Share

Nov 6, 2009

விளாத்திகுளம் சுவாமிகள்

விளாத்திகுளம் சுவாமிகள் என்றதும் ஒரு காவி கட்டிய உருவம் என நினைத்துவிடாதீர்கள் . விளாத்திகுளம் சுவாமிகள் காவி உடுத்தியது கிடையாது.இவர் காடல்குடி ஜமின்தார். மேலும் இவருக்கு மூன்று மனைவிகள். கம்பள நாயக்கர் இனம். கர்நாடக சங்கீதத்தில் மிகப்பெரும் ஞானி. நல்ல பாடகர் . ஆனால் கச்சேரி செய்பவர் கிடையாது . நல்ல சதஸில் இயல்பாக ஆலாபனை செய்ய ஆரம்பித்தால் ஒரு குறிப்பிட்ட ராகத்தில் பல நாட்கள் தொடர்ந்து பாடுவார் .கீர்த்தனையாக பாடுவது என்று கிடையாது . எந்த ராகம் என்றாலும் ஆலாபனையாக பல நாட்கள் பாடுவார் .தன் ரசிகர்களுக்காக பாடியவர் . ஒரு ரசிகர் இருக்கிறார் . அவருக்காக ஒரு கூட்டத்திற்கே பாடுவார் .குறிப்பிட்ட அந்த ரசிகர் காணாமல் போகிறார் என்றால் தாயைப் பிரிந்த குழந்தை போல தவித்து விடுவார் . தாள ஞானம் இவருக்கு கிடையாது . ஸ்வர ஞானம் உண்டு . ஆனால் ஸ்வரம் பாடத்தெரியாது .
கரிசல் இலக்கிய மன்னர் கி.ரா அவர்கள் விளாத்திகுளம் சுவாமிகள் பற்றி சொல்லக் கேட்பது சுகம் ! கு . அழகிரி சாமி இவரைப் பார்த்தவுடன் கி.ராவிடம் சொன்னாராம் " கம்பர் இப்படித்தான் இருந்திருப்பார் !" இதே போல கு . அழகிரி சாமி ரசிகமணி டி கே சி யைப் பார்த்தவுடன் சொன்னாராம் "அடையா நெடுங்கதவு வீடுகொண்ட சடையப்ப வள்ளல் இப்படித்தான் இருந்திருப்பார் !"
விளாத்திகுளம் சுவாமிகள் நல்ல கருப்பு நிறத்தில் ரொம்ப கம்பீர அழகு கொண்டவர் . பெரிய மீசை உண்டு . ஆனால் சுவாமிகளுக்கு தாடி கிடையாது .
இசை பயிலும் ஆர்வத்தில் கிராவும், அழகிரிசாமியும் அந்த காலத்தில் நாகஸ்வர மேதை காருக்குரிச்சியின் சகளைபாடியான பொன்னுசாமி அவர்களை ஒரு வீடு அமர்த்தி அவரிடம் கர்நாடக இசை பயின்றார்கள் . அப்போது அங்கு விளாத்திகுளம் சுவாமிகள் வருகை தரும்போது பொன்னுசாமி ஆர்மோனியம் வாசிக்க ஆரம்பிக்கும் போது, மெதுவாக ஆலாபனையை ஆரம்பிப்பார் .
விளாத்திகுளம் சுவாமிகள் பாட ஆரம்பிப்பது பற்றி கி ரா சுவாரசியாமாக சொல்வார் : சாமியாடுறவனுக்கு மேளம் அடிச்சவுடன் சாமி வருவது போல காருக்குரிச்சியின் ஷட்டகர் பொன்னுசாமி ஆர்மோனியம் வாசிக்க வாசிக்க விளாத்திகுளம் சுவாமிகள் பாடத்தொடங்குவார் . நினைத்துப் பார்க்கவே சந்தோசமாயிருக்கிறது . ஒரே ராகம் - ஆலாபனை - பல நாட்களுக்கு தொடர்ந்து !
சங்கீத கலாசாலை ஒன்று துவங்கும் முயற்சியின் போது ஹரிஜன் களையும் சேர்க்க வேண்டும் என கிராவும் கு அழகிரிசாமியும் வற்புறுத்தியபோது அதனை விளாத்திகுளம் சுவாமிகள் விரும்பவில்லை . சுவாமிகளின் இன்னொரு முகத்தைப் பார்த்த கிராவும் , கு அழகிரிசாமியும் அதனால் சங்கீத கலாசாலை பற்றிய அவரது முயற்சியிலிருந்து ஒதுங்கிக்கொண்டார்கள் .


கர்நாடக சங்கீதம் இப்போது ( இப்போது என்றால் கடந்த எண்பது வருடங்களாக) 'அரியக்குடி பார்முலா' மேடைக் கச்சேரி என்ற சிறைக்குள் , ஆம் சிறை என்று தான் சொல்லவேண்டும். ஒரு இருபத்தைந்து கீர்த்தனைகளை கற்றுக்கொண்டு வர்ணத்தில் ஆரம்பித்து தில்லானாவுக்குப் பின் மங்களம் என திரும்ப திரும்ப அதனையே பாடிக்கொண்டு வெளிநாட்டில் எட்டு மாதம் ,டிசெம்பர் சீசனை ஒட்டி ஒரு மூணு நாலு மாதம் உள்நாட்டில் வித்வான்கள் வியாபாரம் செய்வது என்று மாறிவிட்டது. இது குறித்த அதிருப்தியை திஜா மோகமுள்ளில் சொல்லியிருக்கிறார் .
ராகங்களை தரிசனம் செய்வது இனி சாத்தியமில்லை . அதாவது தியாகய்யர் தேவகாந்தாரியை ஏழு நாள் பாடியது , தோடி சீத்தாராமய்யர் தோடி ராகத்தை எட்டு நாட்கள் பாடியது போல , பட்ணம் சுப்ரமணிய அய்யர் பேகடா மூன்று நாட்கள் பாடியது போல இனி நடக்குமா ? நடத்திக்காட்ட முயற்சிகள் , இதற்கெனவே பிரத்யேகமான இசை விழாக்கள் நடத்தப்படவேண்டும் . கிராவும் இப்படி ஏங்கிசொல்வார் .
சங்கீதகலாசாரம் மாறுவது மிகவும் அவசியம் .ஒரு ராகம் பல நாட்கள் பாடப்படும்போது எப்படியெல்லாம் விஷ்வரூபம் எடுக்கும் !

'மிருதங்கம் ஒரு ஊமை வாத்யம் . கற்றுக்கொள்வதற்கு ஒரு கர்ப்ப வாசகாலம்
( அதாவது பத்து மாதம் ) போதும் தான் . ஆனால் என்ன வாசிக்கக் கூடாது என்பதை தெரிந்துகொள்வதற்குள் ஆயுசு தீர்ந்து விடும் . ' என்று பாலக்காடு மணி அய்யர் சொல்வார் .
ஒரு ஊமை வாத்தியத்தின் உன்னதத்தன்மையே இத்தகையது என்றால் கந்தர்வ வேதம் எனப்படும் சாஸ்த்திரீய சங்கீதத்தை எப்படி பேணப் போகிறோம் ?

5 comments:

  1. தாங்களும் என் போன்ற ரசிகனுக்காக , கேள்வி-பதில் பகுதியை துவக்கலாமே :-)

    தங்கள் அன்பு வாசகன், திருச்சி

    ReplyDelete
  2. சார், உங்க நியாபக சக்தி அசர வைக்குது. துளசி’ய தண்ணில ஊறவெச்சி(daily) குடிச்சா எல்லாம் நியாபகம் இருக்கும் என்று சொல்லியிருக்காங்க. அப்படி ஏதாவது இரகியம் உங்ககிட்டயிக்கா?

    ReplyDelete
  3. கர்நாடக சங்கீதம் தெரியாது.அதனால் நீங்கள் சொல்லும் நுட்பங்கள் புரியவில்லை.ஆனால் தாத்பர்யம் புரிகிறது.

    மிருதங்கம் மட்டுமல்ல,முறையான இட்டிலியைச் சுடத் தெரிவதற்கும் முழு வாழ்நாள் வேண்டும்.

    வாழ்க்கையில் இசை,இலக்கியம்,இட்டிலி உட்படப் பெரிய விஷயங்கள் என்று தனியாக எதுவுமே இல்லை,முறையாக ரசிக்கப் படாத வரையில்.

    ReplyDelete
  4. விளாத்திகுளம் சுவாமிகளைப் பற்றி நானும் கு.அ.மூலம் அறிந்திருக்கிறேன். ஆனால் நீங்கள் சொல்லுவது புதிய செய்தி. நன்றி.
    அரியக்குடி வரைமுறை பற்றிச் சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் அது காலத்தின் கட்டாயம். மனம்போனபடியெல்லாம் பாட ஆரம்பித்தால் பித்தர்கள் தாம் ரசிகர்களாக இருக்கமுடியும் என்பது என் கருத்து.
    வர்ணம் பாடித்தான் கீர்த்தனைகளுக்குப் போகவேண்டும் என்பதில்லை. இப்பொழுது இளைய பாடகர்கள்/பாடகிகள், மற்றும் சில முதுநிலைப் பாடகர்கள் பரிசோதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள் போல் தெரிகிறது.
    இருந்தாலும் சங்கீத சனாதனிகளின் பயமுறுத்தலுக்குப் பயந்து தமது பரிசோதனை முயற்சிகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு அரியக்குடி வரையறுத்த வலையில் சிக்கிக்கொண்டு தவிக்கிறார்களோ என்று தோன்றுகிறது.
    பழமையில் ஊன்றிக்கொண்டு புதுமை செய்யலாம் - அச்சம் தவிர்த்தால்.
    அன்புடன்
    கிருஷ்ணமூர்த்தி

    ReplyDelete
  5. இரா முருகனின் அரசூர் வம்சம் குறித்து கொஞ்சம் எழுதவும் ( ஊர் சம்பவம், நவீனம்... )

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.