Share

Jun 26, 2022

கறார் ஹாஸன்

கறார் கமல் ஹாஸன்


ஆர்ட் டைரக்டர் ஜேகே சொன்னார்.
"கமல் சார் 'இந்த இடத்தில் ஒரு ஏரோப்ளேன் வேணும்'னு இன்ஸ்ட்ரக்ஸன் குடுத்தா
உடனே, உடனே 'சரி சார்ன்னு சொல்லனும். 'அது எப்டி சார்? சிரமம்'ன்னு சொல்ல முடியாது."
(முப்பது வருடங்களுக்கு முன் 1992ல்)

சரி தானே.
ஷேக்ஸ்பியர் சொன்ன மாதிரி
When Caesar says 'Do it' , it is performed.

கஸ்டம்ஸ் அன்ட் சென்ட்ரல் எக்ஸைஸ் துறை நாடகங்களில் 
லியோ என்ற ஆஃபீசர் நல்ல நடிகராக பெயர் வாங்கியவர்.
சொந்த ஊர் பழனி.
சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா? என்று முயற்சி செய்தார்.

தன் முயற்சியில் மேஜர் சுந்தர்ராஜனை அணுகியிருக்கிறார்.
சினிமா வாய்ப்பு அசாத்தியமானது என்பதை சம்பவம் ஒன்றை சுட்டிக்காட்டி சுந்தர்ராஜன் விளக்கியிருக்கிறார்.

கமலை வைத்து படம் இயக்க 
ஒரு வாய்ப்பு மேஜருக்கு கிடைத்திருக்கிறது.
'அந்த ஒரு நிமிடம்'

ஊர்வசி கதாநாயகி என்று fix ஆகியிருக்கிறது. கமல் ஒப்புதலுடன்.

இயக்குநர் மேஜர் 'அந்த ஒரு நிமிடம்' படத்தில் மற்ற கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் பட்டியல் ஒன்றை தயார் செய்து கொண்டு வந்து கமலை சந்தித்திருக்கிறார்.

கமல் ஹாசன் அந்த பட்டியலில் எடுத்த எடுப்பிலேயே முதலாவதாக ஒரு பெயரை அடித்து விட்டார்.
அந்த பெயர் 'மேஜர் சுந்தர் ராஜன்'

"நீங்க இந்த ரோலுக்கு வேண்டாம் அண்ணே. நல்லாருக்காது. சத்யராஜை தான் fix பண்ணனும்."

மேஜருக்கு இப்படி கமல் 
தன் பெயரை நடிகர்கள் பட்டியலில் இருந்து நீக்கியது பெரும் அதிர்ச்சி என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

தான் இயக்கப் போகும் படத்தில் பெரிய நடிகரான தனக்கே இடம் இல்லையென்றால் எப்பேர்ப்பட்ட அவமானம்?

கமலிடம் கெஞ்சி மன்றாடித்தான்
 ஒரு வழியாக அந்த ஒரு நிமிடத்தில் நடிக்க வாய்ப்பு மேஜரால் பெற முடிந்திருக்கிறது.

இந்த சம்பவத்தை கஸ்டம்ஸ் ஆஃபீசர் லியோவிடம் சொல்லி " லியோ,
நல்ல வேலையில் இருக்கிறீர்கள். ஏன் சினிமாவில் நடிக்க ஆசைப்படுகிறீர்கள்.
உங்களுக்கு ஏந்தம்பி இதெல்லாம்..ஐய்யய்யே"
என்றாராம் மேஜர்.

சக்கப் போடு போடும் விக்ரம் படத்தில் மேஜர் மகனைப் பார்த்த போது, 
 1987ல் பழனியில் 
மட்டன் கடையொன்றில் 
சந்தித்த போது லியோ சொன்ன 
மேஜர் சமாச்சாரம் நினைவுக்கு வந்தது.

விக்ரமில் கமல் பல வாரிசு நடிகர்களை பயன்படுத்தியிருக்கிறார்.
ஜெயராம் மகன் கவனிக்கும்படி தெரிகிறார்.
சங்கர் கணேஷ் மகனை பார்க்க முடிகிறது.

டெல்லி கணேஷ் மகன் , கத்திச் சண்டை ஆனந்தன் மகன் கூட படத்தில் 
Spray செய்யப்பட்டுள்ளார்கள். அங்கங்க, அங்கங்க 
அள்ளி தெளிச்சி..
கொல கொலயாம் முந்திரிக்கா..
கண்டு பிடி.. கண்டு பிடி..

Jun 25, 2022

புரட்சி


Time Machineல ஏறிப்போனா என்னெல்லாம் கண்ணுல படுது.


தேங்கா டயலாக்: 
எல்லாம் அமஞ்சிக்கற்து தான்,
வாச்சிக்கற்து தான்..

..

2008ல் நான் எழுதிய பாரதி தாசன் பதிவில் புரட்சி கலைஞர் பட்டம் பற்றி
1990ல் புதுவை பல்கலைக்கழகத்தில் பேசியதை குறிப்பிட்டிருக்கிறேன்.

http://rprajanayahem.blogspot.com/2008/12/blog-post_04.html?m=1

புதுவை பல்கலை கழகம் சார்பில் பாரதி தாசன் நூற்றாண்டு விழாவில் பார்வையாளனாக கலந்து கொண்டேன் . ஜால்ரா சத்தம் சகிக்க முடியவில்லை . பாரதியை விட பாரதி தாசன் பெரிய கவிஞர் , பாரதியை தாண்டி விட்டார் என்ற ரீதியில் புலவர்கள் ,பேராசிரியர்கள் பேசினார்கள் . 'பாவேந்தர் என்று பாரதி தாசனை சொல்லவேண்டாம் . ஏனென்றால் அவர் ஒருவர் தான் புரட்சிகவிஞர் . புரட்சி கவிஞர் அவர் ஒருவர் தான் என்பதால் அவரை புரட்சிகவிஞர் என்று தான் சொல்லவேண்டும் ' என்று ஒருவர் எல்லோரையும் மிரட்டினார் .

நான் எழுந்து மேடைக்கு சென்று பேசினேன்
 " இன்று புரட்சி என்ற வார்த்தை மிகவும் கொச்சைபடுத்தபட்டு விட்டது . புரட்சி தலைவர் , புரட்சி தலைவி ..இப்படி ..    

  அந்தகாலத்திலே எம்ஜியார் எக்ஸ்ராவா நடிச்ச காலத்திலே எம்ஜியார் யாருன்னே தெரியாமல் இருந்த காலத்திலேயே புதுமைப்பித்தன் எழுதிய
 'திருக்குறள் செய்த திருக்கூத்து' என்ற கதையில் ' புரட்சிதலைவர்' என்ற வார்த்தையை உபயோகப்படுத்தியிருக்கிறார். கிண்டலாகத்தான்! 

இப்ப கூட 'புரட்சி கலைஞர் நடிக்கும் கரிமேடு கருவாயன்'னு போஸ்டர் ஓட்டறான். 
'யார்ரா புரட்சிகலைஞர்'ன்னு கேட்டா
 'அந்த கருவாயன் தான் புரட்சிகலைஞர்' சொல்றான். 

புரட்சி என்ற வார்த்தை இன்று Cliché ஆகிவிட்டது.

 அதனால பாரதிதாசனை பாவேந்தராகவே வைத்துக்கொள்ளுங்கள்.
புரட்சிகவிஞர் வேண்டாம் " என்றேன்.

..

2015ல் விஜயகுமாருடைய புரட்சி கலைஞர் பட்டம் பற்றி எழுதியிருக்கிறேன்.

http://rprajanayahem.blogspot.com/2015/01/blog-post_31.html?m=0

'படங்களில் தன் பெயருக்கு முன்னால் “புரட்சிகலைஞர்” பட்டம் போடப்படவேண்டும் என்று விஜயகுமார் வற்புறுத்திய காலம் உண்டு.
 அதிமுகவில் இணைந்து " அண்ணா நீங்க நினைச்சபடி நடந்திடுச்சி, புரட்சித்தலைவர் கையில் நாடிருக்கு" என்ற பாட்டுக்கு நடித்தார்.
சி.என்.முத்து டைரக்ட் செய்த ‘சொன்னது நீ தானா’ என்ற படத்தில் புரட்சிகலைஞர் பட்டம் போடப்படவில்லை என்று விஜயகுமாருக்கு வருத்தம். 

1980களில் இந்தப்பட்டம் விஜயகாந்துக்கு போய்விட்டது.'

பட்டம் யாரும் வழங்கவில்லை. அவர்களாகவே போட்டுக்கொண்டது.

ரவிச்சந்திரனுக்கு நான்கு சுவர்களில் 'திரையுலக இளவரசன்'  டைட்டில். கலை நிலவு என்று சொந்த படம் மஞ்சள் குங்குமம் படத்தில் போட்டுக்கொண்டார். 
'கலை நிலவு' முன்னதாக ஒன்றிரண்டு படத்தில் ஜெமினி கணேசன் டைட்டிலில்.
( ஜெமினி இறந்த போது காலச்சுவடு பத்திரிகையில் நான் 'கலை நிலவு' என்று தலைப்பிட்டு இரங்கல் எழுதினேன்)
விஜயகுமாருக்கு சீனியர் என்பதால் கொஞ்சம் அவருக்கு முன்னதாக புரட்சி கலைஞர் என்று ரவிச்சந்திரன் போட்டுக்கொண்டார்.
விஜயகுமாரை அடுத்து விஜய்காந்த்.



....

'புரட்சி கலைஞர் ரவிச்சந்திரன்' title picture referred by Aathmaarthi RS 
ஆத்மார்த்தி