Share

Aug 10, 2017

உடை படும்




நல்ல நண்பர்கள் ஒருவருடைய அந்தரங்க விஷயங்களை மற்றவர் அறிந்திருப்பர்.
தி.ஜாவின் அந்தரங்க விஷயம் ஒன்றைப் போட்டு உடைத்திருக்கிறார் கரிச்சான் குஞ்சு.
’மூன்றாவது புருஷார்த்தத்தில் ஜானகிராமனுக்கு எல்லையில்லா வேகம்’ உண்டு. அது நிறைவேறியதும் உண்டு. அவன் இளமைப் பருவத்திலிருந்தே பருவத்தை, அழகை, பெண்மையை வயதுக்கு மீறி விரும்பி நேசிக்கும் இயல்புடையவன்.’


நல்ல நட்பு எப்படியெல்லாம் விரிகிறது.
தி.ஜானகிராமன் பற்றி கரிச்சான் குஞ்சு பெருமிதம் ’ என் நண்பன் மட்டுமா ஜானகி? என் உறுப்புகளுக்குள் ஒன்றாயிருந்தவன்.’


தி.ஜா கறார் பார்வை கொண்டவர். கரிச்சான் குஞ்சு இது பற்றி
‘ அவனுக்கு காலேஜ் நாட்களிலிருந்தே டாகூரைப் பிடிக்காது. போலிக்கவிதை என்பான்.’

இப்படி கரிச்சான் குஞ்சு சொல்வது போல் தி.ஜா.வின் விமர்சனப்பார்வை பற்றி நா.காமராசன் ஒரு விஷயம் சொல்லியிருக்கிறார்.
தி.ஜா. தமிழ் கவிஞர்கள் பற்றி ஒரு நூல் சாகித்ய அகாடமிக்காக எழுத வாய்த்த போது கண்ணதாசன் பற்றி தன் அதிருப்தியை வெளியிட்டார். அப்போது கண்ணதாசனின் கவிதைத்தொகுப்புகள் பலவற்றை பார்த்து விட்டு நா.காமராசனிடம் உதட்டை பிதுக்கி சொல்லியிருக்கிறார். “ ஒரு தொகுப்பு கூட தேறவில்லையே. இவரை தமிழ் நாட்டில் கொண்டாடுகிறார்களே.”
நா.காமராசன் இதனை குமுதம் வார இதழ் ஒன்றிலேயே குறிப்பிட்டிருந்தார்.



நேர் மாறான அனுபவமாக வாழ்வு சில உண்மைகளை காட்டும்.
தமிழ் தாத்தாவுக்கு தன் குரு பற்றி உள்ள மரியாதையும், பக்தியும் எல்லோருக்கும் தெரிந்ததே. அவர் ராமசாமி முதலியார் என்பவருடன் பழக வாய்த்தது.
ராமசாமி முதலியாரை சந்தித்த உ.வே.சாமிநாதய்யர்
’எங்க வாத்யாருக்கே ( மீனாட்சி சுந்தரம் பிள்ளை) இவ்வளவு விஷயம் தெரியாது’ என்றாராம்.


சார்லி சாப்ளின் போல இருப்பவர்களுக்கான போட்டி ஒன்று. நீதிபதிகள் நிச்சயம் சார்லி சாப்ளின் பற்றி முழுமையாக நுட்பமாகத்தான் அறிந்தவர்களாக இருந்திருப்பார்கள்!
சார்லி சாப்ளினே அதில் கலந்து கொண்டாராம். அவருக்கு மூன்றாம் பரிசு கிடைத்தது.
......................................................

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.