Share

Mar 1, 2019

மு.தளையசிங்கமும் தொழுகையும்


சொல் புதிது 8ல் சாரு நிவேதிதாவுக்கு எச்சரிக்கை செய்து 'சாரு தொடங்க வேண்டிய புள்ளி தளையசிங்கத்தின் 'தொழுகை' கதைதான்.ஆனால் அபாயமிருக்கிறது. தளையசிங்கம் அவசரமாக அடித்துக் கொல்லப்பட்டார்' என்று ஜெயமோகன் எழுதியதை படித்தபோது அதிர்ச்சி ஏற்பட்டது.
1971ம் ஆண்டு தாழ்த்தப்பட்டோருக்கு நன்னீர் கேட்டு போராட்டம் நடத்தியதற்காக போலிஸாரால் தளையசிங்கம் தாக்கப்பட்டார். 1972ம் ஆண்டு 'மெய்யுள்' என்ற கருத்தாக்கத்தை நிறுவுகிறார். 1973ம் ஆண்டு சில மாதங்கள் உடல் நலம் குன்றி படுத்த படுக்கையாகி மரணமடைகிறார்.
இது 'தளையசிங்கத்தின் பிரபஞ்சயதார்த்தம்' என்ற கட்டுரையில் சுந்தரராமசாமி நமக்குத் தரும் தகவல்.
22.02.2001 அன்று திருச்சி வந்திருந்த சுந்தரராமசாமி அவர்களிடம் நான் நோ¢ல் இதுபற்றிக் கேட்டபோது தளைய சிங்கத்தின் சகோதரர் மு. பொன்னம்பலம் கொடுத்த தகவலைத்தான் எழுதியதாகக் கூறுகிறார்.
இந்த விவரங்களைக் குறிப்பிட்டு ஜெயமோகனுக்கு நான் கடிதம் எழுதுகிறேன். அதில் தளையசிங்கம் பாலியல் கதைகளுக்காக அடித்துக் கொல்லப்பட்டார் என்ற தொனியும் அவருடைய விமர்சனத்தில் இருப்பதைச் சுட்டிக்காட்டி எழுதுகிறேன்.
ஜெயமோகன் இதற்கு ஐந்து பக்கத்துக்கு பதில் எழுதுகிறார். என்னுடைய கடிதம் சொல் புதிது 9-ல் விளக்கங்களுடன் பிரசுரிக்கப்பட இருப்பதாக அதில் குறிப்பிடுகிறார்.
திருச்சியிலுள்ள சபாரத்தினம் என்ற இலங்கை எழுத்தாளர் 'தளைய சிங்கத்திற்கெதிராக போலீசைத் தூண்டி பணம் கொடுத்தவன் கொழும்பில் பாத்திரக்கடை வைத்திருக்கிற தீவுக்காரன்' என்று என்னிடம் தெரிவித்த தகவலை ஜெயமோகனுக்கு கடிதம் மூலம் தெரிவிக்கிறேன்.
மே 4, 5, 6 தேதிகளில் ஊட்டிநாராயணகுரு குலத்தில் நடக்க இருக்கிற தளையசிங்கம் கருத்தரங்கிற்கு ஜெயமோகனிடம் இருந்து அழைப்பு.
சொல்புதிது 9ல் தளையசிங்கம் பற்றிய என் கடிதம் மிகவும் சுருக்கப்பட்டு எழுத்துப் பிழைகளுடன் (தலையசிங்கம்) ஒரு பாமரனின் கடிதம் போல் பிரசுரிக்கப்பட்டு விளக்கம் அடுத்த இதழில் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
தளையசிங்கத்தின் தொழுகை, கோட்டை கதை நகல்களும் தளையசிங்கத்தின் கருத்துகளும் ஜெயமோகனின் நெடுங்கட்டுரை ஒன்றும் கொரியரில் அனுப்பப்பட்டு கிடைக்கிறது.
ஜெயமோகனின் நெடுங்கட்டுரை நிறைய ஜார்கன்ஸ், மேற்கோள்கள், தான் படித்த பல விஷயங்களில் சாரம் எல்லாமாகச் சேர்ந்து தளைய சிங்கம் பெயரை எடுத்து விட்டு நீட்சே, ஹெகல், சார்த்தர், அரிஸ்டாட்டில், சாக்ரடீஸ், பிளேட்டோ என்று யார் பெயரைப் போட்டாலும் பொருத்தக் கூடிய அளவுக்கு க்ராஃப்ட் மேன்ஷிப்.
தளைய சிங்கம் பற்றிய சுந்தரராமசாமியின் கட்டுரை பற்றி 'இலக்கிய வம்புகளின் அடிப்படையில் மதிப்பிடும் முயற்சி' என்றும் 'செயற்கை இறுக்கம் நிறைந்த நடை' என்றும் குறிப்பிடுகிறார்.
ஊட்டியில்
குடும்பத்துடன் ஜெயமோகன் வருகிறார். கருத்தரங்கத்தின் முதல் அமர்வு. ஜெயமோகனின் முன்னுரை.
நான் பேசிய போது 'அகிலனை விடத் திறமையான கலைஞன். புதுமைப்பித்தனையும் மெளனியையும்விட கலையின் நோக்கத்தைப் பரிபூர்ணமாக புரிந்து கொண்டவன். பாரதியைப் போலவே போர்க்கோலம் பூண்டவன். அவனே மு.கருணாநிதி' என்ற தளைய சிங்கத்தின் கூற்றைப் பற்றி குறிப்பிடுகிறேன்.
வெங்கட் சாமிநாதன் ஆர்வத்துடனும் சிறிது குழப்பத்துடனும் என்னிடம் 'அப்படியே சொல்கிறாரா' 'அப்படியே சொல்கிறாரா' என்று கேட்கிறார்.
நான் தொடர்ந்து எம்.ஜி.ஆர். அ.தி.மு.க கட்சியை ஆரம்பித்த போது பிரான்சில் மார்க்ஸிய தத்துவத்தை தலைகீழாக்கிய புரட்சிகர உபவர்க்கத்துடனும், அமெரிக்காவின் பலாத்காரங்களை எதிர்க்கும் ஹிப்பிஸ{டனும் சீனாவின் புதிய மார்க்ஸீய செங்காவலர்களுடனும் பங்களதேஷின் கொரில்லாக்களோடும், பிலிப்பைன்ஸின் மார்க்கோஸ் ஆட்சியை எதிர்த்து கொரில்லாக்களோடும் அண்ணா தி.மு.க அனுதாபிகளை தோளோடு தோள் நிறுத்தி கருணாநிதியின் நவ பாஸிச ஆட்சியை எதிர்ப்பதாக தளைய சிங்கம் எழுதியதையும் அபத்தம் என்று சுட்டிப் பேசினேன்.
உடனே ஜெயமோகன் இப்படி ஒவ்வொரு வரியாக உருவி தளையசிங்கத்தைப் பார்க்கவேண்டாம் என்றார்.
தொழுகை கதை பற்றி பேச ஆரம்பித்த வேதசகாயகுமார் அவருடைய கிறிஸ்துவ பூசை லத்தீன் மந்திரங்களை இளைஞர்கள் பொருத்தமாக கெட்ட வார்த்தை போட்டு பேசிக் காட்டுவதைப் பற்றியும் பாவ மன்னிப்பு கேட்கும்போது பாதிரியாரிடம் ஆபாசமாக விவாரித்துப் பேசி பாதிரியார் இளையவராயிருந்தால் அவர் மிகவும் நெளியவேண்டியிருக்கும் என்பதையும் நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.
'செக்சுவாலிடி பற்றி பேசலாம் தானே. ஏதும் தடையுண்டா?' என்று நான் கேட்டேன்.
ஜெயமோகன் தன் மனைவி அருண்மொழி நங்கை கலந்து கொண்டுள்ள நிலையிலும் பேசலாம் என்பதாக தலையாட்டினார்.
மதியம் சாப்பிட்டுவிட்டு அரட்டை ஜெயமோகன் அவருடைய உத்தியோகம் செய்யும்போது டெலிபோன் உரையாடல்களைதான் ஓட்டுக் கேட்ட கதைகளை கூறுகிறார்.
குற்றாலத்தில் குமார செல்வாவுக்கும் லட்சுமிமணிவண்ணனுக்கும் நாடார் ஜாதியின் உட்பிரிவு பற்றிய சர்ச்சை காரணமாக நடந்த கைகலப்புச் சண்டையைப் பற்றிக் கூறுகிறார்.
யாரோ ஒரு அரை குறை அமுதா கணேசனையும், குரும்பூர் குப்புசாமியையும் படித்து விட்டு, ஒரு ரொம்பப் பெரிய நாவலை எழுதிக் கொண்டுவந்து ராமஸ்வாமியிடம் (சுந்தர ராமசாமியை ராமஸ்வாமி என்றே ஜெயமோகனும் வேதசகாய குமாரும் குறிப்பிடுகிறார்கள்) படிக்கச் சொல்லி வற்புறுத்துகிறான்.
ஜெயமோகன் இந்த இடத்தில் தான் ராமஸ்வாமியின் பாய்சனைக் கவனிக்கனும் என்கிறார்.
சுந்தர ராமசாமி எனக்கு வயதாகி விட்டது. ஹார்ட் ப்ராப்ளம் இருக்கிறது. நீங்க அவரிடம் உங்க நாவலைக் காட்டுங்களேன் என்று ஒரு மூன்றாந்தர பேராசிரியரைக் குறிப்பிட்டு அந்த அரைகுறை எழுத்தாளரை சமாளித்ததை பாய்சன் என்று ஜெயமோகன் விவாரிக்கிறார்.
யாராயிருந்தாலும் ஆர்வக்கோளாறுகளை இப்படித்தானே சமாளிக்க வேண்டியிருக்கிறது. இதில் என்ன பாய்சன் இருக்கிறது?
இதைத் தொடர்ந்து இந்திரா பார்த்தசாரதி என்னிடம் இடைவெளி சம்பத் பற்றி சொன்ன விஷயத்தை குறிப்பிட்டேன். சம்பத் ஆயிரம் பக்கத்திற்கு ஒரு நாவல் எழுதிக் கொண்டு வந்து இந்திரா பார்த்தசாரதியிடம் கொடுத்ததையும் அதை படித்துவிட்டு இந்திரா பார்த்தசாரதி அபிப்ராயமாக 'RAMBLING ஆக இருக்குடா. நாவலை இன்னும் Crisp ஆக edit செய்தால் நன்றாக வரும்' என்று சொல்லிவிட்டு எதற்கோ வீட்டின் உள் அறைக்குச் சென்றுவிட்டு திரும்பிய போது சம்பத் வெராண்டாவில் அந்த முழு நாவலையும் கொளுத்திவிட்டு குருநாதருக்கு பிடிக்காத நாவல் இனிமேல் எதற்கு? என்று இந்திரா பார்த்தசாரதியிடம் சொன்னதையும் கூறினேன்.
(இந்த விஷயம் ஜெயமோகனை உறுத்தியிருக்குமோ என்னமோ)
என் கல்லூரி வாழ்க்கையின் போது நடந்த சம்பவம், நான் திரைப்பட உதவி இயக்குனராக இருந்த போது அக்ரஹாரத்தில் கழுதை ஜான் ஆப்ரஹாமை ஐந்தாறு முறை பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்ட போது நடந்த ஒரே மாதிரியான சம்பவத்தைப் பற்றிக் குறிப்பிட்டேன்.
பாக்யராஜீன் ராசுக்குட்டி படத்தில் நான் நடித்து படத்தில் அந்தக் காட்சி இடம் பெறாமல் போனதைப் பற்றி இப்படி... இப்படி
வெங்கட்சாமிநாதனிடம் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் அசோகமித்திரனை அவர் கடுமையாக தாக்குவது பற்றி கேட்டேன். க.நா.சுவும், சந்தரராமஸ்வாமியும் நகுலனும் கூட அசோகமித்ரன் பற்றி உயர்வாக எழுதியபோது வெ.சா.வும் பிரமிளும் கடுமையாக அவரை விமர்சித்தது ஏன் என்று கேட்டேன்.
நூலகத்தில் மாலை அமர்வு, கடுங்குளிர். தளையசிங்கத்தின் பேர் ஞான விடுதலை முழுச் சமூகத்திற்கும் சாத்தியமா?
வெ.சா. அப்போது கூறுகிறார். இது சாத்தியப்படாத விஷயம். இன்டிவிஜுவல் சால்வேஷன் சாத்தியம் பரவச விடுதலை முழுச் சமூகத்திற்கு எப்படி ஏற்படும். அப்போது ஸ்தாபனம் ஆகிவிடும். ஸ்தாபனம் என்னும்போது கரப்ட் ஆகிவிடும்.
வெ.சா.வின் இந்தக் கருத்துடன் எனக்கு முழுக்க உடன்பாடு. இந்திரா பார்த்தசாரதி தன் எழுத்தில் பலமுறை குறிப்பிடுகிற விஷயம்.
வினோபா ஆசிரமத்திற்குப் போய் அங்கே நடந்த அக்கிரமங்களைக்காண சகியாமல் மிரண்டு போய் திரும்பி ஒடிவந்த தன் நண்பர் ஒருவரைப் பற்றி கி.ராஜ நாராயணன் ஒரு முறை என்னிடம் சொன்னதைப் பற்றிக் கூறினேன்.
அரசியல்வாதிகளின் கைப்பொம்மைகளாக, எழுத்தாளர்களும் கலைஞர்களும் இல்லாமலிருக்க வேண்டுமென்றால் அவர்களே அரசியல்வாதிகளாகவும் இருக்க வேண்டும் என்கிறார் தளையசிங்கம்.
அரசியல்வாதிக்கு எதிர் மறை அம்சம் இலக்கியவாதி என்று எனக்குத் தோன்றுகிறது. அதோடு எழுத்தாளர்களுந்தான் எந்த அளவுக்கு நம்பகமானவர்கள்? 1968ம் ஆண்டு நோபல் பரிசு வாங்கும்போது ஜப்பானிய எழுத்தாளர்கள் தற்கொலை செய்து கொள்வதை கண்டித்து உரையாற்றிய யசுநாரி கவபட்டா 1972ம் ஆண்டு தற்கொலை செய்து கொள்கிறார் என்று நான் கேட்டேன்.
இந்த இரண்டு அமர்வுகளிலும் நாள் புரிந்து கொண்ட ஒரு முக்கியமான விஷயம். ஜெயமோகன் நிறைய பேசுவார். வேதசகாய குமாரும் பேசுவார். அவ்வப்போது ஜெயமோகன் 'நீங்க என்ன சொல்றீங்க' என்று யாரையாவது கேட்பார். அவர் ஒரு நிமிடமோ, இரண்டு நிமிடமோ, ஒரு கருத்து அபிப்ராயம் சொன்னதும் தொடர்ந்து ஜெயமோகன் நிறைய பேசுவார். தொடர்ந்து வேத சகாய குமார் பேசுவார். நான் எப்போதும் ஜெயமோகன் கேட்காமலே தான் பேசினேன்.
இரண்டாவது அமர்வு முடியும் போது தொழுகை கதை பற்றி வெ.சா. அருமையான ஒரு கமெண்ட் அடித்தார். ’ஒரு சின்ன லேடி சேட்டர்லீஸ் லவர்’.
நான் அதை உடனே ரசித்து ஆமோதித்தேன்.
கூட்டம் முடிந்த பிறகும் ஜெயமோகன் பேசிக் கொண்டேயிருந்தார்.
பொதுவாகவே ஜெயமோகன் தூங்குகிற நேரந்தவிர மற்ற நேரங்களில் பேசிக் கொண்டேயிருக்கிறார். சாப்பிடும்போது கூட பேசிக் கொண்டுதான் இருக்கிறார்.
எப்படியோ சாப்பிட்டும் விடுகிறார்.
தூங்குவதற்கு மாத்திரை வேண்டுமா? என்று கேட்டார். எனக்குத் தேவையில்லை என்று சொல்லி விட்டேன்.
ஜெயமோகன் 1986 ல் மனப்பிளவு நிலை பாதிப்புக்குள்ளாகி இரண்டரை வருட காலத்தில் இரண்டாகப் பகுத்துக் கொண்ட மன ஒத்திசைவும் சிதைந்த போது உச்சக்கட்டத்தில் மூன்று மாதம் மன நல சிகிச்சை பெற்றுக் கொண்டவர். சுந்தர ராமசாமிதான் 'எழுதுங்க எழுத்து தான் மருந்து'. "It will cure you" என்று உற்சாக மூட்டி நெறிப்படுத்தியிருக்கிறார்.
இரண்டாம் நாள் மே 5ந் தேதி காலை 6 மணிக்கு அறைக்கு வெளியே உற்சாகமான ஜெயமோகனின் பேச்சு சத்தம். எல்லோரும் வாக் போகிறார்கள். நான் எழுந்து காலைக் கடன் முடித்து குளித்து அறையைவிட்டு வெளியே வருகிறேன். தேவகாந்தனுடன் டைனிங்-கம்-கிச்சன் கட்டிடத்திற்கு செல்லும்போது வெ.சா. குளித்துவிட்டு அவரும் சேர்ந்துகொள்கிறார். கறுப்பு தேநீர் அருந்திவிட்டு எனக்கு பாட்டிலில் நீர் எடுத்துக்கொண்டு வரும்போது வெங்கட் சாமிநாதனுக்கும் அவர் பாட்டிலில் நீர் எடுத்து அவர் அறையில் வைக்கிறேன்.
வேத சகாயகுமார் பேசுகிறார். ராமஸ்வாமி (சு.ரா.) இவருக்கு ரொம்ப நெருக்கமாயிருந்தவர். தன்னுடைய படுக்கையில் இவரைப் படுக்கச் சொல்லிவிட்டு அவர் தரையில் படுத்துவிடுவார்.
தொடர்ந்து சு.ரா.வைப் பற்றியும் அவருடைய மகன் கண்ணனைப் பற்றியும் புதுமைப்பித்தனின் அச்சிடப்படாத படைப்புகளை தொகுத்து காலச்சுவடு பிரசுரம் செய்தது பற்றி கடுமையான அதிர்ச்சியான தகவல் பல லட்சம் பணம் ( 8 லட்சமாம்) கை மாறியது. தமிழவன் தான் மீடியேட்டர். (இன்டர்மீடியட் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்) தமிழவனே இதைப் பற்றி இவாரிடம் சொன்னார்.
புதுமைப்பித்தனின் 'தமிழைப் பற்றி‘ என்ற முக்கியமான கட்டுரையை சகாயகுமார் தான் கொடுத்தார். கண்ணனை இந்த பல லட்சம் பிரச்னை குறித்து வேதசகாயகுமார் வேறு பலமாதிரி விசாரிக்கிறார். கண்ணன் பிடிகொடுக்கவே யில்லை. ஆனால் யாரிடமோ கண்ணன் இவர் ஏதோ ஒரு லட்சம் ரூபாய் பணம் எதிர்பார்ப்பதாக அவதூறு பேசினார்.
சொல்புதிது ஜெயமோகன் சிரமப்பட்டு நடத்துகிறார். கையைக் கடித்தால் நிறுத்திவிடும்படி இவரால் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் சொல்புதிதுக்கு ஆர்.எஸ்.எஸ் பணம் வருவதாக வதந்தி.
சு.ரா விடமும் கண்ணனிடமும் உள்ள நம்பிக்கையில் தான் ஆர்.எஸ்.எஸ்ஸில் இருந்ததைப் பற்றி ஜெயமோகன் சொல்லியிருந்திருக்கிறார். இப்போது 'அந்த விஷயம்' பற்றி இப்படிப் பிரச்சாரம் செய்வது நியாயமா? கண்ணன் பி.ஜே.பி. ஆதரவாளராக இருந்ததில்லையா? இப்படி..... இப்படி .....
நான் 'ஒரு இலக்கியவாதி ஆர்.எஸ்.எஸ்ஸில் இருக்க முடியுமோ?' என்கிறேன். மார்க்ஸீயவாதிகள் இலக்கியவாதிகளாக இல்லையா? என்று வெ.சா. கேட்கிறார்.
ஜெயமோகன் அன் கோ வாக் போய்விட்டு திரும்பி வருகிறார்கள். என்னிடம் 'இப்போதும் சினிமா ஆசை இருக்கிறதா? என்று முகம் கழுவிக் கொண்டே ஜெயமோகன் கேட்கிறார். ’ஃப்ரேமுக்குள் நடிகனாக வர வேண்டும். ஒரு கலைப்படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற தாகம் ரொம்ப உண்டு’ என்று பதில் சொல்கிறேன்.
ஜெயமோகன் இன்றும் குளிக்கவில்லை.
யுவன் இரண்டாம் நாள்தான் வருகிறார். சந்திக்கிறேன், கைகுலுக்கல் 'லொயோலா காலேஜா' 'இல்லை. நான் R.P. ராஜநாயஹம் திருச்சி' யுவனும் நானும் மதுரை அமெரிக்கன் காலேஜ்.
நான் பி.ஏ. இங்கிலிஷ் லிட்ரேச்சர். ஆங்கிலத்துறை பேராசிரியர்கள் மிகவும் விசேஷமானவர்கள். வசந்தன் தான் எனக்கு ஹேம்லட். நெடுமாறன்தான் மார்க் ஆண்டனி. ஜான்சகாயம் தான் டாக்டர் ஃபாஸ்டஸ்.
தமிழ் பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் வகுப்பைவிட வெளியேதான் அவர் பேச்சு சுவாரசியமாயிருக்கும்.
ஹிந்தி நடிகை தேவிகாராணியை கதாபாத்திரமாகக் கொண்ட 'அழியாதமலர்' பற்றி ஜெயமோகனிடம் பேசுகிறேன். 'சவுக்கு' கதை அசோகமித்திரன் பாணி கதை. (அசோகமித்திரனின் சிறுகதைகளில் வரும் பால்ய நண்பர்கள் முனீர், நரசிம்மன் ஆகியோரை சவுக்கு 'சோட்டேலால்' நினைவு படுத்துகிறான்.) ஆமாம் என்று ஜெயமோகன் ஒத்துக் கொள்கிறார்.
சட்டென்று நான் தளையசிங்கம் கருத்தரங்கம் பற்றி 'உங்கள் கட்டுரை கனமாக இருக்கிறது என்றாலும் எனக்கு வெ.சா. சொல்வதில்தான் உடன்பாடு' என்கிறேன். ஓரிரண்டு விநாடி நிதானித்து ஜெயமோகன் 'அதுசரி. இது உங்கள் அபிப்ராயம்' என்கிறார் சிறிது சலனத்துடன்.
மூன்றாவது அமர்வு.
வேதசகாயகுமார் முதலில் தன் கட்டுரையை வாசிக்காமல் விளக்கிப் பேச ஆரம்பிக்கிறார்.
ஒரு கட்டத்தில் கட்டுரையை வாசித்திருந்தால் நேரம் மிச்சமாகியிருக்கலாம் என்று தோன்றுகிறது. வாசிக்கிறார். வேண்டாம் என்று மீண்டும் விளக்கிப் பேச ஆரம்பிக்கிறார். விளக்கெண்ணெயை எடுத்து குண்டி கழுவுவது போல ஆகிவிட்டது.
யுவன் கொஞ்ச நேரத்தில் மோகனரங்கனின் சட்டை கைப் பகுதியை பின்னுக்கு இழுத்து முன்னுக்குத்தள்ளி விளையாட ஆரம்பித்துவிடுகிறார். நிர்மால்யாவிடம் 'டீ வருமா' என்று கேட்கிறார். நிர்மால்யா டீ ஏற்பாடு செய்கிறார்.
டீ குடித்தவுடன் யுவன் சிகரெட் பிடிக்க வெளியே செல்கிறார். 'குடிக்க நீர் வேண்டும்' என்கிறார்.
நீர் வந்ததும் எழுந்து போய் குடிக்கிறார்.
திடீரென்று ஜெயமோகன்தான் துப்பறிந்து சாரு நிவேதிதாவின் ஜாதியைக் கண்டுபிடித்ததைப் பற்றி கூறினார். சாரு ஒரு முறை 'தான் மலம் அள்ளுகிற ஜாதி' என்று எழுதியபோது ஜெயமோகன் சாருவின் மேலதிகாரியிடம் அவர் ஜாதிபற்றிய சர்ட்டிபிகேட் நகலைக் கேட்டுப் பெற்றுவிட்டார். சாருநிவேதிதா தலித் அல்ல, செங்குந்த முதலியார் ஜாதி.
பிறகு ஜெயமோகன் கோவிலுக்குப் போன கோவை ஞானிக்கு தன் கண்டனத்தைத் தெரிவிக்கிறார். நாஞ்சில் நாடன் 'தான் தாலிகட்டிய மனைவி தீர்க்க சுமங்கலியாக வாழ, குறிப்பிட்ட ஒரு கோவிலில் மீண்டும் தாலிகட்டினால் நல்லது என்று நம்பும்போது ஞானி தன் மனைவியைப் புண்படுத்தக் கூடாது என்பதற்காக மனைவியின் நம்பிக்கையை கெளரவித்து கோவிலுக்குப் போனதில் என்ன தவறு என்கிறார். ஜெயமோகன் மீண்டும் ஞானி செய்தகாரியம் எனக்கு முக்கியம்' என்று கோவிலுக்குப் போனதை ஆட்சேபிக்கிறார்.
யுவன் உடனே 'ஞானி கோவிலுக்குப் போனதில் தவறில்லை. நான் கூட வருடத்திற்கு ஒருமுறை திதி கொடுக்கிறேன். அப்போது பூணூல் போடுகிறேன்' என்கிறார்.
இந்த இடத்தில் வேதசகாயகுமார் ஒரு செய்தி சொல்கிறார். அ. மார்க்ஸ் வீட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் கிறிஸ்தவ நாடார்கள் கூடிப் பேசுவதைப் பற்றி தற்செயலாக 'ஒரு கிறிஸ்தவ நாடார் பேராசிரியர்' சகாயகுமாரிடம் சொல்லியிருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை என்பது கிறிஸ்தவர்களுக்கு முக்கியமான நாள் என்பது தெரிந்த விஷயம்.
தளையசிங்கத்தின் கதைகள் ரொம்ப சிறப்பானவையாக பாதிக்கக் கூடியவையாக தன்னால் சொல்ல முடியவில்லை என்று நாஞ்சில் நாடன் சொல்கிறார்.
'தொழுகை' கதையில் செல்லம்மாள் மேல் கோபம் வருவதில்லை' என்று வேதசகாயகுமார் எழுதியிருப்பதைப் பற்றி நான் கேட்கிறேன். தேவாரம் ஓதும் சைவப்பிள்ளையின் மனைவி செல்லம்மாள் அதிகாலையில் தன் வயதுக்குவந்த இரு பெண்பிள்ளைகள் (12, 14 வயது) தூங்கும் அறையைப் பூட்டி விட்டு கரிய சாணான் தலித் முத்துவுடன் உடலுறவு கொள்ளும்போது கோவிலில் செல்லம்மாளின் கணவர் ஆறுமுகம்பிள்ளை தேவாரம் ஓதுகிறார். செல்லம்மாளுககு முத்து 'சிவலிங்கமாக'த் தெரிகிறான். முத்துவுக்கு செல்லம்மாள் அம்மனாகத் தோன்றுகிறான். உடலுறவு கொள்வது இது முதல்முறையுமல்ல. இத்தனைக்கும் பத்துநாள் முன்னதாகத்தான் முத்துவை செல்லம்மா பார்த்து கதைத்திருக்கிறாள்.
நான் கேட்கிறேன் 'வாசிப்பவனுக்கு ஏன் கோபம் வராது?'
.
'எனக்கு என்று இல்லை. வாசிக்கிற எல்லோருக்கும் கோபம் வருவதில்லை என்றுதான் சொல்கிறேன்' என்று மறுக்கிறார் வேதசகாயகுமார்.
'அம்மா வந்தாள் அலங்காரத்தம்மாள் மீது கோபம் வராது என்று சொல்ல முடியுமா' என்று நான் கேட்டவுடன் வேதசகாயகுமாரின் முகம் இறுகுகிறது. ('எங்கிட்டேயே கேள்வி கேட்கிறாயா, நான் பார்வைக்கு சுமாரா இருப்பேன். என் புலமையை பற்றி உனக்குத் தெரியாது' என்று அர்த்தம்)
உடன் ஜெயமோகனின் முகமும் இறுகுகிறது('எங்களுடைய அந்தஸ்தென்ன . . . யோக்தை என்ன ..... ' என்று அர்த்தம்).
நான் கல்லூரியில் படித்த காலத்தில் நடந்த ஒரு சம்பவம் பற்றிச் சொல்ல ஆரம்பித்தேன்.
தத்தனோடு டூரிங் தியேட்டரில் தரையில் மணலில் அமர்ந்து 'சிவகெங்கைச் சீமை' பழைய படம் பார்த்துவிட்டு வைகையாற்று வெள்ளத்தை எதிர்த்து புட்டுத் தோப்பில் கரையேறுகிறோம்.
போலீஸ் வேலையில் இருந்து டிஸ்மிஸ் ஆன முட்டாள் தாசு ஒரு கழுதையை போகம் செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறான். ஒரு பக்கம் சர்ச், இன்னொரு பக்கம் கிறிஸ்துவ பள்ளிக்கூட கேட் அருகே இரண்டு பேர் கழுதையைப் பிடித்துக்கொள்ள கழுதையைப் புணரவேண்டி முட்டாள் தாசு பகீரதப் பிரயத்தனம் செய்கிறான்.
முட்டாள் தாசு 'மயக்கமா கலக்கமா' பாட்டை, அழகாக பாடுவான் 'கோமாதா எங்கள் குலமாதா' பாட்டையும் அனுபவித்துப் பாடுவான். தன் வாழ்க்கைத் தோல்வியினால் துவண்டுபோய்விடாமல் ஆப்டிமிஸ்டிக்காக 'முதல் கோணல் முற்றிலும் கோணலல்ல முடிவில் கொடைக்கானல்தான்' என்று கவிதை எழுதியவன்.
குருவி மண்டையன் 'என்ன தாசு . . . கழுதையைப் போய்.....' என்று கேட்கிறான்.
தாசு 'கழுதை இல்லடா கல்யாணிடா .... டேய் எனக்கு பொம்பளை சீக்குடா ...... சத்தமில்லாமப் போங்கடா நீங்க'
கழுதையின் குறி ஒரு அடிக்குமேல் நீண்டிருக்கிறது. 'தாசு இது கல்யாணி இல்லராசு. கல்யாண சுந்தரம்' என்கிறான் குருவி மண்டையன்.
இந்த நேரத்தில் பள்ளிக்கூட வாட்ச்மேன் பேபி கேட்டைத் திறந்து வெளியே வந்து 'ஐயய்யோ என்னடா இது அசிங்கம்' என்று கூப்பாடு போட தாசு அவனிடம் 'பேபி யோவ் எனக்கு பொம்பள சீக்குய்யா' என்று சமாதானம் சொல்ல ஆரம்பிக்கும் போது கழுதையை பிடித்திருந்த இருவரும் அதைவிட்டு விட்டு ஒடுகிறார்கள். கழுதையும் ஓடுகிறது.
தாசுவுக்கும் பேபிக்கும் ஏற்கனவே ஒரு கடுமையான மனஸ்தாபம் உண்டு. பேபி அவன் மனைவி வெரோனிக்காவை ஒருமுறை பகலில் புணர்ந்து கொண்டிருக்கும்போது தாசு ஓட்டை வழியாகப் பார்த்திருக்கிறான். வாயரிசம் அப்போது வெரோனிக்கா ஐந்து வினாடிக்கொருமுறை 'இயேசுவே ரட்சியும்' என்று சொல்லிக்கொண்டிருந்தாளாம். இதை தாசு பலரிடமும் சொல்லிவிட்டான். பேபியையோ வெரோனிக்காவையோ பார்க்கும்போது 'இயேசுவே ரட்சியும்' என்று சின்னப்பையன்கள் கத்த ஆரம்பித்துவிட்டார்கள். தாசுதான் ஒளிந்திருந்து பார்த்து இப்படி ஊரே சொல்லி கேவலப்படுத்திவிட்டான் என்கிற விஷயம் பேபிக்கும் தெரிந்தும் விட்டது. இப்போது தாசு கழுதையைப் புணரும் போது பேபி அதைப் பார்த்து விட்டான்.
இதைச் சொல்லிக்கொண்டே வரும்போது இடையிடையே வேதசகாயகுமார் 'என்ன சொல்ல வர்றீங்க', இதுக்கும் தொழுகை கதைக்கும் என்ன சம்பந்தம், 'விஷயத்தை மட்டும் சொல்லுங்க' என்று குறுக்கிட்டுப் பேசிக்கொண்டே வந்தார்.
சொல்லி முடித்ததும் வினயசைத்னயா "This is mere a Gossip" என்றார்.
இவர் இரண்டாவது அமர்வில் வெ.சா. சொன்னதைப் புரிந்து கொள்ளாமல் வெ.சா ஜாதி பற்றி தவறான எண்ணத்தோடு பேசியதாக வீணான சர்ச்சை செய்தவர். முன்னதாக 'You do Dhabas' என்ற வார்த்தையை திரும்பத் திரும்பச் சொல்லி ரொம்ப நீளமாக ஒரு தத்துவக் கதையை சொன்னவர்.
(எனக்கு திலீப்குமாரின் திருமதி ஜேம்ஸ் ஒன்றும் பேசவில்லை கதை ஞாபகத்துக்கு வந்தது. அது நல்ல கதை)
நாராயண குரு குல சுவாமி வினய சைதன்யா 'காசிப்' என்று சொன்னவுடனேயே ஜெயமோகன் என்னைப் பார்த்து 'நீங்கள் ஊருக்குக் கிளம்புங்கள். இதுவரை நடந்த கருத்தரங்கத்தையே நீங்க புரிஞ்சிக்கலை. நீங்க ஊருக்குக் கிளம்பலாம்' என்றார். 'பத்து பேர் உங்க பேச்சைக் கேட்பதால் நீங்க இஷ்டத்துக்குப் பேசுறீங்க, இப்ப நீங்க பேசியதற்கு என்ன பர்ப்பஸ் இருக்கு' என்று கேட்டார்.
'பர்ப்பஸ் இருக்கு என்றேன்
‘ஒரு பர்ப்பஸும் தேவையில்லை. நீங்கள் ஊருக்குக் கிளம்புங்கள்' என்றார்.
நான் அப்போது என்னை பரதேசியாக உணர்ந்தேன். தி ஜானகி ராமனின் பரதேசி வந்தான் கதை. கடைந்த அமுதத்தைக் குடிக்க வந்த ராகுபோல பந்தியில் அமர்ந்துவிட்ட பரதேசி. தரதரவென்று பாதிபந்தியில் இழுத்துத் தள்ளப்பட்டு தலை அவிழ்ந்து அலங்கோலமாகக் குப்புற விழுந்த பரதேசி.
நான் அப்படியே உட்கார்ந்திருந்தேன். யாரும் எதுவும் பேசவில்லை.
எதுவுமே நடக்காதது போல, கருத்தரங்கம் தொடரும்படியாக ஜெயமோகன் பேச ஆரம்பித்துவிட்டார். எல்லோரும் அதை கவனிப்பதான பாவனை.
இது துரியோதன சபை. துரியோதனனும் சகுனியுமாக இயக்கும் சபை. எனக்கு ஆதரவுதர யாரும் கிடையாது. பீஷ்மர், துரோணர், கர்ணன், அஸ்வத்தாமா எல்லோரும் வாய்மூடி மெளனியாகிவிட்டார்கள் பிற இளைஞர்கள் கூட இளம்படைப்பாளிகள் ஜெயமோகனைச் சார்ந்து இருக்க வேண்டியவர்கள். நான் ஒரு சாதாரண வாசகன். முப்பதாண்டு காலமாக வாசித்துக் கொண்டே இருக்கும் அற்பம். Just a nameless face or a faceless name.
எழுந்தேன் அறைக்கு வந்தேன். பேக் செய்தேன். டைனிங் அறைக்கு வந்தேன். சுவாமி வினய சைதன்யா சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
வினயமாக 'That was not a Gossip I agree. But you have taken a long time' ' என்றார். நான் 'If you say 'but' I will say 'yet'. That is discussion that is seminar' என்றேன்.
ஜெயமோகன் சொன்னதற்காக நான் ஊருக்குப் போகக்கூடாது என்று வினயசைதன்யா பிடிவாதம் பிடித்தார். நான் ஏற்க மறுத்துவிட்டேன்.
கருத்தரங்கத்தில் நான் பேசியதற்கு எடுத்துக்கொண்ட நேரம் 8 நிமிடத்திலிருந்து 11 நிமிடத்திற்குள் தான் இருக்கும். மூன்று மணி நேர கருத்தரங்கத்தில் 11 அல்லது 12 நிமிடம் கூட பேசியிருந்தாலும் லாங்டைம் என்று எப்படி சொல்ல முடியம்.
வினயசைதன்யா 'I will fuck the bloody ezhavas. Only to avoid ezhavas we have come all the way from Kerala to Ooty. bastards' என்றார். நாராயண குரு நடராஜ குரு நித்ய சைதன்யபதி ஆகிய மூவரும் ஈழவர்கள் எனக்கு நாக்கிலே சனி. கருத்தரங்க அமர்வில் பேசியது போதாதென்று இவரிடம் நான் தமிழ் ஈழவ இனம் இல்லத்துப் பிள்ளைமார் என்று சொல்லித் தொலைத்துவிட்டேன்.
வினயசைதன்யா நான் சாப்பிட்டுதான் போக வேண்டும் என்று ரொம்ப பிடிவாதம் பிடித்தார். நான் சாப்பிட மறுத்தால் இவர் என்ன செய்வார் என்று சொல்லமுடியாது. சாப்பிடுவதாகப் பேர் பண்ணிவிட்டு எழும்போது கருத்தரங்கம் முடித்து எல்லோரும் சாப்பிட வந்துவிட்டார்கள்.
யாருடைய அட்ரஸையம் நான் வாங்கிகொள்ள முடியவில்லை. தேவதேவன் இ நாஞ்சில்நாடன், யுவன், வெங்கட் சாமிநாதன், தேவகாந்தன் ஆகியோரிடம் விடைபெற்றேன் யுவன் 'ஏன்' என்றார். நான் பதில் சொல்ல விரும்பவில்லை. ஆசிபெறுவதற்காக வெங்கட் சாமிநாதன் காலைத் தொட்டபோது அவர் 'நோ நோ' என்றார். சிரித்துக்கொண்டே வெளியேறினேன். இடுக்கண் வருங்கால் சிரிக்கச் சொன்னான்.
தொழுகை கதை பத்துநாள் சமாச்சாரம். இதுவே சில மாதங்களில் அல்லது சில வருடங்களில் ஊருக்கும் தெருவுக்கும் இந்த விஷயம் தெரிந்துவிடும்.
காலப்போக்கில் முத்து மேலும் முன்னேறி செல்லம்மாளின் பெண்பிள்ளைகளின் மீதுகூட கைவைக்கும்படி ஆகலாம். அந்தப் பிள்ளைகளின் எதிர்காலம்?
விஷயம் ஆறுமுக ஒதுவாருக்குத் தெரியவந்து அவருடைய மனநிலை பாதிக்கப்படலாம். ஒரு வேளை அவர் அனுசரித்துப் போகலாம். அல்லது கொலையோ தற்கொலையோ செய்யம் படி ஆகலாம்.
செல்லமாள் மீது கோபம் வராது என்றால் எப்படி?
முட்டாள் தாசுவின் மிருகப் புணர்ச்சியில் அவனது நோக்கம் காமமல்ல. மெடிக்கல் க்யூர் கழுதையைப் புணர்ந்தால் பொம்பளை சீக்கு குணமாகிவிடும் என்ற நம்பிக்கை. இதுகூட தொழுகைதான்.
பேபியின் மனைவி வெரோனிக்கா செய்வது செல்லம்மாள் செய்வதுபோல அடல்ட்லி கூட இல்லை. கலவியைத் தொழுகையாக்கியிருக்கிறாள்.
சும்மா சாருநிவேதிதாவை மிரட்டுவதற்காக 'சாரு தாண்ட வேண்டிய புள்ளி தொழுகைதான் ஆனால் தளையசிங்கம் அவசரமாக அடித்துக்கொல்லப்பட்டார்' என்று அவர் மிகையாகக் கூறிவிட்டபின் நான் தொழுகையை நிர்வாணமாக்கினால் எப்படித் தாங்கிக்கொள்ள முடியம். It’s a tale told by an idiot full of sound and fury and signifying nothing.
ஊட்டியை விட்டுக் கிளம்பும்போது மதியம் 2மணி திருச்சி வந்து வீடு சேரும்போது இரவு சரியாக 12 மணி. ஊட்டிக்குப் போகாமல் சின்னவனின் சைக்கிளை சரி பண்ணியிருக்கலாம். There is always trial and error.
சுந்தரராமசாமியின் 'அழைப்பு' கதையில் ஒருவரி 'நினைவின் எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் பிழைகளின் அவமானம்'.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.