Share

Aug 30, 2016

எம்.ஜி.ஆர் கட்சியில் அந்தக்கால சில நடிகர்கள்


அகில உலகிலும் எம்.ஜி.ஆருக்கு ரசிகர்கள் இல்லையென்பது உண்மை தான்.ஆனாலும் திருச்சி சௌந்தர் ராஜன் அந்தக்காலத்தில் அகில உலக எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றங்களின் தலைவராகத்தான் இருந்தார். தி.மு.கவில் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றங்கள் நடத்தும் கட்சிக்கூட்டங்களில் சிறப்புப்பேச்சாளராக பேசிக்கொண்டிருந்தார்.

எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கான மன்றங்களைப்பற்றி எண்ணும் போது சிலர் நினைவுக்கு வருவர். ஒருவர் திருச்சி சௌந்தர்ராஜன். இன்னொருவர் முசிறி புத்தன். அப்புறம் கவர்ச்சி வில்லன் கே.கண்ணன்.
அதே போல சிவாஜி ரசிகர் மன்றங்களுக்குத் தலைமை என்றால் சின்ன அண்ணாமலையும் தளபதி சண்முகம் என்பவரும் தான்.
ம.பொ.சியின் தமிழரசு கழகம் கட்சியில் இருந்தவர் சின்ன அண்ணாமலை. பண்ணைப் புத்தகாலயம் அதிபர். இவர் எழுதிய “சொன்னால் நம்ப மாட்டீர்கள்” படிக்க சுவாரசியமாயிருக்கும்.

திருச்சி சௌந்தர்ராஜன் எம்.ஜி.ஆர் படங்களிலெல்லாம் நடிப்பார். பெரும்பாலும் போலீஸ் அதிகாரியாக, அப்பாவாக, கொள்ளைக்கூட்டத்தில் ஒருவனாக.
ரகசிய போலீஸ் 115ல் உயர் போலீஸ் அதிகாரியாக, கண்ணன் என் காதலனில் ஜெயலலிதாவுக்கு அப்பாவாக …இப்படி..இப்படி..
டி.ஆர் ராமண்ணாவின் ”நான்” படத்தில் கதாநாயகனின் தந்தை பெரிய ஜமின்தாராக வந்து ஆரம்பத்தில் செத்துப் போவார்.
திருச்சி சௌந்தர்ராஜன் முன்னதாக கதாநாயகனாக சொந்தப் படம் எடுத்து நடித்திருக்கிறார். டப்பாவிற்குள் போனது என்று சொல்லவும் வேண்டுமோ?
1965ல் வெளி வந்த “பணம் தரும் பரிசு”.
 பணம் தரும் பரிசு படத்தில் கதாநாயகி வி.ஆர் திலகம். ரமண திலகம் இரண்டாவது நாயகி. இந்த ரமண திலகம் திரையுலகு கண்ட பெரிய கவிஞரான வாலிக்கு மனைவியானார்!
திருச்சி சௌந்தர்ராஜன் எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் மந்திரியாக ஆனவர். என் மாமனாரின் நண்பர் இவர்.
எம்.ஜி.ஆர் படங்களில் சின்ன ரோல் செய்தவர் மந்திரியானார்.
இவர் மற்ற மந்திரிகள் போல சம்பாத்திய புத்திசாலியாக இருக்கவில்லை என்று ஒரு செய்தி. உண்மையோ என்னவோ?
வேலன் நாடகமொன்றில் நடிக்கும்போது மற்ற கதாபாத்திரங்கள் பேசும்போது அவர்களை மாற்றி,மாற்றிப் பார்த்து ’அது சரி’ என்ற வார்த்தையை தலையை ஆட்டி ஆட்டி ‘ஐசரி!’ ‘ஐசரி!’ என்று உச்சரித்ததால் ஐசரிவேலன் ஆனவர்.
சாதாரண சிரிப்பு நடிகர் ஐசரி வேலனும் கூட ராதாகிருஷ்ண நகர் எம்.எல்.ஏ வாக மந்திரி செயலர் என்பதாக ஒரு விசித்திர பதவியில் இருந்தார்.
இந்த ஐசரி வேலன் மகன் ஐசரி கணேஷ் இன்று பல்கலைக்கழகமொன்றின் வேந்தரா?


இவர்களெல்லாம் எம்.ஜி.ஆர் கட்சியில் பதவி பெற்றவர்கள் எனும்போது ஏன் நட்சத்திர வில்லன் நடிகர் நம்பியார் அதிமுகவில் சேர்ந்து ஜொலிக்கவில்லை?

 இதற்கு எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்த காலங்களில் புன்னகையையே பதிலாகச் சொன்ன நம்பியார் சில வருடங்களுக்கு முன் சொன்னார்: ”எம்.ஜி.ஆருக்கு சந்தேகக் குணம் அதிகம். கட்சியில் யாராவது நம்பியார் பற்றி பொல்லாங்காக சொன்னால் அதை உடனே நம்பி விடுவார். அவருடைய சந்தேகக்குணம் தாங்கவே முடியாதது. படாத பாடு படுத்தி விடுவார். நட்பு கெட்டுப்போகும். அதனால் தான் நான் எம்.ஜி.ஆர் கட்சியில் சேரவேயில்லை.”
திருச்சி சௌந்தர்ராஜன், கே.கண்ணன், ஐசரிவேலன், எஸ்.எஸ்.சிவசூரியன் போன்ற நடிகர்களால் மட்டும் ஆரம்ப கால அதிமுக அலங்கரிக்கப்பட்டது.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.