Share

Apr 21, 2018

சமயக்கார பாய்


சமயக்கார பாய் தென்காசியில் இருந்து மதுரை சவ்வாஸில் சமையல் செய்ய வந்தவர். சவ்வாஸ் ரெடிமேட் கடை முதலாளிகள், வேலை பார்ப்பவர்களுக்கு சமையல் செய்வது தான் இவருடைய வேலை. தென்காசியில் மனைவி, குழந்தைகள் இருக்கிறார்கள்.
சவ்வாஸ் கடை ஒரு ஜாலியான வருத்தமில்லா வாலிபர் சங்கமாக இருந்தது. நண்பர்கள் சங்கமமாகும் கலகலப்பான இடம்.
நான் சினிமாவில் இருந்து ஒரு விலகல் நேரத்தில் இங்கே பொழுதை போக்கியிருக்கிறேன். என் நண்பர்களான சவ்வாஸ் சகோதரர்கள் அங்கே நான் போனால் “ இங்கே இருங்கள். வீட்டுக்கு நாளைக்கு போகலாம்” என்பார்கள்.
அப்போதெல்லாம் நான் குறுந்தாடியுடன் தான் இருப்பேன். சமயக்கார பாய் எப்போதும் என்னை தாடிக்கார பாய் என விளிப்பார்.
நான் சினிமாவில் அஸிஸ்டண்ட் டைரக்டராய் இருந்தவன் என்பது சமயக்கார பாய்க்கு ஒரு பெரிய அட்ராக்ஷன்.
ஒரு நாள் சமயக்கார பாய் “ தாடிக்கார பாய், சினிமாவில என்னயும் சேத்துக்குவாங்களா?” என்று கேட்டார்.

சரி, சினிமாவில் ப்ரொடக்சனில் சமையல் வேலை எதிர் பார்க்கிறாரோ என்று நினைத்தால் அது இல்லை இல்லை என்று தலையை ரெண்டு பக்கமும் ஆட்டி மறுத்தார். சினிமாவில் நடிக்க ஆசையாம்.
என்ன ரோலில் உங்களால் நடிக்க முடியும்?
சமயக்கார பாய் “ கதாநாயகனாக”
வில்லன் ரோல்?
சமயக்கார பாய் “ நம்பியார், அசோகன் மாதிரியெல்லாம் எனக்கு நடிக்க வராதே..”
சரி. காமெடி?
சமயக்கார பாய் “ எனக்கு சிரிப்பு நடிகரா நடிக்கத்தெரியாது. ஹீரோவா தான் நடிக்கத்தெரியும்”
பாய் குட்டையாக பொதுக்கையாக, தொப்பையுடன் தட்டான் போல் இருப்பார்.
சமயக்கார பாய் தீர்மானமாக வேறு எந்த கதாபாத்திரமும் ஏற்கத் தயாரில்லை என்பதை தெளிவு படுத்தினார்.
இது சீரியஸ் என்பது அவர் நச்சரிப்பு ரொம்ப அதிகமான போது தெரிய வந்தது.
கொஞ்ச நாள் விளையாட வேண்டியது தான். வேறு வழியில்லை.
உடனடியாக ஒரு ’இன்லெண்ட் லட்டர்’ ஜே.பி மாமா பெயரில் எழுதப்பட்டது.
“ அன்பு மிக்க சமயக்கார பாய்
நான் சினிமாவிலிருந்து ஜே.பி மாமா எழுதுகிறேன்.

தாங்கள் சினிமாவில் கதாநாயகனாக நடிக்க விரும்புவதை அறிந்து மகிழ்கிறோம்.
நான் தான் இந்தி ஹேமா மாலினி, ரஜினி காந்த், ஸ்ரீதேவி போன்றவர்களுக்கு நடிக்க வாய்ப்பு வாங்கி கொடுத்தவன். அவர்கள் நடிக்க ஆரம்பித்து ஐந்து வருடங்கள் சம்பளத்தில் எனக்கு கமிசன் பத்து பெர்சண்ட் எனக்கு கொடுத்திருக்கிறார்கள்.
உங்களிடமிருந்தும் அந்த கமிசனை நான் ஒவ்வொரு படத்திற்கும் ஐந்து வருடங்கள் வாங்கி விடுவேன் என்பதை பணிவன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.
ஐந்து வருடங்களுக்கு பின் நீங்கள் நடிக்கப்போகும் படங்களுக்கு எனக்கு கமிசன் தர தேவையில்லை.
கீழே சில ஷரத்துகளை கவனமாக படிக்கவும். கடுமையான ஷரத்துக்கள் என்பதால் நீங்கள் மனம் புண் பட்டு விடக்கூடாது.
1. வருடத்திற்கு ஐந்து படங்கள் தான் உங்களுக்கு கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு தரப்படும்.
2. ஒரு படத்திற்கு இருபது லட்சம் ரூபாய் தான் தரப்படும். இதற்கு மேல் நீங்கள் சம்பளம் கேட்டு தகராறு செய்யக்கூடாது.
3. ஸ்ரீதேவி, அம்பிகா, ராதா, மற்றும் மாதவி ஆகியோர் தான் உங்களுடன் கதாநாயகியாக நடிப்பார்கள். மற்ற நடிகைகளை கதாநாயகியாக படத்தில் போடச்சொல்லி நீங்கள் வற்புறுத்தவே கூடாது.
4. இப்படி ஐந்து வருடங்களுக்கு மட்டும் தான் உங்களுக்கு கதாநாயகன் வாய்ப்பு தரப்படும். பின்னர் நீங்களே தான் உங்களுக்கான பட வாய்ப்புகளை தேடிக்கொள்ள வேண்டும். இதற்காக தாங்கள் அதிர்ச்சியடையவோ, வருத்தப்படவோ கூடாது.
5. எல்லா படங்களுமே கலர் படங்கள் தான். மாறுதலுக்காக ஒரு கறுப்பு வெள்ளை படத்தில் நடிக்கிறேனே என்று நீங்கள் போர்க்கொடி உயர்த்தினால் அது எங்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும்.
6. நீங்கள் வருடத்திற்கு நடிக்கும் ஐந்து படங்களில் ஒன்றிரண்டை கே.பாலச்சந்தரோ, மகேந்திரனோ, பாலு மகேந்திராவோ, அல்லது பாரதிராஜாவோ இயக்க வேண்டியிருக்கும். அதற்கு நீங்கள் ஒப்புதல் அளித்து ஒத்துழைக்க வேண்டும். எந்த காரணத்தைக்கொண்டும் ‘மாட்டேன்’ என்று பிடிவாதம் பிடிக்கவே கூடாது என்பதை கறாராக தெரிவித்துக்கொள்கிறோம். மற்ற படங்களை தான் எஸ்.பி. முத்துராமன், ஐ.வி.சசி, ஏ.ஜெகன்னாதன் ஆகிய இயக்குனர்கள் இயக்குவார்கள்.
7. ஒரு படத்தில் கதாநாயகியோடு ஐந்து பாடல்கள் மட்டுமே டூயட் பாடல்கள்.  கதாநாயகியோடு ஆடிப்பாட  கூடுதலாக பாடல்கள் வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படக்கூடாது. அதோடு பாடல் காட்சிகள் ஊட்டி, கொடைக்கானலில் படம்பிடிக்க வேண்டியிருக்கும். ’எனக்கு குளிரும். என்னால் வரமுடியாது’ என்று நீங்கள் சொல்லவே கூடாது.
8. எனக்கு ஐந்து வருடங்கள் கமிசன் பத்து பெர்சண்ட் தரவேண்டும் என்பதை மீண்டும் நினைவுறுத்துகிறேன்.
மேற்கண்ட சட்டதிட்டங்கள் உங்களுக்கு சம்மதமா?இவ்வளவு கடுமையாக இருக்கிறதே என்று நீங்கள் மலைக்கவே கூடாது.
இப்போதே கதாநாயகிகள் ஸ்ரீதேவி, அம்பிகா, ராதா, மற்றும் மாதவி தங்களுடன் சமயக்கார பாய் கதாநாயகனாக நடிக்க இருப்பதறிந்து உங்களுக்கு தங்கள் அன்பை தெரிவிக்க சொன்னார்கள். உங்களை நேரில் பார்க்க ஆவலாயிருக்கிறார்கள்.
ரஜினிகாந்த், கமல் இருவரும் சமயக்கார பாய் நடிக்க வந்தால் தங்களுக்கு வேலைப்பளு குறையும் என்று நிம்மதி பெரு மூச்சு விட்டார்கள். சென்னை வரும் தங்கள் சக கதாநாயகனை சந்திக்க ஆர்வமாயிருக்கிறார்கள்.
இப்படிக்கு அன்புள்ள ஜே.பி. மாமா
பின் குறிப்பு : நீங்கள் தரப்போகும் கமிசன் தான் எனக்கு மிகவும் முக்கியம். வருடத்திற்கு ஐந்து படங்களுக்கு கிடைக்கும் மொத்த பணம் ஒரு கோடியில் பத்து லட்சம் எனக்கு அவசியம் தரவேண்டும்.
....................
கடிதத்தை சமயக்கார பாய்க்கு வாசித்து காண்பிக்க வேண்டியிருந்தது. பாய் ஒவ்வொரு ஷரத்துக்கும் ரொம்ப விளக்கங்கள் கேட்டு தீவிர சிந்தனையிலாழ்ந்தார். ' அஞ்சு வருஷம் கமிஷன் கேக்காஹ. '
கடிதத்தை வாங்கி கவனமாக உஷார் பண்ணிக்கொண்டார்.

ஒன்றிரண்டு ஷரத்து குறித்து ஓரளவுக்கு அதிருப்தி சமயக்கார பாய்க்கு இருந்தது.
உதாரணமாக வருடத்திற்கு ஐந்து படங்கள் எனும் போது நான்கு கதாநாயகிகள் தான் என்பது சிலாக்கியமாக படவில்லை. சில்க் ஸ்மிதாவையும் சேர்த்துக்கொள்ளலாமே. சமயக்கார பாய்க்கு சில்க்கு ரொம்ப பிடிக்குமாம்.
…………………………
சமயக்கார பாய்க்கு அன்றிரவே கடை மூடியதுமே சாப்பாட்டுக்குப் பின் நடிப்பு பயிற்சி தரப்பட்டது.
கடையில் வேலை பார்க்கும் காதர், ரஹமத்துல்லா இருவரும் supporting actors.
“சமயக்கார பாய், ரஹமத்துல்லா தான் உங்க அம்மா. அவங்க செத்துட்டாங்க. நீங்க அழுது நடிங்க.’
 லைட்ஸ் ஆன், ஸ்டார்ட் கேமரா, க்ளாப், பை ஃபைவ் டேக் ஒன், ஆக்ஸன்.
சமயக்கார பாய் ஓடிப்போய் ரஹமத்துல்லா மேல் விழுந்து கூப்பாடு போட்டார் “என்னை ஆறு மாசம் செமந்து பெத்த தாயே”
’கட்..கட்.. சமயக்கார பாய், பத்து மாசம் பாய், நீங்க கொற மாசத்திலயா பொறந்தீங்க…’
சமயக்கார பாய் விரல் விட்டு எண்ணி வசனத்தை மனப்பாடம் செய்தார்.
அடுத்த சீன்.
சமயக்கார பாய் நம்ம காதர் ஒரு பொண்ணு. நீங்க கற்பழிக்கிற சீன் இது.”
சமயக்கார பாய் “ தாடிக்கார பாய், என்ன சொல்லுதியோ… எனக்கு வில்லனா நடிக்கத்தெரியாதெ… எம்.ஜி.ஆர் ஒரு படத்திலும் பொம்பளை கிட்ட தப்பா நடிக்க மாட்டாரே…”
’இல்ல பாய், குடிகார அப்பாவ திருத்த மகள கற்பழிக்கிற மாதிரி எம்.ஜி.ஆர் நடிச்சிருக்கார். கடைசில ‘தங்கச்சி என்ன மன்னிச்சிக்கம்மா.. ஒன் அப்பாவ திருத்தத் தான் ஒன்ன கற்பழிக்கிற மாதிரி நடிச்சேன்’ம்பார். நடிப்புன்னா எது சொன்னாலும் செய்யனும்”
’லைட்ஸ் ஆன், ஸ்டார்ட் கேமரா, க்ளாப், பை சிக்ஸ், டேக் ஒன், ஆக்ஸன்.’
சமயக்கார பாய் “ என்னடி, என்ன நெனச்சிக்கொண்டு இருக்கிறாய்.. நான் கூப்பிட்டால் வர மாட்டாயோ?” என்று காதர் மேல் பாய்ந்தார்.
காதர் அவரை உடனே கீழே போட்டு மேலே ஏறி படுத்தான்.
சமயக்கார பாய் “ ஏலெ காதரு… நடிப்பு தாம்ல இது. ஏலே எந்தில…எந்தில…
காதரோ லாக் போட்டு அவரை நெருக்கினான்.
“ தாடிக்கார பாய்.. இவன எந்திக்க சொல்லுங்க பாய்.. எல காதரு நடிப்பு தானல…ஏம்ல இப்படி செய்த..”
காதர் பின்னி படர்ந்துட்டான்.
“ ஏல, காதரு..எந்தில… எல எனக்கு மூச்சு முட்டுதுல.. செத்த மூதி…. என்னல செய்த.. ஏல எனக்கு இந்த சோலியே பிடிக்காதுல.. இந்த ஒரு சோலி மட்டும் எனக்கு பிடிக்கவே செய்யாதுல..”
………………..
ஒரு நாள் ஜே.பி. மாமா சென்னையிலிருந்து வந்தவர் சாவகாசமாக சவ்வாஸுக்கு வந்து விட்டார். அவருக்கு ஓடிக்கொண்டிருந்த ரீல் பற்றி விவரிக்கப்பட்டது. ரீல் அந்து விடாமல் மேலே ஓட்ட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
வெங்காயம் நறுக்கிக்கொண்டிருந்த சமயக்கார பாய்க்கு தகவல் போய் உடனே கீழே இறங்கி வந்து விட்டார்.
கைலியை மடித்துக்கட்டியிருந்தார். விஸ்பர் வாய்ஸில் “சமயக்கார பாய், கைலிய இறக்கி விடுங்க…”

ஜே.பி. மாமா: என்னய்யா.. கண்டிஷன்லா சரி தான…
சமயக்கார பாய்: நாங்க பெரிய குடும்பம்..அண்ணந்தம்பி ஏழு பேரு….கொஞ்சம் கமிசன கொறச்சா நல்லது..
ஜே.பி. மாமா: போய்யா..என்ன ஆளுய்யா…ஏய்யா இந்த மாதிரி ஆள ஏங்கிட்ட சிபாரிசு பண்றீங்க..

சமயக்கார பாய்: நல்லா நடிப்பேன் நான்.. அதுக்கு நான் கியாரண்டி…கமிசன மட்டும் கொஞ்சம் கம்மி…

ஜே.பி.: ஓடிப்போயிடு.. நான் செம காண்ட்டாயிடுவேன்.
ஜே.பி மாமுவை  சமாதானப்படுத்த செய்த முயற்சி விழலுக்கு இறைத்த நீராகி விடுமோ என்று எல்லோரும் அஞ்ச வேண்டியிருந்தது.
சமயக்கார பாய் உடனே சரணாகதியடைந்து ஜே.பி. மாமா காலில் விழ செய்த முயற்சியும் கூட வீணாகும் அளவுக்கு ஜே.பி. கொப்பில் ஏறினார்.
சமயக்கார பாய் : ஜேப்பி மாமா.. என்ன மன்னிச்சிக்கங்கங்க… நீங்க என்னென்ன சொன்னாலும் கவிதை… நான் தட்ட மாட்டேன்.
ஜே.பி. ”சரி…சரி….பொழச்சுப்போ…சினிமாவுக்கு வந்த பிறகு கமிசன கொறைங்கன்னு சொன்னே பாத்துக்க” விரலை நீட்டி நாக்கை கடித்தார்.
சமயக்கார பாய் மேல படியேறிப் போய் சமையலை தொடர்ந்தார்.
குழம்பில் உப்பை அதிகமாக போட்டார். டீயில் ஜீனி போட மறந்தார். சோறு அடிக்கடி குழைந்து போனது. கறியில் காரம் போட மறந்தார்.
அவரிடம் இருந்த ஜேபி மாமா ஷரத்துக்கள் அடங்கிய இன்லெண்டு லெட்டர் கவனமாக கைப்பற்றப்பட்டு சுக்கு நூறாக கிழிக்கப்பட்டது.
”ஐயோ…தாடிக்கார பாய்… என்ன செய்தியோ.. ஆதாரத்த பாழாக்கி போட்டீங்களெ..”

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.