Share

Jun 22, 2017

ஏ.வி.எம். ஸ்டுடியோவில் ஒரு நாள்


ஏ.வி.எம்.ஸ்டுடியோ எடிட்டிங் பிரிவில் எப்போதும் கலகலப்பாக இருக்கும்.
எடிட்டர்கள் பால்துரை சிங்கம், லெனின், விஜயன், கே.ஆர் ராமலிங்கம் இருந்த முன் பகுதி.

ஆர்.ஆர் தியேட்டரில் கே.ஆர்.விஜயா நடித்த ’மங்கலநாயகி’ படத்தின் மிக்ஸிங் வேலை. கம்பர் ஜெயராமன் இந்த வேலைகளை செய்து கொண்டிருந்தார்.

அந்தப் படத்தின் இயக்குனர் ( கிருஷ்ணன்) பஞ்சு அங்கிருந்து கிளம்பி எடிட்டிங் பகுதிக்கு வந்து கொண்டிருக்கும் போதே டைரக்டர் புட்டண்ணா கனகல் அவருடன் சேர்ந்து கொண்டார்.
புட்டண்ணா அப்போது கொஞ்ச காலம் முன் ஒரு சினிமாஸ்கோப் படம் கன்னடத்தில் பிரமாண்டமாக எடுத்திருந்தார்.

பஞ்சுவின் காலம் அப்போது தேய்ந்து மங்கிக் கொண்டிருந்தது. மகேந்திரன், பாரதிராஜா, பாலுமகேந்திரா மற்றும் பெரிய பட்ஜெட் படங்கள் ஐ.வி.சசி, எஸ்.பி.முத்துராமன், ஜி.என்.ரங்கராஜன் – இப்படி திரைத்துறை சுழித்துப்போய் கொண்டிருந்த காலம்.

எடிட்டிங் பில்டிங் வெராண்டாவில் பஞ்சு கன்னட இயக்குனர் புட்டண்ணா கனகலுடன் நுழைந்து நடக்கும் போதே எடிட்டிங் அறையில் இருந்த எடிட்டர்கள், எடிட்டிங் அஸிஸ்டண்ட்ஸ், அஸிஸ்டண்ட் டைரக்டர்கள் என்று எல்லா டெக்னிஸியன்களும் வெராண்டாவிற்கு வந்து மரியாதையாக நின்று கொண்டார்கள்.

பஞ்சு சார் புத்தம் புது முழுக்கை சட்டை பட்டன் ஒன்று கூட போடாமல் உள்ளே பனியன் தெரியத் தான் வந்தார். எப்போதும் திறந்த சட்டையுடன் தான் இருப்பார்.

முன் பகுதி பெஞ்சில் பஞ்சுவும், புட்டண்ணாவும் உட்கார்ந்தார்கள். புட்டண்ணா நல்ல கான்வர்ஸேசனலிஸ்ட். சிரித்த முகமாக பேசிக்கொண்டிருந்தார். பஞ்சு சிரித்தமுகம் கிடையாது. கொஞ்சம் சீரியசாக தெரிவார். ஆனால் தான் அதிகம் சிரிக்காமல் மற்றவர்கள் ரசிக்கும் படியாக பேசுவார்.
………….

பஞ்சு கோபம் ரொம்ப பிரபலம். மு.க.முத்து ’பிள்ளையோ பிள்ளை’ பட ஷூட்டிங் போது நடந்த பழைய விஷயம் ஒன்றை புரடொக்சன் அசிஸ்டெண்ட் எலி சொல்லியிருக்கிறான். ஃபீல்டில் ஒரு பெரிய கல் இருந்திருக்கிறது. எலி அது தேவையில்லையோ என்று அப்புறப்படுத்தியிருக்கிறான். பஞ்சு கத்தியிருக்கிறார். “ங்கோத்தா இங்க இருந்த கல் எங்கடா. நான் தானே இங்க போடச் சொன்னேன்.”
ஒரு ஆள் சொல்லியிருக்கிறார் ‘எலி தான் சார் தூக்கி வெளிய போட்டுட்டான்’
பஞ்சு ”எங்கடா அவன்? இங்க ஒன்னு நான் இருக்கணும். இல்ல அவன் இருக்கணும். ங்கோத்தா என்னடா சொல்றீங்க?”
………………..

இங்கே இப்போது எடிட்டிங் ஹாலில் பஞ்சு அங்கே நின்று கொண்டிருந்த ஒரு முப்பது வயது மதிக்கத்தக்க ஒருவனை பார்த்து “ இங்கே வாடா “ என்றார்.
”இவன் பாருங்க. எல்லாரையும் மிரட்டிக்கிட்டு இருக்கான்.”
’என்னடா எல்லார் கிட்டயும் சொல்ற. சொல்லு’
ஒரு டெக்னிஸியன். அஸிஸ்டெண்ட் டைரக்டரா, எடிட்டிங் அஸிஸ்டெண்டா தெரியவில்லை.
அவன் எந்த பதிலும் சொல்லவில்லை. பஞ்சு போலவே முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டே நின்றான்.

பஞ்சுவே சொன்னார். “ இவனும் சிவாஜியும் ஒரே பேட்ஜுன்னு சொல்றான்.’நானும் சிவாஜி கணேசனும் பராசக்தியில ஒன்னா ஃபீல்டுக்கு வந்தோம். நான் தான் இங்க ஒங்களுக்கெல்லாம் சீனியர்’னு எல்லாரையுமே மிரட்டுறான் பாத்துக்கங்க.”

”பராசக்தியில இவன் தான் சிவாஜிக்கு தங்கையா நடிச்ச ஸ்ரீரஞ்சனியோட கைக்குழந்தை.”

…………………………………………………..
http://rprajanayahem.blogspot.in/2017/03/blog-post_21.html

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.