Share

May 8, 2025

வேடிக்க 39 - The Old man and the Shooting

ஜூனியர் மோஸ்ட் அசிஸ்டென்ட் டைரக்டர் ராஜநாயஹம்.

அந்த வயதான பெரியவர் வந்தார்.
" காம்ரேட், இந்த காட்சியில் நான் நிற்கும் போது என்னுடைய இந்த புத்தகங்களை தயவுசெய்து நீங்கள் பார்த்துக்கொள்ள முடியுமா?"

முழுமனதோடு கைகளில் வாங்கிக்கொண்டேன்.

அவுட் டோர் ஷூட்டிங். வயல் காட்டில் நாற்று நடும் பெண்களிடம் கதாநாயகி விதண்டாவாதம் செய்வதாக காட்சி.
பெரியவரும் அங்கே கூட்டத்தோடு நிற்க வேண்டும்.
அவர் கமல் ஹே ராமில் ஒரே காட்சியில் தலை காட்டியிருந்தார் என்பது நினைவில் மின்னியது.
எப்போதும் ஷூட்டிங் பார்க்க கூட்டம். சரியான முன்பகல் ஏறு வெயில்.

முதல் ஷாட் முடிந்தவுடன் சீனியர் அசிஸ்டெண்ட்கள் அந்த பெரியவரை கூப்பிட்டு சத்தம் போட்டு " அசிஸ்டெண்ட் டைரக்டரிடம் எப்படி நீ புத்தகங்களை கொடுக்கலாம்."

" ராஜநாயஹம், என்னங்க இந்த ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் சொன்னா நீங்க சரின்னு அந்தாளு புத்தகத்த வாங்கி எடுபிடி மாதிரி கையில வச்சிக்கிறீங்க. நம்ம ஸ்டேட்டஸ் ரொம்ப முக்கியம். அத ஞாபகம் வச்சிக்கங்க "
 கௌரவ பங்கமாம்.

" In a false quarrel, there is no true valour"
- Shakespeare 
'Much ado about nothing' 

பெரியவரிடம் " யோவ் மன்னிப்பு கேளுய்யா "

பெரியவர் நா தளுதளுக்க " என்னய மன்னிச்சிக்கங்க காம்ரேட். தெரியாம இப்படி பண்ணிட்டேன்." புத்தகங்களை வாங்கிக் கொண்டு நகர்ந்தார்.

......

பன்னிரண்டு வருடங்களுக்குப் பின் 
திருப்பூர் சென்ட்ரல் லயன்ஸ் கிளப்பில் 
Oldman and the Sea ( Ernest Hemingway) பற்றி உரை நிகழ்த்திக்கொண்டிருந்த போது அந்த பெரியவர் அங்கு கூட்டத்தில் அமர்ந்திருப்பதை பார்த்து உடனே " காம்ரேட், நலம் தானே? " என கேட்ட போது அவர் குழம்பிப்போய் பார்த்தார்.
அவருக்கு அடையாளம் தெரியவில்லை.
வயல் காட்டு ஷூட்டிங்கில் நடந்ததை அங்கு வந்திருந்தவர்கள் கேட்கும்படியாக பழைய சம்பவத்தை சொன்ன போது பெரியவர் 
முக மலர்ந்து வாய் மலர்ந்தார் 
" காம்ரேட் நீங்களா?"

...........

https://www.facebook.com/share/r/18fLP6TYuP/

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.