Share

Feb 17, 2019

அரசியல் பிழைத்தோர்

நாற்பது விலையுயர்ந்த உயிர்கள் பறி போயிருக்கின்றன.
மதுரை பக்கம் இளைஞன் ஒருவன் துர்மரணம் அடைந்தால் பெண்கள் பதறி பொங்கி நெஞ்சில் அடித்துக்கொண்டு, கண்ணீர் வழிய கதறுவார்கள். 
“ஆத்தி, அழகொட்ட ஆம்பிளப்பிள்ள போயிடுச்சே.”
நாப்பது அழகொட்ட ஆம்பிள பிள்ளங்க கருக திருவுளம்.
’வலுவான பதிலடி’ என்பது தான் பெருந்தீர்வா?
Tit for tat. பயங்கரவாதிகளை வேட்டையாடும் எதிர் வேகம் எத்தனை அப்பாவிகளை அழித்தொழிக்கும். நாம தான் வசதியா பக்குவப்பட்டுக்குவமே. ’களையெடுக்கும்போது பயிரும் தான் அடி வாங்கும்’னு.
பயங்கரவாதிகள் அனைவரும் அருவருக்கத்தக்க ஜென்மங்கள் என்பதில் என்ன கருத்து வேறுபாடு இருக்க முடியும்? வலுவான பதிலடியில் நூறு தீவிரவாதிகள் கொல்லப்பட்டால் பயங்கரவாதியின் அடுத்த ’வலுவான திட்டம்’ இருநூறு ராணுவ வீரர்கள். அதற்கு நம் அரசாங்கத்தின் வலுவான பதிலடி நானூறு தீவிரவாதிகளை பழி தீர்க்கும்.
தீவிரவாதிகளுக்கு பக்கத்து தேசம் முழு ஆதரவெனும் போது வலுவான பதிலடி என்ற வார்த்தையே வலுவிழந்த அபத்தம்.
பயங்கரவாதிகளின் அதற்கடுத்த வலுவான பதிலடி சிவிலியன்களையும், ராணுவ வீரர்களோடு சேர்த்துக்கொல்லும் கொடூர திட்டமாகத்தான் இருக்கும். வலுவான பதிலடி ஒரு சங்கிலித்தொடர் என்பதே நிதர்சன உண்மை.
காஷ்மீர் பிரச்னை நிரந்தர துயரம். காஷ்மீரில் இரு தேசிய கட்சிகளுக்கும் எந்த செல்வாக்கும் இல்லை என்னும் யதார்த்தம் சொல்லும் செய்திக்கு என்ன பதில்? அதுவே தானே இங்கே தமிழகத்திலும், மற்ற சில மாநிலங்களிலும் கூட என்ற உளறல் விதண்டாவாதம் அற்பத்தனமானது.
ஷேக் அப்துல்லா காலத்தில் இருந்தே தொடரும் தீர்வற்ற நாசகார அரசியலின் தீவிரவாத வேலைகள். ஷேக் அப்துல்லாவை ஏன் இங்கே கொடைக்கானலில் சிறை வைக்க வேண்டியிருந்தது?
ஒவ்வொரு தீவிரவாத கொடூரத்தின் போதும் இந்திய முஸ்லீம் சமூகம் எதிர்கொள்ளும் பாதுகாப்பின்மை, அவமானம், சிறுமை, புறக்கணிப்பு.
’உழைக்கும் தொண்டர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கப்படும். தேவைகள் பூர்த்தி செய்யப்படும்’
மு.க.ஸ்டாலின் அவர்களின் இந்த விசித்திர அறிவிப்பின் தன்மை பற்றி மீடியா உரையாடல் நிகழ்த்திப்பார்க்கலாம்.
ஆட்சிக்கட்டிலில் ஏறப்போவது தி.மு.க தான் என்கிற உறுதிப்பாட்டில் நின்று இவ்வாறு சொல்லப்படுகிறது. தேவைகள் பூர்த்தி! என்ன ஒரு அடர்த்தியான வாக்குறுதி. அதில் உள்ளடங்கிய விஷயங்கள் தி.மு.க தொண்டனுக்கு ஆறுதல் என்பது ஒரு பக்கமிருந்தாலும் உசுப்பேற்றும் தன்மையை உள்ளடக்கியது. எல்லா டெண்டர், காண்ட்ராக்ட் பற்றிய எம்.எல்.ஏ., கவுன்சிலர் உரிமையில் தனக்கும் உரிமைக்குரல் பங்கு எனும் ’கனவு மெய்ப்படும் நம்பிக்கை’ கூடலாம். ’ஆட்சி எங்கள் கையில்’ தொண்டன் என்பவன் காவல் துறைக்கு எப்போதுமே தலைவலியான சிக்கலான சண்டியர் அவதாரம் தான்.
காலாகாலமாக தொண்டனுக்கு தி.மு.க வாயிலயே லட்டு சுட்டுக்கொடுத்துக்கொண்டே தான் இருந்திருக்கிறது. ’உடன் பிறப்புக்கு இதயத்தில் இடம்’ என்ற தத்துவ நிலைப்பாடு நிரந்தரமானது என்பதை மறக்க முடியாது.
பா.ம.க., தே.மு.தி.க குடும்பக்கட்சிகளின் அதிமுக கூட்டணி சார்பு நிலைப்பாடு பற்றிய செவிவழி செய்தி கவுண்டமணியின் “இங்கே சந்துருன்னு ஒரு மானஸ்தன் இருந்தானே” டயலாக்கை நினைவு படுத்துகிறது.
கவுண்டமணி பரவாயில்ல. ஒரு மானஸ்தன தான் தேட வேண்டியிருந்தது.
தேர்தலின் போது பணப்பட்டுவாடா நடைபெற உறுதியாக அனுமதிக்கப் போவதில்லை என்ற தேர்தல் கமிஷனின் வைராக்கிய கெடுபிடி கிடுக்கிப்பிடியால் டி.டி.வி தினகரனின் இருபது ரூபா நோட்டு பத்து ரூபா நோட்டாக மாறலாம்.
கடுமுடுக்கி பயில்வான் பீ முடுக்கி செத்தானாம்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.