ப்ளாக் உள்ளிட்டவையெல்லாம் ஷோபா சிங்
 கை வண்ணம் தான்!

பகத் சிங் டெல்லி அசெம்பிளி குண்டு வெடிப்பில் ஷோபா சிங் தான் பகத் சிங்கிற்கு எதிராக சாட்சியம் சொன்னவர்.

குஷ்வந்த் சிங்கின் அப்பாவும் ரொம்ப பெரிய ஆள்.

 Khushwant singh's father and father-in-law were knighted by British.

குஷ்வந்த் சிங்கின் சொந்த சித்தப்பா உஜ்ஜல் சிங் தான் அண்ணாத்துரை தமிழக முதல்வரான போது இங்கே கவர்னர்.

குஷ்வந்த் சிங் பாகிஸ்தான் ஹடாலியில் பிறந்தவர்.

கவல் மாலிக்- குஷ்வந்த் திருமணம் டெல்லியில் விமரிசையாக நடந்தது.
முகம்மது அலி ஜின்னா  இந்தத் திருமணத்தில் முக்கிய விருந்தாளியாக கலந்து கொண்டார்.
   

குஷ்வந்த் வக்கீல் ப்ராக்டிஸ் செய்ய புதுப்பெண்ணுடன் லாகூரில் குடியேறிய போது எட்வர்ட் நிர்மல் மங்கத் ராய் ஐ.சி.எஸ்க்கு
 அங்கே உத்யோகம்.
பல கிறிஸ்தவ குடும்பங்களுக்கு எலிஜிபிள் பேச்சிலர் எட்வர்ட் மங்கத் மீது கண்.

மங்கத் இலக்கிய ஆர்வம் கொண்டவர். எழுத்தார்வம் மிக்கவர். தன் வீட்டிற்கு நண்பர்களை அழைத்து தான் எழுதியவற்றை வாசித்துக்காட்டுவதுண்டு.

மங்கத் ராய் ஆபீஸ் வேலை முடிந்து சைக்கிளில் ( கவனிக்க : ஐ.சி.எஸ் அதிகாரி சைக்கிளில்!)  திரும்பும் போது குஷ்வந்த் வீட்டிற்கு வர ஆரம்பித்தார்.
கவல் பற்றி லண்டனில் மங்கத் கொண்டிருந்த அபிப்ராயம் மறைந்தே விட்டது.
கவல் மீது கவனம் அதிகமாகி மையல் ஏற்பட்டுப் போனது. குஷ்வந்த் சிங்கிற்கே மங்கத் ராய் கடிதம் எழுதுகிறார். “ உன் மனைவியை நான் காதலிக்கிறேன். உன் மனைவியை தினமும் தரிசிக்க உன் அனுமதி வேண்டுகிறேன்.”

கவல் மாலிக்கிற்கோ பெருமை பிடிபடவில்லை.

ஓவியம் வரைவதில் கவல் அந்த நேரத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்.
அவர் செல்லும் ஸ்டுடியோவிற்கே மங்கத் போய் ‘ஓவியம் அத்துனை சிறந்த பொழுது போக்கே அல்ல’ என்று தூபம் போட,
 கவல் ஓவியம் வரைவதை கை விட்டு
டென்னிஸ் விளையாடப் போகிறார்.
மங்கத் அப்போது சைக்கிளிங் செய்யச் சொல்லி வற்புறுத்துகிறார்.
சீக்கிய மதச் சடங்குகளைத் தவறாது கடை பிடிக்கும் கவலிடம்’ இதெல்லாம் என்ன மூட நம்பிக்கை!’ (கிறிஸ்தவ புத்தி!)  என மூளைச் சலவை செய்கிறார்.
 கவல் மத பிரார்த்தனையைக் கை விடுகிறார்.

லாகூரில் ஒரு கிறிஸ்தவப் பெண். ரயில்வே ஸ்டேசனில் இருந்து மங்கத் ராய் அவளுக்கு லிப்ட் கொடுத்தால் அந்தப்பெண் ஃப்ரண்ட் பாரில் உட்கார்ந்து விடுகிறாள்.
அதனால் கிளர்ந்தெழுந்த காமம் இருவரையும் அன்றே மங்கத் படுக்கை வரை
கொண்டு சென்று விட்டது.

மங்கத் ராய் மனசாட்சி அவரை கொல்கிறது. குற்றவுணர்வால் தவிக்கிறார். எப்படி?
“ அடடே, குஷ்வந்த் மனைவி கவல் மீது காதல் கொண்ட நான் இப்படி இன்னொரு பெண்ணுடன் படுத்து விட்டேனே!”

கவல் இது பற்றி கோபப்படாமல்,
அவமதிப்பாக எடுத்துக்கொள்ளாமல்
மங்கத் ராயின் Frankness பற்றி
பூரித்துப் பெருமிதம் கொள்கிறார்.
லாகூரில் கவல் -மங்கத் ராய் தொடர்பு அதிகம் பேசப்படும் விஷயமாகியிருக்கிறது.

குஷ்வந்த் சிங்கை விட கவல் இரண்டு வயது இளைய பெண்.
அறுபது வருடங்களுக்கும் மேலாக மனைவியுடன் தாம்பத்யம் நடத்தியவர். தன் மனைவி பற்றி சொல்வது : “ இந்திரா காந்தி இந்தியாவை ஆட்சி செய்த அதே சர்வாதிகாரத்துடன் குடும்பத்தை கவல் ஆட்சி செய்தார்.”

பள்ளி பருவத்திலேயே குஷ்வந்த்
டெல்லி மாடர்ன் ஸ்கூலிலேயிருந்து
 மனைவியை அறிந்திருந்தார்.
ஒரே பள்ளியில் இருவரும் படித்தவர்கள்.

“ She was very possessive and aggressive, and resented it when I, even very casually, met a woman friend. She would sulk. This in spite of the fact that my wife had, from the very beginning of the marriage, probably from the very first year, got close to one man in particular. Their relationship carried on for about TWENTY YEARS and this was something that affected me deeply, snapping something inside me, changing something within me for ever." - Khushwant Singh.

எட்வர்ட் நிர்மல் மங்கத்  ராய்க்கு
ஒரு உடன் பிறந்த தங்கை ஷீலா.
இவளுடைய கணவர் ஆர்தர்லால்
ஒரு ஐ.சி.எஸ் தான்.

வி.கே.கிருஷ்ணமேனன், பிஜு பட்நாயக் என்று ஆரம்பித்து ஷீலாவின் காதலர்கள்
லண்டனிலேயே எண்ணி முடியாது.

பிஜு பட்நாயக் திமுகவையும் அதிமுகவையும் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட முன்னாள் ஒரிசா முதல்வர். இன்றைய ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் தந்தை.

மங்கத் ராய் பெண் தேட ஆரம்பித்தார்.
 கிறிஸ்தவப்பெண் வேண்டும்.
வனத்தில மேஞ்சாலும் இனத்தில அடையனுமே!

லஜ்வந்தி என்ற கிறிஸ்தவப் பெண்.
ஆங்கில இலக்கியம் படித்தவள். கல்யாணப் பத்திரிக்கை அடித்து விநியோகம் செய்த பிறகு மங்கத் ராய் கல்யாணத்தை நிறுத்தி விட்டார்.

 லஜ்வந்தி “ போடா போ” என்று முகமது யூனுஸ்ஸை கல்யாணம் செய்து விட்டாள்.

இந்த முகமது யூனுஸ் பின்னால் இந்திரா காந்தியின் கை பாணம்.
இந்திராகாந்தியின் அத்யந்த பக்தன்.
 எமர்ஜென்சியின் போது ரொம்ப பிரபலம்.

அடுத்து சாம்பா என்ற இன்னொரு கிறிஸ்தவப் பெண். ஆங்கில இலக்கியம் படித்தவள் தான். சர்ச் சம்பிரதாயங்களுடன் மங்கத் திருமணம் செய்து கொண்டார்.

 இந்தத் திருமணத்திற்கு பின்னரும் மங்கத் ராய் மீண்டும் கவல் மாலிக்கை சந்திக்க குஷ்வந்த்தின் வீட்டிற்கு வருவது, காதல் கடிதம் எழுதுவது என்று ஆரம்பித்துவிட்டார்.

சாம்பா- மங்கத் திருமண தோல்வி  ’முறை கெட்ட’ விசித்திரமானது.

ஒரு கோடையில் சிம்லாவில் குஷ்வந்த் தம்பதியர் இருந்த போது அங்கே லக்கர் பஜாரில் மங்கத் ராய் - சாம்பா தம்பதியர்  மங்கத் ராயின் தங்கை ஷீலா- ஆர்தர் லால் தம்பதியர் வந்திருந்திருக்கிறார்கள்;

சிம்லாவில் ஒரு Trekking programme.
ஒரு வாரம் போய் வர ஏற்பாடு.
கடைசி நேரத்தில் அண்ணன் மங்கத்,
தங்கை ஷீலா இருவரும் போகவில்லை.

 அண்ணன் மனைவி சாம்பாவும் தங்கை கணவர் ஆர்தர் லாலும் மட்டும் ஜாலியாக ஹிமாலய வெளியில் நடை பயணம் போயிருக்கிறார்கள்.

 திரும்பி வரும்போது ஆர்தரும் சாம்பாவும் Made for each other என்ற காதல் போதையில் திருப்தியடைந்த நிலையில் இருந்திருக்கிறார்கள்.

மங்கத் ராய் மனைவியை விவாகரத்து செய்ய உடனே,உடனே ஒத்துக் கொண்டாகிவிட்டது.ஷீலாவுக்கும் ஆர்தரிடம் இருந்து தப்பித்து விடுதலை ஆகிற திருப்தி.

 ஆனால் சாம்பாவின் பெற்றோர் விஷயம் கேள்விப்பட்டு பதறிப் போய் ஓடிவந்து சாம்பாவை ‘குலத்தை கெடுக்க வந்த கோடாரி காம்பே, நீயெல்லாம் ஒரு பெண்ணா?
உன்ன பெத்த வயித்தில
பெரண்டையைத் தான் அள்ளி வச்சி கட்டனும்’ என்று கண்ட படி திட்டி கண்டித்து விட்டார்கள்.

 சாம்பா உடனே திருந்தி கணவன் மங்கத்திடம் மன்னிப்பு கேட்டிருக்கிறாள்.

” மேயா குல்ப்பா, மேயா குல்ப்பா,
 மேயா மாக்சிமா குல்ப்பா...
என் பாவமே, என் பாவமே,
என் பெரும் பாவமே...
எனக்கிதுவே துக்கமில்லாமல்
வேறே துக்கமில்லை. எனக்கிதுவே வெட்கமில்லாமல் வேறே வெட்கமில்லை...”

மங்கத் ராய் விவாகரத்துக்கு ஒத்துக்கொண்ட அதே வேகத்திலேயே இப்போது மனைவியை மன்னித்து அருளி ஏற்றுக் கொண்ட அதிசயம் நடந்தேறியிருக்கிறது!

என்றாலும் பின்னர் இந்தத் திருமணம் நீடிக்கவில்லை.

குஷ்வந்த் சிங்கிற்கு இரண்டு குழந்தைகள்.
ராகுல் சிங், மாலா.

ராகுல் சிங்கிற்கு எழுபத்தஞ்சு வயதிற்கு மேல் ஆகி விட்ட நிலையில் திருமணமே செய்து கொள்ளவில்லை. இப்பவும் சிங்கிள் தான்.

குஷ்வந்த் சிங்கிற்கு OUTLOOK பத்திரிக்கையில் இரங்கல் எழுதிய பாய்சந்த் பட்டேல் ஒரு சுவாரசிய சம்பவம் பற்றி குறிப்பிடுகிறார்.
” நானும் ராகுல் சிங்கும் வெளி நாட்டில் இருந்து திரும்பியவுடன்
ஒரே பெண்ணை விரட்டிக்கொண்டு திரிந்தோம். ஆனால் அவள் எங்கள் இருவருக்குமே பெப்பே காட்டி விட்டு இன்னொருவனை மணந்து கொண்டாள்.
ஆனால் நானும் ராகுல் சிங்கும்
நண்பர்களாகவே இருக்கிறோம்.”
 

குஷ்வந்த் சிங் மகன் ராகுல் சிங் ஒரு ஜார்னலிஸ்ட். தன் தாயார் பற்றி வெளிப்படையாக ‘ In the name of the father' நூலில் குறிப்பிடுகிறார்.

“ என் அம்மா ஒரு கட்டத்தில் என் தந்தை குஷ்வந்த் சிங்கை விவாகரத்து செய்து விட்டு
எட்வர்ட் நிர்மல் மங்கத் ராயை திருமணம் செய்ய முடிவே கட்டி விட்டார். ஆனால் இது என் மேலும் என் தங்கை மாலா மீதும் ஏற்படுத்த நேரும் பயங்கர பின் விளைவுகளை எண்ணியே அந்த முடிவை என் பெற்றோர் நிராகரிக்க நேர்ந்திருக்கிறது.
Mangat Rai was something of an enigma to me."



எட்வர்ட் நிர்மல் மங்கத் ராய் வாழ்வில் மிக சுவாரசியமான விஷயம் அவர் ஜவஹர்லால் நேரு குடும்பத்திற்கு நெருங்கிய உறவினர்
 ஆகியது தான்.

நேருவின் தங்கை விஜயலட்சுமி பண்டிட் .

விஜயலட்சுமி பண்டிட்டின் மகள் நயன்தாரா சாகல்.

அழகான இந்தப் பெண் நாவலாசிரியர்.

(1986ல் Rich like us என்ற நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது வாங்கினார்.
ஆனால் 2015ல் தீவிரவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விருதை நிராகரித்து விட்டார்.)
 தாரா வயதில் மங்கத் ராயை காட்டிலும் மூத்தவர் என்று ராகுல் சிங் தன் அப்பா பற்றி எழுதியுள்ள நூலில் குறிப்பிடுகிறார். ஆனால் இப்போது உயிருடன் இருக்கும் தாராவுக்கு 92 வயது தான் ஆகிறது!(Born 10 May 1927)



ஏற்கனவே திருமணம் ஆகியிருந்த நயன்தாராவும் மங்கத் ராயும் காதல் வலையில் வீழ்ந்து விட்டனர்.

தெய்வீகக் காதல்.
 ஆனால் குஷ்வந்த் சிங் போல தாராவின் கணவர் கௌதம் சாத்வீகமானவர் அல்ல.
மங்கத் ராய் அவர்கள்  அன்னார் கௌதமால் வெளுத்து விரியக் கட்டப்பட்டார்.
கௌதம் பின்னியெடுத்துவிட்டார்.
மங்கத் படுகாயம்.
ஆனால் நயன்தாராவோ தன் காதலில்  உறுதியாக நின்று கௌதமை ’ச்சீ..காலிப்பயலே போடா’ என்று  விவாகரத்து செய்து விட்டு
மங்கத் ராயுடன் போய் விட்டார்.
நயனும் மங்கத் ராயும் திருமணம் செய்து கொண்டார்கள். ஆக, மங்கத் இப்போது ஜவஹர்லாலின் உறவினராக ஆகி விட்டார்.

எட்வர்ட் நிர்மல் மங்கத் ராய்
இந்திய சிவில் சர்விஸ் பணியில்
 மிகச் சிறந்த அதிகாரி.
அப்பழுக்கற்றவர்.
மிகச் சிறந்த நேர்மையாளர்.

பஞ்சாப்பில் பிரதாப் சிங் கெய்ரோன் முதலமைச்சராக இருந்த போது மாநிலத்தின் தலைமைச் செயலர் மங்கத் ராய் காஷ்மீர் மாநிலத்திலும் தலைமைச் செயலராக பணியாற்றியவர்.
பஞ்சாபிலும்,காஷ்மீரிலும் பல சீர்திருத்தங்கள், சாதனைகள் புரிந்தவர் என்றே கருதப்படுபவர்.
 இவர் தலைமைச் செயலராக பணிபுரிந்த காலம் பொற்காலம் என்றே கணிக்கப்படுகிறது.

நேருவின் தங்கை மகள் நயன்தாராவை சந்திக்கும் வரை எட்வர்ட் நிர்மல் மங்கத் ராய் துயரமான,நிறைவில்லாத வாழ்க்கை வாழ்ந்தவர்.

மொரார்ஜி பிரதமராக இருந்த போது நயன் தாராவை ரோமுக்கு (வாட்டிகனுக்கும் சேர்த்து) தூதராக அப்பாயிண்ட் செய்த போது பதவி விலக நேர்ந்து விட்டது.
சரண்சிங் ஏக் தீன் கா சுல்தான் பதவி காலியாகி ஒரு வழியாக தேர்தலில் மீண்டும் இந்திரா ஜெயித்தவுடன் உடனே, உடனே ரோமுக்கு நயன்தாரா தூதராகப் போக வேண்டாம் என்று கேன்சல் செய்தார்.
 எட்வர்ட் நிர்மலையும் பணியிலிருந்து விலகச் சொல்லி வற்புறுத்தி வெளியேற்றி விட்டார்.

இந்திராவிற்கு எட்வர்ட் நிர்மல் மங்கத் ராய் போன்ற நேர்மையான, திறமையான அதிகாரி தேவையில்லை.
விஜயலட்சுமி பண்டிட்டின் மகளையும் அவள் கணவரையும் பழி வாங்குவது தான் முக்கியம்.

டேராடூன் அருகில் நயன்தாராவுடன் வாழ்ந்து மறைந்த மங்கத் ராய் முதுமையில்
அல்சைமர் வியாதியால் அவதிப்பட்டார்.

குஷ்வந்த் சிங் மனைவி வாழ்வும் அல்சைமர் வியாதியில் தான் முடிவுக்கு வந்தது.

....

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.