Share

Feb 2, 2019

நுரை குமிழி


தி.மு.க பத்திரிக்கையில் ஒரு காலத்தில் தனித்தமிழ் அக்கறையிருந்திருக்கிறது. சம்கிருத வார்த்தைகளை போடக்கூடாது என்ற வைராக்கியம் இருந்தது. ராஜாஜி பெயரை ’ராசாசி’ என்று அச்சிட்டவர்கள் எம்.ஜி.ஆர் என்ற பெயரில் திருத்தம் எதுவும் எம்சியார் என செய்யவில்லை. எஸ்.எஸ்.ஆர் பெயரும் அப்படியே.
இப்போது ’ஆஹ’ என்ற வார்த்தையை எப்போதும் உச்சரிக்கும் தி.மு.க. தலைவர் பெயரை பழ.கருப்பையா தனித்தமிழில் ’இசுடாலின்’ என்று குறிப்பிடுகிறார். நக்கீரனில் பார்த்தேன். தனித்தமிழ் வைராக்கியம் இப்படி இருப்பது பற்றி நான் 2008 ஸ்டாலினை இவர்கள் சுடாலின் என்று குறிப்பிடுவார்களா என்று கேட்டிருந்தேன். ’சுடாலின்’ என்பதே தப்பு. அடடா ’இசுடாலின்’ என்பது இன்றல்லவோ புரிகிறது.
இந்திரா பார்த்தசாரதி பேட்டி பிப்ரவரி விகடன் தடத்தில். இந்திரா பார்த்தசாரதியை முழுமையாக படித்தவன் நான். “எந்த தத்துவமும் நிறுவனமயமாகும்போது நீர்த்துப்போகும்” என்பதை ’ஆஹ’ என்ற வார்த்தையை தி.மு.க தலைவர் ஸ்டாலின் எத்தனை தடவை உச்சரித்தாரோ அத்தனை தடவை இ.பா இந்த ஸ்தாபனமாகும் தத்துவ விஷயத்தை உச்சாடனம் செய்து வந்திருக்கிறார். அவருடைய எழுத்தின் ஆதாரக்கவலை இதுவென்றே குறிப்பிடலாம். இதை நான் என்னுடைய “ஊட்டியில் தளைய சிங்கத்திற்கு நடந்த தொழுகை” கட்டுரையில் (2002ல்) கூட குறிப்பிட்டேன்.

இந்திரா பார்த்தசாரதிக்கு சரஸ்வதி சம்மான் விருது வழங்கப்பட்ட போது திருச்சி வானொலி நிலையத்தில் “ராமானுஜர்” நாடகம் பற்றி நான் உரை நிகழ்த்தியிருக்கிறேன்.
அவருடைய ’கிருஷ்ணா கிருஷ்ணா’ நாவலுக்கு நான் எழுதிய விமர்சனம் எம்.ஜி.சுரேஷின் பன்முகம் பத்திரிக்கையில் விமர்சனம் வந்ததுண்டு.
இந்திரா பார்த்தசாரதி புதுவை பல்கலைக்கழகத்தில் பணி புரிந்த காலத்திலும் அதன் பின் இந்திரா மாமி மறைவுக்குப் பின் நான் பார்த்த போதும் அவரிடம் ஒரு விஷயம் கவனித்திருக்கிறேன்.
அவருடைய மூக்கிற்கு வெளியே ஒரு வெள்ளை முடி எப்போதும் நீட்டிக்கொண்டிருக்கும். அதை சின்ன சிசரால் கட் செய்ய முடியும் என்பது ஏன் அவருக்கு தோன்றவில்லை.
இப்போது தள்ளாத வயதாகி விட்ட அவர் புகைப்படத்தை விகடன் தடம் பத்திரிக்கையில் பார்த்த போது அந்த வெள்ளை முடி மூக்கிற்கு வெளியே நீட்டிக்கொண்டு தெரிகிறதா என்பதை செக் செய்தேன். அட்டையில் உள்ள புகைப்படத்திலும் உள்ளே பேட்டியின் முதல், இரண்டாவது புகைப்படத்திலும் வெள்ளை முடி காணப்படவில்லை. ஒரு ஆசுவாசம் எனக்கு ஏற்பட்டது. அந்தோ. நான்காவது புகைப்படத்தில் ஒரு வெள்ளை முடி அவருடைய இடது நாசித்துவாரத்தில் நீட்டிக்கொண்டிருக்கிறது..


விகடன் தடத்தில் கவிதையின் கையசைப்பு கட்டுரையில் வாஸ்கோ போபோ என்ற ஒரு செர்பியர் எழுதிய கவிதை தமிழில் மொழி பெயர்க்கப்பட்டிருந்தது. ’ஆங்கில மூலத்தால்’ இருந்து தானே?

மௌனியின் ’சாவில் பிறந்த சிருஷ்டி’ எப்போதோ எழுதப்பட்டு விட்டது. அதை படித்து விட்டவர்கள் நாம். இந்த சிறுகதையை பெங்க்வின் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உலக சிறுகதைகளில் சேர்த்திருக்கிறது.
இந்த கவிதையில் பிரமிக்க என்ன இருக்கிறது?

’முன்னொரு காலத்தில் ஒரு கதை இருந்தது
அதன் முடிவு, கதை
தொடங்குவதற்கு முன்பே வந்துவிட்டது.
அதன் தொடக்கம் கதையின் முடிவுக்குப்
பின்பே வந்தது.
தங்கள் சாவிற்குப் பிறகு
கதையின் நாயகர்கள்
கதைக்குள் வந்தார்கள்
தங்கள் பிறப்பிற்குப்
பிறகு வெளியேறிப்போய் விட்டார்கள்.”
இதே முறையில் பல கவிதைகள் எழுதலாம். சலிப்பான கவிதை முறைமை.
’முன்னொரு காலத்தில் ஒரு ஓவியம் இருந்தது
அதன் கடைசி தீற்றல், ஓவியம் தொடங்குவதற்கு முன்பே வந்துவிட்டது.
அதன் முதல் வரி வடிவம் ஓவியம் முடிக்கப்படுவதற்கு
பின்பே வந்தது.
தாங்கள் அழிக்கப்பட்டதற்கு பிறகு
ஓவியத்தின் நிழல் பிம்பங்கள்
ஓவியத்திற்குள் வந்தன.
பிம்பங்கள் வண்ணத்தில் பிறப்பிக்கப்பட்ட
பிறகு வெளியேறிப் போய் விட்டன.’
இதை இசை, சிற்பம் இவற்றை வைத்தும் எழுதிப்பார்க்கலாம். ஏன் சினிமா பற்றி கூட.

’அந்த திரைப்படம் கடைசி சீனில் கடைசி ஷாட்டுக்கு முன்னரே
தொடங்கி விட்டது.
முதல் ஷாட் ஷுட் பண்ணும்போதே முடிந்து விட்டது’
மண்டையில் மரம் முளைக்காத வரை எழுதிப்பார்க்கலாம். அல்லது மண்டையில் மரம் முளைத்தபின்னும் பிடிவாதமாக எழுதிப்பார்க்கலாம்.
பெண்கள் ஐஸ்கிரீமை நாக்கால் நக்கி சாப்பிடக்கூடாது என்று துருக்கி நாட்டில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதாக காதில் சேதி விழுந்தது. இந்த காரசார செய்தி பெண்ணிய கவிதைகளுக்கு வழி வகுக்கலாம்.



Feb 1, 2019

மேடையில்




தோழர் ஜீவா அறுபது வருடங்களுக்கு முன் அமெரிக்கன் கல்லூரி மேடையில் பேசும்போது குறிப்பிட்டாராம். “ பாரதி அமுத இலக்கியம். பாரதி தாசன் நச்சு இலக்கியம்.”

அருணாச்சலம் ரோட்டில் முருகாலயா ஸ்டுடியோவில் சினிமா ஷூட்டிங் நடக்கும். இப்போது இந்த ஸ்டுடியோ இருந்த இடத்தில் தான் சூரியா ஹாஸ்பிட்டல் இருக்கிறதா? உறுதியாக தெரியவில்லை.


இந்த முருகாலயா ஸ்டுடியோவில் கவிஞர் கே.டி.சந்தானத்தோடு நான் பேசிக்கொண்டிருந்த போது அவர் ஒரு விஷயம் சொன்னார். “ தோழர் ஜீவா மேடையில் உணர்ச்சி வேகமாகப் பேசும் போது மைக்கை விட்டு பக்கவாட்டில் நகர்ந்து ஓரமாக போய் விடுவார். மீண்டும் மைக்கிற்கு வந்து பேசுவார். திரும்பவும் மைக்கை விட்டு ரொம்ப விலகி நகர்ந்து விடுவார்.”


தோழர் ஜீவா பற்றி நினைத்தாலே சுந்தர ராமசாமி எழுதிய “ காற்றில் கலந்த பேரோசை “ ஞாபகம் வரும். “இப்படி மண்ணாந்தையா போயிட்டோமே”

தோன்றிற் புகழோடு தோன்றுக. எனக்கு பிறக்கும் போதே ஒரு பெருமை கிடைத்தது. தோழர் ஜீவா பிறந்த ஆகஸ்ட் 21ம் தேதி தான் நானும் பிறந்தேன்.
தொடர்ந்த ஏழ்மைக்கு நேர்மை தான் காரணம்.

எம்.ஆர் ராதா சிறையிலிருந்து வந்த பின் மதுரை  மேல மாசி வீதியில் நாடகம் போட்டார். சரியான கூட்டம். ஆனாலும் அவருடைய முகபாவங்கள் தூரத்தில் இருந்து பார்க்கும் போது தெளிவாக ஏதோ க்ளோசப் போல தெரிந்தது.

மேடையில் ராதாவை பார்ப்பது ஒரு வித்தியாசமான ஒன்று. “டேய், நடிப்ப பாருங்க. ரசிங்க. ஆனா ரசிகர் மன்றம் ஆரம்பிச்சிடாதிங்கடா பாவிங்களா”

மேல மாசி வீதியில் மேடையில் நடித்துக்கொண்டிருக்கும்போதே முகம் சுண்டி முன் பகுதியை பார்த்து “அங்க யார்ரா அவன்? கஜகஜன்னு பேசிக்கிட்டு.. அவன அடிச்சி தூக்கி வெளிய போடு. நான் இங்க கத்திக்கிட்டிருக்கேன். அவன் அங்க கத்திக்கிட்டிருக்கான். கச,கசன்னு. போலீஸ் என்ன பண்றான். அவன அடிச்சி தூக்கி வெளிய போடு.” இப்படி சொல்லி முடித்து விட்டு ஒரு இரண்டு செகண்ட் விட்டு “அடி காந்தா.. தேவடியாள் பெற்ற திருமகளே” என்று கதாபாத்திரமாக பேச ஆரம்பித்தார்.

ஒரு ஐந்து வருடத்திற்கு பின் பெரியகுளம் எக்ஸிபிசனில் எம்.ஆர்.ராதாவின் அதே ’ரத்தக்கண்ணீர்’ நாடகம் பார்த்தேன். கூட்டமே இல்லை. சொற்பமாக ஜனங்கள். அப்போதும் ராதா மேடையில் நடித்துக்கொண்டிருக்கும்போதே  “ அங்க யார்ரா அவன்? கஜகஜன்னு பேசிக்கிட்டு.. அவன அடிச்சி தூக்கி வெளிய போடு. நான் இங்க கத்திக்கிட்டிருக்கேன். அவன் அங்க கத்திக்கிட்டிருக்கான். கச,கசன்னு. போலீஸ் என்ன பண்றான். அவன அடிச்சி தூக்கி வெளிய போடு.” என்று சத்தமாக கத்தினார்.

https://www.youtube.com/watch?v=vSdeFZb52Lg&t=116s