Share

Mar 1, 2015

வீணையும் புல்லாங்குழலும்

சங்கீத வீணை தேன் சிந்தும் முன்




திருச்சியில் இருந்த போது ரசிகரஞ்சனி சபா,ராம கான சபா இரண்டிலும் நான் மெம்பர்.
ரசிக ரஞ்சனி சபாவில்
கீதா பென்னட் வீணை கச்சேரிக்கு முன் நடந்த இசை கருத்தரங்கத்தில்
கீதா பென்னட்டிடம் கேட்டேன். " நீங்கள் எஸ்.ராமனாத பாகவரின் மகள்.வீணை வித்வான் மட்டுமல்ல. பத்திரிக்கைகளில் கதை எழுதுகிறவர். தி.ஜானகிராமன் பற்றி என்ன சொல்வீர்கள்? கர்நாடக சங்கீதத்தை தி.ஜா எழுத்தில் எப்படியெல்லாம் கனப்படுத்தியிருக்கிறார். அவரை இந்த சபையில் படித்தவர்கள் எத்தனை பேர் நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்."

கீதா : தி.ஜானகிராமன் ஒரு உன்னதமான எழுத்தாளர். இசையார்வம் உள்ள யாருமே அவரை படிக்காமல் இருக்கவே கூடாது. இங்கே எத்தனை பேர் தி.ஜா.வை படித்திருக்கிறீர்கள்."
உடனே பல பெரியவர்கள் கை தூக்கினார்கள். ஆனால் சபாவுக்கு வந்திருந்த சீதாலக்ஷ்மி ராமசாமி கல்லூரி இசைத்துறை மாணவிகளும்,ஆசிரியைகளும் தி.ஜா பெயரை அன்றைக்கு நான் சொன்ன போது தான் கேட்டிருந்தார்கள். அவர்கள் யாரும் அவரை படித்திருக்கவில்லை!

எனக்கு பின்னால் உட்கார்ந்திருக்கும் வையச்சேரி தேவாரம் பாலசுப்ரமணியம் மட்டும் ( இரண்டாவது புகைப்படத்தில் எனக்கு வலதுகை பக்கம் தாடையில் கை வைத்திருப்பவர்) வீணை கச்சேரி நிகழ்ச்சி முடிந்த பிறகு, டெல்லியில் இருந்த போது, தான் தி.ஜானகிராமனுடன் நல்ல பழக்கமுள்ளவர் என்ற விஷயத்தை என்னிடம் சொன்னார். அவரிடம் நான் 'தி.ஜாவுக்கு பிடித்த கர்நாடக சங்கீத பாடகர் யார்' எனக் கேட்டேன். வையச்சேரி தேவாரம் பாலசுப்ரமண்யம் உற்சாகமாக சொன்னார் " மதுரை மணி ஐயர்!"

தேவாரப் பண்களை பிரமாதமாகப் பாடுவார் வையச்சேரி பாலசுப்ரமண்யம்.

மஹா வைத்தியநாத பாகவர் பிறந்த ஊர் வையச்சேரி!


நான் கீதா பென்னட்டிடம் பேசும் இந்த முதல் புகைப்படம் மறு நாள் தினகரன் செய்தித்தாளில் இடம்பெற்றிருந்தது!

........................................................


புல்லாங்குழல் இசைப்பதற்கு முன்





திருச்சி மஹாத்மா காந்தி வித்யாலயாவில் ஒவ்வொரு வருடமும் தியாகப்ரும்ம ஆராதனை விழா நடக்கும்.
ஆலத்தூர் சகோதரர்கள் என்று அறியப்பட்ட பிரபல வித்வான்கள் உடன் பிறந்த சகோதர்கள் அல்ல. இணைந்து பாடிய இரட்டையர்கள் என்பதால் சகோதரர்களாக அறியப்பட்டவர்கள். ஆலத்தூர் ஸ்ரீனிவாச ஐயர், ஆலத்தூர் சிவசுப்ரமண்ய ஐயர்.
இருவருமே சிவசுப்ரமண்ய ஐயரின் தகப்பனார் ஆலத்தூர் வெங்கடேச ஐயரின் சிஷ்யர்கள். 


இவர்களில் ஆலத்தூர் சிவசுப்ரமணிய ஐயரின் மகன் ஆலத்தூர் தியாகராஜன்
( ஓய்வு பெற்ற திருச்சி நேஷனல் காலேஜ் பிரின்சிபால்) இந்த தியாகப்ரும்ம ஆராதனை நடத்துபவர்.
பிரபல வித்வான்கள் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள்.


புகைப்படத்தில் சங்கீத கலாநிதி ஃப்ளூட் ரமணி ( ஜிப்பாவில் பேட்ஜ் அணிந்திருப்பவர்), அவருக்குப்பின்னால் Charagh Din டீ சர்ட் அணிந்து நான் அமர்ந்திருக்கிறேன். எனக்கு அருகில் அமர்ந்திருப்பவர் ஆலத்தூர் தியாகராஜனின் இளைய சகோதரர்.

மாலையில் ஃப்ளூட் ரமணியின் கச்சேரி நடக்கவிருந்தது.
காலையில் நடந்த ஒரு கச்சேரி இது. இளம் பாடகி ஒருவர் தியாகப்ரும்மத்தின் ஸ்ரீரஞ்சனி ராக கீர்த்தனை 'மாருபல்க குந்ந வேமிரா மாமநோரமண' பாடிக்கொண்டிருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது.


ஒரு கூடுதல் தகவல். ஆலத்தூர் ஸ்ரீனிவாசய்யர் மகன் சந்துரு
என் பள்ளித்தோழன்.

......

http://rprajanayahem.blogspot.in/2012/11/blog-post_26.html


 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.