Share

Nov 29, 2018

நெகிழ்ச்சியான புத்தக சமர்ப்பணம் ஒன்று



”லே ஒன் வெர்த்திற்கு

இந்தப் புத்தகத்தைப் பெரியவர் ஒருவருக்குச் சமர்ப்பித்ததற்காக நான் குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்கிறேன்.
இதற்கு முக்கியக் காரணம் ஒன்று உண்டு: இந்தப் பெரியவர் தான் உலகத்திலேயே எனக்குக் கிடைத்த சிறந்த நண்பர்.
மற்றொரு காரணமும் உண்டு: இந்தப் பெரியவர் எல்லாவற்றையும் புரிந்துகொள்வார், குழந்தைகளின் புத்தகங்களைக்கூட.
மூன்றாவது காரணம்: இவரோ பிரான்ஸ் நாட்டில் இப்போது பசியிலும் குளிரிலும் வசிப்பவர். இவருக்கு உண்மையான ஆறுதல் தேவை.
இந்தக் காரணங்கள் எவையுமே போதவில்லை என்றால் இந்தப் புத்தகத்தை ஒரு காலத்தில் குழந்தையாக இருந்த இந்தப் பெரியவருக்குச் சமர்ப்பிக்கச் சம்மதிக்கிறேன். பெரியவர்கள் எல்லாருமே முதலில் குழந்தைகளாக இருந்தவர்கள் தான் (ஆனால் சிலருக்கு மட்டுமே இது நினைவிருக்கும்).
ஆகவே என் சமர்ப்பணத்தைத் திருத்தி அமைக்கிறேன்:
லேஒன் வெர்த்திற்கு
அவர் சிறு பையனாக இருந்தபோது.”
புத்தகத்தை யாருக்காவது சமர்ப்பணம் செய்வது எல்லாருக்கும் வழக்கம். 1981ல் க்ரியா ராமகிருஷ்ணன் வெளியிட்ட குட்டி இளவரசன். பிரஞ்சு மொழியிருந்து வெ.ஸ்ரீராமும் மதன கல்யாணியும் நேரடியாக தமிழுக்கு மொழி பெயர்த்திருந்தார்கள்.
இதை வாங்கி அப்போது முதல் ஒரு பத்து முறையாவது படித்திருப்பேன். அந்த குட்டி இளவரசன் புத்தகத்தை ஆசிரியர் அந்த்வான் து செந்த் – எக்சுபெரி லெஒன் வெர்த் என்ற அவருடைய நண்பருக்கு எவ்வளவு அற்புதமாக சமர்ப்பணம் செய்திருக்கிறார்.

இன்று படிக்கும்போது கூட கண் கலங்குவதை தவிர்க்கவே முடியவில்லை. ஒவ்வொரு வரியுமே தான் எவ்வளவு கனமாக இருக்கிறது. ஒரு வரியில் இருந்து அடுத்த வரிக்கு சுலபமாக போக முடிவதில்லை.
Eyes are blind. You have to look with heart. Anything essential is invisible to the eyes.
Only the children know what they are looking for.
அந்த்வான் து செந்த்- எக்சுபரியின் நாவல் ’காற்று, மணல், நட்சத்திரங்கள்’ இப்போது படித்துக்கொண்டிருக்கிறேன். க்ரியா வெளியீடு. வெ.ஸ்ரீராம் மொழிபெயர்ப்பு. இரண்டு செவாலியெ விருது பெற்றிருக்கிறார்.

ஒரு செவாலியே விருது நெப்போலியன் காலத்திலிருந்து தரப்படுவது. கல்வித்துறை சம்பந்தப்பட்டது. ஸ்ரீராமின் பிரஞ்சு நாலட்ஜுக்காக தரப்பட்டது.
இன்னொரு செவாலியே விருது 1950 தொடங்கி தரப்பட்டு வருகிறது. கலை இலக்கியத்துறை சாதனையாளர்களுக்கு கௌரவம். சிவாஜி கணேசன், பாலமுரளிக்கு கொடுக்கப்பட்ட இந்த விருதும் ஸ்ரீராம் சாருக்கு கிடைத்தது.
ஆஹா.. இந்த ’காற்று, மணல், நட்சத்திரங்கள்’ புத்தக வாசிப்பு எனும் சுகானுபவம் பற்றி எப்படி சொல்வது? ’சுகி எவ்வரோ’ என்ற தியாகப்பிரும்மத்தின் கானடா ராக பாடல் தான் நினைவு வருகிறது. Wind, Sand and Stars.
அந்த்வான் ஒரு பைலட். இவருடைய ஆகாய பயணங்கள் பற்றியது தான் இந்த நாவல். இவர் பைலட்டாக இருக்கும்போது இரு பெரு விபத்துக்களை எதிர் கொண்டு மீண்ட சாகசத்தை தான் எழுதிச்சென்றிருக்கிறார். அந்தக்கால விமானங்களை இயக்குவதில் இருந்த கடும் அதிர்ச்சிகரமான துயர சவால்கள். பாலைவனத்தொடுவானத்தில் மரணதை எதிர்நோக்கி இருப்பவரின் மனக்கிலேசம், யாரும் செவி மடுக்காத பிரார்த்தனை.
Man finds his supreme joy in adventure and creative action.
இந்த நாவல் தான் குட்டி இளவரசன் படைப்புக்கு ஊற்றுக்கண்.
அந்த்வான் வாழ்வு விமான பயணத்தில் தான் கடைசியில் முடிந்தது. அவர் சென்ற விமானம் என்ன ஆயிற்று என்றே கண்டு பிடிக்கமுடியவில்லை. மறைந்தே போனார்.
Nothing in truth, can ever replace a lost companion. Old comrades cannot be manufactured.
ஐம்பதாம் ஆண்டு நினைவு நாளை கௌரவைக்கும் விதமாக பிரஞ்சு அரசு ஐம்பது ஃப்ராங்க் நோட்டில் அவருடைய உருவப்படம், குட்டி இளவரசன் காட்சிகள் சிலவற்றுடன் வெளியிட்டது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.