Share

Sep 7, 2008

பொய்த்தேவு

சென்ற வருடம் என் துணைவிக்கு பல் டாக்டரை பார்க்க அழைத்து சென்றிருந்தேன் . டாக்டரம்மா என் மனைவியை செக் செய்து ட்ரீட்மென்ட் கொடுத்துக்கொண்டிருந்த போது வெளியே பொழுது போகாமல் வேடிக்கை பார்த்துகொண்டிருந்தேன் . ஒரு அம்மாள் அங்கே ஒவ்வொருவரிடமும் ஏதோ சொல்லி ஒரு நகல் பிரதி ஒரு பக்கம் உள்ளதை நோட்டீஸ் போல கொடுத்துகொண்டிருந்தவர் என்னை பார்த்தவுடன் நான் வேலைவெட்டி இல்லாமல் அங்கே நிற்பதை புரிந்து கொண்டு உடனே என்னிடம் வந்து விட்டார் .

" சார் , நான் இங்கே ஆசிரமத்தை சேர்ந்தவள் . எங்க சாமி பெயரை தான் என் பெயருடன் வைத்திருக்கிறேன் பாருங்கள் . " அவர் கொடுத்த நோட்டீஸ் பார்த்தேன் .ஆமாம் . தன் பெயருடன் அந்த ஆசிரமத்தின் சாமியார் பெயரைத்தான் வைத்திருந்தார் ." என் கணவர் இங்கே பாங்கில் வேலை பார்க்கிறார் . எனக்கு இரண்டு பிள்ளைகள் கல்லூரியில் படிக்கிறார்கள் . ஆனால் என் கணவர் பெயரை என் பெயருடன் சேர்க்காமல் எங்க சாமியார் பெயரை தான் சேர்த்திருக்கிறேன் பார்த்தீர்களா ?"

நான் மையமான புன்னகையுடன் "ம்ம்ம் சொல்லுங்க " என்றேன் .

"சுவாமி சொல்லிட்டாங்க சார் . இனி இந்த சுனாமி பிரச்சினை கிடையாது . நான் பார்த்துகொள்கிறேன்ன்னு . கவலையே படவேண்டாம் சார் . எங்க ஸ்வாமி தான் சார் உலகத்தை காப்பாற்றியவர் . சுனாமி அழிவிலிருந்து உலகை காப்பாற்றியவர் . இதில் ஒரு பிரார்த்தனை இருக்கு பாருங்க .இதை சொன்னால் போதும் . எங்க சாமியார் உங்களுக்கு நீங்க கேட்டதெல்லாம் தருவார் . எப்போ சார் நீங்க எங்க ஆசிரமத்துக்கு வர்றீங்க "

என்னை பெருமையாக பார்த்து விட்டு மேலும் தொடர்ந்தார் ."இவ்வளவு சொல்றேனே . நான் யார் என்று நீங்க யோசிக்கிறீங்க . சொல்றேன் சார் . நான் வேறு யாருமில்லை சார் . ஸ்வாமி விவேகானந்தா இல்ல . சாட்சாத் விவேகானந்தாவோட மறு பிறப்பு சார் நான் . இந்த பிறவியிலே பெண்ணா பிறந்துருக்கேன் சார் ."

எனக்கு வேதனையாயிருந்தது . விவேகானந்தர் பெண்ணா பிறந்துட்டாரே என்பதற்காக இல்லை . இந்த பிறவியில் அவர் இன்னொரு சாமியாருக்கு இப்படி அடியாராக இருக்கிறாரே .....இப்படி நினைக்கும்போதே என் தவறை உணர்ந்து உடனே,உடனே திருந்திவிட்டேன் .யார் கண்டது . அந்த ஆசிரம சாமியார் தான் பரம ஹம்சரின் மறு பிறவியோ என்னவோ .

சட்டென்று ஒரு விஷயம் ஞாபகம் வந்தது . திருச்சியில் அந்த காலத்தில் பிரேமானந்தாவின் சிஷ்யர்களும்" எங்க சுவாமி வேறு யாருமில்லே . சுவாமி விவேகானந்தா வின் மறு பிறவி தான் ."என்று தான் பயமுருத்திகொண்டிருந்தார்கள் .

நாம் எப்போதும் நல்ல படியே நினைப்போம் . ஒருவேளை இப்படியும் இருக்கும் . விஷ்ணு ஒரே நேரத்தில் பரசுராமன் , பல ராமன் , ஸ்ரீகிருஷ்ணன் -இப்படி மூன்று அவதாரங்கள் எடுக்க வில்லையா . அது போல விவேகானந்தர் இப்போது பிரேமானந்தாவாகவும் இந்த திருப்பூரம்மா வாகவும் மறு பிறப்பு எடுத்திருப்ப்பார் .

3 comments:

  1. >எனக்கு வேதனையாயிருந்தது . விவேகானந்தர் பெண்ணா பிறந்துட்டாரே என்பதற்காக இல்லை . இந்த பிறவியில் அவர் இன்னொரு சாமியாருக்கு இப்படி அடியாராக இருக்கிறாரே < பொருள் பொதிந்த வாக்கியம். ஆமாம் , இவ்வளவு சுவ ராஸ்யமாக எழுதத் தெரிந்தும்,இவ்வளவு நாட்களாக எழுதாமல் இருந்தது குற்ற உணர்வாகத் தோன்ற வில்லையா? ‘ பொய்த் தேவு” என்பதன் பொருள் என்ன?


    அன்புடன்

    சூர்யா.

    ReplyDelete
  2. Man needs gods . So he starts his search and begins to find even Psedogods and imitation goddesses.

    'Poiththevu'means fake gods.

    Ka.Naa.Su had written a beautiful novel " Poiththevu"- a master piece
    in Tamil literature.
    As per me It is the first proper novel in Tamil.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.