Share

Apr 29, 2020

எல். ஆர். ஈஸ்வரி

'பட்டத்துராணி பார்க்கும் பார்வை'  பாட ரொம்ப உழைத்திருக்கிறார்.
அத சொன்னா சில இசை ரசிகர்களுக்கு கோபம் கூட வரும்.
சாதாரணமா ஒரு பாட்டு ரொம்ப ரீச் ஆனாலே
 இசை ரசிகர்கள் பலருக்கு பிடிக்காமல் போகும்.

பட்டத்து ராணிக்கு முற்றிலும் மாறுபட்ட                மென்மையான பாணியில்
அவருடைய மாஸ்டர் பீஸ் ' காதோடு தான் நான் பாடுவேன்' பற்றி நான் சொல்லி தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற அவசியம்
இங்கு யாருக்கும் இல்லை

'ஒற்றுமையாய் வாழ்வதாலே என்றும் நன்மையே'  சீர்காழியோடு எல். ஆர். ஈஸ்வரி சேர்ந்து
பாடும் போது சிலிர்க்க வைக்கும்படி
அவர் குரல் இருக்கும்.

'தாழம்பூவே தங்க நிலாவே தலையேன் குனிகிறது'
என்று டி. எம். எஸ் கேட்கும் போது ஈஸ்வரியின் பதில் துள்ளலாக வரும்.

'முள்ளில் ரோஜா, கள்ளூறும் ரோஜா ' பி. பி. ஸ்ரீநிவாஸ் சுகிர்த முனகலுடன் சேர்ந்து குழையும் பெண் குரல்.

'கண்ணுக்கு தெரியாத அந்த சுகம்'
எடுத்துக் கொடுத்து
பி. பி. எஸ் குரலோடு இழைவார்.

'பொறந்தாலும் ஆம்பிளையா பொறக்க கூடாது ' அடி பட்டு தத்துவமாக புலம்பும் சந்திர பாபுவுக்கு எள்ளலான எல். ஆர் ஈஸ்வரியின் குறும்பு எதிர்வினை.

' மலருக்கு தென்றல் பகையானால்'
தவித்த சுசிலாவுக்கு, தவி தவிப்பாக சவாலாக ஈடு செய்யும் சோக ஈஸ்வரி.

' நம்பள் கி பியாரி நம்பள் மஜா பண்ணலாமா' நூல் விடும் அதே பாபுவுக்கு 'கோடையில் காஷ்மீர் சென்றால் வாடை காற்றும் உண்டு' என்று ஜெயலலிதாவுக்காக மாலீஷ் பண்ணும் சேட்டை.

தட்டு தடுமாறி நெஞ்சம், கை தொட்டு விளையாட கெஞ்சும் பாட்டில் 'இரவென்றும் பகலென்றும் அறியாத உலகில் இரு பேரும் விளையாட வேண்டும்' என்ற தூண்டலும், தூண்டிலும்.

'வாடைக்காற்றம்மா, வாடைக்காற்றம்மா, வாலிப மனதை நாளுக்கு வாட்டுவதென்னம்மா '

' சித்திர பூவிழி வாசலிலே இங்கு யார் வந்ததடி?'
தோழியின் அந்தரங்க ரகஸ்யத்தில் அத்து மீறி நுழையும் அடாவடி குரல்.

'அன்னை போல என்னையாண்ட
அன்பு தெய்வமே ' கண்ணிய நெகிழ்ச்சி.

நினைத்தாலே இனிக்கும் ' இனிமை நிறைந்த உலகம் இருக்கு ' துறு துறுப்பு

ஆங்கில உச்சரிப்பு சிருங்காரமாக செய்வார்

குறும்பு எனும் பாவத்தை இளமை துள்ளலுடன்
மிக சிறப்பாக வெளிப்படுத்தியவர் ஈஸ்வரி.

தாபக்குரலில் பாடுவதில்
அதிக பட்ச சாதனை செய்தவர்.

' ஆஹா, இது நள்ளிரவு, ஓஹோஹோ இது புது உறவு '

மங்கலமாய் மாறு பட்ட குரலில்
பிரபலமானவர் இவர்.  கல்யாண பாக்கியமில்லாத பாடகியின் இந்தப் பாடல் தான்
எல்லா கல்யாண வீட்டிலும்.
' மணமகளே மணமகளே வா, வா,
உன் வலது காலை எடுத்து வைத்து வா, வா'

மெஸ்மரைஸ் பண்ணுகிற மாதிரி
'அம்மம்மா கேளடி தோழி'

டப்பாங்குத்து என்றாலும் கொடி கட்டியவர் ஈஸ்வரி தானே?

இலந்த பயம்

'அமமனோ சாமியோ'
ஜெயலலிதாவுக்கு தான் ஈஸ்வரியின்
எத்தனை பாடல்கள்.

'பளிங்கினால் ஒரு மாளிகை '

'நான் ரோமாபுரி ராணி, புது ரோஜா மலர் மேனி,'

சரணத்தில் தூள் கிளப்புவார்
' யார் யாரோ வந்தார் என்னை சந்திக்க,
 ஏதோதோ சொன்னார் உள்ளம் தித்திக்க
இல்லாத எண்ணம் எல்லாம் சிந்திக்க
நான் என்ன செய்வேன் ஐயா, மன்னிக்க '

கோயில் திருவிழாக்களில் ஆம்ப்ளிஃபயரை கூட்டி வைத்து இவர் மீது வெறுப்பு வரும்படி பக்தர்களுக்கு கடும் தண்டனை
 கொடுக்க வேண்டும்.

மாரியம்மா எங்கள் மாரியம்மா என்று கூப்பாடு போடும் ஈஸ்வரி ஒரு ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ பெண்மணி

' சகாயத்தாயின் சித்திரம் நோக்கு, அபாயம் நீக்கும் அன்னையின் வாக்கு 'என்று பி. பி. எஸ்ஸோடு சேர்ந்து தேவ மாதாவையும் பாடியவர்.

' ஆரோக்ய மாதாவே, உமது புகழ் பாடி புகழ்ந்திடுவோம்'

எஸ். பி பாலசுப்ரமணியத்துடன் ஈஸ்வரி பாடுவது தனி சுவை.

'ஆரம்பம் இன்றே ஆகட்டும் '

சந்தப்பாடல் ' அனங்கன் அங்கஜன் அன்பன் வசந்தன் மன்மதனென்றும் வணங்கும் என்னுயிர் மன்னவா '

' அங்கம் புது விதம், அழகினில் ஒரு விதம், நவரச நிலவு, அதிசய கனவு

சுசிலா பிடிக்கும், ஜானகி பிடிக்கும் என்று சொல்பவர்களுக்கு ஈஸ்வரியை பிடிக்கும் என்று சொல்ல தயக்கம். இது ஒரு வகை Snobbery.

நிஜமாகவே சிலருக்கு ஈஸ்வரி குரல் பிடிக்காமல்
போகலாம். அவர்கள் மீது வருத்தப்படவோ, கோபப்
படவோ கூடாது. Taste differs.

அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போதும், பேட்டி கொடுக்கும் போதும் அவரிடம் வெள்ளந்தியாக கொப்பளிக்கும் உற்சாகம். பழைய நினைவுகளில்
மூழ்கி ஊறும் பாந்தம்.

அவரே எப்போதும் பெருமைப்படுவது போல
'எல்லோர்க்கும் ஈஸ்வரி''தான்.

கவுண்டமணியின் கிண்டல் இவரையும் விடவில்லை.

ஒரு படத்தில் பானுப்ரியா பாடகி.
அவர் பாட வேண்டிய பாட்டு ஈஸ்வரி பாடி ரிக்கார்ட் செய்யப்பட்டு விடும்.

சத்யராஜிடம் கவுண்டர் கமெண்ட் : "இந்த கிழவிக ரவுசு தாங்க முடியலப்பா"

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.